அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அரகர சிவன் அரி
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
அருள் புரிவாய்
தனதன
தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
அரகர
சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண ...... பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அனலென எழவிடு ...... மதிவீரா
பரிபுர
கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் ...... முருகேசா
பகவதி
வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி ...... களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர ...... வுயர்வாய
உலகம
னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர ...... முநிவோரும்
பரவிமு
னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே
பகர்தரு
குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அரகர
சிவன் அரி அயன் இவர் பரவி,முன்
அறுமுக சரவண ...... பவனே என்று,
அநுதினம் மொழிதர, அசுரர்கள் கெட,அயில்
அனல் என எழ விடும் ...... அதிவீரா!
பரிபுர
கமலம் அது அடிஇணை அடியவர்
உளம்அதில் உற அருள் ...... முருகேசா!
பகவதி, வரைமகள், உமை தர வரு குக!
பரமனது இருசெவி ...... களிகூர,
உரைசெயும்
ஒருமொழி பிரணவ முடிவு அதை
உரைதரு குருபர! ...... உயர்வு ஆய
உலகம்
மன் அலகில உயிர்களும், இமையவர்
அவர்களும், உறுவர ...... முநிவோரும்,
பரவி
முன் அநுதினம் மனமகிழ்வு உற அணி
பணிதிகழ் தணிகையில் ...... உறைவோனே!
பகர்தரு
குறமகள், தருஅமை வநிதையும்
இருபுடை உறவரு ...... பெருமாளே.
பதவுரை
அரகர சிவன் --- பாவங்களைப் போக்க
வல்லவராகிய சிவனும்,
அரி அயன் இவர் பரவி முன் --- நாராயணரும், பிரமாவும் ஆகிய இம்
மூவர்களும், போற்றி நின்று உமது
திருமுன்னிலையில்,
அறுமுக --- ஆறுமுகக் கடவுளே!
சரவணபவனே என்று --- சரவணபவனே என்று கூறி,
அநுதினம் மொழி தர --- நாள்தோறும் துதிக்க,
அசுரர்கள் கெட --- சூராதி அவுணர்கள்
அழியுமாறு,
அனல் என எழ அயில் விடு --- அக்கினிபோல் செல்ல
வேலாயுதத்தை விடுத்தருளிய,
அதி வீரா --- மிகுந்த வீரமூர்த்தியே!
பரிபுர கமலம் அது அடி இணை --- சிவப்பு
அணிந்த தாமரை மலர் போன்ற இரு திருவடிகளையும்,
அடியவர் உளம் அதில் உற --- அடியார்களின்
உள்ளத்தில் பொருந்துமாறு,
அருள் முருக ஈசா --- அருள்புரிகின்ற முருகக்
கடவுளே!
பகவதி --- ஆறு குணங்களையுடையவரும்,
வரைமகள் --- மலையரசன் புதல்வியும் ஆகிய,
உமை தர வரு குக --- உமாதேவியார் அருளவந்த
குகமூர்த்தியே!
பரமனது இரு செவி களி கூர ---
பரமசிவத்தின் இரண்டு செவிகளும் மகிழ்ச்சி கொள்ளும்படி,
உரை செயும் ஒரு மொழி --- எல்லோராலும்
புகழப்பெற்ற ஒரு மொழியாகிய,
பிரணவ முடிவு அதை --- பிரணவ மந்திரத்தின்
முடிவுப் பொருளை,
உரை தரு குரபர --- உபதேசித்த மேலான
குருநாதரே!
உயர்வு ஆய உலக மன் --- சிறப்பு
பொருந்திய உலகத்தில் நிலை பெற்றுள்ள,
அலகில உயிர்களும் --- கணக்கற்ற உயிர்களும்,
இமையவர் அவர்களும் --- தேவர்களும்,
முறுவர --- முணுமுணுக்கும்படி,
முநிவோரும் பரவிமுன் --- முனிவர்களும்
திருமுன் நின்று துதி செய்து,
அநுதினம் மனம்மகிழ் உற --- நாள்தோறும் மனம்
மகிழ்ச்சியடையுமாறு,
அணி பணி திகழ் --- அழகியதும், வாசுகி என்ற நாகம் வழி பட்டதுமாகிய,
தணிகையில் உறைவோனே --- திருத்தணிகையில்
உறைகின்றவரே!
பகர்தரு குறமகள் --- புகழப்பெறும்
வள்ளியம்மையும்,
தருஅமை வனிதையும் --- கற்பகமரத்தின் கீழ்
வளர்ந்த தெய்வயானையம்மையும்,
இருபுடை உற வரு பெருமாளே ---
இருபக்கங்களிலும் பொருந்த எழுந்தருளியிருக்கும் பெருமையின் மிகுந்தவரே!
பொழிப்புரை
பாவங்களை அழிக்கவல்ல அரனும் அரியும்
அயனும், திருமன் நின்று, “ஆறுமுகக் கடவுளே! சரவண பவனே” என்று
நாள்தோறும் கூறி துதி செய்ய, சூராதி அவுணர்கள்
அழியுமாறு அக்கினி எழுந்தது போல் செல்ல,
வேலாயுதத்தை விடுத்தருளிய மிகுந்த வீரமூர்த்தியே!
சிலம்பு அணிந்த தாமரை மலர் போன்ற
இருதிருவடிகளை அடியார்களின் உள்ளத்தில் பொருந்த அருளும் முருகக் கடவுளே!
மலையரன் மகளாக வந்த பகவதியாகிய
உமையம்மையருள வந்த குகப்பெருமானே!
பரமசிவத்தின் இரண்டு செவிகளும்
மகிழும்படி, யாவரும் புகழ்கின்ற
ஒப்பற்ற மொழியாகிய பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை உபதேசித்த சிறந்த
குருமூர்த்தியே!
சிறந்த இவ்வுலகில் நிலைபெற்ற எண்ணில்லாத
உயிர்களும் முணுமுணுக்க முனிவர்களும் துதி செய்து திருமுன் தினந்தோறும் உள்ளம்
மகிழுமாறு அழகியதும், நாகராஜன்
வழிபட்டதுமாகிய திருத்தணிகை மலைமீது வசிக்கின்றவரே! புகழ்பெற்ற வள்ளிநாயகியும், கற்பக மரத்தின் கீழ் வளர்ந்த
தெய்வயானையம்மையும் இருபுறத்தில் பொருந்த எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
விரிவுரை
அரகர ---
அர-பாவங்களை
நீக்குபவர்.
சிவபெருமானுடைய
திருநாமங்களில் சிறந்தது அர நாமம். ஹர ஹர என்று கூறுவோர் இடர் நீங்கப் பெறுவர். சபைகளில்
அடியார்கள் "ஹர ஹர" என்று முழக்கம் புரிவர்.
“எல்லாம் அரன் நாமமே சூழ்க
வையகமும் துயர் தீர்கவே”
என்கின்றார்
திருஞானசம்பந்தர்.
“வருசிவன் அடியார்
ஹரஹர எனமுறை
வழங்கு
கடல்போல் முழங்க ஒருபால்” --- கொலுவகுப்பு
இறைவன்
நமக்கு நாவைத் தந்தான். மென்மை உடையதாகவும், ஈரம் உள்ளதாகவும் தந்தான். இன்னும் ஒரு
பெரிய உபகாரம். நாவை நரம்பு வைக்காமல் படைத்தான். ஏன்? நரம்பு உள்ள பகுதிகளாகிய கை, கால், கழுத்து இவைகளில் சுளுக்கு
ஏற்படும்.
நாவில் நரம்பு வைத்தால் பேசும்போது சுளுக்கிக் கொள்ளும். நாக்கு சுளுக்கிக்
கொண்டால் பேச்சு அப்படியே தடைபட்டுவிடும். நமது கை, கால்கள் ஓயாமல் வேலை செய்வதில்லை.
நாக்கு மட்டும் சதா மனைவியுடன்,
மக்களுடன், நண்பர்களுடன், வேலைக்காரர்களுடன்
பேசிக்கொண்டேயிருக்கும். நரம்பிருந்தால் தினம் 2, 3 முறையாவது சுளுக்கிக் கொள்ளும்.
சுளுக்கிக் கொண்ட நாவை விளக்கெண்ணெய் தடவி விட வேண்டி வரும். ஆதலால் பேசுவதற்கு
என்று அமைத்துக் கொடுத்த நாவை நரம்பின்றி படைத்துக் கொடுத்தான் பரமன்.
அவன்
கொடுத்த நாவினால் அவனையே இல்லையென்று கூறி, நன்றி கொன்ற பாவத்துக்கு
ஆளாகின்றார்கள் சிலர்.
இனி
அவன் தந்த நாவினால் அவனுடைய நாமத்தை நவிலாமல், நன்றி மறந்த பாவத்துக்கு
ஆளாகின்றார்கள் பலர்.
நன்றி
மறப்பது வேறு; நன்றி கொல்வது வேறு.
“நன்றி மறப்பது
நன்று அன்று, நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று ” --- திருக்குறள்.
“எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வு உண்டாம், உய்வு இல்லை
செய்நன்றி
கொன்ற மகற்கு” --- திருக்குறள்
பூக்கைக்
கொண்டு அரன் பொன்அடி போற்றிலார்,
நாக்கைக்
கொண்டு அரன் நாமம் நவில்கிலார்,
ஆக்கைக்கே
இரை தேடி அலமந்து
காக்கைக்கே
இரை ஆகிக் கழிவரே. --- அப்பர்
கல்லினோடு
எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை
நீர் புக நூக்க, என் வாக்கினால்
நெல்லு
நீள் வயல் நீலக் குடிஅரன்
நல்ல
நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே. --- அப்பர்
ஆதலால்
ஹர ஹர என்று அன்பர்கள் கூறி துன்பத்தினின்று விலகி இன்பத்தை எய்துவார்களாக.
சிவன் ---
சிவம்-நன்மை.
நன்மையே செய்கின்ற பரம் பொருள் சிவம். “சிவம் சாந்தம் சதுர்த்தம்” என்று சுருதி
முழங்குகின்றது.
அரி ---
பாவத்தைப்
போக்குபவர் நாராயணர். அதனால் அரியெனப் பெற்றார்.
அயனிவர்
பரவிமுன் அறுமுக சரவணபவனேயென்ற நுதின மொழிதர ---
அயன்
அரி அரன் என்ற மும்மூர்த்திகளும் முருகனைத் துதிக்கின்றார்கள். மூவர்க்கு முதல்வன்
முருகன் என வுணர்க.
“படைத்து அளித்து அழிக்கும்
த்ரிமூர்த்திகள் தம்பிரானே” --- (கனைத்த) திருப்புகழ்
“மூவர் தேவாதிகள்
தம்பிரானே” --- (வாரிமீதேயெழு)
திருப்புகழ்
“உலகுஒரு தாள்ஆன
மாமனும்,
உமைஒரு கூறுஆன தாதையும்,
உரைதரு தேவா! சுராதிபர் பெருமாளே” --- (இருகுழைமீதோடி) திருப்புகழ்
மூவரும் தேவரும்
முருகப்பெருமானுடைய திருச்சந்நிதியில், சென்று சூரசங்காரத்தின் பொருட்டு துதிசெய்து
வேண்டிக் கொண்டார்கள்.
பரிபுர
கமலமது அடியிணை அடியவர் உளமதில் உறவருள் முருகேசா ---
தன்னை
நினைந்து நினைந்து உருகும் உத்தம அடியார்களுடைய திருவுள்ளத்தில் முருகன் தனது
திருவடியை வைத்து அருள் புரிவர்.
“இமையவர்
முடித்தொகையும், வனசரர் பொருப்பும், எனது
இதயமும் மணக்கும் இருபாதச் சரோருகனும்" --- வேடிச்சி
காவலன்வகுப்பு
பகவதி ---
பகம்-ஆறு.
ஆறு குணங்களையுடையவள் பகவதி. அவை இறைவனுடைய அருட் குணங்களாகும்.
முறுவர ---
முறுவரல்-முணுமுணுத்தல்.
வழிபாட்டில் தாம் முந்துதற்கில்லையே என்று முணுமுணுத்தல்.
“அறுகு எடுப்பார் அயனும்
அரியும்,
அன்றி மற்று இந்திரனோடு அமரர்
நறுமுறு
தேவர்கணங்கள் எல்லாம்
நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம்”
என்ற
திருவாசகத்தால் அறிக.
பரவிமுன்
அனுதினம் மன மகிழ்வுற அணி ---
உலகில்
உள்ள சகல உயிர்களும், தேவர்களும், முனிவர்களும், திருத்தணிகை மலையில் வந்து முருகனை
நாள்தோறும் துதி செய்து வழிபடுகின்றார்கள்.
பணிதிகழ்
தணிகை
---
திருப்பாற்கடல்
கடைந்தபோது வாசுகி என்ற நாகராஜன் கயிறாக இருந்தான். அதனால் அவன் உடம்பு
புண்ணாகியது. வாசுகி திருத்தணி மலைக்கு வந்து முருகவேளைப் பூசித்து நோய் நீங்கப்
பெற்றான்.
“விஷஐந்து தலையரவு
தொழுகின்ற தணிமலை” --- (முலைபுளக) திருப்புகழ்.
பகர்தரு
குறமகள், தருஅமை வநிதையும்
இருபுடை யுறவரு பெருமாளே ---
வள்ளியும்
தெய்வயானையும் வலமும் இடமும் விளங்க முருகவேள் திருத்தணியில்
எழுந்தருளியிருக்கின்றார்.
வள்ளி-இச்சாசக்தி; தெய்வயானை- கிரியாசக்தி.
நமக்கு
வேண்டிய நலன்கள் இரண்டு. இகபரம் ஆகும். இகத்தில் உள்ள நலன்கள் அனைத்தும்
இம்மண்ணுலகில் தோன்றி வளர்ந்த வள்ளியம்மையார் மூலம் அப்பன் அருளுவான்.
பரத்துக்குரிய நலன்கள் அனைத்தையும் விண்ணுலகில் தோன்றி வளர்ந்த
தெய்வயானையம்மையாரைக் கொண்டு அருளுவான். மூன்றாவது நலமாகிய முத்திப் பேற்றினை
வேலைத் தாங்கிய விமலன் தானே அருளுவான்.
இப்பாடல்
துதிமயமானது. வேண்டுதல் ஒன்றும் இல்லாது தனதன தனதன என்ற குறில் எழுத்துக்களால் ஆன
நடையுடைய பாடல்.
கருத்துரை
மூவர்
தொழும் முருகா! சூரனையடக்கிய வீரனே! சிவகுரு நாதா! தணிகேசா!
No comments:
Post a Comment