அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அமைவுற்று அடைய
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
நிலையாமையை உணர்ந்து,
உமது திருவடியில் நிலைத்த
இன்பத்தை அருள்
தனனத்
தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
அமைவுற்
றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் ...... தயராதே
தமர்சுற்
றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ்
சரிரத்
தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் ...... கடவேனோ
இமயத்
துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் ...... புகல்வோனே
இரணத்
தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா
சமயச்
சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் ...... புகநாடும்
சடுபத்
மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அமைவு
உற்று அடையப் பசி உற்றவருக்கு
அமுதைப் பகிர்தற்கு ...... இசையாதே,
அடையப் பொருள் கைக்கு, இளமைக்கு என வைத்து,
அருள் தப்பி மதத்து ...... அயராதே,
தமர்
சுற்றி அழ, பறை கொட்டி இட,
சமன் நெட்டு உயிரைக் ...... கொடுபோகும்
சரிரத்தினை
நிற்கும் எனக் கருதித்
தளர்வு உற்று ஒழியக் ...... கடவேனோ?
இமயத்து
மயிற்கு ஒரு பக்கம் அளித்-
தவருக்கு இசையப் ...... புகல்வோனே!
இரணத்தினில்
எற்றுவரை கழுகுக்கு
இரை இட்டிடு விக்- ...... ரமவேலா!
சமயச்
சிலுகு இட்டவரைத் தவறி,
தவம் முற்ற அருள் ...... புகநாடும்
சடு
பத்ம முக! குக! புக்க கனத்
தணியில் குமரப் ...... பெருமாளே.
பதவுரை
இமயத்து மயிற்கு --- இமவான் வளர்த்த
மயில் போன்ற உமாதேவியாருக்கு,
ஒரு பக்கம் அளித்தவருக்கு --- ஒரு பாகத்தை
தந்த சிவபெருமானுக்கு,
இசைய புகல்வோனே --- உள்ளம் இசையுமாறு
உபதேசித்தவரே!
இரணத்தில் எற்றுவரை --- போரில் தாக்கி
எதிர்ப்பவரை,
கழுகுக்கு இரை இட்டிடு --- கழுகட்கு இரையாக
அளிக்கும்,
விக்ரம வேலா --- வீரமுடைய வேலாயுதரே!
சமய சிலுகிட்டவரை தவறி --- சமயச்
சண்டையிடுகின்ற சமயவாதிகளின் கூட்டத்தை விட்டு விலகி,
தவம் முற்ற --- தவம் பூர்த்தியாகவும்,
அருள் புக நாடும் --- திருவருளில் புகவும்
அடியேன் விரும்புகின்ற,
சடு பத்ம முக --- தாமரை போன்ற ஆறுமுகங்களை உடையவரே!,
குக --- இதய குகையில் உறைபவரே!
புக்க கன --- வள்ளியை மணந்த பின்
அடைந்து அமர்ந்துள்ள பெருமை மிக்க,
தணியில் குமர --- திருத்தணிகைக் குமார
மூர்த்தியே!
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
அடைய பசி உற்றவருக்கு --- மிகுந்த பசி
உற்றவர்கட்கு,
அமைவுற்ற அமுதை பகிர்தற்கு இசையாதே --- மன
அமைதியுடன் அன்னத்தைப் பங்கிட்டுத் தருவதற்கு மனம் வராமல்,
அடைய பொருள் --- வைத்துள்ள பொருள்
அனைத்தையும்,
இளமைக்கு என --- தமது இளமைப் பருவத்துக்கு என,
கைவைத்து --- கைவசமாக இறுகப் பிடித்து வைத்து,
அருள் தப்பி --- அருள் நெறியில் நின்றும்
தவறிப்போய்,
மதத்து அயராதே --- அகங்காரத்தினால் தளர்ச்சி அடையாமல்,
தமர் சுற்றி அழ --- சுற்றத்தார் சுற்றி
அழவும்,
பறை கொட்டி இட --- பறைகள் வாசிக்கவும்,
சமன் நெட்டு உயிரை கொடு போகும் சரிரத்தினை ---
இயமன், உயிரை நெடுந்தூரம்
கொண்டு போகின்ற உடம்பை,
நிற்கும் என கருதி --- நிலைத்து நிற்கும்
என்று எண்ணி,
தளர்வு உற்று ஒழிய கடவேனோ --- அடியேன்
தளர்ந்து ஒழியலாமோ?
பொழிப்புரை
பருவதராஜன் வளர்த்த மயில் போன்ற
உமாதேவியாருக்கு இடப்பாகத்தையருளிய சிவபெருமானுடைய மனம் மகிழுமாறு உபதேசித்தவரே!
போரில் எதிர்ப்பவர்களைக் கழுகுக்கு
இரையாகக் கொடுத்த வீர வேலாயுதரே!
சமயச் சண்டை புரிபவரிடமிருந்து விலகி, அடியேன் தவம் நிறைவுறவும் திருவருளை அடையவும்
விரும்புகின்ற, தாமரை மலர்போன்ற
ஆறுமுகங்களை உடைய குகப் பெருமாளே!
திருத்தணிகை மலையில் எழுந்தருளியுள்ள
பெருமிதம் உடையவரே!
பசியால் வருந்துகின்றவர்க்கு அமைதியுடன்
அன்னத்தைப் பகிர்ந்து தருவதற்கு மனம் இன்றி, வர வர இளமையை அடைவது போலவும், அந்த இளமைப் பருவத்துக்கு ஆகும் என்றும்
எல்லாப் பொருளையும் சேகரித்து வைத்து, அருள்
நெறியினின்று தவறிப் போய், அகங்காரத்தால்
தளர்ச்சி அடையாமல் சுற்றத்தார் சுற்றியழவும், பறை வாத்தியங்கள் முழங்கவும், இயமன் உயிரைப் பற்றி நெடுந்தூரம் கொண்டு
போகின்ற இந்த உடலை நிலையானது என்று எண்ணி, இவ்வுடம்புக்காகவே பாடுபட்டுத் தளர்ந்து
அழிவது முறையாகுமோ?
விரிவுரை
அமைவுற்று
அடையப் பசி உற்றவருக்கு அமுதைப் பகிர்தற்கு இசையாதே ---
அடையப்
பசி - முற்றிய பசி.
உயிர்கட்கு
மூன்று நோய்கள் இருக்கின்றன.
1. உடம்புக்கு இடையறாது
வருகின்ற நோய் பசி.
2. உள்ளத்தில் எப்போதும்
இருக்கின்ற நோய் காமம்.
3. உயிருக்கு என்றும்
அகலாது வருகின்ற நோய் பிறவி.
பசிநோய், காமநோய், பிறவிநோய் என்று கூறுவர்.
இவற்றுள்
பசி அரசனுக்கும் உண்டு. ஆண்டிக்கும் உண்டு. தொழுநோய், காசநோய் முதலிய நோய்களுடன் பல ஆண்டுகள்
போராடுவார்கள்; பசி நோயுடன் சில
மணிநேரம் போராட முடியாது.
பசி
வந்தவுடன் மானம், குலம், கல்வி, வண்மை, பெருமிதம்,தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, காமம், என்ற பத்துக் குணங்களும் பறந்து
போய்விடும்.
மானம்
குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்
தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த
சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப்
பறந்து போம். ---ஔவையார்.
பசியடைந்தவுடன்
நாடி, ஊன், உள்ளம், உணர்வு முதலிய கருவி கரணங்கள் தன்னிலை அழிந்து
சோர்ந்து விடுகின்றன. ஆகவே பசித்தோர்க்கு உணவு தருவதே மேலான அறமாகும்.
ஆற்றுநர்க்கு
அளிப்போர் அறவிலை பகர்வோர்,
ஆற்றா
மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே
உலகின் மெய்நெறி வாழ்க்கை,
மண்திணி
ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே --- மணிமேகலை
ஒன்று
என்று இரு, தெய்வம் உண்டு என்று இரு, உயர்
செல்வம் எல்லாம்
அன்று
என்று இரு, பசித்தோர் முகம் பார், நல்லறமும்
நட்பும்
நன்று
என்று இரு, நடு நீங்காமலே நமக்கு
இட்டபடி
என்று
என்று இரு, மனமே! உனக்கு உபதேசம்
இதே ---
பட்டினத்தடிகள்.
“ஐயம் இட்டு உண்” --- ஒளவையார்.
யாவர்க்கும்
ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை,
யாவர்க்கும்
ஆம் பசுவிற்கு ஒரு வாய் உறை,
யாவர்க்கும்
ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி,
யாவர்க்கும்
ஆம் பிறர்க்கு இன் உரை தானே. --- திருமூலர்.
பொரு
பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்
தரு
பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி, நித்தம்
இரு,பிடி சோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே. ---
கந்தர்
அலங்காரம்.
பசித்தவர்க்கு
அன்னம் அமைதியாகக் கொடுக்க வேண்டும். அன்புடன் தரவேண்டும்; இன்னுரை கூறி, அகமும் முகமும் மலர்ந்து தரவேண்டும்.
பசித்தவனுக்கு
அன்னம் தந்தால், உண்டவனுக்கு ஊன்
குளிரும்; உள்ளம் குளிரும்; உணர்வு குளிரும்; உயிரும் குளிரும்; உயிருக்குயிரான சிவம் குளிரும்.
அடையப்
பொருள் கைக்கு இளமைக்கு என வைத்து ---
வரவர
கிழத்தனம் வருகின்றது. இளமை நீங்குகின்றது. இது உலகியற்கை. சிலர் அறியாமையால்
தமக்கு மேலும் இளமை வருவதாக நினைந்து, தம்பால்
உள்ள எல்லாப் பொருள்களையும், இம்மியளவுகூடச்
செலவழிக்காமலும், அறஞ்செய்யாமலும்
இறுகப் பிடித்து வைத்திருப்பார்கள்.
அருள்
தப்பி மதத்து அழியாதே ---
திருவருள்
நெறியினின்று விலகி நெடுந்தூரம் போய், மதம்
பிடித்து அழிவார்கள். யானைக்கு மும்மதங்கள் உண்டு. அது போல் மனிதனுக்கு மூன்று
மதங்கள் உண்டு. தனமதம், குலமதம், கல்விமதம் என்பன. செல்வத்தால் வளர்கின்ற
மதம், குலத்தின் பெருமையால்
வளர்கின்ற மதம், கல்வியின் பெருக்கால்
வளர்கின்ற மதம்.
“மதமான பேய் பிடியாதிருக்க
வேண்டும்” - திருவருட்பா.
தமர்
சுற்றி அழ
---
உயிர்
பிரிகின்ற போது, உறவினர் அருகில்
இருந்து, சிவநாமங்களைச் சொல்லி
இறப்போர்க்குத் தெய்வ நினைவை உண்டாக்க வேண்டும். திருமுறைகளை ஓதவேண்டும். இதுதான்
இறப்போர்க்கு நாம் செய்யும் உதவி.
இவ்வாறு
புரியாமல் “ஐயோ! ஐயோ” என்று கதறிப் பதறி அழுவர்.
சமன்
நெட்டு உயிரைக் கொடு போகும் ---
அரசன், ஆண்டி, கற்றவன், கல்லாதவன், மணமகன், தனவந்தன் என்று பாராமல் சமமாக நினைத்து
ஆயுள் முடிந்தவனைப் பற்றிச் செல்வதனால், இயமனுக்குச்
"சமன்" என்ற பேர் ஏற்பட்டது.
நடுநிலை
தவறாதவன் ஆதலால் "நடுவன்" என்றும் பேருண்டு. நமன் உயிரை உடம்பினின்றும்
பிரித்துத் தன் உலகத்துக்குக் கொண்டு போவான். அந்த வழி போகப்போகத் தொலையாத
அளவுக்கு நெடுந்தூரம் உள்ளது. வழியும் கல்லும் முள்ளும் அடர்ந்து பசி தாகம்
தரத்தக்க வெப்பமுடையதாக இருக்கும்.
கிழியும்படி
அடல் குன்று எறிந்தோன் கவி கேட்டு உருகி
இழியும்
கவி கற்றிடாது இருப்பீர்; எரிவாய் நரகக்
குழியும்
துயரும் விடாய்ப் பட, கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும்
துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.
மலை
ஆறு கூறு எழ வேல்வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான
மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும்
தொலையா
வழிக்குப் பொதிசோறும் உற்றதுணையும் கண்டீர்,
இலையாயினும்
வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்க்கே. ----
கந்தரலங்காரம்
சரிரத்தினை
நிற்கும் எனக் கருதி ---
ஜீரணம்
ஆவதனால் உடம்பு சரீரம் எனப்பட்டது. இது நீர்மேற் குமிழிக்கு நிகராயது. யாக்கை
நிலையாமையை உணர்வதுவே அறிவுடமையாகும். நில்லாத உடம்பை நிற்பதாக நினைப்பது
பேதமையாகும்.
நில்லாதவற்றை
நிலையின என்றுஉணரும்
புல்லறி
வாண்மை கடை --- திருக்குறள்.
நேற்றிருந்தார்
இன்றில்லை என்று கூறுவதுதான் இவ்வுலகில் உள்ள பெருமை.
ஒரு
இளமையான கணவன்; அழகிய மனைவி; கனவன் மனைவியை அடைப் பணியாரம் பிழிந்து
கொடுக்குமாறு கேட்டான். அவள் மிக்க அன்பாக அரிசியை ஊற வைத்து அடை செய்தாள். செய்து
தட்டில் வைத்துக் கொணர்ந்தாள். உண்ட கணவன் இடப்பக்கம் வலிக்கின்றது என்று
படுத்தான். அப்படியே கண்ணை மூடிவிட்டான். இவ்வளவுதான் இந்த உலக வாழ்வு.
அடப்
பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி
யாரொடு மந்தணம் கொண்டார்
இடப்
பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்
கிடக்கப்
படுத்தார் கிடந்து ஒழிந்தாரே. --- திருமந்திரம்
இமயத்து
மயிற்கு ஒரு பக்கமளித்தவர் ---
பிருங்கி
முனிவர் உமாதேவியாரை ஒதுக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்தார். அதனால் அம்மை, சிவமூர்த்தியைக் குறித்து
திருக்காஞ்சியில் வேதமாகிய மாவடியில் மனலால் சிவலிங்கம் அமைத்து அன்புடன் வழிபாடு
செய்து, இடப்பாகம் பெற்றனர்.
சமயச்
சிலுக்கிட்டவரைத் தவறி ---
தவறுதல்-விலக்குதல்.
சமயப் போர் புரிவது பயனற்ற செயல்;
சமயங்கள்
அனைத்தும் முடிவில் இறைவனைச் சென்று அடையும். நதிகள் அனைத்தும் கடலை நோக்கிச்
சென்று கடலில் கலந்து அடங்குவது போல் என உணர்க.
பேறு
அனைத்தும் அணு எனவே உதறித் தள்ளப்
பேரின்பம் ஆக வந்த பெருக்கே! பேசா
வீறு
அனைத்தும் இந்நெறிக்கே என்ன, என்னை
மேவு என்ற வரத்தே! பாழ் வெய்ய மாயைக்
கூறு
அனைத்தும் கடந்த எல்லைச் சேடம் ஆகி,
குறைவு அற நின்றிடு நிறைவே! குலவா நின்ற
ஆறு
அனைத்தும் புகும் கடல்போல் சமய கோடி
அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே. ---
தாயுமானார்.
பொங்குபல
சமயம் எனும் நதிகள் எல்லாம்
புகுந்து கலந்திட, நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை
காணாத கடலே! எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர்
தங்க
நிழல் பரப்பி,மயல் சோடை எல்லாம்
தணிக்கின்ற தருவே! பூந் தடமே! ஞானச்
செங்குமுதம்
மலரவரு மதியே! எல்லாம்
செய்யவல்ல கடவுளே! தேவ தேவே! --- திருவருட்பா.
ஆகவே
சமயவாதம் புரியாமலும், புரிவோர் பக்கம்
சாராமலும் வாழவேண்டும்.
சடுபத்மமுக ---
சட-ஆறு.
தாமரை போன்ற திருமுகங்கள். தாமரையில் தேன் சொரியும். திருமுருகன் திருமுகத்தில்
கருணை பொழியும்.
“முகம் பொழி கருனை போற்றி” ---
கந்தபுராணம்
“கருணைபொழி கமலமுகம் ஆறும்” ---
திருப்புகழ்
தணியில்
குமர
---
இது
ஐந்தாவது படைவீடாகிய குன்றுதோறாடலில் தலை சிறந்தது.
"தரையிடங்
கொளும் பதிகளில் காஞ்சியந்தலம்போல்
வரையிடங்களில்
சிறந்தது இத் தணிகை மால் வரையே"
என்று
வடிவேற் பெருமானே வள்ளிநாயகியிடம் கூறியதனால் அறிக. இங்கு சென்றோர்களின் வினை
தணிவதனால் தணிகை எனப்பட்டது. கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் இடம் இது.
ஆவிக்கு
மோசம் வருமாறு அறிந்து, உன் அருட்பதங்கள்
சேவிக்க
என்றும் நினைக்கின்றிலேன், வினை தீர்த்து அருள்வாய்,
வாவித் தடவயல்
சூழும் திருத்தணி மாமலைவாழ்
சேவல்
கொடி உடையோனே, அமர சிகாமணியே. --- கந்தர்
அலங்காரம்.
கருத்துரை
திருத்தணியுறையுந்
தேவா! நிலையாமையை உணர்ந்து நிலைபெற அருள்.
No comments:
Post a Comment