பொருட் பாலை




பொருட் பாலை விரும்புவார்கள், காமப்பால்
     இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே
     விரும்பார்கள், அறிவொன்று இல்லார்,
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால்
     புரவலர்பால் கொடுக்கக் கோரார்,
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி
     செம்பொன் சேவித்து இடுவார்.           7.

     அறிவு சிறிதேனும் இல்லாத மூடர்கள், நிலையற்ற செல்வத்தின் தன்மையை விரும்புவார்கள். (அவ்வாறு விரும்பிச் செல்வம் தேடிய செருக்கு காரணமாக) பெண்ணாசை என்னும் கடலில் விழுந்து புரளுவார்கள். செல்வத்தால் தேட வேண்டிய புகழைப் பற்றியும், அறம் செய்து அருளைத் தேட வேண்டியதைப் பற்றியும், கனவிலும் விரும்பமாட்டார்கள்.

     குருவுக்கோ, கடவுள் பூசைக்கோ, அந்தணர்களுக்கோ, அறச் செயல்களைப் பாதுகாத்து நடத்தும் புரவலர்களுக்கோ தாம் தேடிய செல்வத்தை ஈய சிறிதும் விரும்ப மாட்டார்கள்.

     ஆனால், தங்களைப் பிடித்து செருப்பாலே அடித்துத் துன்புறுத்தும் திருடர், துட்டர் முதலியோருக்கு, மனம் விரும்பி, தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பொன்னைக் கொடுப்பார்கள்.

     நல்ல வழியில் செலவிடாத பொருள்கள் எல்லாம், தீய வழியில் தான் போகும் என்பது தெளிவாக்கப்பட்டது.  

     "ஈயார் தேட்டை தீயார் கொள்வர்" என்பது கொன்றைவேந்தன்.

     பின் வரும் ஔவையார் தனிப்பாடலை இங்கு வைத்து எண்ணலாம்.

நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்கு ஆம், பேய்க்கு ஆம், பரத்தையர்க்கு ஆம் -
வம்புக்கு ஆம் கொள்ளைக்கு ஆம், கள்ளுக்கு ஆம்கோவுகக்குஆம்,
சாவுக்கு ஆம்,கள்ளர்க்கு ஆம், தீக்கு ஆகும் காண்

No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...