திருப் பூந்துருத்தி - 1



திருப் பூந்துருத்தி

     சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         அட்ட வீரட்டானத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற திருத்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை வழியில் 4 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் திருப்பூந்துருத்தி இருக்கிறது.

     திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

         இரண்டு ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது.

         ஊர் மேலத்திருப்பூந்துருத்தி, கீழத்திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத்திருப்பூந்துருத்தி ஆகும்.


இறைவர்              : புஷ்பவனேசுவரர், ஆதிபுராணர்,                                                                          பொய்யிலியர்.

இறைவியார்           : சௌந்தரநாயகி.

தல மரம்         : வில்வம்.

தீர்த்தம்               : சூரிய தீர்த்தம்.



தேவாரப் பாடல்கள்    : அப்பர் - 1. கொடிகொள் செல்வ விழா,                                                                       2. மாலினை மாலுற,
                                                               3. நில்லாத நீர்சடைமேல்,                                                                               முதலாக 18 திருப்பதிகங்கள்.

         இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கூடியது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிச் சுற்றில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது.

         அப்பர் உழவாரத் தொண்டு செய்த திருத்தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற திருஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது.

         சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும் வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். மகிடனையழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும், அருகில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகிய இரு மனைவியுருடன் சுந்தரர் இருக்கும் சிலா உருவங்கள் காணத்தக்கன. பூந்துருத்தி காடவநம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன. அம்பாள் கோயிலில் பழைய திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது.

         சப்த ஸ்தானத் தலம்: திருவையாறைத் தலைமைத் தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.

----------------------------------------------------------------------------------------------------------
சத்தத் தானங்கள் என்று சொல்லப்படுபவை பற்றிய தகவல்....

திருவையாறு சப்தஸ்தானம்   
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்

கும்பகோணம் சப்தஸ்தானம்  
திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி

சக்கராப்பள்ளி சப்தஸ்தானம்
(சப்தமங்கைத் தலங்கள்)   
திருச்சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை

மயிலாடுதுறை சப்தஸ்தானம்
        
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில், கூறைநாடு, சித்தர்காடு, மூவலூர், சோழம்பேட்டை,  துலாக்கட்டம், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்
        
கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர்(தஞ்சாவூர்), கடகடப்பை, மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்), பூமாலை(தஞ்சாவூர்)

நாகப்பட்டினம் சப்தஸ்தானம்
        
பொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்), பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர்

திருநல்லூர் சப்தஸ்தானம்
        
திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர் (கும்பகோணம்), மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை

திருநீலக்குடி சப்தஸ்தானம்
        
திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
        
கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை,  ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை)

----------------------------------------------------------------------------------------------------------

         காசிப முனிவர் கங்கையை இத்தலத்திலுள்ள கிணற்றில் வரவைத்து அந்நீரால் இறைவனுக்கு அபஷேகம் செய்து அருள் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

         கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பல காலம் திருமடம் அமைத்து இத்தலத்தில் தங்கி திருப்பணி செய்து வந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டி நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். திருஞான

     சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்து கொண்ட அப்பர் தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும் அப்பர் எங்கு உள்ளார் என்று திருஞானசம்பந்தர் வினவ "உங்கள் சிவிகையை தாங்கும் பேறு பெற்று இங்குள்ளேன்" என்று அப்பர் பதிலளித்தார். திருஞானசம்பந்தர் சிவிகையினின்றும் கீழே குதித்து, அப்பரை வணங்க, அப்பரும் திருஞானசம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகித் தொழுது போற்றினர். திருஞானசம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.

         அப்பர் இத்திருத்தலத்து இறைவன் மேல் மூன்று திருப்பதிகங்களும், பொது பதிகங்கள் இங்கு தங்கி இருந்த காலத்தில் பாடியருளியுள்ளார். மேலும் அவர் பாடியருளிய திருஅங்கமாலை என்ற திருப்பதிகம் மிக அருமையானது.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


         திருப்பூந்துருத்தியில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு சைவப் பெருமக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றது.  அது அப்பர் பெருமான் திருஞானசம்பந்தப் பெருமானாரின் சிவிகையினைத் தாங்கியது. இந்த நிகழ்வை வழிபாட்டு உணர்வோடு அனுபவிப்பது நலம். திருநாவுக்கரசர் புராணம், திருஞானசம்பந்தர் புராணம் இரண்டையும் ஒரு சேர எண்ணினால் நிகழ்வை முழுமையாக அனுபவிப்பது சிறப்பு என்பதால் இரண்டு புராணங்களில் இருந்தும் பெரிய புராணப் பாடல்களைத் தந்துள்ளேன்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 385
கண்டு தொழுது வணங்கி,  கண்ணுத லார்தமைப் போற்றிக்
கொண்ட திருத்தாண் டகங்கள், குறுந்தொகை, நேரிசை, அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி, வணங்கி, திருத்தொண்டு செய்தே,
அண்டர் பிரான்திரு ஐயாறு அமர்ந்தனர் நாவுக் கரசர்.

         பொழிப்புரை : இவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் கண்டும் தொழுதும் வணங்கியும் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமானைப் போற்றியும், திருத்தாண்டகங்களும் திருக்குறுந்தொகையும், திருநேரிசையும் அன்புடைய திருவிருத்தங்களும் முதலான பதிகங்களைப் பாடியும் திருத்தொண்டுகளைச் செய்த வண்ணம் திருவையாற்றில் தங்கியிருந்தார்.
  
பெ. பு. பாடல் எண் : 386
நீடிய அப்பதி நின்று, நெய்த்தானமே முதலாக,
மாடுஉயர் தானம் பணிந்து, மழபாடி யாரை வணங்கி,
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து, பணிசெய்து, போற்றி,
தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.

         பொழிப்புரை : நிலைபெற்ற அப்பதியாய திருவையாற்றில் இருந்தும், திருநெய்த்தானம் முதலாக அருகில் உள்ள பதிகளை எல்லாம் வணங்கித், திருமழபாடிக்குச் சென்று இறைவரை வணங்கிச் செந்தமிழ் மாலையாகிய திருப்பதிகம் பாடித் திருப்பணிகளையும் செய்து போற்றி, பின்பு தேடிய மாலுக்கும் அரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்துருத்தியை அடைந்தார்.

பெ. பு. பாடல் எண் : 387
சேர்ந்து விருப்பொடும் புக்கு, திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து, வலங்கொண்டு, இறைஞ்சி, தம்பெரு மான்திரு முன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து, நிறைந்து ஒழியா அன்பு பொங்க,
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க, அயர்வுஉறும் தன்மையர் ஆனார்.

         பொழிப்புரை : அப்பதியை அடைந்த நாவரசர் விருப்புடன் அதனுள் புகுந்து, இறைவர் அருட்கூத்து இயற்றி வெளிப்பட எழுந்தருளியிருக்கும் கோயிலைச் சார்ந்து, வலம் வந்து வணங்கி, தம்பெருமானின் முன் தாழ்ந்து வணங்கி, உள் நிறைந்து நீங்காத அன்பு மீதூரப் பெருக, அதனால் நிறைந்து வெளியாகும் கண்ணீர் மழைபொழிய, தம் வயமிழந்த நிலையை அடைந்தவராய்,

பெ. பு. பாடல் எண் : 388
திருப்பூந் துருத்தி அமர்ந்த  செஞ்சடை யானை, ஆன் ஏற்றுப்
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை, "பொய்இலி யைக்கண்டேன்" என்று
விருப்புஉறு தாண்டகத் தோடு மேவிய காதல் விளைப்ப,
"இருப்போம் திருவடிக் கீழ்நாம்" என்னும் குறுந்தொகை பாடி.

         பொழிப்புரை : திருப்பூந்துருத்தியில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவந்த சடையை உடைய சிவபெருமானை, `ஆனேறாய பெருமலையின் மீது எழுந்தருளி வரும் பெருமானை, `பொய்யிலியைக் கண்டேன்` (தி.6 ப.43) என்று விருப்பம் பொருந்தும் திருத்தாண்டகத்துடன், பொருந்திய அன்பு மேன்மேல் விளைய `இருப்போம் சேவடிக் கீழ் நாம்` எனும் கருத்துடைய (தி.5 ப.32) பதிகத்தைப் பாடி.

         `பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே` எனும் நிறைவுத் தொடரைப் பாடல்தொறும் பெற்றுவரும் திருத்தாண்டகம் `நில்லாத நீர்` (தி.6 ப.43) எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். `கொடிகொள்` (தி.5 ப.32) எனத் தொடங்கும் பதிகம், பாடல் தொறும் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் `சேவடிக் கீழ் நாம் இருப்பதே` எனும் தொடரை நிறைவாகக் கொண் டுள்ளதாகும். இதனையே சேக்கிழார்,`இருப்போம் சேவடிக் கீழ் நாம்` எனும் கருத்தமைவுபடக் குறிக்கின்றார்.

பாடல் எண் : 389
அங்கு உறையும் தன்மை வேண்டி, "நாம்அடி போற்றுவது" என்று
பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து,
தங்கித் திருத்தொண்டு செய்வார், தம்பிரா னார்அருள் பெற்று,
திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் அங்குஒன்று செய்தார்.

         பொழிப்புரை : அத்திருப்பதியில், சிலகாலம் தங்கியிருக்க வேண்டும் என்னும் உட்குறிப்பு நிகழ, `நாமடி போற்றுவதே` என்ற கருத்துடன், பொங்கும் தமிழ்ச் சொற்களால் ஆய திருவிருத்தப் பதிகத்தைப் பாடி, அப்பதியில் கைத்தொண்டு செய்வாராகி, தம் பெருமானின் அருளைப் பெற்று, திங்களும் ஞாயிறும் தோயும் உயர்வானதொரு திருமடத்தை அவ்விடத்துச் சமைத்தார்.

         `நாமடி போற்றுவது` எனப் பாடல்தொறும் நிறைவு கொள்ளும் திருவிருத்தம், `மாலினை` (தி.4 ப.88) எனத் தொடங்கும் திருப்பதிகமாகும்.

பாடல் எண் : 390
பல்வகைத் தாண்டகத் தோடும், பரவும் தனித்தாண் டகமும்,
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவு திருத்தாண் டகமும்,
செல்கதி காட்டிடப் போற்றும் திருஅங்க மாலையும், உள்ளிட்ட
எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்.

         பொழிப்புரை : பலவகைப் பொருளுடைய தாண்டகத்துடன் சிவபெருமானைப் போற்றுகின்ற தனித்திருத்தாண்டகமும், பிறவித் துன்பத்தைப் போக்குகின்ற சிவபெருமான் விளக்கமாக எழுந்தருளும் இடங்களைக் கூறும் அடைவுத் திருத்தாண்டகமும், உயிர்கள் நிறைவாகச் சேர்தற்குரிய கதியை அடைதற்காக வழிபடத்தக்க `திருவங்க மாலையும்` என்னும் இவை உள்ளிட்ட அளவில்லாத பலவகைத் தொகைப் பதிகங்களையும் அருளிச் செய்தவராய்ப் போற்றி அங்கே எழுந்தருளியிருந்தார்.

          1. பலவகைத் திருத்தாண்டகம்: `நேர்ந்து ஒருத்தி` (தி.6 ப.93) எனத் தொடங்குவதாகும். இதில் பூந்துருத்தி, நெய்த்தானம் முதலிய ஒன்பது பதிகளிலும் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி வழிபட, உயிர், பாச நீக்கமும் சிவப்பேறும் பெறல் எளிதாம் எனும் கருத்து வலியுறுத்தப்படுகின்றது. ஒரு திருப்பதியன்றி ஒன்பது திருப்பதிகள் குறிக்கப் பெறுதலானும், பல கருத்துகளைக் கூறுவதாலும் இறுதிப்பாட்டில் அஞ்செழுத்து ஓதப்பெறுவதாலும் பலவகைத் திருத்தாண்டகமாயிற்று.

2.    தனித் திருத்தாண்டகம்: `அப்பன் நீ அம்மை நீ` (தி.6 ப.95) இத்திருத் தாண்டகத்தில் வரும் பொருள் அமைவு, தனித்தனியாக ஒன்று ஒன்றோடு வரும் பொருள் இயைபு இன்றி வருதலின் தனித் திருத்தாண்டகமாயிற்று.

3.    அடைவுத் திருத்தாண்டகம்: `பொருப் பள்ளி` (தி.6 ப.71) எனத் தொடங்குவது. இறைவன் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றுள்ளும் பெயரால் ஒருமையுற்றிருக்கும் திருப்பதிகளைப் பாடல் தொறும் குறித்துப் போற்றியிருத்தலின் அடைவுத் திருத்தாண்டகம் எனப் பெயர் பெறுவதாயிற்று. அடைவு ஒருமையுற்ற பதிகளின் அடைவு.

4.    திருஅங்கமாலை: `தலையே நீ வணங்காய்` (தி.4 ப.9) எனத் தொடங்கும் சாதாரிப் பண் அமைந்த திருப்பதிகமாகும். உடலு றுப்புகள் பலவற்றையும் இறைவனை வணங்குமாறு பணித்தலின் இப் பெயர் பெறுவதாயிற்று.

  5.  பன்மைத் தொகைப் பதிகங்கள்:
(அ) மனத்தொகைத் திருக்குறுந்தொகை: `பொன்னுள்ளத்                                      திரள்` (தி.5 ப.96)
(ஆ) சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை: `சிந்திப்பார்`
                                    (தி.5 ப.97)
(இ) உள்ளத்தொகைத் திருக்குறுந்தொகை: `நீறலைத்ததோர்`                                                                   (தி.5 ப.98)
(ஈ) காலபாசத் திருக்குறுந்தொகை: `கண்டுகொள்ளரி`
                                    (தி.5 ப.92)
(உ) மறக்கிற்பனே எனும் குறுந்தொகை: `காசனைக்                                          கனலை` (தி.5 ப.93)
(ஊ) தொழற்பாலதே எனும் குறுந்தொகை: `அண்டத்தானை`                                                                   (தி.5 ப.94)
(எ) இலிங்கபுராணக் குறுந்தொகை: `புக்கணைந்து` (தி.5 ப.95)

(ஏ) ஆதிபுராணக் குறுந்தொகை: `வேதநாயகன்` (தி.5 ப.100)

(ஐ) பாவநாசத் திருக்குறுந்தொகை: `பாவமும் பழிபற்றற`                                                                                           (தி.5 ப.99)
(ஒ) தனித்திருக்குறுந்தொகை:
(1) `ஒன்று பிறை` (தி.5 ப.89)       (2) `ஏயிலானை(தி.5 ப.91).`


பெ. பு. பாடல் எண் : 391
பொன்னிவலம் கொண்டதிருப் பூந்துருத்தி அவர்இருப்ப,
கன்மனத்து வல்அமணர் தமைவாதில் கட்டுஅழித்துத்
தென்னவன்கூன் நிமிர்த்துஅருளித் திருநீற்றின் ஒளிகண்டு
மன்னியசீர்ச் சண்பைநகர் மறையவனார் வருகின்றார்.

         பொழிப்புரை : காவிரியாறு வலமாகச் சூழ்கின்ற திருப்பூந்துருத்தியில் அவர் இருப்ப, கல்போன்ற மனமுடைய கடிய மனத்தையுடைய வலிய சமணர்களை வாதில் வென்று, அவர்களின் பொய்ம்மையான சூழ்ச்சிகளை அழித்துப், பாண்டியனின் கூனை நிமிர்த்தி, அருளுரை வழங்கி, திருநீற்றின் விளக்கம் ஓங்கச் செய்து, நிலையான சிறப்புக் கொண்ட சீகாழியில் தோன்றியருளிய மறையவரான திருஞானசம்பந்தர் வருவாராய்.
  
பெ. பு. பாடல் எண் : 392
தீந்தமிழ்நாட்டு இடைநின்றும் எழுந்துஅருளி, செழும்பொன்னி
வாய்ந்தவளம் தருநாட்டு வந்துஅணைந்தார், வாக்கினுக்கு
வேந்தர் இருந்தமை கேட்டு,   "விரைந்துஅவர்பால் செல்வன்"  எனப்
பூந்துருத்தி வளம்பதியின் புறம்பணையில் வந்துஅணைந்தார்.

         பொழிப்புரை : இனிய தமிழ் நாடான பாண்டி நாட்டினின்றும் புறப்பட்டு, செழிப்பையுடைய காவிரியாற்றின் வளத்தால் வளங்கள் பலவற்றையும் தரும் சோழநாட்டில் வந்து சேர்ந்தவரான ஞானசம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார் திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் செய்தியைக் கேட்டு விரைவாய் அங்குச் சென்று சேர்வேன்! என்று எண்ணித், திருப்பூந்துருத்தியின் புறத்தேயுள்ள வயல்கள் சூழ்ந்த இடத்தில் வந்து சேர்ந்தார்.
  
பெ. பு. பாடல் எண் : 393
சண்பைவரும் தமிழ்விரகர் எழுந்துஅருளத் தாம் கேட்டு,
மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து,
கண்பெருகும் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால்,
எண்பெருகும் விருப்புஎய்த எழுந்துஅருளி எதிர்சென்றார்.

         பொழிப்புரை : சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் எழுந்தருளி வர, அந் நற்செய்தியை உலகம் போற்றும் புகழையுடைய நாவரசர் தாம் கேட்டு, மனம் மகிழ்ந்து கண்களால் காணும் களிப்பு மிக, நேரில் கண்டு கும்பிட வேண்டும் என்னும் அவாவினால் உள்ளத்தில் பெருகும் விருப்பம் பொருந்த எதிரே சென்றார்.

பெ. பு. பாடல் எண் : 394
காழியர்கோன் வரும்எல்லை கலந்துஎய்திக் காதலித்தார்
சூழும் மிடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி,
"வாழிஅவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும்உடல் இதுகொண்டு தாங்குவன் யான்" எனத் தரித்தார்.

         பொழிப்புரை : சீகாழியின் தலைவரான ஞானசம்பந்தர் வருகின்ற அதுபொழுது, திருக்கூட்டத்துடன் கூடிச்சேர்ந்து அன்பு உடையவராகிச் சூழ்ந்து, நெருங்கிய கூட்டத்தின் நெருக்கத்துள் ஞானப்பிள்ளையார் தம்மைக் காணாத வண்ணம், அவரை வணங்கி, உலகினர்க்கு வாழ்வு தரவந்த பிள்ளையாரைத் தாங்கும் முத்துச் சிவிகையைத் தாங்கி வருபவருடன் தாழ்ந்த இவ்வுடலைக் கொண்டு `நானும் சுமப்பன்` எனும் நினைவுடையராய்.
  
பெ. பு. பாடல் எண் : 395
வந்துஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும், புகலி
அந்தணனார் ஏறிஎழுந்து அருளிவரும் மணிமுத்தின்
சந்தமணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன்தாங்கி,
சிந்தைகளிப்பு உறவருவார் தமை,யாரும் தெளிந்துஇலரால்.

         பொழிப்புரை : பிள்ளையாருடன் வந்து கொண்டிருக்கும் எவரும் அறியாதவாறு, மறைத்த வடிவுடன், சீகாழி அந்தணரான ஞானசம்பந்தர் எழுந்தருளிவரும் அழகான மணிச் சிவிகையைச் சுமப்பவர்களுடன் தாமும் ஒருவராய்த் தாங்கித், தம் உள்ளம் மிக மகிழ்ச்சி பொருந்த வருவாரான திருநாவுக்கரசு நாயனாரை ஒருவரும் அறிந்து கொண்டாரிலர்.

பெ. பு. பாடல் எண் : 396
திருஞான மாமுனிவர் அரசுஇருந்த பூந்துருத்திக்கு
அருகாக எழுந்தருளி, "எங்குஉற்றார் அப்பர்"என
உருகா நின்று, "உம்அடியேன் உம்அடிகள் தாங்கிவரும்
பெருவாழ்வு வந்துஎய்தப் பெற்றுஇங்கு உற்றேன்" என்றார்.

         பொழிப்புரை : திருஞானப் பெருமுனிவராகிய சம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார் வீற்றிருந்த திருப்பூந்துருத்திக்கு அருகில் எழுந்தருளிச் சிவிகையில் இருந்தவாறே அப்பர் எங்குற்றார்? என்று வினவ, உள்ளம் மிகவுருகி, `உம் அடியவன் உம் திருவடிகளைச் சுமக்கும் பெருவாழ்வு பெற்று இங்கு இருக்கின்றேன்` என்று சிவிகையைத் தாங்கி வரும் அந் நிலையிலேயே விடை பகர்ந்தார்.

பெ. பு. பாடல் எண் : 397
பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவுடன் இழிந்தே
உள்ளமிகு பதைப்புஎய்தி உடைய அரசினை வணங்க,
வள்ளலார் வாகீசர், அவர் வணங்கா முன்வணங்கத்
துள்ளுமான் மறிக்கரத்தார் தொண்டர்எலாம் தொழுது ஆர்த்தார்.

         பொழிப்புரை : திருஞானசம்பந்தர் அம்மொழிகளைக் கேட்ட அளவில், மிகுவிரைவுடன், கீழே இழிந்தருளித், திருவுள்ளத்தில் அச்சத்துடன் பொருந்திய பதைப்பை அடைந்து, ஆளுடைய அரசரை வணங்க, வள்ளலாரான திருநாவுக்கரசரும் அவர் வணங்குவதற்கு முன்னம் தாம் அவரை வணங்க, அவ்வருள் நிகழ்ச்சியைக் காணும் பேறுபெற்ற, துள்ளும் மானைக் கையில் ஏந்திய சிவபெருமானின் அடியவர் அனைவரும் வணங்கி `அரகர` என்ற ஒலியை எழுப்பினர்.
  
பெ. பு. பாடல் எண் : 398
கழுமலக்கோன் திருநாவுக் கரசருடன் கலந்துஅருளி,
செழுமதியம் தவழ்சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான்ஏந்து திருக்கரத்தார் மலர்த்தாள்கள்
தொழுதுஉருகி, இன்புஉற்றுத் துதிசெய்து, அங்கு உடன் இருந்தார்.

         பொழிப்புரை : சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் திருநாவுக்கரசு நாயனாருடன் கூடிப் பிறைச்சந்திரன் தவழும் வளமுடைய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்துருத்தி எனும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் மழுவுடன் மானை ஏந்தும் திருக்கையையுடைய இறைவரின் மலரடிகளை வணங்கி, மனம் உருகி இன்பம் அடைந்து, போற்றி செய்து, அப்பதியில் உடன் எழுந்தருளியிருந்தார்.

பெ. பு. பாடல் எண் : 399
வல்அமணர் தமைவாதில் வென்றதுவும், வழுதிபால்
புல்லிய கூன் நிமிர்த்ததுவும், தண்பொருந்தப் புனல்நாட்டில்
எல்லை இலாத் திருநீறு வளர்த்ததுவும், இருந்தவத்தோர்
சொல்லஅது கேட்டுஉவந்தார் தூயபுகழ் வாகீசர்.

         பொழிப்புரை : கொடிய சமணர்களை வாதில் வென்றதையும், பாண்டியனிடத்தில் முன்பு பொருந்தி இருந்த கூனை நிமிர்த்தியமையையும், தண்ணிய வைகை ஆற்றின் நீர் பாயும் பாண்டிய நாட்டில் அளவில்லாத சிறப்புடைய திருநீற்றின் நெறியைப் பெருகச் செய்ததையும், பெருந்தவத்தையுடைய பிள்ளையார் எடுத்துக் கூற, அதனைத் தூய புகழையுடைய திருநாவுக்கரசர் கேட்டுத் திருவுள்ளம் மகிழ்ந்தார்.
  
பெ. பு. பாடல் எண் : 400
பண்புஉடைய பாண்டிமா தேவியார் தம்பரிவும்,
நண்புஉடைய குலச்சிறையார் பெருமையும், ஞானத்தலைவர்
எண்பெருக உரைத்துஅருள, எல்லையில்சீர் வாகீசர்
மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனம்கொண்டார்.

         பொழிப்புரை : கற்பும் பத்திமையும் உடைய மங்கையர்க்கரசியாரின் அன்பின் திறத்தையும், அடியவரிடத்துப் பெருநட்புக் கொண்டு வாழும் குலச்சிறையாரின் பெருமையையும் ஞானசம்பந்தர் விருப்பம் மிகக் கூறியருள, நாவரசர், அளவற்ற சிறப்பினையுடைய தமிழ்நாடு எனக் கூறப்படும் பாண்டி நாட்டைப் போய்க் காண்பதற்கு விருப்பம் கொண்டவர் ஆனார்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்.

         திருஞானசம்பந்தப் பெருமான் திருப்பூந்துருத்தித் திருத்தலத்திற்கு எழுந்தருளியதும், அப்பர் பெருமான், அவர் சிவிகையைத் தாங்கியதும், பெரிய புராணத்தில், திருநாவுக்கரசு நாயனார் புராண வாயிலாக அனுபவித்தோம். அந்த அற்புதமான உள்ளம் நெக்குருகும் நிகழ்வினை, பெரியபுராணத்தில், திருஞானசம்பந்தப் பெருமான் புராணத்தில் தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டி இருப்பதையும் அனுபவிப்போம்.
  
பெரிய புராணப் பாடல் எண் : 931
அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்துஆக
வந்துஅருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டுஅருளி,
"நம்தமை ஆள்உடையவரை நாம் எதிர்சென்று இறைஞ்சுவது
முந்தைவினைப் பயன்"என்று முகம்மலர அகம் மலர்வார்

         பொழிப்புரை : மறையவர்களின் மணிமுடியாய் விளங்கும் ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்திக்கு அண்மையாய் வந்தருளுகின்ற பெருமொழியைக் கேட்ட, நாவரசுப் பெருந்தகையாரும் `நம்மை ஆளாகவுடைய பிள்ளையாரை நாம் எதிர் கொண்டு வணங்குவது முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாகப் பெறக்கூடியதாகும்\' என எண்ணி அகமும் முகமும் மலர,
  
பெ. பு. பாடல் எண் : 932
"எதிர்சென்று பணிவன்"என எழுகின்ற பெருவிருப்பால்
நதிதங்கு சடைமுடியார் நற்பதங்கள் தொழுது, அந்தப்
பதிநின்றும் புறப்பட்டு, பரசமயம் சிதைத்தவர்பால்
முதிர்கின்ற பெருந்தவத்தோர் முன்எய்த வந்துஅணைந்தார்.

         பொழிப்புரை : `எதிர் கொண்டு வணங்குவன்\' என்று, தம் உள்ளத்தில் மேன்மேலும் எழும் பெருவிருப்பத்தால், கங்கை சூடிய சடையாரின் நல்ல திருவடிகளைத் தொழுது, அத்திருப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று, பிறசமயங்களின் தீங்கை அழித்த பிள்ளையார் இடத்து, முதிரும் பெருந்தவத்தவர்களான அடியவர்களின் முன் வந்து சேர்ந்தார்.
  
பெ. பு. பாடல் எண் : 933
திருச்சின்னம் பணிமாறக் கேட்டநால் திசைஉள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச்சூழ்ந்த
நெருக்கின்இடை, அவர்காணா வகை, நிலத்துப் பணிந்து, உள்ளம்
உருக்கி எழு மனம்பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார்.

         பொழிப்புரை : திருச்சின்னம் பிள்ளையாரின் புகழ்களை எடுத்து முழங்கக் கேட்டவர்களான நாற்றிசைகளிலிருந்தும் வந்த அன்பர்கள், பெருகும் ஆசையால் ஞானசம்பந்தரைச் சூழ்ந்து வரும் நெருக்கத்தில், ஞானசம்பந்தர் காணாத வகையில் நிலத்தில் விழுந்து பணிந்து, உள்ளத்தை உருக்கி எழும் மனம் ஓங்கத் திருத்தொண்டர் கூட்டத்துடன் சேர்ந்தார்.
  
பெ. பு. பாடல் எண் : 934
வந்துஅணைந்த வாகீசர் வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியே
சிந்தை  களிப்பு உறவருவார்,  திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறுஒன்று நிகழ்ந்திடமுன் புகல்கின்றார்.

         பொழிப்புரை : அங்ஙனம் தொண்டர் கூட்டத்துள் வந்து சேர்ந்த திருநாவுக்கரசர், கொடைத்தன்மை வாய்ந்த சீகாழிப் பதியை வாழ்விக்க வந்தருளிய பிள்ளையாரது அழகிய முத்துச் சிவிகையைத் தாங்குகின்றவர்களுடன் கூடி, தாமும் தாங்கி உள்ளக் களிப்புடனே வருவாராக, திருஞானசம்பந்தர் தம் உள்ளத்தில் திருவருட் குறிப்பால் வேறொரு உணர்ச்சி உண்டானதால் முற்படக் கூறுவாராய்,
  
பெ. பு. பாடல் எண் : 935
"அப்பர்தாம் எங்குஉற்றார் இப்பொழுது"என்று அருள்செய்யச்
செப்ப அரிய புகழ்த் திருநாவுக்கரசர் செப்புவார்,
"ஒப்பரிய தவம்செய்தேன், ஆதலினால், உம்அடிகள்
இப்பொழுது தாங்கி வரப் பெற்று உய்ந்தேன் யான்"என்றார்.

         பொழிப்புரை : `அப்பர் தாம் இப்போது எங்கு எழுந்தருளினார்?' என்று வினவியருள, சொலற்கரிய புகழையுடைய திருநாவுக்கரசரும் விடை தருபவராய் `ஒப்பற்ற தவத்தை முன்னே செய்தேனாதலின் இப்போது உம் திருவடிகளைத் தாங்கிவரும் பெரும்பேற்றை அடைந்து உய்ந்தேன்' என்று அருளிச் செய்தார்.
  
பெ. பு. பாடல் எண் : 936
அவ்வார்த்தை கேட்டுஅஞ்சி, அவனியின்மேல் இழிந்துஅருளி,
"இவ்வாறு செய்து அருளிற்று என்ஆம்"என்று இறைஞ்சுதலும்,
செவ்வாறு மொழி நாவர், "திருஞான சம்பந்தர்க்கு
எவ்வாறு செயத் தகுவது" என்று எதிரே இறைஞ்சினார்.

         பொழிப்புரை : அத்திருமொழிகளைக் கேட்டு அச்சம் கொண்ட ஞானசம்பந்தர், சிவிகையினின்றும் இறங்கியருளி, `இவ்வாறு தாங் கள் செய்தருளுவது என்னோ?' எனப் பதைப்புடன், வணங்குதலும் செம்மையே மொழியும் நாவுடைய அரசரும் `திருஞானசம்பந்தருக்கு, வேறு யாது செய்தல் தக்கதாகும்?' எனக் கூறி வணங்கினார்.
  
பெ. பு. பாடல் எண் : 937
சூழ்ந்து மிடைந்து அருகு அணையும் தொண்டர் எல்லாம், அதுகண்டு
தாழ்ந்து, நிலம் உறவணங்கி, எழுந்து,அங்கை தலைகுவித்து,
வாழ்ந்து மனக் களிப்பினராய் மற்று "இவரை வணங்கப்பெற்று
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம்"என்று அண்டம் எலாம் உறஆர்த்தார்.

         பொழிப்புரை : சூழ்ந்து நெருங்கி வரும் உண்மைத் தொண்டர்கள் எல்லாம் அதைப்பார்த்துத் தாழ்ந்து நிலத்தில் பொருந்த வணங்கி எழுந்து அழகிய கைகளைத் தலைமீது குவித்து உள்ளக் களிப்புடையவராய், `இவ்விரு பெருமக்களையும் வணங்கப் பெற்றதால் நாம் ஆழ்ந்துள்ள பிறவிக் கடலினின்றும் ஈடேறி உய்யப் பெற்றோம்' என மொழிந்து அண்டங்கள் எல்லாம் பொருந்த மகிழ்வொலி செய்தனர்.
 
பெ. பு. பாடல் எண் : 938
திருஞான சம்பந்தர் திருநாவுக் கரசர்தமைப்
பெருகு  ஆர்வத்தொடும் அணைந்து, தழீஇக் கொள்ளபிள்ளையார்
மருவாரும் மலர்அடிகள் வணங்கி, உடன் வந்துஅணைந்தார்
பொருவாரும் புனற்சடையார் மகிழ்ந்ததிருப் பூந்துருத்தி.

         பொழிப்புரை : திருஞானசம்பந்தப் பெருமான், பெருகும் விருப்பத்தோடும் திருநாவுக்கரசரை அணைந்து தழுவிக் கொள்ள, நாவுக்கரசர் மணம் கமழும் மலர் போன்ற பிள்ளையாரின் அடிகளை வணங்கி உடன் வர, அலைகள் மோதுகின்ற கங்கை நீரைச் சடையில் கொண்ட இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற திருப்பூந்துருத்திக்கு வந்து சேர்ந்தனர்.

பெ. பு. பாடல் எண் : 939
அன்பர்குழாத் தொடும்செல்வார் ஆன்ஏற்றார் மகிழ்கோயில்
முன்புஅணித்தா கச்சென்று கோபுரத்தை முன்இறைஞ்சித்
துன்பம்இலாத் திருத்தொண்டர் உடன்தொழுது புக்குஅருளி
என்பு உருக வலம்கொண்டு பணிந்துஏத்தி இறைஞ்சினார்.

         பொழிப்புரை : அடியார் கூட்டத்துடன் செல்பவரான ஞானசம்பந்தர், விடைக்கொடியையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்கோயில் முன்பு அருகில் சென்று, கோபுரத்தை முன் வணங்கித் துன்பம் இல்லாத தொண்டருடன் தொழுத வண்ணமே உள்ளே சென்று எலும்பும் உருகுமாறு கோயிலுள் வலமாக வந்து பணிந்து வணங்கிப் போற்றினார்.
 
பெ. பு. பாடல் எண் : 940
பொய்இலியா ரைப்பணிந்து போற்றியே புறத்துஅணைவார்,
செய்ய சடையார் கோயில் திருவாயில் முன்ஆக,
மைஅறுசீர்த் தொண்டர்குழாம் வந்துபுடை சூழ, உலகு
உய்ய வருவார் தங்கள் உடன் மகிழ்ந்து  அங்கு இனிது இருந்தார்.

         பொழிப்புரை : திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் பொய்யிலியப்பரை வணங்கிப் போற்றிப் பின்னர், புற முற்றத்தில் சேர்பவரான ஞானசம்பந்தர், சிவந்த சடையையுடைய இறைவரின் கோயிலின் வாயில் முன்பு குற்றமறும் சிறப்புடைய தொண்டர் கூட்டம் வந்து, தம்மைச் சுற்றிச் சூழ்ந்து வர, உலகம் உய்யும் பொருட்டு வருகின்ற நாயன்மார்கள் இருவரும் அடியார்கள் சூழ அவர்களுடன் மகிழ்ந்து அங்கு இனிதாய் விரும்பித் தங்கியிருந்தனர்.

        பூந்துருத்தியில் பொய்யிலியப்பரைப் போற்றிப் பணிந்த பதிகம் கிடைத்திலது.

பெ. பு. பாடல் எண் : 941
வாக்கின் தனிமன்னர் வண்புகலி வேந்தர்தமைப்
போக்கும் வரவும் வினவ, புகுந்தது எல்லாம்
தூக்கின் தமிழ்விரகர் சொல்இறந்த ஞானமறை
தேக்கும் திருவாயால் செப்பி அருள்செய்தார்.

         பொழிப்புரை : சொற்குறுதிக்கு ஒப்பில்லாத அரசரான திருநாவுக்கரசர், வளமையுடைய சீகாழி மன்னரான ஞானசம்பந்தரை அவர் பாண்டி நாட்டுக்குச் சென்றருளியதும் அங்கு நின்று மீண்டதும் ஆகிய வரலாறுகளை வினவ, அங்கு நிகழ்ந்த வரலாறு முழுவதையும், தமிழ்ப் பாட்டின் தலைவரான பிள்ளையார், சொலற்கு அரிய ஞானமறைகளைத் தேக்கும் தம் திருவாக்கால் உரைத்தருளினார்.

         திருமறைக்காட்டினின்றும் பிரிந்த இருபெருமக்களும், திருப்பூந்துருத்தியில் மீண்டும் கூடுகின்றனர். ஒருவர் ஒருவரைப் பார்த்தவுடனேயே பாண்டிய நாட்டு நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ளாது, பெருமானை வழிபட்டு, அதன்பின்னரே அதுபற்றி அளவளாவிக் கொள்வது அறிந்து கடைப்பிடித்தற்குரியதாம். அதுவும் திருக்கோயிலினுள் அளவளாவுதலின்றிப் புறத்தணைந்தபின் நிகழ்த்துவதும் குறிக்கொள்ளதக்கதாம்.


பெ. பு. பாடல் எண் : 942
காழியினில் வந்த கவுணியர்தம் போர்ஏற்றை
ஆழிமிசைக் கல்மிதப்பில் வந்தார் அடிவணங்கி
"வாழிதிருத் தொண்டுஎன்னும் வான்பயிர்தான் ஓங்குதற்குச்
சூழும் பெருவேலி ஆனீர்" எனத் தொழுதார்.

         பொழிப்புரை : சீகாழியில் தோன்றிய கவுணியர் குலத்தவரின் போர் ஏறு என விளங்கும் ஞானசம்பந்தரை, கடல்மீது கல்லையே மிதப்பாகக் கொண்டு வந்தருளிய திருநாவுக்கரசர் வணங்கி, `வாழ்வை வழங்கும் திருத்தொண்டு என்னும் பெரிய பயிர் ஓங்கி வளர்ந்து பயன்தரச் செய்வதற்கு உரியதாய்ச் சூழும் பெரிய வேலிபோல் நீவிர் ஆயினீர்\' எனக் கூறித் தொழுதனர்.

 பெ. பு. பாடல் எண் : 943
பிள்ளையார் தாமும்அவர் முன்தொழுது பேர்அன்பின்
வெள்ளம் அனையபுகழ் மானியார் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக் குலச்சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசுஎல்லாம் மொழிந்து அங்கு உவந்துஇருந்தார்.

         பொழிப்புரை : ஞானசம்பந்தப் பெருமானார் நாவுக்கரசர் முன் தொழுது, பெரிய அன்பின் வெள்ளத்தைப் போன்ற புகழையுடைய மங்கையர்க்கரசியாரின் மேம்பாட்டையும், பெருமையுடைய குலச்சிறையாரின் திருத்தொண்டின் சிறப்பையும் உள்ளவாறு கூறியருளி அங்கு மகிழ்ந்திருந்தார்.

பெ. பு. பாடல் எண் : 944
தென்னற்கு உயிரோடு நீறுஅளித்து, செங்கமலத்து
அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்புஅருளி,
துன்னுநெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால்,
மன்னுபுகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார்.

         பொழிப்புரை : பாண்டிய மன்னருக்கு உயிருடனே திருநீற்றை அளித்தும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னப் பறவை போன்ற மங்கையர்க்கரசி அம்மையாருக்கும் குலச்சிறையாருக்கும் அன்பைச் சுரந்தருளியும், தூய மறைவழிவரும் சைவ நெறியையே பொருந்தும் நெறியாக ஆக்கியதால், நிலைபெற்ற புகழையுடைய திருநாவுக்கரசர் அதனைக் கேட்டு மகிழ்ந்தார்.
  
பெ. பு. பாடல் எண் : 945
சொல்லின் பெருவேந்தர் தொண்டைவள நாடுஎய்தி
மல்கு புகழ்க் காஞ்சி ஏகாம்பரம் மன்னும்
செல்வர் கழல்பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும்,
புல்குநூல் மார்பரும்போய்ப் போற்றும்திறம் புரிந்தார்.

         பொழிப்புரை : சொல்லரசரான திருநாவுக்கரசர் திருத்தொண்டை வளநாட்டைச் சேர்ந்து, மிகுபுகழுடைய காஞ்சிபுரத்தில் நிலைபெற வீற்றிருக்கின்ற செல்வரான ஏகம்பநாதரின் திருவடிகளை வணங்கி வந்த வரலாற்றையெல்லாம் கூறியருளவும், பொருந்திய நூலையுடைய மார்பரான பிள்ளையாரும் அங்குச் சென்று வணங்கத் திருவுள்ளம் பற்றினார்.
  
பெ. பு. பாடல் எண் : 946
அங்கணரைப் போற்றி எழுந்து, ஆண்ட அரசுஅமர்ந்த
பொங்கு திருமடத்தில் புக்கு,அங்கு இனிது அமர்ந்து,
திங்கள் பகவுஅணியும் சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு தாம்பரவிச் செல்லுநாள்.

         பொழிப்புரை : ஞானசம்பந்தர் இறைவரை வணங்கி எழுந்து, ஆளுடைய அரசர் விரும்பி எழுந்தருளியிருக்கும் அன்புமிக்க திருமடத்தில் சேர்ந்து, அங்கு விரும்பி வீற்றிருந்தருளி, திங்களின் பிளவு அனைய பிறையைச் சூடிய திருமுடியையுடைய இறைவரின் சேவடியின் கீழ்த் தங்கும் திருவுள்ளத்துடன் தாமும் போற்றி எழுந்தருளியிருந்த காலத்தில்,
  
பெ. பு. பாடல் எண் : 947
வாகீச மாமுனிவர் மன்னுதிரு ஆலவாய்
நாகம் அரைக்குஅசைத்த நம்பர் கழல் வணங்கப்
போகும் பெருவிருப்புப் பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெருங்காதல் பிள்ளையார் ஏற்றுஎழுவார்.

         பொழிப்புரை : வாகீச முனிவரான நாவுக்கரசருக்கு, நிலைபெற்ற திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் பாம்பை அரையில் கட்டிய இறைவரின் திருவடிகளை வணங்குவதற்காகச் செல்ல வேண்டும் என்ற பெரிய விருப்பம் மேன்மேலும் எழவும், ஞானசம்பந்தரும் சீகாழியில் சென்று சேரும் பெருகிய காதலை மேற்கொண்டவராய்,

பெ. பு. பாடல் எண் : 948
பூந்துருத்தி மேவும் புனிதர்தமைப் புக்குஇறைஞ்சிப்
போந்து திருவாயில் புறத்துஅணைந்து நாவினுக்கு
வேந்தர் திருவுள்ளம் மேவ, விடை கொண்டுஅருளி,
ஏந்தலார் எண்இறந்த தொண்டருடன் ஏகினார்.

         பொழிப்புரை : திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் இறைவரைத் திருக்கோயிலுள் புகுந்து வணங்கிப் போந்து, வாயில் பக்கத்தை அடைந்து, திருநாவுக்கரசரின் உள்ளம் பொருந்த அவரிடம் விடை பெற்றுக் கொண்டு, பெருமையுடைய பிள்ளையார் அளவில்லாத தொண்டர்களுடன் தம் செலவினை மேற்கொண்டார்.

----------------------------------------------------------------------------------------------------------
  
திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

6. 043     திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
         நினையாஎன் நெஞ்சை நினைவித் தானை,
கல்லா தனஎல்லாம் கற்பித் தானை,
         காணா தனஎல்லாம் காட்டி னானை,
சொல்லா தனஎல்லாஞ் சொல்லி, என்னைத்
         தொடர்ந்துஇங்கு அடியேனை ஆளாக் கொண்டு,
பொல்லாவென் நோய்தீர்த்த புநிதன் தன்னை,
         புண்ணியனை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :கங்கையைச் சடையில் இருத்தி, அவனை நினையாத என் மனத்தை அவனை நினைக்கச் செய்து, அரும் பேருண்மைகளை எல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து, என்னை அடிமையாகக் கொண்டு, கொடிய சூலை நோயைத் தீர்த்து எனக்குக் காணாதன எல்லாம் காட்டிய தூயோனாகிய புண்ணியனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.

பாடல் எண் : 2
குற்றாலம் கோகரணம் மேவி னானை,
         கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை,
உற்றுஆல நஞ்சுஉண்டு ஒடுக்கி னானை,
         உணராஎன் நெஞ்சை உணர்வித் தானை,
பற்றுஆலின் கீழ்அங்கு இருந்தான் தன்னை,
         பண்ஆர்ந்த வீணை பயின்றான் தன்னை,
புற்று ஆடுஆரவுஆர்த்த புநிதன் தன்னை,
         புண்ணியனை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :குற்றாலம் கோகரணம் இவற்றை விரும்பி உறைந்து கொடிய செயலை உடைய கடியவனாகிய கூற்றுவனை ஒறுத்து, ஆலகால விடத்தை உண்டு கழுத்தில் இருத்தி, உணராத என் நெஞ்சத்தில் அரும் பேருண்மைகளை உணர்வித்து, கல்லால மரத்தின் கீழ் அதனைச் சார்பாகக் கொண்டிருந்து, பண் நிறைந்த வீணையை வாசித்து, புற்றிலிருக்கும் படம் எடுத்தாடும் பாம்பினை இறுக அணிந்த தூயோனாகிய புண்ணியனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.
  
பாடல் எண் : 3
எனக்குஎன்றும் இனியானை, எம்மான் தன்னை,
         எழில்ஆரும் ஏகம்பம் மேயான் தன்னை,
மனக்குஎன்றும் வருவானை, வஞ்சர் நெஞ்சில்
         நில்லானை, நின்றியூர் மேயான் தன்னை,
தனக்குஎன்றும் அடியேனை ஆளாக் கொண்ட
         சங்கரனை, சங்கவார் குழையான் தன்னை,
புனக்கொன்றைத் தார்அணிந்த புநிதன் தன்னை,
         பொய்யிலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :ஏகம்பம் நின்றியூர் இவற்றில் தங்குபவனாய், எனக்கு என்றும் இனிய எம் தலைவனாய், மனத்தில் என்றும் இருப்பவனாய், வஞ்சகர் நெஞ்சில் நில்லாதவனாய், என்னைத் தனக்கு என்றும் ஆளாகக் கொண்டு நன்மை செய்கின்றவனாய், சங்கினால் ஆகிய நீண்ட காதணியை உடையவனாய் மேட்டு நிலத்தில் வளரும் கொன்றைப் பூமாலை அணிந்த தூயோனாகிய, பாசம் இல்லாதவனை, யான் பூந்துருத்தியில் கண்டேன்.
  
பாடல் எண் : 4
வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை,
         வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை,
அறியாது அடியேன் அகப்பட் டேனை
         அல்லற்கடல் நின்றும் ஏற வாங்கி
நெறிதான் இதுவென்று காட்டி னானை,
         நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னை,
பொறிஆடு அரவுஆர்த்த புநிதன் தன்னை,
         பொய்யிலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :மணம் கமழும் கொன்றைப் பூச் சூடி, ஐராவதம் வழிபட்ட வெண்காட்டில் உறைவானாய், அறியாத புறச்சமயத்தில் அகப்பட்ட என்னை அத்துயரக்கடலில் மூழ்காதபடி தூக்கி எடுத்து, இது தான் நேரிய வழி என்று காட்டி, நாடோறும் என்னை வருத்தும் பிணிகளைத் தீர்த்து, புள்ளிகளை உடைய ஆடும்பாம்பினை இறுகக் கட்டிய தூயோனாகிய பாசம் அற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.

பாடல் எண் : 5
மிக்கானை, வெண்ணீறு சண்ணித் தானை,
         விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி
நக்கானை, நான்மறைகள் பாடி னானை,
         நல்லார்கள் பேணிப் பரவ நின்ற
தக்கானை, தண்தா மரைமேல் அண்ணல்
         தலைகொண்டு, மாத்திரைக்கண் உலகம் எல்லாம்
புக்கானை, புண்ணியனை, புநிதன் தன்னை,
         பொய்யிலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :எல்லாரினும் மேம்பட்டவனாய், வெண்ணீறு பூசி, பகைவரின் மும்மதில்களையும் அழித்து, அவற்றின் அழிவுகண்டு சிரித்து, நான்கு வேதங்களையும் ஓதித் தக்கோர்களால் விரும்பி முன்னின்று துதிக்கப்படுபவனாய், பிரமன் மண்டை ஓட்டைச் சுமந்து ஒரு கணநேரத்தில் உலகமெல்லாம் சுற்றித் திரியும் புண்ணியனாய்த் தூயனாய்ப் பாசம் அற்றவனாயுள்ள எம்பெருமானைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.
  
பாடல் எண் : 6
ஆர்த்தானை, வாசுகியை அரைக்குஓர் கச்சா
         அசைத்தானை, அழகாய பொன்னார் மேனிப்
பூத்தானத் தான் முடியைப் பொருந்தா வண்ணம்
         புணர்ந்தானை, பூங்கணையான் உடலம் வேவப்
பார்த்தானை, பரிந்தானைப் பனிநீர்க் கங்கை
         படர்சடைமேல் பயின்றானை, பதைப்ப யானை
போர்த்தானை, புண்ணியனை, புநிதன் தன்னை,
         பொய்யிலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :வாசுகி என்ற பாம்பினையே வில்லுக்கு நாணாகக் கட்டியும், இடையிலே கச்சாக அணிந்தும் இருப்பவனாய், பொன் போன்ற உடம்பும் தாமரையாகிய இருப்பிடமும் உடைய பிரமனுடைய தலை ஒன்றனை அவன் உடலில் பொருந்தாதபடி நீக்கியவனாய், மன்மதன் உடல் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய்ப் பின் அவனிடம் அருள் கூர்ந்தவனாய், கங்கையைச் சடை மீது தரித்தவனாய், யானை நடுங்க அதன் தோலை உரித்துப் போர்த்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன்.
  
பாடல் எண் : 7
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
         இமைப்புஅளவில் பொடியாக, எழிலார் கையால்
உரித்தானை மதகரியை உற்றுப் பற்றி,
         உமைஅதனைக் கண்டுஅஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானை, சீர்ஆர்ந்த பூதஞ் சூழத்
         திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானை, புண்ணியனை, புநிதன் தன்னை,
         பொய்யிலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :பகைவர் முப்புரங்களையும் இமைகொட்டும் நேரத்திற்குள் பொடியாகுமாறு எரித்து, மத யானையைப் பற்றித் தன் அழகிய கைகளால் தோலை உரித்து, உமாதேவி அது கண்டு அஞ்ச, அவள் அச்சத்தைப் பார்த்து, சிரித்துச் சடையில் பிறையும் பாம்பும் கங்கையும் சூடிப் பூதகணங்கள் சூழ இருக்கும் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் இல்லாதவனான பெருமானை யான் பூந் துருத்தியில் கண்டேன்.

பாடல் எண் : 8
வைத்தானை வானோர் உலகம் எல்லாம்
         வந்துஇறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்
வித்தானை, வேண்டிற்றுஒன்று ஈவான் தன்னை,
         விண்ணவர்தம் பெருமானை, வினைகள் போக
உய்த்தானை. ஒலிகங்கை சடைமேல் தாங்கி
         ஒளித்தானை, ஒருபாகத்து உமையோடு ஆங்கே
பொய்த்தானை, புண்ணியனை, புநிதன் தன்னை,
         பொய்யிலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :வானோர் உலகமெல்லாம் படைத்தவனாய், அத்தேவர்கள் வந்து வணங்கி மலர்கொண்டு நின்று துதிக்கும் உலக காரணனாய், அடியவர்கள் விரும்பியதை அளிப்பவனாய், இந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கியவனாய், கங்கையைச் சடையில் மறைத்துப் பாதி உருவாய் உள்ள பார்வதிக்குப் புலப்படாதவாறு செய்தவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாயுள்ள பாசமற்றவனை நான் பூந்துருத்தியில் கண்டேன்.
  
பாடல் எண் : 9
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம்,
         அந்நாள் அறியாத தக்கன் வேள்வி
மீண்டானை, விண்ணவர்க ளோடுங் கூடி,
         விரைமலர்மேல் நான்முகனும் மாலும் தேட
நீண்டானை, நெருப்புஉருவம் ஆனான் தன்னை,
         நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்
பூண்டானை, புண்ணியனை, புநிதன் தன்னை,
         பொய்யிலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :தேவருலகமெல்லாம் ஆண்டவனாய், ஒரு காலத்தில் தக்கன் வேள்வியில் தொடர்பு கொண்டு தன்னால் தண்டிக்கப்பட்ட தேவர்களோடும் திரும்பியவனாய், தாமரையில் உள்ள பிரமனும் திருமாலும் தேடுமாறு தீப்பிழம்பாக நின்றவனாய், பகைவருடைய மும்மதிலும் தீப்பற்றி அழியுமாறு வில்லைப் பூண்டவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய் உள்ள பாசம் அற்றவனைப் பூந்துருத்தியில் யான் கண்டேன்.
  
பாடல் எண் : 10
மறுத்தானை மலைகோத்துஅங்கு எடுத்தான் தன்னை
         மணிமுடியோடு இருபதுதோள் நெரியக் காலால்
இறுத்தானை, எழுநரம்பின் இசைகேட் டானை,
         எண்திசைக்கும் கண்ணானான் சிரம் மேல் ஒன்றை
அறுத்தானை, அமரர்களுக்கு அமுதுஈந் தானை,
         யாவர்க்கும் தாங்கஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தானை, புண்ணியனை, புநிதன் தன்னை,
         பொய்யிலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :நந்தி பெருமான் அறிவுரையை அலட்சியம் செய்து தன் கைகளைக் கோத்துக் கயிலை மலையை எடுத்த இராவணனைப் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு காலால் அழுத்தியவனாய்ப்பின் அவன் பாடிய ஏழுநரம்பின் ஓசையைக் கேட்டு அவனுக்கு அருள் செய்தவனாய், எட்டுக் கண்களை உடைய பிரமனின் மேல்தலையாகிய ஐந்தாம் தலையை அறுத்தவனாய்த் தேவர்களுக்கு அமுதம் ஈந்தவனாய், எவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருத்தியவனாய்ப் புண்ணியனாய்த் தூயோனாய்ப் பாசம் அற்றவனாய் உள்ள பெருமானைப் பூந்துருத்தியில் நான் கண்டேன்.
திருச்சிற்றம்பலம்


5. 032   திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கொடிகொள் செல்வ விழாக் குணலைஅறாக்
கடிகொள் பூம்பொழில் கச்சிஏ கம்பனார்,
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்,
அடிகள் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : பல கொடிகள் எடுக்கப்பெற்றதும் , திருவிழாக்களினால் உண்டாகும் ஆரவாரங்கள் அறாததும் , மணமிக்க பூம் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருக்கச்சியேகம்பரும் திருநீற்றுப் பொடியினைப் பூசிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் சுவாமியும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

பாடல் எண் : 2
ஆர்த்த தோல் உடை கட்டி,ஓர் வேடனாய்ப்
பார்த்த னோடு படைதொடும் ஆகிலும்,
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : தோல் உடையினை ஆர்த்துக்கட்டி ஒரு வேட வடிவம் கொண்டு அருச்சுனனோடு படைக்கலந் தொடுக்கு மாயினும் , பூத்த மலர்கள் நிறைந்த நீள்பொழில்களை உடைய பூந்துருத்தி நகரத்துத் தீர்த்தவடிவாய் உள்ள பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

பாடல் எண் : 3
மாதி னைமதித் தான்ஒரு பாகமா,
காத லால்கரந் தான்சடைக் கங்கையை,
பூத நாயகன், பூந்துருத் திந்நகர்க்கு
ஆதி சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : உமையம்மையை ஒரு பாகமாக மதித்து ஏற்றவனும் , சடையின்கண் கங்கையைக் காதலால் ஒளித்துக் கொண்டவனும் . பூதங்களுக்குத் தலைவனும் , பூந்துருத்தி நகரில் எழுந்தருளியிருக்கும் முதல்வனும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .
 
பாடல் எண் : 4
மூவ னாய்,முத லாய், இவ் வுலகுஎலாம்
காவ னாய், கடும் காலனைக் காய்ந்தவன்,
பூவின் நாயகன், பூந்துருத் திந்நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : முப்பெருங்கடவுளராயும் , அவருள் முதல்வனாயும் , இவ்வுலகெல்லாவற்றையும் காப்பவனாயும் , கடிய காலனைக் காய்ந்தவனாயும் , அன்பால் நினைவாரது உள்ளக் கமலத் தின்கண் தலைவனாக எழுந்தருளி இருப்பவனாயும் உள்ள பூந்துருத்தி நகரின் தேவன் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

பாடல் எண் : 5
செம்பொ னேஒக்கும் மேனியன், தேசத்தில்
உம்ப ரார் அவரோடு அங்கு இருக்கிலும்,
பொன்பொன் ஆர் செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : நம் தேசத்தில் இருப்பினும் உம்பர் உள்ள தேவருலகத்தவரோடு இருப்பினும் , பொன்னும் பொலிவார்ந்த செல்வமும் உள்ள பூந்துருத்தி நகரத்து நம்மவனாகவும் , செம் பொன்னையே யொத்த திருமேனியினனாகவும் வீற்றிருக்கும் பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .
  
பாடல் எண் : 6
வல்லம் பேசி வலிசெய்மூன்று ஊரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்,
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : வன்மைபேசி வன்மையான கொடிய செயல்களையே செய்து திரிந்த திரிபுரங்களைக் கொல்ல எண்ணிப் பேசிக் கொடிய அம்பால் அழித்த பூந்துருத்தி நகர்ச்செல்வன் புன்மை பேசினும் அவன் திருவடிக்கீழேயே இருத்தலை எண்ணுவோம் .

பாடல் எண் : 7
ஒருத்த னாய் உலகு ஏழும் தொழநின்று,
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்தன் ஆகிலும், பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : ஒப்பற்றவனாய் ஏழு உலகங்களும் தொழ நின்று , பெரிய பாம்பும் , மதியும் , கங்கையும் சடையிற் பொருந்தியவனாய்ப் பூந்துருத்தி நகரத்தே எழுந்தருளியிருக்கும் திருத்தமானவனின் சேவடிக்கீழ் நாமிருக்கப்பெற்றோம் .
  
பாடல் எண் : 8
அதிரர், தேவர், இயக்கர், விச்சாதரர்,
கருத நின்றவர் காண்பரிது ஆயினான்,
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : அதிரர் , தேவர் இயக்கர் , விச்சாதரர் முதலியவர்கள் கருதுமாறு நின்ற அனைவரும் காண்டலரிய காட்சியானும் , நீர் இருகரையும் பொருதுவருகின்ற பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருப்பவனும் , சரியை முதலியவற்றில் நான்காவதாகிய ஞானத்தாலே எய்துதற்குரியவனும் ஆகிய பெருமானின் சேவடிக் கீழ் நாம் இருக்கப் பெற்றோம் .
  
பாடல் எண் : 9
செதுகு அறாமனத் தார்புறம் கூறினும்,
கொதுகு அறாக்கண்ணி நோன்பிகள் கூறினும்,
பொதுவின் நாயகன், பூந்துருத் திந்நகர்க்கு
அதிபன் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : குற்றம் நீங்காத மனத்தினர் புறம் பேசினும் கொசு நீங்காத பீளைசார்ந்த கண்களையுடைய புறச்சமய நோன்பிகள் இழித்துக் கூறினும் மன்றவாணனாகிய பூந்துருத்திப் பெருமான் சேவடிக்கீழேயே நாம் இருப்போம் .

பாடல் எண் : 10
துடித்த தோள்வலி வாள்அரக் கன்தனைப்
பிடித்த கைஞ்ஞெரிந்து உற்றன, கண்ணெலாம்
பொடிக்க ஊன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக் கீழ்நாம் இருப்பதே.

         பொழிப்புரை : தோளாற்றலும் மிக்க வாளாற்றலும் உடைய இராவணனை துடிக்குமாறும் , அவன் பிடித்த கைகள் நெரிவுறுமாறும் , கண்ணெலாம் நீர்த்துளிகள் பொடிக்குமாறும் திருவிரலால் ஊன்றிய பூந்துருத்தி நகரத்து எழுந்தருளியிருக்கும் பெருமானின் பெருமைமிக்க சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம் .

திருச்சிற்றம்பலம்


4. 088  திருப்பூந்துருத்தி               திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மாலினை மால்உற நின்றான், மலைமகள் தன்னுடைய
பாலனை, பால்மதி சூடியை, பண்பு உண ரார்மதில்மேல்
போலனை, போர்விடை ஏறியை, பூந்துருத் திம்மகிழும்
ஆலனை, ஆதிபு ராணனை, நாம்அடி போற்றுவதே.

         பொழிப்புரை : திருமாலுக்கு அடியைக் காணமுடியாத மயக்கம் ஏற்படும்படி தீத்தம்பமாக நின்றவனாய் , பார்வதி பாகனாய் , வெள்ளிய பிறை சூடியாய் , பிறருக்குத் தீங்கு செய்தல் கூடாது என்ற பண்பினை உணராத திரிபுர அசுரர்களின் மதில்களை வெற்றி கொண்டு அழித்தவனாய் , போரிடும் காளையை ஊர்பவனாய்ப் பூந்துருத்தியுள் உறைபவனாய் , கல்லாலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தொன் மூதாளனுடைய திருவடிகளை நாம் வணங்குகிறோம் .
  
பாடல் எண் : 2
மறிஉடை யான்,மழு வாளினன், மாமலை மங்கைஒர்பால்
குறிஉடை யான், குணம் ஒன்று அறிந்தார் இல்லை, கூறில்அவன்
பொறிஉடை வாள் அரவத்தவன், பூந்துருத்தி உறையும்
அறிவுஉடை ஆதிபு ராணனை நாம்அடி போற்றுவதே.

         பொழிப்புரை : மான் கன்று , மழுப்படை எனும் இவற்றை ஏந்திப் பார்வதி பாகனாய், தன் பண்புகளைப் பிறர் உள்ளவாறு அறிய இயலாதவனாய்ப் புள்ளிகளை உடைய ஒளிபொருந்திய பாம்பினை அணிபவன் என்று எல்லோராலும் கூறப்படுபவனாய்ப் பூந்துருத்தியுள் உகந்தருளியிருக்கும் ஞானவடிவினனாகிய தொன் மூதாளனை நாம் திருவடிக்கண் பணிந்து வணங்குகிறோம் .
  
பாடல் எண் : 3
மறுத்தவர் மும்மதில் மாயஒர் வெம்சிலை கோத்து ஓரம்பால்
அறுத்தனை, ஆல்அதன் கீழனை, ஆல்விடம் உண்டுஅதனைப்
பொறுத்தனை, பூதப் படையனை, பூந்துருத்தி உறையும்
நிறத்தனை, நீல மிடற்றனை, யான்அடி போற்றுவதே.

         பொழிப்புரை : தெய்வ நம்பிக்கை கொள்ள மறுத்த அசுரர்களின் மும்மதில்களும் அழியுமாறு ஒருகொடிய சிலையில் ஓர்அம்பினைக் கோத்து அழித்தவனாய் , கல்லால மரத்தடியில் அமர்ந்தவனாய் , ஆல காலவிடத்தை உண்டு , அதனைக் கழுத்தில் தங்க வைத்தவனாய் , பூதப்படை உடையவனாய் , பூந்துருத்தியில் உகந்தருளியிருக்கும் செந்நிறத்து நீலகண்டனாகிய பெருமானை அடியேன் திருவடிக்கண் பணிந்து வணங்குகின்றேன் .
  
பாடல் எண் : 4
உருவினை, ஊழி முதல்வனை, ஓதி நிறைந்து நின்ற
திருவினை, தேசம் படைத்தனை, சென்று அடைந்தேன்உடைய
பொருவினை, எல்லாம் துரந்தனை, பூந்துருத்தி உறையும்
கருவினை, கண்மூன்று உடையனை, யான்அடி போற்றுவதே.

         பொழிப்புரை : ஞானவடிவினனாய் , எல்லா ஊழிகளையும் படைத்த முதல்வனாய் , வேதங்களை ஓதி எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் செல்வனாய் , உலகங்களை எல்லாம் படைத்தவனாய் , தன்னைப் பற்றுக்கோடாய் வந்து அடைந்த அடியேனை மோதுகின்ற வினைகளை எல்லாம் விரட்டியவனாய் , பூந்துருத்தி நகரில் உறையும் உலக காரணனாய் , முக்கண்ணனாய் உள்ள பெருமானை அடியேன் அடிக்கண் பணிந்து வழிபடுகிறேன் .
  
பாடல் எண் : 5
தக்கன்தன் வேள்வி தகர்த்தவன், சாரம் அது அன்றுகோள்,
மிக்கன மும்மதில் வீயஒர் வெம்சிலை கோத்துஒர்அம்பால்
புக்கனன், பொன்திகழ்ந்து அன்னதுஒர் பூந்துருத்தி உறையும்
நக்கனை, நங்கள் பிரான்தனை, நான்அடி போற்றுவதே.

         பொழிப்புரை : தக்கனுடைய வேள்வியை எம் பெருமான் அழித்தான் என்பது அவன் பேராற்றலைக் காட்டுவதற்கு உரிய செயல் ஆகாது . பிறரைத் துன்புறுத்துதலில் மேம்பட்ட அசுரர்களின் மும் மதில்களும் அழியுமாறு கொடிய வில்லில் அம்பினைக் கோத்துச் செயற்பட்ட , பூந்துருத்தியுள் உறையும் பொன்னார் மேனியனும் திகம்பரனுமாய எங்கள் பெருமானை அடியேன் அடி போற்றுகிறேன் .
  
பாடல் எண் : 6
அருகுஅடை மாலையும் தான்உடை யான், அழகால் அமைந்த
உருவுஉடை மங்கையும் தன்ஒரு பால், உலகாயும் நின்றான்,
பொருபடை வேலினன், வில்லினன், பூந்துருத்தி உறையும்
திருவுடைத் தேச மதியனை, யான் அடி போற்றுவதே.

         பொழிப்புரை : அருகில் இடையிடையே பச்சிலைகளை வைத்துத் தொடுத்த மாலையை உடையவனாய் , அழகார்ந்த நாயகியாம் பார்வதி ஒருபாகம் பொருந்தப் பெற்றவனாய் , கலப்பினால் உலகெலாமாகி நிற்பவனாய் , போரிடும் படைக்கலன்களாகிய வில்லினையும் வேலினையும் உடையவனாய் , பூந்துருத்தியுள் உறையும் செல்வத்தை உடைய ஒளி வீசும் பிறைசூடியை அடியேன் அவனடிக்கண் பணிந்து வணங்குகிறேன் .

பாடல் எண் : 7
மன்றியும் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால்
பொன்றியும் போகப் புரட்டினன், பூந்துருத்தி உறையும்
அன்றியும் செய்தபி ரான்தனை, யான்அடி போற்றுவதே.

         பொழிப்புரை : தன்னால் ஒறுக்கப்பட்டும் மீண்டும் எதிர்த்துநின்ற முப்புர அசுரர்கள் அழியுமாறும் அவர்கள் இனமே ஒழியுமாறும் வெகுண்டு கொடிய வில்லை வளைத்துத் தீயைக்கக்கும் அக்கினியாகிய அம்பினால் அவர்கள் மதிலோடு அழிந்துபோகுமாறு செயற்பட்டுப் பூந்துருத்தியுள் உறைகின்ற , அழித்தற்றொழிலுக்கு மறுதலையாகிய ஆக்கச் செயல்களையும் செய்யும் பெருமானை அடியேன் அடிக்கண் பணிந்து வழிபடுகிறேன் .
  
பாடல் எண் : 8
மின்நிறம் மிக்க இடைஉமை நங்கையொர் பால்மகிழ்ந்தான்,
என்நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார்,
பொன்நிறம் மிக்க சடையவன், பூந்துருத்தி உறையும்
என்நிற எந்தைபி ரான்தனை, யான்அடி போற்றுவதே.

         பொழிப்புரை : மின்னல் போல ஒளி வீசும் இடையினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாக விரும்பிக் கொண்டவனாய் , தேவருள் மிக்கவரும் அவனுடைய உண்மையான நிறம் யாது என்று இன்றுவரை அறிய இயலாதவனாய்ப் பொன்போன்ற சடையை உடையவனாய்ப் பூந்துருத்தியில் உறைகின்ற சூரியன் போல ஒளிவீசும் எந்தை பெருமானை அடியேன் அடிபோற்றுகின்றேன் .

பாடல் எண் : 9
அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவுஅரிய
செந்தியை வாட்டும்செம் பொன்னினை,சென்று அடைந்தேன் உடைய
புந்தியைப் புக்க அறிவினை, பூந்துருத் தி உறையும்
நந்தியை, நங்கள்பி ரான்தனை, நான்அடி போற்றுவதே.

         பொழிப்புரை : மூன்று அந்திநேரத்திலும் வழிபடுதற்கு உரியவனாய் , எல்லோருக்கும் நல்லபுத்தியை வழங்குபவனாய் , ஒருவராலும் அறிய முடியாதபடி தீயில் சுட்டுத் தூயதாக்கப்பட்ட செம்பொன் நிறத்தினனாய் , தன்னைத் தலைவனாகப் பற்றிய அடியேனுடைய உள்ளமாயும் உள்ளொளிரும் ஞானமாயும் இருப்பவனாய் , பூந்துருத்தியில் உறைகின்ற நந்தி என்ற பெயருக்குரிய நம் தலைவனை அடியேன் அடிக்கண் பணிந்து போற்றுகின்றேன் .
  
பாடல் எண் : 10
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையஇடையே
வைக்கையும், வான்இழி கங்கையும், மங்கை நடுக்கு உறவே
மொய்க்கை அரக்கனை ஊன்றினன், பூந்துருத்தி உறையும்
மிக்கநல் வேத விகிர்தனை, நான்அடி போற்றுவதே.

         பொழிப்புரை :படம் எடுத்தலும் பதுங்கிப் பார்த்தலும் உடைய பாம்பினை , வானத்திலிருந்து இறங்கி வந்த கங்கையோடு சடையிலே வைத்து , கயிலைமலை அசைந்ததால் பார்வதி நடுங்க , அங்ஙனம் அசைத்த வலிய புயங்களை உடைய அரக்கனைத் திருவடி விரல் ஒன்றினால் அழுத்தி நெரித்துப் பூந்துருத்தியில் உகந்தருளி இருக்கும் மேம்பட்ட சிறந்த வேதங்களால் போற்றப்படுவோனும் , உலகியலில் இருந்து வேறுபட்ட இயல்பினனுமான பெருமானை , அடியேன் அடிக்கண் பணிந்து வணங்குகின்றேன் .
                                             திருச்சிற்றம்பலம்


6. 093    பொது - பலவகைத் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நேர்ந்துஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு,
         நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்துஒருத்தி படர்சடைமேல் பயிலக் கண்டு,
         படஅரவும் பனிமதியும் வைத்த செல்வர்,
தாம்திருத்தித் தம்மனத்தை ஒருக்காத் தொண்டர்
         தனித்துஒருதண்டு ஊன்றிமெய் தளரா முன்னம்,
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீர் ஆகில்,
         பொல்லாப் புலால் துருத்தி போக்க லாமே.

         பொழிப்புரை : தம் மனத்தைத் தாம் திருத்தி ஒருமுகப்படுத்தாத மக்களைப் போலப் பேணுவாரின்றித் தனித்துத் தண்டு ஒன்றை ஊன்றி உடல் தளராத முன்னம் , துணைவியாக நேர்ந்த ஒருத்தியைத் தன் உடலின் ஒரு பாகத்து அடங்கச் செய்து , பூமி நிலைதளரும் வண்ணம் பெரிய முகங்கள் ஆயிரத்தொடும் பாய்ந்த ஒருத்தியைப் பரந்த சடைமேல் பொருந்தச் செய்து , பட நாகத்தையும் குளிர்ந்த மதியையும் ஒருங்கே வைத்த செல்வராகிய சிவபெருமான் உவந்து உறையும் பூந்துருத்தி . பூந்துருத்தி என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராகில் துன்பமே விளைக்கும் புலால் பொருந்திய துருத்தி போன்ற உடம்பை நீக்கல் கைகூடும் .
  
பாடல் எண் : 2
ஐத்தானத்து அகமிடறு சுற்றி, ஆங்கே
         அகத்துஅடைந்தால் யாதுஒன்றும் இடுவார்இல்லை,
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு
         மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்,
பைத்தானத்து ஒண்மதியும் பாம்பும் நீரும்
         படர்சடைமேல் வைத்துஉகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீர் ஆகில்,
         நிலாவாப் புலால்தானம் நீக்க லாமே.

         பொழிப்புரை :மைதீட்டும் இடமான கண்களையுடைய மடவாரோடு வாழும் நிலையற்ற மனைவாழ்க்கையில் இறுமாந்து வாழ்வீர்காள் ! கோழைக்கு இடமான மிடற்று உட்பகுதி பன்னாளும் பலவற்றையும் பேசி இறுதி நாளில் செயலற்றுக் கோழையினால் அடைக்கப்படும் நிலையை அடைந்தால் அதனை நீங்குதற்கு யாதொரு மருந்துந் தருவாரில்லை . ஆகலான் ஒளிர்மதியையும் , படமாகிய இடத்தினை யுடைய பாம்பையும், கங்கையையும் தன் விரிந்த சடைமேல் வைத்து மகிழ்ந்த பண்பனாகிய சிவபெருமான் விரும்பி உறையும் நெய்த்தானம் நெய்த்தானம் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராகில் நிலையில்லாத ஊனினாலாகிய உடம்பினை நீக்கல் கைகூடும் .
  
பாடல் எண் : 3
பொய்ஆறா வாறே புனைந்து பேசி,
         புலர்ந்துஎழுந்த காலைப் பொருளே தேடி,
கையாறாக் கரணம் உடையோம் என்று
         களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்,
நெய்ஆறா ஆடிய நீல கண்டர்,
         நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர், மேய
ஐயாறே ஐயாறே என்பீர் ஆகில்,
         அல்லல்தீர்ந்து அமர்உலகம் ஆள லாமே.

         பொழிப்புரை :நிலையாமை நீங்காத முறைமையுடைய பொருள்களையே சிறப்பித்துப் பேசிப் பொழுது புலர எழுந்தது முதல் பொருளைத் தேடி ஒழுக்கமாக எங்கள் குலத்தொழிலைக் கொண்டுள்ளோம் என்று எண்ணி இறுமாந்த மனத்தராய் அத்தொழிலில் தொடர்தலை உறுதியாகக் கருதி வாழ்வீர்காள் ! நெய்யை ஆறுபோல் ஆடியவரும் , நீலகண்டரும் , நீண்ட செஞ்சடையரும் , நெற்றிக் கண்ணரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் ஐயாறே ! ஐயாறே ! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் தீர்த்துச் சிவனுலகை ஆளலும் கைகூடும் .
  
பாடல் எண் : 4
இழவுஒன்று தாம்ஒருவர்க்கு இட்டுஒன்று ஈயார்,
         ஈன்றுஎடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழல்நம்கோ வைஆதல் கண்டும் தேறார்,
         களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்,
அழல் நம்மை நீக்குவிக்கும், அரையன் ஆக்கும்,
         அமர்உலகம் ஆள்விக்கும், அம்மான் மேய
பழனம் பழனமே என்பீர் ஆகில்,
         பயின்றுஎழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.

         பொழிப்புரை :ஒருபொருள் தமக்கு நட்டமாகும்படி உயர்ந்தோர்க்கு ஒன்று கொடுத்தலையும் பல இடத்தும் அலைந்து திரியும் வறியவர் ஒருவர்க்கு ஒன்று ஈதலையும் செய்யாராய் , ஈன்றெடுத்த தாய் , தந்தை , மனைவியர் , மக்கள் முதலியோர் தம் காலில் பூணும் தளையாதலை அனுபவித்தும் தெளியாராய் , இறுமாந்த மனத்தாராய் அவர்களையே நிலையாகக் கருதி வாழ்வீர்காள் ! நம் அழுகையை நீக்குவிப்பவனும் நம்மை அரையனாக்குபவனும் , நம்மை அமரருலகு ஆள்விப்பவனும் ஆகிய தலைவன் சிவபெருமான் விரும்பி உறையும் பழனம் பழனம் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பன்னாள் செய்து போந்த பழைய வினையாகிய நோயை நீக்கலும் கைகூடும் .
  
பாடல் எண் : 5
ஊற்றுத் துறைஒன்ப துள்நின்று ஓரீர்,
         ஒக்க அடைக்கும்போது உணர மாட்டீர்,
மாற்றுத் துறைவழி கொண்டுஓடா முன்னம்
         மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்,
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்
         வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய,
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீர் ஆகில்,
         துயர்நீங்கித் தூநெறிக்கண் சேர லாமே.

         பொழிப்புரை :நிலையற்ற மனைவாழ்க்கையில் இறுமாந்து வாழ்வீர்காள் ! அழுக்கு ஊறுகின்ற துறையாம் இவ் உடலில் உள்ள ஒன்பது பெருவாயில்களின் உள்ளே அகப்பட்டு நின்றமையால் இறைவனை நினைகின்றிலீர் , அவை ஒன்பதையும் , ஒருசேர அடைக்கும் இறுதிப்போதில் இறைவனை நினைக்க விரும்பினும் அது செய்ய மாட்டீர் . மாற்றுத்துறையாகிய யாதனாசரீரத்துடன் செல்லும் வழியை மேற்கொண்டு கால தூதுவரோடு நீவிர் ஓடாமுன்னம் பகைமைத் தொழில் பூண்டாருடைய புரங்கள் மூன்றையும் வெவ்விய அழலிடத்து வீழ்விக்கும் வேந்தனாகிய சிவபெருமான் விரும்பி உறையும் சோற்றுத் துறை சோற்றுத்துறை என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித்துயர் நீங்கித் தூய வீட்டுநெறியினைச் சேர்தல் கைகூடும் .
  
பாடல் எண் : 6
கலம்சுழிக்கும் கருங்கடல்சூழ் வையம் தன்னில்
         கள்ளக் கடலில் அழுந்தி, வாளா
நலம்சுழியா எழுநெஞ்சே, இன்பம் வேண்டில்,
         நம்பன்தன் அடியிணைக்கே நவில்வா யாகில்,
அலம்சுழிக்கும் மன்நாகம் தன்னால் மேய
         அருமறையோடு ஆறுஅங்கம் ஆனார் கோயில்,
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்,
         வல்வினைகள் தீர்ந்துவான் ஆள லாமே.

         பொழிப்புரை :மரக்கலங்கள் சுழலுகின்ற கரிய கடலால் சூழப்பட்ட உலகில் வஞ்சனைக் கடலில் அழுந்தி , முயலாமலே , நன்மையைத் தேடி அலைகின்ற நெஞ்சே ! நல்லின்பம் பெற வேண்டில் நம்புதற்குரிய தலைவன் திருவடியிணைக்கே வாழ்த்து நவில். அங்ஙனம் நவில விரும்பின் எல்லாப் பொருளும் அடங்கச் சுருட்டும் பாம்பரசனாகிய ஆதிசேடனால் விரும்பப்பட்டதும் அருமறையும் ஆறங்கமும் ஆன சிவபெருமான் உறைவதும் ஆகிய கோயிலைக் கொண்ட வலஞ்சுழியே வலஞ்சுழியே என்று பலகாலும் கூறுவையாயின் வலிய வினைகள் தீர வானுலகு ஆளல் கைகூடும் .
  
பாடல் எண் : 7
தண்டிகுண் டோதரன்பிங் கிருடி,
         சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்,
பண்டை உலகம் படைத்தான் தானும்,
         பாரை அளந்தான்பல் லாண்டுஇ சைப்ப,
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதம்
         சிலபாட, செங்கண் விடைஒன்று ஊர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீர் ஆகில்,
         கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.

         பொழிப்புரை :தண்டியும் குண்டோதரனும் , பிருங்கியாகிய இருடியும் , புகழ்சார்ந்த நந்தியும் , சங்குகன்னனும் , பண்டு உலகைப் படைத்த பிரமனும் , உலகளந்த திருமாலும் பல்லாண்டு இசைக்கவும் திண்ணிய வயிற்றையும் சிறிய கண்களையுமுடைய பூதங்கள் சில பாடவும் விடை ஒன்றை ஊர்பவனாகிய சிவபெருமான் மேவி உறையும் கண்டியூர் கண்டியூர் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீர் ஆயின் நும் வலிய வினையை விரைவாக நீக்கல் கைகூடும் .
  
பாடல் எண் : 8
விடம்ஊக்குஅப் பாம்பேபோல் சிந்தி நெஞ்சே,
         வெள்ளேற்றான் தன்தமரைக் கண்ட போது,
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று
         மாதவத்தார், மனத்துள்ளார், மழுவாட் செல்வர்,
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்
         பங்கயத்து மேல்அயனும் பரவிக் காணாக்
குடமூக்கே குடமூக்கே யென்பீர் ஆகில்,
         கொடுவினைகள் தீர்ந்துஅரனைக் குறுக லாமே.

         பொழிப்புரை : நெஞ்சே ! வெள்ளேறு ஊறும் விமலனுடைய அடியார்களைக் கண்டபோது ஆலமர் கடவுளை அடைந்த முனிவர் போல் அவர்களைச் சென்றடைந்து , விடம் , உக்க பாம்பு போல அடங்கி வணங்கு . வணங்கி , மாதவத்தார் , மனத்து உள்ளவரும் , மழுப் படையை ஏந்திய செல்வரும் , படத்தையுடைய கொடிய பாம்பாகிய அணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் , பங்கய மலர்வாழ் பிரமனும் புகழ்ந்து தோத்திரித்தும் காணப்படாதவரும் ஆகிய அரனார் மகிழ்ந் துறையும் குடமூக்கே குடமூக்கே என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவையாயின் கொடுவினைகள் தீர அவரைக் கிட்டுதல் கைகூடும் .

பாடல் எண் : 9
தண்காட்டச் சந்தனமும், தவள நீறும்,
         தழையணுகும் குறுங்கொன்றை மாலை சூடி,
கண்காட்டாக் கருவரைபோல் அனைய காஞ்சிக்
         கார்மயில்அம் சாயலார் கலந்து காண,
எண்காட்டாக் காடு அங்கு இடமா நின்று
         எரிவீசி இரவாடும் இறைவர் மேய,
வெண்காடே வெண்காடே என்பீர் ஆகில்,
         வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே

         பொழிப்புரை :மேகலையணிந்து கார்மயிலின் சாயலைக் கொண்டு நீலமலைபோன்று விளங்கும் உமாதேவியார் ஒரு பங்கில் கலந்து நின்று கடைக்கண்ணைச் செலுத்திக் காண , சந்தனமும் , வெண்ணீறும் குளிர்ந்து விளங்க , தழைவிரவித் தொடுக்கப்பட்ட கொன்றைக் குறுமாலையைச் சூடி , எண்ணற்ற இறந்தோருடைய இடமாகிய முது காட்டில் நின்று எரிஏந்தி இரவில் ஆடும் இறைவர் விரும்பி உறையும் வெண்காடே வெண்காடே என்று பலகாலும் நினைந்து வாழ்த்துவீராயின் கெடாத வலிய வினைகளாகிய நோய்களைக் கெடுத்தல் கைகூடும் .
  
பாடல் எண் : 10
தந்தை-யார், தாய்-யார், உடன்பி றந்தார்
         தாரம்-ஆர், புத்திரர்-ஆர், தாந்தாம் ஆரே,
வந்தவாறு எங்ஙனே, போமாறு ஏதோ,
         மாயமாம் இதற்குஏதும் மகிழ வேண்டா,
சிந்தையீர், உமக்குஒன்று சொல்லக் கேண்மின்,
         திகழ்மதியும் வாள்அரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
         என்றுஎழுவார்க்கு, இருவிசும்பில் இருக்கல் ஆமே

         பொழிப்புரை : ஒருவருக்குத் தந்தை யார் ? தாய் யார் ? உடன் பிறந்தார் தாம் யார் ? தாரம் யார் ? புத்திரர் யார் ? தாம் தாம் தமக்கு என்ன தொடர்புடையர் ? நிலவுலகிற் பிறந்தது தந்தை முதலியவரோடு முன்னேயும் கூடிநின்றோ ? இறப்பது அவர்களோடு பின்னும் பிரியாது கூடிநிற்கவோ ? ஆகவே சிந்தையீர் , பொய்யான இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா . உமக்கு ஓர் உறுதி சொல்லக் கேண் மின் . ஒளிவீசித் திகழும் மதியும் கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் முடியை உடைய எந்தையாரது திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயிலெழுவார்க்குப் பெரிய வீட்டுலகில் நிலை பெற்றிருத்தல் கைகூடும் . ஆகவே அதனைச் செய்ம்மின் .
                                             திருச்சிற்றம்பலம்


6. 095    பொது - தனித் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அப்பன்நீ, அம்மைநீ, ஐய னும்நீ,
         அன்புடைய மாமனும் மாமி யும்நீ,
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ,
         ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும்நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ,
         துணையாய்என் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ,
இப்பொன்நீ, இம்மணிநீ, இம்முத் து(ம்)நீ,
         இறைவன்நீ, ஏறுஊர்ந்த செல்வன் நீயே.

         பொழிப்புரை :ஏறூர்ந்த செல்வனே! எனக்கு அப்பனும் அம்மையும் தமையனும் நீ. அன்புடைய மாமனும் மாமியும் நீ. பிறப்பு, குடிமை முதலியவற்றான் ஒப்புடைய மனைவியரும், ஒள்ளிய செல்வமும் நீ, ஒரு குலத்தவரும், பிற சுற்றத்தவரும், நிலையாக நின்று வாழும் ஒப்பற்ற ஊரும் நீ, நுகர்ச்சிப் பொருள்களாகவும், ஊர்தி வகைகளாகவும் தோன்றுபவனும் நீ, இப்பொன்னும் இம்மணியும் இம்முத்தும் நீ, எனக்குத் துணையாய் உடனின்று உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்னைத் துறப்பிப்பானும் நீ. நீயே எனக்குக் கடவுள்.
  
பாடல் எண் : 2
வெம்பவரு கிற்பதுஅன்று கூற்றம் நம்மேல்,
         வெய்ய வினைப்பகையும் பைய நையும்,
எம்பரிவுந் தீர்ந்தோம், இடுக்கண் இல்லோம்,
         எங்குஎழில்என் ஞாயிறு, எளியோம் அல்லோம்,
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி,
         அனல்ஆடி. ஆன்அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர்,செங் குன்ற வண்ணர்,
         செவ்வான வண்ணர்,என் சிந்தை யாரே.

         பொழிப்புரை :அழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரும், ஆன் அஞ்சிலும் ஆடுதலை உகந்தவரும், செம்பவள நிறத்தினரும், செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையராயினார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோரிடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை? யாவர்க்கும் எளியோம் அல்லோம்.
 
பாடல் எண் : 3
ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே,
         அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே,
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே,
         உருகு வித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே,
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே,
         பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே,
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே,
         காண்பார்ஆர், கண்ணுதலாய், காட்டாக் காலே.

         பொழிப்புரை : கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?
  
பாடல் எண் : 4
நற்பதத்தார் நற்பதமே, ஞான மூர்த்தீ,
         நலஞ்சுடரே, நால்வேதத்து அப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
         சொலற்குஅரிய சூழலாய், இதுவுன் தன்மை,
நிற்பதுஒத்து, நிலையிலா நெஞ்சந் தன்னுள்
         நிலாவாத புலால்உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே, யான்உன்னை விடுவேன் அல்லேன்,
         கனகமா மணிநிறத்துஎம் கடவு ளானே.

         பொழிப்புரை : வீடுபேற்றினை அடைய உரியவருடைய வீடு பேறாய் நின்றவனே! ஞானமே வடிவானவனே! நன்மையை விளக்கும் சுடரே! நான்கு வேதங்களுக்கும் அப்பால் நின்ற சொல்பதத்தாராகிய அபர முத்தருடைய சொற்பதத்தையும் கடந்து நின்ற சொல்லற்கரிய சூழலாய்! இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே! கனகமும் மாணிக்கமும் ஒத்த நிறத்தினை உடைய எம் கடவுளே. யான் உன்னை விடுவேன் அல்லேன்.
  
பாடல் எண் : 5
திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்,
         திருவெண்ணீறு அணியாத திருஇல் ஊரும்,
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும்,
         பாங்கினோடு பலதளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்,
         விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்,
அருப்போடு மலர்பறித்துஇட்டு உண்ணா ஊரும்,
         அவை எல்லாம் ஊர்அல்ல, அடவி காடே.

         பொழிப்புரை : சிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.

பாடல் எண் : 6
திருநாமம் அஞ்சுஎழுத்தும் செப்பார் ஆகில்,
         தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில்,
         உண்பதன்முன் மலர்பறித்துஇட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெடவெண்ணீறு அணியார் ஆகில்,
         அளிஅற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்,
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
         பிறப்பதற்கே தொழில்ஆகி, இறக்கின் றாரே.

         பொழிப்புரை : திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாராயின், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாராயின், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராராயின், உண்பதற்குமுன் பல மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாராயின், கொடுநோய்கள் கெட வெண்ணீற்றை அணியாராயின், அங்ஙனம் செய்யாதாரெல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவராவர். அவர்கள் பிறந்த முறைமை தான் யாதோவெனின், தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலேதான்.
  
பாடல் எண் : 7
நின்னாவார் பிறர்இன்றி நீயே ஆனாய்,
         நினைப்பார்கள் மனத்துக்குஓர் வித்தும் ஆனாய்,
மன்ஆனாய், மன்னவர்க்குஓர் அமுதம் ஆனாய்,
         மறைநான்கும் ஆனாய்,ஆறு அங்கம் ஆனாய்,
பொன்ஆனாய், மணிஆனாய், போகம் ஆனாய்,
         பூமிமேல் புகழ்தக்க பொருளே, உன்னை
என்ஆனாய், என்ஆனாய், என்னின் அல்லால்,
         ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.

         பொழிப்புரை : நின்னைப்போல் ஆவார் பிறர் இன்றி நீ ஒருவனே ஆனாய், நினைப்பார் தம் மனமாகிய நிலத்துக்கு ஒப்பற்ற வித்தும் ஆனாய், தலைவன் ஆனாய், அரசர்களுக்கு ஒப்பற்ற அமுதம் ஆனாய்; மறை நான்கும் ஆறங்கமுமாய், பொன்னும் மணியும் போகமும் ஆகும் பூமிமேல் புகழ்தற்குரிய பொருளானவனே! நீ எவ்வாறெல்லாம் ஆனாய் எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றிச் சிற்றறிவினையுடைய யான் எவற்றை எஞ்சாது சொல்லிப் புகழ்வேன்.
  
பாடல் எண் : 8
அத்தா,உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்,
         அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய்,
எத்தனையும் அரியைநீ எளியை ஆனாய்,
         எனைஆண்டு கொண்டுஇரங்கி ஏன்று கொண்டாய்,
பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன்,
         பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாய்அன்றே,
இத்தனையும் எம்பரமோ, ஐய ஐயோ,
         எம்பெருமான் திருக்கருணை இருந்த வாறே.

         பொழிப்புரை : தந்தையே! ஐயா! உன் அடியவன் ஆகிய என்னை என் அன்பு கொண்டு பிணிப்புண்ணச் செய்தாய்; உனது திருவருள் நோக்கத்தாலே என்னைத் தீர்த்த நீர் ஆட்டித் தூயவன் ஆக்கினாய். அடைதற்கு மிகவும் அரியையாகிய நீ எனக்கு மிகவும் எளியை ஆயினாய்; என்மீது இரங்கி எனை ஆண்டுகொண்டு என்செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன்னின்று ஏற்றுக்கொண்டாய். ஒரு நெறிப்படாத பித்தனேனும் யாதுமுணராத பேதையேனேனும், வீணில் உழலும் பேயேனேனும் இழிவு மிகுந்த நாயேனேனும் நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தனை. நின் அருட்செயல்கள் யாவும் எம்போலியரது அளவிற்கு உரியனவோ? அல்ல; அல்ல; எம் பெருமான் திருக்கருணை இருந்த தன்மையைக் காட்டுவனவே அவை.
  
பாடல் எண் : 9
குலம்பொல்லேன், குணம்பொல்லேன், குறியும் பொல்லேன்,
         குற்றமே பெரிதுஉடையேன், கோலம் ஆய
நலம்பொல்லேன், நான்பொல்லேன், ஞானி அல்லேன்,
         நல்லாரோடுஇசைந்திலேன், நடுவே நின்ற
விலங்கு அல்லேன், விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்,
         வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்,
இலம்பொல்லேன், இரப்பதே, ஈய மாட்டேன்,
         என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.

         பொழிப்புரை :சார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லா வற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். பிறப்பால் குடிமை நல்லேன் ஆயினும் என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.
  
பாடல் எண் : 10
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து,
         தரணியொடு வான்ஆளத் தருவ ரேனும்,
மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்,
         மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்,
அங்கம்எலாம் குறைந்துஅழுகு தொழுநோ யராய்,
         ஆவுரித்துத் தின்றுஉழலும் புலைய ரேனும்,
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில்,
         அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.

         பொழிப்புரை :சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.
                                             திருச்சிற்றம்பலம்

6. 071    பொது - அடைவுத் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன்று எய்து,
         புலந்துஅழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி, திருக்காட்டுப் பள்ளி, கள்ளார்
         கமழ்கொல்லி அறைப்பள்ளி, கலவம் சாரல்
சிரப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன் பள்ளி,
         செழுநனி பள்ளி,தவப் பள்ளி, சீரார்
பரப்பள்ளி, என்றுஎன்று பகர்வோர் எல்லாம்,
         பரலோகத்து இனிதாகப் பாலிப் பாரே.

         பொழிப்புரை :மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி, வருந்தி அழியுமாறு சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, மது நிறைந்து மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி, மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழிப்புமிக்க நனிபள்ளி, தவப்பள்ளி புகழ்பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப் பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமைமிகக் காப்பாராவார்.
  
பாடல் எண் : 2
காவிரியின் கரைக்கண்டி வீரட் டானம்,
         கடவூர்வீ ரட்டானம், காமருசீர் அதிகை
மேவியவீ ரட்டானம், வழுவைவீ ரட்டம்,
         வியன்பறியல் வீரட்டம், விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம், குறுக்கைவீ ரட்டம்,
         கோத்திட்டைக் குடிவீரட் டானம்,இவை கூறி,
நாவில்நவின்று உரைப்பார்க்கு, நணுகச் சென்றால்
         நமன்தமரும் சிவன்தமர்என்று அகல்வர் நன்கே.

         பொழிப்புரை :காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம், பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர்.
  
பாடல் எண் : 3
நற்கொடிமேல் விடைஉயர்த்த நம்பன் செம்பங்
         குடி,நல்லக் குடி,நளிநாட் டியத்தான் குடி,
கற்குடி,தென் களக்குடி,செங் காட்டங் குடி,
         கருந்திட்டைக் குடி,கடையக் குடி,கா ணுங்கால்
விற்குடி,வேள் விக்குடி, நல்வேட்டக் குடி,
         வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க் குடி,
புற்குடி,மா குடி,தேவன் குடி,நீலக்குடி,
         புதுக்குடியும் போற்றஇடர் போகும் அன்றே.

         பொழிப்புரை :நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக்குடி, நன்மமைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க் குடி, புற்குடி, மாகுடி, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி, என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்.
  
பாடல் எண் : 4
பிறைஊரும் சடைமுடிஎம் பெருமான் ஆரூர்,
         பெரும்பற்றப் புலியூரும், பேரா வூரும்,
நறையூரும், நல்லூரும், நல்லாற் றூரும்,
         நாலூரும், சேற்றூரும், நாரை யூரும்,
உறையூரும், ஓத்தூரும், ஊற்றத் தூரும்,
         அளப்பூர், ஓமாம்புலியூர், ஓற்றி யூரும்,
துறையூரும், துவையூரும், தோழூர் தானும்,
         துடையூரும் தொழ, இடர்கள் தொடரா அன்றே.

         பொழிப்புரை :பிறைதவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா .
  
பாடல் எண் : 5
பெருக்காறு சடைக்குஅணிந்த பெருமான் சேரும்
         பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்
கரக்கோயில், கடிபொழில்சூழ் ஞாழல் கோயில்,
         கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்,
இருக்குஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்
         இளங்கோயில், மணிக்கோயில், ஆலக் கோயில்,
திருக்கோயில், சிவனுறையும் கோயில் சூழ்ந்து
         தாழ்ந்துஇறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.

         பொழிப்புரை :நீர்ப்பெருக்கினை உடைய கங்கையாற்றைச் சடையிலணிந்த சிவபெருமான் திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன், கடம்பூர் கரக்கோயில், மணங்கமழும் பொழில்கள் சூழ்ந்த ஞாழற்கோயில், கருப்பறியலூரில் மலைபோன்று விளங்கும் கொகுடிக்கோயில், அந்தணர்கள் வேதம் ஓதி வழிபாடு செய்து துதிக்கும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயிலாகிய திருக் கோயில், என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்து படிமீது வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும் தீரும்.


பாடல் எண் : 6
மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
         மறைக்காடு, வண்பொழில்சூழ் தலைச்சங் காடு,
தலையாலங் காடு,தடம் கடல்சூழ் அந்தண்
         சாய்க்காடு, தள்ளுபுனல் கொள்ளிக் காடு,
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு,
         பனங்காடு, பாவையர்கள் பாவம் நீங்க
விலைஆடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
         வெண்காடும், அடைய, வினை வேறாம் அன்றே.

         பொழிப்புரை :மலையரசன் மகளாகிய பார்வதியொடு மகா தேவன் மகிழ்ந்துறையும் மறைக்காடு, வளப்பம் மிக்க சோலைகள் சூழ்ந்த தலைச்சங்காடு, தலையாலங்காடு, பரந்த கடலால் சூழப் பட்டதும், அழகியதும், குளிர்ந்ததுமாகிய சாய்க்காடு, மோதித்தள்ளும் நீரையுடைய கொள்ளிக்காடு, பலரும் புகழும் பழையனூர் ஆலங்காடு, பனங்காடு, பாவை போன்ற பெண்கள் தங்கள் பாவம் நீங்குதற்காக விலை ஏறப்பெற்ற தம் வளையல்கள் கலந்து ஒலிக்கும்படி ஆடும் பொய்கைகளை உடைய வெண்காடு ஆகியவற்றை அடைந்து வணங்க வினைகள் விட்டு நீங்கும்.
  
பாடல் எண் : 7
கடுவாயர் தமைநீக்கி என்னை ஆட்கொள்
         கண்ணுதலோன் நண்ணுமிடம்அண்ணல்வாயில்,
நெடுவாயில், நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்,
         நிகழ்முல்லை வாயிலொடு, ஞாழல் வாயில்,
மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்,
         மறிகடல்சூழ் புனவாயில், மாட நீடு
குடவாயில், குணவாயில், ஆன எல்லாம்
         புகுவாரை, கொடுவினைகள் கூடா அன்றே.

         பொழிப்புரை :கடுக்காயைத் தின்னும் வாயினராகிய சமணரை நீக்கி என்னை அடிமை கொள்ளும் கண்ணுதற் கடவுளாகிய சிவபெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில், நெடுவாயில், பயிர் நிறைந்த வயல் சூழ்ந்த நெய்தல்வாயில், நிலவும் முல்லைவாயில், ஞாழல்வாயில், வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில், அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில், குணவாயில், ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா.
  
பாடல் எண் : 8
நாடகம் ஆடிஇடம்நந்தி கேச்சுரம்,மா காளேச்
         சுரம்,நாகேச் சுரம்,நாக ளேச்சுரம்,நன்கு ஆன
கோடீச்சுரம், கொண்டீச் சுரம், திண் டீச்சுரம்,
         குக்குடேச் சுரம், அக்கீச் சுரம், கூறுங்கால்
ஆடகேச் சுரம், அகத்தீச் சுரம், அய னீச்சுரம்,
         அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுரம், என்றுஎன்று ஏத்தி,
         இறைவன்உறை சுரம்பலவும் இயம்பு வோமே.

         பொழிப்புரை :கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போகடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.
  
பாடல் எண் : 9
கந்தமா தனம், கயிலை மலை,கே தாரம்,
         காளத்தி, கழுக்குன்றம், கண்ஆர் அண்ணா,
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்,
         மகேந்திரமா மலை,நீலம், ஏம கூடம்,
விந்தமா மலை,வேதம் சையம் மிக்க
         வியன்பொதியின் மலை,மேரு, உதயம், அத்தம்,
இந்துசே கரன்உறையும் மலைகள், மற்றும்
         ஏத்துவோம், இடர்கெடநின்று ஏத்து வோமே.

         பொழிப்புரை :கந்தமாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், இடமகன்ற அண்ணாமலை, தென்றல் தவழும் பொழில்களை உடைய சரிவுகளுடன் கூடிய வடபற்பதம், மகேந்திரமாமலை, நீலமலை, ஏமகூடமலை, விந்தமாமலை, வேதமலை, சையமலை, சோலைகள் மிக்க அகன்ற பொதியின் மலை, மேருமலை, உதயமலை, அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம். எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் புகழ்ந்து போற்றுவோம் .
  
பாடல் எண் : 10
நள்ளாறும், பழையாறும், கோட்டாற் றோடு,
         நலந்திகழும் நாலாறும், திருவை யாறும்,
தெள்ளாறும், வளைகுளமும், தளிக்குளமும், நல்
         இடைக்குளமும், திருக்குளத்தோடு, அஞ்சைக் களம்,
விள்ளாத நெடுங்களம்,வேட் களம், நெல் லிக்கா,
         கோலக்கா, ஆனைக்கா, வியன்கோடிகா,
கள்ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும்,
         குளம்,களம், கா என அனைத்தும் கூறுவோமே.

         பொழிப்புரை :நள்ளாறு, பழையாறு, கோட்டாறு, நன்மை நிலவும் நாலாறு, திருஐயாறு, தெள்ளாறு, வளைகுளம், தளிக்குளம், நல்ல இடைக்குளம், திருக்குளம், அஞ்சைக்களம், குறையாத சிறப்புடைய நெடுங்களம், வேட்களம், நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, பரந்து திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு, குளம், களம், கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம்.
  
பாடல் எண் : 11
கயிலாய மலைஎடுத்தான் கரங்க ளோடு
         சிரங்கள்உரம் நெரியக்கால் விரலால் செற்றோன்,
பயில்வாய பராய்த்துறை,தென் பாலைத் துறை,
         பண்டுஎழுவர் தவத்துறை,வெண் துறை,பைம் பொழில்
குயில்ஆலந் துறை,சோற்றுத் துறை,பூந் துறை,
         பெருந்துறையும், குரங்காடு துறையி னோடு,
மயிலாடு துறை,கடம்பந் துறை,ஆவடு
         துறை, மற்றும் துறை, அனைத்தும் வணங்கு வோமே.

         பொழிப்புரை :கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் தன் கால்விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை, எழுமுனிவர் பண்டுதவம் செய்த தவத்துறை, வெண்டுறை, பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம்.
                                             திருச்சிற்றம்பலம்


4.    009  பொது - திருஅங்கமாலை         பண் -  சாதாரி
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தலையே நீவணங்காய் - தலை
         மாலை தலைக்குஅணிந்து,
தலையா லேபலி தேரும் தலைவனை,
         தலையே நீவணங்காய்.

         பொழிப்புரை :தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.

பாடல் எண் : 2
கண்காள் காண்மின்களோ - கடல்
         நஞ்சுஉண்ட கண்டன்தன்னை,
எண்தோள் வீசிநின்று ஆடும்பி ரான்தன்னை,
         கண்காள் காண்மின்களோ.

         பொழிப்புரை :கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.

பாடல் எண் : 3
செவிகாள் கேள்மின்களோ - சிவன்
         எம்இறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்திறம், எப்போதும்,
         செவிகாள் கேள்மின்களோ.

         பொழிப்புரை :செவிகளே! சிவபெருமானாகிய எங்கள் தலைவனாய், செம்பவளமும் தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள்.
  
பாடல் எண் : 4
மூக்கே நீமுரலாய் - முது
         காடுஉறை முக்கணனை,
வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை,
         மூக்கே நீமுரலாய்.

         பொழிப்புரை :மூக்கே! சுடுகாட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல் வடிவமாய் இருக்கும் பார்வதி கேள்வனை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.
  
பாடல் எண் : 5
வாயே வாழ்த்துகண்டாய் - மத
         யானை உரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும்பி ரான்தன்னை,
         வாயே வாழ்த்துகண்டாய்.

         பொழிப்புரை : வாயே! மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக.

பாடல் எண் : 6
நெஞ்சே நீநினையாய் - நிமிர்
         புன்சடை நின்மலனை,
மஞ்சுஆ டும்மலை மங்கை மணாளனை,
         நெஞ்சே நீநினையாய்.

         பொழிப்புரை :நெஞ்சே! மேல் நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள் அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக.
  
பாடல் எண் : 7
கைகாள் கூப்பித்தொழீர் - கடி
         மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்புஅரை ஆர்த்த பரமனைக்
         கைகாள் கூப்பித்தொழீர்.

         பொழிப்புரை :கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக.

பாடல் எண் : 8
ஆக்கை யால்பயன்என் - அரன்
         கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றிஎன் னாதஇவ்
         ஆக்கை யால்பயன்என்.

         பொழிப்புரை :எம் பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்?
   
பாடல் எண் : 9
கால்க ளால்பயன்என் - கறைக்
         கண்ட ன்உறைகோயில் கோலக்
கோபுரக் கோகர ணம்சூழாக்
         கால்க ளால்பயன்என்.

         பொழிப்புரை :நீலகண்டனான எம்பெருமான் தங்கியிருக்கும் கோயிலாகிய, அழகான கோபுரத்தை உடைய கோகரணம் என்ற தலத்தை வலம் வாராத கால்களால் யாது பயன்?
  
பாடல் எண் : 10
உற்றாரு ஆர்உளரோ - வுயிர்
         கொண்டு போம்பொழுது,
குற்றா லத்துஉறை கூத்தன்அல் லால்,நமக்கு
         உற்றார் ஆர் உளரோ.

         பொழிப்புரை :கூற்றுவன் நம் உயிரைக் கைப்பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?

பாடல் எண் : 11
இறுமாந்து இருப்பன்கொலோ - ஈசன்
         பல்கணத்து எண்ணப்பட்டு,
சிறுமான் ஏந்திதன் சேவடிக் கீழ்ச்சென்று,அங்கு
         இறுமாந்து இருப்பன்கொலோ.

         பொழிப்புரை :எல்லோரையும் அடக்கி ஆளும் எம்பெருமானுடைய பலவாகிய சிவகணத்தவருள் ஒருவனாகிச் சிறிய மானை ஏந்திய அப்பெருமானுடைய சிவந்த திருவடிகளின் கீழ்ச் சென்று அங்கு இன்பச் செருக்கோடு இருப்பேனோ?
  
பாடல் எண் : 12
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
         மாலொடு நான்முகனும்
தேடித் தேடஒணாத் தேவனை, என்உளே
         தேடிக் கண்டுகொண்டேன்.

         பொழிப்புரை :திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி அவன் என் நெஞ்சத்துள்ளேயே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.
திருச்சிற்றம்பலம்



5.    096 மனத்தொகைத் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொன்உள் ளத்திரள் புன்சடை யின்புறம்
மின் உள்ளத்திரள் வெண்பிறை யாய்,இறை
நின் உள்ளத்துஅருள் கொண்டு, இருள் நீங்குதல்,
என் உள்ளத்துஉளது, எந்தை பிரானிரே.

         பொழிப்புரை : எந்தை பெருமானே ! பொன்னும் நினையுமாறு அழகு திகழ்கின்ற புன்சடையின் புறத்தே ஒளியுள்ளதாகிய திரண்ட வெண்பிறை சூடியவனே ! நின் உள்ளத்துச் சிறிது அருள் கொண்டு என்னுள்ளத்துள் உளதாகிய இருள் நீங்கிடத் திருவுளம் பற்றியருள்க .
  
பாடல் எண் : 2
முக்கணும் உடையாய், முனிகள் பலர்
தொக்கு எணும் கழலாய், ஒரு தோலினோடு
அக்கு அண்அம் அரையாய், அருள் அலாது
எக்கணும் இலன், எந்தை பிரானிரே.

         பொழிப்புரை : எந்தை பெருமானே ! முக்கண்ணும் உடையாய் ! முனிவர்கள் பலர் கூடி எண்ணித் தியானிக்கும் கழலை உடையாய் ! புலித்தோலினோடு அழகிய நினது அருளேயல்லாது வேறு எவ்விடத்தும் பொருள் இல்லேன் .
  
பாடல் எண் : 3
பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய், நீஉல கம்முழுது ஆளினும்,
தனியாய் நீ,சரண் நீ, சல மேபெரிது,
இனியாய் நீஎனக்கு, எந்தை பிரானிரே.

         பொழிப்புரை : எந்தை பெருமானே ! தண்ணியாய் ! விரும்புதற்குரிய தெண்ணிலவு பாயும் படர்புன்சடை முனிவனே! நீ உலகம் முழுதும் ஆண்டாலும் தனியாய் ! சரண் நீயே ; என்பால் வஞ்சனையே பெரிது ; எனக்கு இனியாய் நீயே .

பாடல் எண் : 4
மறையும் பாடுதிர், மாதவர் மாலினுக்கு
உறையும் ஆயினை, கோள்அர வோடுஒரு
பிறையும் சூடினை. என்பது அலால்,பிறிது
இறையும் சொல்இலை, எந்தை பிரானிரே.

பொழிப்புரை : எந்தை பெருமானே ! வேதங்களையும் பாடுவீர் ; பெரிய முனிவர்களது மயக்கத்தினுக்கு உறையும் ஆயினீர் ; கொள்ளும் பாம்பினோடு ஒரு பிறையும் சூடினை என்பதல்லால் வேறு சிறிதும் சொல் இல்லை .
  
பாடல் எண் : 5
பூத்துஆர் கொன்றையி னாய், புலியின்அதள்
ஆர்த்தாய், ஆடுஅர வோடுஅனல் ஆடிய
கூத்தா, நின்குரை யார்கழ லேஅலது,
ஏத்தா நாவு, எனக்கு எந்தை பிரானிரே.

         பொழிப்புரை :எந்தை பெருமானே ! பூத்துச் செறிந்த கொன்றையினை உடையாய்; புலியின் தோலை ஆர்த்துக் கட்டினாய்; ஆடும் பாம்பினோடும் அனலோடும் ஆடும் கூத்தனே! நின் ஒலிக்கும் கழலே அல்லது எனது நா வேறு ஒன்றையும் ஏத்தாது .
  
பாடல் எண் : 6
பைம்மாலும் அரவா, பரமா, பசு
மைம்மால் கண்ணியோடு ஏறுமைந்தா,எனும்
அம்மால் அல்லது, மற்றுஅடி நாயினேற்கு
எம்மாலும் இலேன், எந்தை பிரானிரே.

         பொழிப்புரை :எந்தை பெருமானே ! படத்தொடு ஒலிக்கும் அரவுடையவனே ! பரமனே ! இடபத்தின்மேல் அஞ்சனம் தீட்டிய கண்ணுடைய உமாதேவியோடு ஏறும் மைந்தனே ! என்றும் அம்மயக்கமல்லது மற்று அடி நாயினேனுக்கு வேறு எம் மயக்கமும் இல்லேன் . ` நாயினேன் ` என்றும் பாடம் .

பாடல் எண் : 7
வெப்பத் தின்மன மாசு விளக்கிய
செப்பத் தால், சிவன் என்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும், ஒண்கழ லாற்குஅல்லது,
எப்பற் றும்இலன் எந்தை பிரானிரே.

         பொழிப்புரை : எந்தை பெருமானே ! வெப்பத்தின் மனமாசு விளக்கும் செப்பம் உடைமையினால் ` சிவன் ` என்பவர் தீவினைகளை ஒப்பத் தீர்க்கும் ஒள்ளிய கழலை உடையானாகிய உமக்கல்லது வேறுபற்று இல்லேன் .
  
பாடல் எண் : 8
திகழும் சூழ்சுடர் வானொடு வைகலும்
நிகழும் ஒண்பொருள் ஆயின நீதி,என்
புகழு மாறும் அலால்,  உனபொன்அடி
இகழு மாறுஇலன், எந்தை பிரானிரே.

         பொழிப்புரை :எந்தை பெருமானே ! விளங்குகின்ற சுடர் சூழ்கின்றவனோடு நாள்தோறும் நிகழும் ஒள்ளிய பொருளாயின நீதிகளை என்னே புகழுமாறு ! அல்லது உன் பொன்னடிகளை இகழுமாறு இல்லேன் .

பாடல் எண் : 9
கைப்பற் றித்திரு மால்பிர மன்உனை
எப்பற் றிஅறி தற்குஅரி யாய்,அருள்
அப்பற் றுஅல்லது, மற்றுஅடி நாயினேன்
எப்பற் றும்இலேன், எந்தை பிரானிரே.

         பொழிப்புரை : திருமாலால் அறிதற்கரியவனே ! உன் திருவருளாகிய பற்றுக்கோடு ஒன்றைத் தவிர வேறு எப்பற்றும் எனக்கு இல்லை .
  
பாடல் எண் : 10
எந்தை எம்பிரான் என்றவர் மேல்மனம்
எந்தை எம்பிரான் என்றுஇறைஞ் சித்தொழுது,
எந்தை எம்பிரான் என்றுஅடி ஏத்துவார்,
எந்தை எம்பிரான் என்றுஅடி சேர்வரே.

         பொழிப்புரை : எந்தை எம்பிரான் என்று மனம் வாக்குக் காயங்களால் வழிபடுவார் இறைவன் திருவடி சேர்வர் .
                                           திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...