திருப் பூந்துருத்தி - 2



5.    097 சித்தத்தொகைத்  திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சிந்திப் பார்மனத் தான்சிவன், செஞ்சுடர்
அந்தி வான்நிறத் தான்,அணி ஆர்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னான்,அடி
வந்திப் பார்,அவர் வான்உலகு ஆள்வரே.

         பொழிப்புரை : சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும் , சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும் , அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர் .

பாடல் எண் : 2
அண்டம் ஆர்இருள் ஊடு கடந்து,உம்பர்
உண்டு போலும் ஓர்ஒண்சுடர், அச்சுடர்
கண்டுஇங்கு ஆர்அறி வார், அறி வார்எலாம்
வெண்திங்கள் கண்ணி வேதியன் என்பரே.

         பொழிப்புரை : அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும் ; அச்சுடரைக் கண்டு இங்குஆர் அறியவல்லவர்கள் ? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர் .
  
பாடல் எண் : 3
ஆதி ஆயவன், ஆரும் இலாதவன்,
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்,
பாதிப் பெண்உரு வாகிப் பரஞ்சுடர்ச்
சோதி யுள்சோதி யாய்நின்ற சோதியே.

         பொழிப்புரை : தன்னுடலிற்பாதி பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் , அனைத்துக்கும் ஆதி ஆகியவன் ; தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் ; மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்முடியை உடைய புண்ணியன் .
  
பாடல் எண் : 4
இட்ட துஇட்டது ஓர்ஏறுஉகந் தேறி,ஊர்
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வது,ஓர்
கட்ட வாழ்க்கையன், ஆகிலும், வானவர்
அட்ட மூர்த்தி, அருள்என் றுஅடைவரே.

         பொழிப்புரை : ஏற்றினை உகந்து ஏறிப் பட்டிதோறும் மக்கள் இட்ட சோற்றினைப் பலிதேர்வதாகிய ஒரு துன்பவாழ்க்கை உடையவனாகிலும் தேவர்கள் ` அட்டமூர்த்தியே ! அருள்வாயாக ` என்று அடைவர் .
  
பாடல் எண் : 5
ஈறில் கூறையன் ஆகி, எரிந்தவெண்
நீறு பூசி, நிலாமதி சூடிலும்,
வீறுஇ லாதன செய்யினும், விண்ணவர்
ஊறு அலாய்,அரு ளாய்என் றுஉரைப்பரே.

         பொழிப்புரை : முடிவற்ற திக்குகளையே ஆடையாக உடுப்பவனாகி எரிந்துவெந்த திருநீறு பூசி நிலவினை உடைய பிறையைச் சூடினும் , தன் பெருமைக்கு உகவாதவற்றைச் செய்யினும் , தேவர்கள் ` இடையூறற்றவனே ! அருள்வாயாக ` என்று இரந்துரைப்பர் .
  
பாடல் எண் : 6
உச்சி வெண்மதி சூடிலும், ஊன்அறாப்
பச்சை வெண்தலை ஏந்திப் பலஇல்லம்
பிச்சை யேபுகும் ஆகிலும், வானவர்
அச்சம் தீர்த்துஅரு ளாய்என் றுஅடைவரே.

         பொழிப்புரை : உச்சிக்கண் வெள்ளியமதி சூடினும் , தசை நீங்காத பச்சை வெண்தலையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களுக்குப் பிச்சை ஏற்கப் புகுந்தாலும் , தேவர்கள் ` எம் அச்சம் தீர்த்து அருள்வாயாக ` என்று அடைவர் .

பாடல் எண் : 7
ஊர்இ லாய் என்றுஒன் றாக உரைப்பதுஓர்
பேர்இ லாய்,பிறை சூடிய பிஞ்ஞகா,
கார்உ லாங்கண்ட னே,உன் கழல்அடி
சேர்வு இலார்கட்கு, தீயவை தீயவே.

         பொழிப்புரை : தனக்கென்று ஓர் ஊரில்லாதவனே ! ஒன்றாக உரைக்கும் பேரில்லாதவனே ! பிறைசூடிய பிஞ்ஞகனே ! கருமை பொருந்திய திருக்கழுத்தினனே ! உன் கழலணிந்த திருவடியைச் சேர்தல் இல்லாதவர்களுக்குத் தீயவையே என்றும் சேரும் .
  
பாடல் எண் : 8
எந்தையே, எம் பிரானே எனஉள்கிச்
சிந்திப் பார்அவர் தீவினை தீருமால்,
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்,
அந்தமா அளப்பார் அடைந் தார்களே.

         பொழிப்புரை : எந்தையே ! எம்பெருமானே ! என உள்ளத்தால் நினைந்து சிந்திப்பார்களின் தீவினை தீரும் ; வெந்த திருநீறு பூசிய மெய்யை உடைய வேதியனை அடைந்தவர்கள் அந்தமாக அளக்குந் தன்மை உடையார் .

பாடல் எண் : 9
ஏன வெண்மருப் போடுஎன்பு பூண்டு,எழில்
ஆனை ஈர்உரி போர்த்து,அனல் ஆடிலும்,
தான்அ வண்ணத்தன் ஆகிலும், தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே.

         பொழிப்புரை : பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போர்த்துத் தீயுடன் ஆடினாலும் , தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர் .
  
பாடல் எண் : 10
ஐயன், அந்தணன், ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன், மேதகு வெண்பொடி பூசிய
மைகொள் கண்டத்தன், மான்மறிக் கையினான்,
பைகொள் பாம்புஅரை ஆர்த்த பரமனே.

         பொழிப்புரை : படம் கொண்ட பாம்பினை இடுப்பில் கட்டிய இறைவன் , தலைவன்; அந்தணன் ; ( அழகும் குளிர்ச்சியும் உடையவன் ) ஆண் பெண் வடிவமுடைய திருமேனியினன் ; மேன்மை மிகுந்த வெண் திருநீறு பூசிய கருமைகொண்ட திருக்கழுத்தினன் ; மான்குட்டி உடைய கையினன் .
  
பாடல் எண் : 11
ஒருவன் ஆகிநின் றான்,இவ் உலகுஎலாம்
இருவர் ஆகிநின் றார்கட்கு அறிகிலான்,
அரு அராஅரை ஆர்த்தவன், ஆர்கழல்
பரவு வார், அவர் பாவம் பறையுமே.

         பொழிப்புரை : இவ்வுலகமெல்லாம் தான் ஒருவனே ஆகி நின்றவனும் , திருமாலும் பிரமனுமாகிய இருவராகி நின்றவர் அறிய இயலாதவனும் , அரிய பாம்பினை இடுப்பில் கட்டியவனும் ஆகிய இறைவனது நிறைந்த கழலணிந்த திருவடிகளை வணங்குவாரின் பாவங்கள் கெடும் .
  
பாடல் எண் : 12
ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாத னே,அரு ளாய், என்று நாள்தொறும்
காதல் செய்து கருதப் படும், அவர்
பாதம் ஏத்தப் பறையும்நம் பாவமே.

         பொழிப்புரை : கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும், ஒள்ளிய தாமரைமலர் மேலானாகிய பிரமனும் , ` தலைவனே ! அருள்வாய் ` என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம் பாவங்கள் கெடும்.

பாடல் எண் : 13
ஔவ தன்மை அவர்அவர் ஆக்கையால்
வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ,
மௌவல் நீண்மலர் மேல்உறை வானொடு
பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே.

         பொழிப்புரை : அவரவர் உடம்பினால் அடைவதற்கு வெவ்விய தன்மை உடையவன் என்ற கருத்தை ஒழிப்பீராக ; மலர்தல் உடைய நீண்ட மலர்மேல் உறைவானாகிய பிரமனோடு கடல்வண்ணனாகிய திருமாலுமாய்ப் பணிவார்கள் .

பாடல் எண் : 14
அக்கும், ஆமையும் பூண்டு,அனல் ஏந்தி, இல்
புக்குப் பல்பலி தேரும் புராணனை,
நக்கு, நீர்கள் நரகம் புகேன்மினோ,
தொக்க வானவ ரால்தொழு வானையே.

         பொழிப்புரை : அக்கமணிகளும் ஆமையும் அணிந்து தீயை ஏந்தி இல்லங்கள்தோறும் புகுந்து பல பலிதேறும் பழமை உடையவனும் , தொகுத்த தேவர்களால் தொழப்படுவானுமாகிய இறைவனை விரும்பி நீங்கள் நரகத்துப்போகாமல் நற்பேறு அடைவீராக .
  
பாடல் எண் : 15
கங்கை தங்கிய செஞ்சடை மேல்இளம்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்,
இங்க ணார்,எழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கு,அது வால்அவன் தன்மையே.

         பொழிப்புரை : அழகிய கண்ணராகிய கங்கை தங்கிய சிவந்த சடையின்மேல் இளம் பிறையினைச் சூடிய தழல்வண்ணர் ; இமைக்காத கண்ணை உடைய எழில் உடைய வானகத்துள்ளோர் வணங்க உள்ளார் ; அதுவே அவர் தன்மை .

பாடல் எண் : 16
ஙகர வெல்கொடி யானொடு, நல்நெஞ்சே,
நுகர நீஉனைக் கொண்டுஉயப் போக்குறில்,
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்,
புகரில் சேவடி யேபுகல் ஆகுமே.

         பொழிப்புரை : நல்ல நெஞ்சே ! வெல்லும் கொடி உடையானோடு நுகர்தற்கு நீ உன்னைக்கொண்டு உய்யப்போதலுற்றால் , மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய பெருமானின் குற்றமற்ற சேவடியே தஞ்சப்பொருளாகும் .

பாடல் எண் : 17
சரணம் ஆம்படி யார்பிறர் யாவரோ,
கரணம் தீர்த்துஉயிர் கையில் இகழ்ந்தபின்,
மரணம் எய்திய பின்அவை நீக்குவான்,
அரண மூஎயில் எய்தவன் அல்லனே.

         பொழிப்புரை : புகலடையத்தக்கவர் பிறர் யாவர் ? செயலற்று உயிர் இறக்கும்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன் ? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ ?

பாடல் எண் : 18
ஞமன்என் பான்நர கர்க்கு, நமக்குஎலாம்
சிவன்என் பான்,செழு மான்மறிக் கையினான்,
கவனம் செய்யும் கனவிடை ஊர்தியான்,
தமர்என் றாலும், கெடும்தடு மாற்றமே.

         பொழிப்புரை : நரகர்க்கெல்லாம் ஞமனாகியும் , நமக்கெல்லாம் சிவன் எனப்படுவானாகியும் உள்ளவனும் , மான்குட்டி உடைய கையினனும் , விரைந்து செல்லும் பெருமைமிக்க இடப ஊர்தி உடையவனும் ஆகிய பெருமானின் சுற்றத்தினர் என்று கூறினாலும் தடுமாற்றம் கெடும் .

பாடல் எண் : 19
இடபம் ஏறியும் இல்பலி ஏற்பவர்,
அடவி காதலித்து ஆடுவர், ஐந்தலைப்
படவம் பாம்புஅரை ஆர்த்த பரமனை,
கடவி ராய்ச்சென்று கைதொழுது உய்ம்மினே.

         பொழிப்புரை : இடபத்தின்மீது ஏறியும் , இல்லங்கள்தோறும் பலி ஏற்பவரும் , சுடுகாட்டினை விரும்பி ஆடுபவரும் , ஐந்தலை உடைய படர்ந்த பாம்பினை அரைக்கண் ஆர்த்தவரும் ஆகிய பரமனை வணங்கும் கடப்பாடுடையீராய்ச் சென்று கைதொழுது உய்வீராக .

பாடல் எண் : 20
இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும்,
புணர்ந்த வாள்அர வம்மதி யோடு,உடன்
அணைந்த அம்சடை யான், அவன் பாதமே
உணர்ந்த உள்ளத் தவர்உணர் வார்களே.

         பொழிப்புரை : கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் தூளினைச் சொரிந்திடும் இயல்பினதும் , பொருந்திய வாள்போன்ற பாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர் .
  
பாடல் எண் : 21
தருமம் தான்,தவம் தான்,தவத் தால்வரும்
கருமம் தான், கரு மான்மறிக் கையினான்,
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ,
சிரமம் சேர்அழல் தீவினை யாளரே.

         பொழிப்புரை : தொல்லைகள் சேர்ந்த அழலும் தீவினை யாளர்களே ! தானே தருமமாகவும் , தானே தவமாகவும் , தானே தவத்தால்வரும் செயலாகவும் உள்ள வலிய மான்குட்டியைக் கையில் உடைய பெருமானது , அரிய மருந்து போன்ற ( அமிர்தம் ) ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைச் சேர்வீராக .

பாடல் எண் : 22
நமச்சி வாயஎன் பார்உள ரேல்,அவர்
தம்அச்ச நீங்கத் தவநெறி சார்தலால்,
அமைத்துக் கொண்டதுஓர் வாழ்க்கையன், ஆகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே.

         பொழிப்புரை : நமசிவாய என்று சொல்வார் உளராயின் அவர் தம் அச்சங்கள் நீங்கத் தவநெறியைச் சார்தலால் தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவனாகிலும் இமைத்து நிற்பது மிகவும் அரியதாகும் .
  
பாடல் எண் : 23
பற்பல் காலம் பயிற்றி, பரமனைச்
சொற்பல் காலநின்று ஏத்துமின், தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டஅப்
புல்ப னிக்கெடு மாறு, அது போலுமே.

         பொழிப்புரை : பரமனைப் பலப்பல காலங்கள் பயிற்றிச் சொற்களால் பல காலம் நின்று ஏத்துவீராக ! உம் பழைய வினைகள் உதயகிரியில் தோன்றிய சூரியனைக்கண்ட அழகிய புல் நுனியில் உள்ள பனித்துளிகள் கெடுமாறு கெடும் .
  
பாடல் எண் : 24
மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்,
கணிசெய் வேடத்த ராய்,அவர் காப்பினால்
பணிகள் தாம்செய வல்லவர் யாவர், தம்
பிணிசெய் ஆக்கையை நீக்குவர் பேயரே.

         பொழிப்புரை : கரியமணிபோலும் கண்டத்தை உடையவரும், மான்குட்டியை உடைய கையினரும் , கருதிச் செய்கின்ற வேடம் உடையவராகிய அவர் காத்தருள்வதால் பணிகளைச் செய்ய வல்லவர்களே நல்லோர் ; அவ்வாறு புரியாது நோய் செய்யும் உடம்பை வீணே கழிப்பவர் பேயர் .
  
பாடல் எண் : 25
இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர்,
நயக்க நின்றவன், நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்த அவன்மால்எரி ஆயினான்,
வியக்கும் தன்மையி னான், எம் விகிர்தனே.

         பொழிப்புரை : வியக்கும் தன்மை உடையவனாகிய எம் மேலோன் , இயக்கர் , கின்னரர் , இந்திரன் , தானவர் முதலியோர் விரும்ப நின்றவனும் , பிரமனும் திருமாலும் மயக்கம் எய்த வன்மை உடைய பேரெரிவடிவமாயினான் .
  
பாடல் எண் : 26
அரவம் ஆர்த்து, அனல் ஆடிய அண்ணலை,
பரவு வார்அவர் பாவம் பறைதற்கு,
குரவை கோத்தவ னும்குளிர் போதின்மேல்
கரவுஇல் நான்முக னுங்கரி அல்லரே.

         பொழிப்புரை : பாம்பினைக்கட்டி அனலோடு ஆடிய அண்ணலை வணங்குவோர் பாவம் கெடுதற்குக் குரவைக் கூத்து ஆடியவனாகிய திருமாலும் , குளிர்தாமரையின் மேல் கரத்தலில்லாத பிரமனும் சான்றாவார் அல்லரோ ?
  
பாடல் எண் : 27
அழல்அம் கையினன், அந்தரத்து ஓங்கிநின்று
உழலும் மூஎயில் ஒள்அழல் ஊட்டினான்,
தழலும் தாமரை யானொடு தாவினான்
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.

         பொழிப்புரை : இறைவன் அழலை அழகிய கையிற்கொண்டவனும் , வானில் ஓங்கி நின்று திரியும் மூன்று மதில்களையும் ஒள்ளழல் ஊட்டியவனும் , எரியென மலரும் தாமரையிலுள்ள பிரமனோடு திருமாலும் பறந்தும் தாவியும் தன் கழலடிகளையும் சென்னியையும் காண்டற்கரியவனுமாவான் .
  
பாடல் எண் : 28
இளமை கைவிட்டு அகறலும், மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்,
உளம்எ லாம்ஒளி யாய்மதி ஆயினான்,
கிளமையே கிளை யாக நினைப்பனே.

         பொழிப்புரை : இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ள மெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாக யான் நினைப்பேன் .
  
பாடல் எண் : 29
தன்னில்  தன்னை அறியும் தலைமகன்,
தன்னில் தன்னை அறியில் தலைப்படும்,
தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில்,
தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே.

         பொழிப்புரை : தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான் ; தன்னில் தன்னை அறியும் அறிவிலனாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன் .
  
பாடல் எண் : 30
இலங்கை மன்னனை ஈர்ஐந்து பத்தும்அன்று
அலங்க லோடுஉட னேசெல ஊன்றிய
நலங்கொள் சேவடி, நாள்தொறும் நாள்தொறும்
வலங்கொண்டு ஏத்துவார், வான்உலகு ஆள்வரே.

         பொழிப்புரை : இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர் .
                                             திருச்சிற்றம்பலம்


5. 098 உள்ளத்                  திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை
ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை,
தேறலை, தெளியை, தெளி வாய்த்ததுஓர்
ஊறலைக் கண்டு கொண்டது  என்உள்ளமே.

         பொழிப்புரை : திருநீறு நன்கு பூசப்பெற்ற ஒப்பற்ற மேனியையும், ஓங்கிய சடையில் கங்கையாறு அலைவீச நின்று ஆடும் அமுதமும், தேனும் அதன் தெளிவும் அத்தெளிவுவாய்த்த ஊறல் போல்வானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
  
பாடல் எண் : 2
பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தையை, தழல் போல்வதுஓர் மேனியை,
சிந்தையை, தெளிவை, தெளி வாய்த்ததுஓர்
எந்தையை, கண்டு கொண்டது என் உள்ளமே.

         பொழிப்புரை : பொந்து போல்வதாகிய உடலிற் புகுந்து அதன் கட்டினை நீக்கப் புகுந்திடும் தந்தையும், தீப்போன்ற மேனியை உடையவனும், என் சிந்தையாக உள்ளவனும், தெளிவாகவும் அத்தெளிவு வாய்த்த எந்தையும் ஆகி நின்ற பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
  
பாடல் எண் : 3
வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே,
வெள்ளத் தைச்சடை வைத்த விகிர்தனார்,
கள்ளத் தைக்கழி ய, மனம் ஒன்றிநின்று,
உள்ளத் தில்ஒளியைக் கண்டது உள்ளமே.

         பொழிப்புரை : இன்ப வெள்ளத்தாராகிய விஞ்சையர்கள் விரும்பும்படி கங்கைவெள்ளத்தைச் சடையில்வைத்த மேலோரை மனம் கள்ளத்தை நீங்க உள்ளம் ஒன்றியிருந்து உள்ளத்தில் ஒளியாகக் கண்டது.
  
பாடல் எண் : 4
அம்மானை, அமுது, இன்அமு தேஎன்று
தம்மானை, தத்துவத்து அடியார் தொழும்
செம்மானநிறம் போல்வதுஓர் சிந்தையுள்
எம்மானை, கண்டு கொண்டது என் உள்ளமே.

         பொழிப்புரை : அம்மானை, அமுதே! இன்னமுதே! என்று தத்துவத்தை அறிந்த அடியார் தொழும் நம் தலைவனும் செம்மையாகிய பெருமை மிக்க நிறம்போல்வதாகிச் சிந்தையுள் இருக்கும் எம்மானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
  
பாடல் எண் : 5
கூறு ஏறும்உமை பாகம்ஓர் பாலராய்,
ஆறு ஏறும்சடை மேல்பிறை சூடுவர்,
பாறு ஏறும்தலை ஏந்திப் பலஇ(ல்)லம்
ஏறு ஏறும்எந்தையை, கண்டது என் உள்ளமே.

         பொழிப்புரை : கூறாகப் பொருந்தி உமையொரு பாகராகிக், கங்கை ஏறிய சடைமேற் பிறை சூடியவராய், பருந்துகள் ஏறிப்பறக்கும் வெண்டலை ஏந்திப் பல இல்லங்கள் தோறும் இடபம் ஏறிவரும் எந்தையை என் உள்ளம் கண்டு கொண்டது.

பாடல் எண் : 6
முன்நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்,
தம்நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்,
வன்நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே,
என்நெஞ்சில் ஈசனைக் கண்டது என்உள்ளமே.

         பொழிப்புரை : தம் நெஞ்சம் தமக்குத்தாம் இல்லாத சிலர், முன்னுதற்குரிய நெஞ்சம் இல்லாமல் மூர்க்கராய் வாழ்ந்து சாகின்றார்; வன்மையுடைய நெஞ்சத்தை நீங்க வல்லமை உடையவர்களே! என் நெஞ்சில் ஈசனை என்னுள்ளம் கண்டுகொண்டது.

பாடல் எண் : 7
வென்றானைப் புலன் ஐந்தும்,என் தீவினை
கொன்றானை, குணத்தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு, ஞானமாம்
ஒன்றானை, கண்டு கொண்டது என்உள்ளமே.

         பொழிப்புரை : புலன்கள் ஐந்தும் வென்றவனும் என் தீய வினைகளைக் கொன்றவனும், குணத்தால் வணங்கிட நன்றாக நல்ல மனத்தில் வைக்கும் ஞானம் என்னும் ஒப்பற்ற பொருளை உடையானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
  
பாடல் எண் : 8
மருவி நை,மட நெஞ்சம் மனம்புகும்
குருவினை, குணத் தாலே வணங்கிடும்
திருவினை, சிந்தையுள் சிவ னாய்நின்ற
உருவினை, கண்டு கொண்டது என்உள்ளமே.

         பொழிப்புரை : அறிவற்ற மடநெஞ்சமே! மனம்புகும் குரு நாதனும், குணத்தால் வணங்கத்தக்க திருவும் ஆகிய பெருமானைப் பொருந்தினாய்; சிந்தையுள் சிவனாய்நின்ற உருவினை என்னுள்ளம் கண்டு கொண்டது.

பாடல் எண் : 9
தேசனை, திரு மால்பிர மன்செயும்
பூசனை, புணரில் புணர்வு ஆயதுஓர்
நேசனை, நெஞ்சின் உள்நிறை வாய்நின்ற
ஈசனை, கண்டு கொண்டது என்உள்ளமே.

         பொழிப்புரை : ஒளி உடையவனும், திருமாலும், பிரமனும் செய்யும் பூசனைகள் பொருந்தினால் அங்குப் பொருந்துகின்ற விருப்பம் உடையவனும், நெஞ்சுக்குள் நிறைவாகி நின்ற ஈசனுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.

பாடல் எண் : 10
வெறுத்தான் ஐம்புலனும், பிரமன் தலை
அறுத்தானை, அரக்கன் கயிலாயத்தைக்
கறுத்தானை, காலினில் விரல் ஒன்றினால்
ஒறுத்தானை, கண்டு கொண்டது என்உள்ளமே.

         பொழிப்புரை : ஐம்புலன்களை வெறுத்தவனும், பிரமன் தலையினை அறுத்தவனும், இராவணன் திருக்கயிலாயத்தின் மேற்சினந்த போது காலினில் திருவிரல் ஒன்றினால் ஒறுத்தவனும் ஆகிய பெருமானை என் உள்ளம் கண்டுகொண்டது.
                                    திருச்சிற்றம்பலம்


         5. 092 காலபாசத் திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கண்டு கொள்ளஅரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே.

         பொழிப்புரை : காலதூதர்களே ! கண்டுகொள்ள அரியவன் . உள்ளத்தைக் கனியச்செய்து முன்பு நான் செய்த அடிமைத் திறத்தைக் கேட்பீரேயானால் தொண்டரைச் சூழாதீர்கள் .
  
பாடல் எண் : 2
நடுக்கத்து உள்ளும், நகைஉளும், நம்பர்க்குக்
கடுக்கக் கல்ல வடம்இடு வார்கட்கு,
கொடுக்கக் கொள்க எனஉரைப் பார்களை,
இடுக்கண் செய்யப் பெறீர்,இங்கு நீங்குமே.

         பொழிப்புரை : அஞ்சியும் அன்புசெய்தும் இறைவனிடத்து அன்புடையவராய் ஈகை செய்யும் அடியவரைத் துன்புறுத்தாது அகலுங்கள் .
  
பாடல் எண் : 3
கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்,
சீர்கொள் நாமம் சிவன்என்று அரற்றுவார்,
ஆர்க ள்ஆகிலும் ஆக, அவர்களை
நீர்கள் சாரப் பெறீர், இங்கு நீங்குமே.

         பொழிப்புரை : கார்காலத்திலே மலர்தலைக்கொண்ட கொன்றையின் மணமிக்க மலர்களைக் கண்ணியாக அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக ; அவர்களை நீர் சாரப்பெறாதீர் ; நீங்குவீராக .

பாடல் எண் : 4
சாற்றி னேன், சடை நீண்முடிச் சங்கரன்,
சீற்றம் காமன்கண் வைத்தவன், சேவடி
ஆற்ற வும்களிப் பட்ட மனத்தராய்ப்
போற்றி என்றுஉரைப் பார், புடை போகலே.

         பொழிப்புரை : சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும் , காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல் .

பாடல் எண் : 5
இறைஎன் சொல்மறவேல், நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடைப்பெரு மான்தமர்
நறவம் நாறிய நல்நறும் சாந்திலும்
நிறைய நீறுஅணி வார், எதிர் செல்லலே.

         பொழிப்புரை : நமன் தூதுவர்களே ! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர் ; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிர் நீவிர் செல்லேல் .

பாடல் எண் : 6
வாம தேவன் வளநகர் வைகலும்
காமம் ஒன்றுஇலராய், கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறும் சாந்தமும்
ஏம மும்புனை வார், எதிர் செல்லலே.

         பொழிப்புரை : வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராம் திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும் , தூபமும் , மாலையும் , தண்ணிய நறுவிய சாந்தமும் , பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல் .
  
பாடல் எண் : 7
படையும் பாசமும் பற்றிய கையினீர்,
அடையன் மின்நமது ஈசன் அடியரை,
விடைகொ ள்ஊர்தியி னான்அடி யார்குழாம்
புடை புகாது, நீர் போற்றியே போமினே.

         பொழிப்புரை : படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே ! நமது ஈசன் அடியரை அடையாதீர் ; இடபத்தை ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக .
  
பாடல் எண் : 8
விச்சை ஆவதும், வேட்கைமை ஆவதும்,
நிச்சல் நீறுஅணி வாரை நினைப்பதே,
அச்சம் எய்தி அருகுஅணை யாது, நீர்
பிச்சை புக்க அவன் அன்பரைப் பேணுமே.

         பொழிப்புரை : வித்தையாவதும் , விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே ; அச்சம் கொண்டு , பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக .
  
பாடல் எண் : 9
இன்னம் கேண்மின், இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துஉடன் ஏத்துவார்,
மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம்
தன்னில், ஒன்றுவல் லாரையும் சாரலே.

         பொழிப்புரை : இன்னும் கேட்பீராக ; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா .
  
பாடல் எண் : 10
மற்றும் கேண்மின் மனப்பரிப்பு ஒன்றுஇன்றி,
சுற்றும் பூசிய நீற்றொடு, கோவணம்,
ஒற்றை ஏறுஉடையான் அடியே அலால்,
பற்றுஒன்று இல்லிகள் மேல்படை போகலே.

         பொழிப்புரை : மற்றும் கேட்பீராக ; மனத்திலே வேறொன்றும் தாங்குதலின்றி மேனிமுழுதும் பூசிய திருநீற்றொடு கோவணமும் கொண்டு ஒப்பற்ற தனி இடபத்தை உடைய இறைவன் திருவடிகளே அல்லால் வேறு பற்று ஒன்றும் இல்லாதவர்களாகிய அடியார்கள்மேல் படைகொண்டு போகவேண்டா .
  
பாடல் எண் : 11
அரக்கன் ஈர்ஐந் தலையும்ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றிஇட் டான்,தமர் நிற்கிலும்
சுருக்கு எனாதுஅங்குப் பேர்மின்கண், மற்றுநீர்
சுருக்கு எனில்,சுட ரான்கழல் சூடுமே

         பொழிப்புரை : இராவணனை நெரித்த பெருமானது அடி யவர்களைவிட்டு அகலுங்கள் : நீங்கள் ஏதேனும் இடையூறு செய்ய முயன்றால் அவன் திருவடி சுடும் .
                                             திருச்சிற்றம்பலம்


5. 093 பொது - மறக்கிற்பேனே என்னும் திருக்குறுந்தொக
                                        திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
காசனை, கனலை, கதிர் மாமணித்
தேசனைப் புகழார் சிலர் தெண்ணர்கள்,
மாசி னைக்கழித்து ஆட்கொள வல்லஎம்
ஈச னை,இனி யான்மறக் கிற்பனே.

         பொழிப்புரை : காசு உடையவனும் , கனல் உடையவனும் , ஒளிச்சுடர்விடும் செம்மணி விளக்கம் உடையவனுமாகிய பெருமானைச் சில தெளிவற்ற மூடர்கள் புகழார். குற்றத்தினைக் கழித்து ஆட்கொள்ளவல்ல எம் இறைவனை இனி நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?.
  
பாடல் எண் : 2
புந்திக்கு விளக்கு ஆய புராணனை,
சந்திக் கண்நடம் ஆடும் சதுரனை,
அந்தி வண்ணனை, ஆரழல் மூர்த்தியை,
வந்து என்உள்ளம் கொண் டானை, மறப்பனே.

         பொழிப்புரை : புத்திக்கு விளக்காக உள்ள மிகப்பழமையனும் , நடம் ஆடும் சதுரப்பாடு உடையவனும் , அந்திச்செவ்வண்ணம் உடையவனும் , நிறைந்த அழல்கொண்ட மூர்த்தியும் , வந்து என்னுள்ளம் கொண்டவனுமாகிய பெருமானை மறப்பேனோ?
  
பாடல் எண் : 3
ஈசன் ஈசன் என்று என்றும் அரற்றுவன்,
ஈசன் தான்என் மனத்தில் பிரிவுஇலன்,
ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு,
ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே.

         பொழிப்புரை : ஈசன் ஈசன் என்றும் வாய்விட்டு அரற்றுவேன் ; ஈசன் என் மனத்தில் பிரிவில்லாதவனாய் உள்ளான் - ஈசனையும் என் மனத்துக்கொண்டபின் , தன்னை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ?
  
பாடல் எண் : 4
ஈசன் என்னை அறிந்து அறிந்தனன்,
ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்,
ஈசன் சேவடி ஏத்தப்பெற் றேன்,இனி
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.

         பொழிப்புரை : இறைவன் சேவடிகளை ஏத்தப் பெறும் இயல்பினன் ஆதலால் என்னை இறைவன் அறிந்ததை யான் அறிந்தேன் ; பிறகும் அவன் சேவடியை ஏத்தப்பெற்றேன் ; ஆதலின் இனி ஈசனை யான் மறக்கும் வல்லமை உடையேனோ?
  
பாடல் எண் : 5
தேனை, பாலினை, திங்களை, ஞாயிற்றை,
வான வெண்மதி சூடிய மைந்தனை,
வேனிலானை மெலிவுசெய் தீ அழல்,
ஞான மூர்த்தியை, நான்மறக் கிற்பனே.

         பொழிப்புரை : தேனும், பாலும் போல்வானும், சந்திரனும் சூரியனும் போல்வானும் , வானத்தின்கண் வெண்மதியினைச் சூடிய வீரனும் , இளவேனிலுக்குரியவனாகிய மன்மதனைத் தீயழலால் மெலியச் செய்தவனுமாகிய ஞானக் கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?
  
பாடல் எண் : 6
கன்னனை, கரும்பு ஊறிய தேறலை,
மின்னனை, மின் அனைய உருவனை,
பொன்னனை, மணிக் குன்று பிறங்கிய
என்னனை, இனி யான்மறக் கிற்பனே.

         பொழிப்புரை : கன்னலும் , கரும்பின் ஊறிய சாற்றுத் தெளிவு போல்வானும் , ஒளியை உடையவனும் , மின்னலைப் போன்ற உருவம் உடையவனும் , பொன்போலும் மேனியினனும் ஆகிய மாணிக்கக் குன்றுபோல் விளங்கும் என்னை உடையானை , இனியான் மறக்கும் வல்லமை உடையேனோ ?
  
பாடல் எண் : 7
கரும்பினை, கட்டியை, கந்த மாமலர்ச்
சுரும்பினை, சுடர்ச் சோதியுள் சோதியை,
அரும்பினில் பெரும் போதுகொண்டு ஆய்மலர்
விரும்பும் ஈசனை, யான்மறக் கிற்பனே.

         பொழிப்புரை : கரும்பும் கட்டியும் போல்வானும் , வண்டுகள் சூழும் நறுமண மலர்களை அணிந்த சுடர்விடும் ஒளிக்குள் ஒளி ஆகியவனும் , அரும்புகளிற் பெரிய போதுகளைக் கொண்டு ஆய்மலரால் விரும்பும் இறைவனுமாகிய பெருமானை யான் மறக்கும் வல்லமை உடையேனோ ?
  
பாடல் எண் : 8
துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை,
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை,
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை,
வஞ்ச னேன், இனி நான்மறக் கிற்பனே.

         பொழிப்புரை : உறங்கும் போதும் சுடர்விடும் சோதியும் , நெஞ்சத்துக்குள் நிலைத்து நின்று நினைக்கவைக்கும் நீதியும் , ஆலகாலவிடத்தைத் திருக்கழுத்துள் அடக்கிய நம்பனுமாகிய பெருமானை வஞ்சனை உடைய யான் இனி மறக்கும் வல்லமை உடையேனோ ?
  
பாடல் எண் : 9
புதிய பூவினை, புண்ணிய நாதனை,
நிதியை, நீதியை, நித்திலக் குன்றினை,
கதியை, கண்டம் கறுத்த கடவுளை,
மதியை, மைந்தனை, நான்மறக் கிற்பனே.

         பொழிப்புரை : புதிய பூவும் , புண்ணியநாதனும் , செல்வமும் , நீதியும் , முத்துக்குன்றும் , அடைந்தோர்க்குக் கதியும் , மதியும் , மைந்தனும் ஆகிய திருநீலகண்டமுடைய கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?

பாடல் எண் : 10
கருகு கார்முகில் போல்வதொர் கண்டனை,
உருவ நோக்கியை,  ஊழி முதல்வனை,
பருகு பாலனை, பால்மதி சூடியை
மருவும் மைந்தனை, நான்மறக் கிற்பனே.

         பொழிப்புரை : கருமை உடைய கார்முகில் போல்வதாகிய ஒப்பற்ற திருநீலகண்டனும் , அழகுடைய நோக்கு இயைந்த ஊழிக் காலத்தும் உள்ள முதல்வனும், பருகுதற்குரிய பால் போன்ற வெண் மதியைச் சூடியவனும் , அன்பால் நினைவாரை மருவுகின்ற மைந்தனுமாகிய பெருமானை நான் மறக்கும் வல்லமை உடையேனோ ?
                                             திருச்சிற்றம்பலம்



5. 094 பொது - தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை
                                        திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அண்டத் தானை, அமரர் தொழப்படும்
பண்டத் தானை, பவித்திரம் ஆர்திரு
முண்டத் தானை,முற் றாத இளம்பிறைத்
துண்டத் தானை, கண் டீர்தொழற் பாலதே.

         பொழிப்புரை : அண்டத்தில் உள்ளவனும், தேவர்களால் தொழப் படும் பொருளும், பவித்திரம் உடைய நெற்றியை உடையவனும், இளம் பிறைப் பிளவினைச் சூடியவனுமாகிய பெருமானே தொழத் தக்கவன்; காண்பீராக.

பாடல் எண் : 2
முத்துஒப் பானை, முளைத்துஎழு கற்பக
வித்துஒப் பானை, விளக்கிடை நேர்ஒளி
ஒத்துஒப் பானை, ஒளிபவ ளத்திரள்
தொத்துஒப் பானைக்கண் டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : முத்து ஒப்பவனும், முளைத்தெழுகின்ற கற்பக வித்துப் போல்வானும், திருவிளக்கிடை நேர்கின்ற ஒளியை ஒத்திருப்பவனும், ஒளியையுடைய பவளத்திரளின் கொத்தினை ஒப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
  
பாடல் எண் : 3
பண்ஒத் தானை, பவளம் திரண்டதோர்
வண்ணத் தானை, வகைஉணர் வான்தனை,
எண்ணத் தானை, இளம்பிறை போல்வெள்ளைச்
சுண்ணத் தானைக்கண்டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : பண் ஒத்தவனும், பவளம் திரண்டது போன்ற செவ்வண்ணம் உடையவனும், வகைகளையெல்லாம் உணர்பவனும், அடியார்கள் எண்ணத்தில் இருப்பவனும், இளம்பிறை போன்ற வெண்சுண்ணம் உடையவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
  
பாடல் எண் : 4
விடலை யானை, விரைகமழ் தேன்கொன்றைப்
படலை யானை, பலிதிரி வான்செலும்
நடலை யானை, நரிபிரி யாததுஓர்
சுடலை யானைக்கண்டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : விடலைப்பருவம் உடையவனும், மணங்கமழும் கொன்றைமாலை உடையவனும், பலிபெறுதற்காகத் திரிந்துசெல்லும் துன்பம் உடையவனும், நரிகள் பிரிந்துசெல்லாத சுடுகாட்டில் இருப்பவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

பாடல் எண் : 5
பரிதி யானை, பல் வேறு சமயங்கள்
கருதி யானை, கண் டார்மனம் மேவிய
பிரிதி யானை, பிறர்அறி யாததுஓர்
சுருதி யானைக்கண்டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : ஞானசூரியனாக உள்ளவனும், பல்வேறு சமயங்களாற் கருதப்பட்டவனும், கண்டார் மனத்தை விரும்பியமர்ந்தவனும், பிறர் அறியாததோர் சுருதியானும் ஆகிய பெருமானே, தொழத்தக்கவன்; காண்பீராக.
  
பாடல் எண் : 6
ஆதி யானை, அமரர் தொழப்படும்
நீதி யானை, நியம நெறிகளை
ஓதி யானை, உணர்தற்கு அரியதுஓர்
சோதி யானைக்கண்டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : முதல்வனும், தேவர்களால் தொழப்படும் நீதியானவனும், நியமநெறிகளை ஓதியவனும், உணர்தற்கு அரியதாகிய ஒப்பற்ற சோதியானும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
  
பாடல் எண் : 7
ஞாலத் தானை,நல் லானை.வல் லார்தொழும்
கோலத் தானை, குணப்பெரும் குன்றினை,
மூலத் தானை, முதல்வனை, மூஇலைச்
சூலத் தானைக்கண்டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : உலகமாகி உள்ளவனும், நல்லவனும், வல்லவர் தொழும் கோலத்தை உடையவனும், குணமாகிய பெருங்குன்றானவனும், மூலமாக உள்ளவனும், முதல்வனும், மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
  
பாடல் எண் : 8
ஆதிப் பால்அட்ட மூர்த்தியை, ஆன்அஞ்சும்
வேதிப் பானை,நம் மேல்வினை வெந்துஅறச்
சாதிப் பானை, தவத்துஇடை மாற்றங்கள்
சோதிப் பானைக்கண்டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : முதற்கண்ணே தோன்றிய அட்ட மூர்த்தியும், பஞ்ச கவ்வியம் அபிடேகம் கொள்பவனும், நமது மேல்வினைகள் வெந்து நீங்கும்படிக் கடைக்கண் சாதிப்பவனும், தவத்திடை மாற்றங்கள் தந்து சோதிப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

பாடல் எண் : 9
நீற்றி னானை, நிகரில்வெண் கோவணக்
கீற்றி னானை, கிளர்ஒளிச் செஞ்சடை
ஆற்றி னானை, அமரர்தம் ஆர்உயிர்
தோற்றி னானைக்கண்டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : திருநீறணிந்தவனும், ஒப்பற்ற வெள்ளிய கோவணக்கீறு உடையவனும், ஒளிகிளரும் சிவந்த சடைக்கண் கங்கையை உடையவனும் தேவர்க்கு உயிர்வழங்கினானுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
  
பாடல் எண் : 10
விட்டிட் டானை,மெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்
கட்டிட் டானை, கனங்குழை பால்அன்பு
பட்டிட் டானை, பகைத்தவர் முப்புரம்
சுட்டிட் டானைக்கண்டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : மெய்ஞ்ஞானத்து அடியேனை விட்டவனும், மெய்ப்பொருளைக் காட்டியவனும், உமாதேவியினிடத்து அன்பு பொருந்தியவனும், பகைத்தவராகிய திரிபுராதிகள் முப்புரங்களைச் சுட்டவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
  
பாடல் எண் : 11
முற்றி னானை, இராவணன் நீண்முடி
ஒற்றி னானை, ஒருவிர லால்உறப்
பற்றி னானை,ஓர் வெண்தலைப் பாம்புஅரைச்
சுற்றி னானைக்கண்டீர், தொழற் பாலதே.

         பொழிப்புரை : எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவனும், இராவணன் நீண்முடிகளை ஒற்றியபோது ஒரு விரலால் உறப்பற்றியவனும், ஒரு வெண்டலை உடையவனும், பாம்பினை அரைக்கண் சுற்றியவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.
                                             திருச்சிற்றம்பலம்


5.    095 இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
புக்கு அணைந்து புரிந்துஅலர் இட்டுஇலர்,
நக்கு அணைந்து நறுமலர் கொய்துஇலர்,
சொக்கு அணைந்த சுடர்ஒளி வண்ணனை
மிக்குக் காணல்உற் றார்,அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனுமாகிய இருவரும் அழகு பொருந்திய ஒளிச்சுடர் நிறம் உடைய பெருமானைப் புகுந்து அணைந்து விரும்பி மலரிட்டு வணங்கிலராய் , மகிழ்ந்து பொருந்தி மணமலர்களைக் கொய்து அருச்சித்திலராய் ஆணவமிகுந்து காண முயன்று காண்கிலராயினார் .
  
பாடல் எண் : 2
அலரும் நீரும் கொண்டு ஆட்டித் தெளிந்துஇலர்,
திலக மண்டலம் தீட்டித் திரிந்துஇலர்,
உலக மூர்த்தி ஒளிநிற வண்ணனைச்
செலவு காணல்உற் றார், அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலக மூர்த்தியாகிய ஒளிநிற வண்ணம் உடைய இறைவனைப் பூவும் நீரும் கொண்டு அபிடேகித்துத் தெளிவடைந்திலராய்த் திருச்சாந்து தீட்டித் திரிந்திலராய்ச் சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார் ..

பாடல் எண் : 3
ஆப்பி நீரோடு அலகு,கைக் கொண்டுஇலர்,
பூப்பெய் கூடை புனைந்து சுமந்துஇலர்,
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணல் உற்றார், அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலகங்களைக் காவல் கொள்ளும் கபாலியாகிய பெருமானின் திரு வேடத்தைக் காணலுற்றார்கள். சாணநீரோடு, திருவலகும் கைகளிற் கொண்டு வணங்காதவராய்ப் பூக்கள் பெய்த கூடையைப் புனைந்து சுமந்திலர். முனைப்புடன் காணமுயன்று காண்கிலர் ஆயினார்.
 
பாடல் எண் : 4
நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்துஇலர்,
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்துஇலர்,
ஐயன், வெய்ய அழல்நிற வண்ணனை,
மெய்யைக் காணல்உற் றார், அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் நெய்யும் பாலும் கொண்டு அபிடேகித்து நினைந்திலராய்ப் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலராய் ஐயனாகிய வெப்பமுடைய அழலின் நிறம் கொண்ட இயல்புடைய பெருமானது மெய்ம்மையைக் காணலுற்றுக் காண்கிலராயினார் .

பாடல் எண் : 5
எருக்கங் கண்ணிகொண்டு இண்டை புனைந்துஇலர்,
பெருக்கக் கோவணம் பீறி உடுத்துஇலர்,
தருக்கி னால்சென்று தாழ்சடை அண்ணலை
நெருக்கிக் காணல்உற் றார், அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் எருக்க மாலை கொண்டு இண்டை புனைந்து வழிபடாதவராய் அழகு பெருக்குதற்பொருட்டுக் கோவணம் கிழித்து உடுத்தாதவராய் ஆணவத்தினாற் சென்று சடை தாழ்கின்ற அண்ணலாராகிய பெருமானைத் தத்தமில் நெருக்கிச் சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார் .
  
பாடல் எண் : 6
மரங்கள் ஏறி மலர்பறித்து இட்டுஇலர்,
நிரம்ப நீர்சுமந்து ஆட்டி நினைந்துஇலர்,
உரம்பொ ருந்திய ஒளிநிற வண்ணனை,
நிரம்பக் காணல்உற் றார், அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அறிவுடன்கூடி ஒளிநிற வண்ணனாகிய பெருமானை , மரங்களில் ஏறி மலர்பறித்திட்டிலராய் , நிரம்ப நீர் சுமந்து அபிடேகித்து நினைந்திலராய் ஆணவம் நிரம்பக் காண முயன்று காண்கிலர் ஆயினர் .
  
பாடல் எண் : 7
கட்டு வாங்கம் கபாலம்கைக் கொண்டுஇலர்,
அட்ட அங்கம் கிடந்துஅடி வீழ்ந்துஇலர்,
சிட்டன் சேவடி சென்றுஎய்திக் காணிய,
பட்ட கட்டம் உற்றார், அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கட்டுவாங்கம் எனப்படும் கையில் அணியப்படும் ஓர் ஆயுதத்தையும்,  மண்டை ஓட்டையும் தாங்கி இருக்கும் உண்மையை உணராதவர்களாய், எட்டு உறுப்புக்களும் நிலத்துப்படக் கிடந்து அடி தாழாதவராய் இறைவன் சேவடியும் திருமுடியும் காணுதற்குச் சென்று எய்திப் பொருந்திய துயரங்கள் உற்றார் அடிமுடி காண்கிலர் .
  
பாடல் எண் : 8
வெந்த நீறு விளங்க அணிந்துஇலர்,
கந்த மாமலர் இண்டை புனைந்துஇலர்,
எந்தை, ஏறுஉகந்து ஏறுஎரி வண்ணனை,
அந்தம் காணல்உற் றார், அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் வெந்த திருநீறு விளங்க அணியாதவராய் , மணமிக்க மலர்களால் இண்டை மாலை புனையாதவராய் எந்தையாகிய ஏறுகந்து ஏறும் எரிவண்ணனாகிய பெருமானின் ஆதியும் அந்தமும் காண இயலாதவர் ஆயினார் .
  
பாடல் எண் : 9
இளவு எழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து, பிணைத்து,அடி இட்டுஇலர்,
களவு செய்தொழில் காமனைக் காய்ந்தவன்
அளவு காணல்உற் றார், அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் இளமையோடுகூடி எழுந்து கரிய குவளை மலர்களைப் பிளந்து இதழ்களால் பிணைத்துத் திருவடியில் இட்டு வணங்காதவராய் களவு செய்யும் தொழிலை உடைய காமனைக் காய்ந்த பெருமானது அளவினைக் காண முயன்று காண்கிலர் ஆயினார் .
  
பாடல் எண் : 10
கண்டி பூண்டு, கபாலம்கைக் கொண்டுஇலர்,
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்துஇலர்,
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்
கெண்டிக் காணல்உற் றார், அங்கு இருவரே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கண்டி அணிந்து கபாலம் கையிற்கொள்ளாதவராய் வெண்மை விரிந்த சங்கம் விம்முமாறு வாயில் வைத்தூதாதவராய் அண்டமூர்த்தியாகிய தீ நிறவண்ணனை மண்ணில் கிண்டியும் விண்ணில் பறந்தும் காண முயன்று காண்கிலர் ஆயினார் .

பாடல் எண் : 11
செங்க ணானும் பிரமனும் தம்உளே
எங்கும் தேடித் திரிந்துஅவர் காண்கிலர்,
இங்குஉற் றேன்என்று இலிங்கத்தே தோன்றினான்,
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.

         பொழிப்புரை : செங்கண் உடையவனாந் திருமாலும் , பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காண்கின்ற வல்லமை இல்லாதவர்களுக்கு ஆறு பொங்கும் செஞ்சடையை உடைய புண்ணியக் கடவுளாம் இறைவன் ` இங்கு உற்றேன் ` என்று இலிங்க வடிவில் தோன்றினான் .
                                             திருச்சிற்றம்பலம்


5.    100 ஆதிபுராணத் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வேத நாயகன், வேதியர் நாயகன்,
மாதின் நாயகன், மாதவர் நாயகன்,
ஆதி நாயகன், ஆதிரை நாயகன்,
பூத நாயகன், புண்ணிய மூர்த்தியே.

         பொழிப்புரை : வேதங்களுக்கு நாயகனும் , வேதியர்க்கு நாயகனும் , உமாதேவியின் நாயகனும் , பெருந்தவம் உடைய முனிவர்களுக்கு நாயகனும் , ஆதிநாயகனும் , ஆதிரை என்ற விண்மீனுக்கு நாயகனும் , பூதங்களுக்கு நாயகனும் புண்ணியமூர்த்தி ஆவான் .
  
பாடல் எண் : 2
செத்துச் செத்துப் பிறப்பதே தேவுஎன்று
பத்தி செய், மனப் பாறைகட்கு ஏறுமோ,
அத்தன் என்றுஅரி யோடு பிரமனும்
துத்தி யம்செய நின்றநல் சோதியே.

         பொழிப்புரை : மீண்டும் மீண்டும் செத்துச் செத்துப் பிறப்பதே தெய்வமென்று பொய்யாகக் கருதிப் பக்திசெய்யும் மனப்பாறை உடையவர்கட்கு இறைவன் என்று திருமாலோடு பிரமனும் துதி செய்யநின்ற சோதி உள்ளத்திற் பொருந்துமோ ?.
  
பாடல் எண் : 3
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்,
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே,
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்,
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.

         பொழிப்புரை : நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே .

பாடல் எண் : 4
வாது செய்து மயங்கும் மனத்தராய்,
ஏது சொல்லுவீர், ஆகிலும், ஏழைகாள்,
யாதுஓர் தேவர் எனப்படு வார்க்குஎலாம்
மாதே வன்அலால், தேவர்மற்று இல்லையே.

         பொழிப்புரை : அறிவற்றவர்களே ! ஒருவரோடொருவர் வாதம் செய்து மயங்கும் மனத்தை உடையவர்களாய் ஏது சொல்லுவீராகிலும் , யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம் தேவன் மகாதேவனாகிய சிவபிரான் மட்டுமன்றி வேறு யாரும் இல்லை .
  
பாடல் எண் : 5
கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவ லோடுஒக்கு மோகடல் என்றல்போல்,
பாவ காரிகள் பார்ப்பரிது என்பரால்,
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

         பொழிப்புரை : கிணற்றாமை கடலாமையை நோக்கி இக் கிணற்றோடொக்குமோ கடல் ? என்று கூறுதலைப்போன்று தேவ தேவனாகிய சிவபெருமானின் பெருந்தன்மையைப் பாவிகளாகிய மக்கள் பார்த்தற்கு அரிது என்பர் .

பாடல் எண் : 6
பேய்வ னத்துஅமர் வானை, பிரார்த்தித்தார்க்கு
ஈவ னை,இமை யோர்முடி தன்அடிச்
சாய்வ னை, சல வார்கள் தமக்குஉடல்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.

         பொழிப்புரை : பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் அமர்வானும் , வேண்டியிருந்தவர்களுக்கு அருள்வழங்குவானும் , தேவர்கள் முடிகள் திருவடிகளில் சாய்க்கப்பெறுவானும் , தமக்குடலினுள் சீவனுமாய்ச் சிவனுமாய் இருப்பவனை வஞ்சனை உடையவர்கள் சிந்தியார்கள் .

பாடல் எண் : 7
எரிபெ ருக்குவர், அவ்எரி, ஈசனது
உருவ ருக்கம்அது  ஆவது உணர்கிலார்,
அரிய அயற்குஅரி யானை அயர்த்துபோய்,
நரிவி ருத்தம் அதுஆகுவர் நாடரே.

         பொழிப்புரை : வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள் ; அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளைக் காண்டற்கு அயர்த்து நரிவிருத்தம் ஆகுவர் .

பாடல் எண் : 8
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்,
அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ,
இருக்கு நான்மறை ஈசனை யேதொழும்
கருத்தி னைநினை யார், கல் மனவரே.

         பொழிப்புரை : அந்தியில் சூரியன் பாதங்களை வணங்குவர் ; சூரியனாவான் சிவபெருமானின் உருவம் அல்லனோ ? இருக்கு முதலிய நான்கு வேதங்கள் இறைவனையே தொழும் கருத்தினைக் கல்மனம் படைத்தவர்களாய்ச் சிலர் நினைக்கமாட்டார்கள் .

பாடல் எண் : 9
தாயி னும்நல்ல சங்கர னுக்குஅன்பர்,
ஆய உள்ளத்து அமுதுஅருந் தப்பெறார்,
பேயர், பேய்முலை உண்டுஉயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.

         பொழிப்புரை : பேய்ப்பெண்ணினது பேய்முலைப்பாலினை உண்டு அவள் உயிர் போகச்செய்த திருமாலுடைய மாயத்துப் பொருந்திய மனத்தை உடையவர்கள் தாயினும் நல்லவனாகிய சங்கரனுக்கு அன்பர்கள் ஆகிய உள்ளத்து அமுது அருந்தப்பெறா இயல்பினராவர் .

பாடல் எண் : 10
அரக்கன் வல்லரட்டு ஆங்கு ஒழித்து, ஆர்அருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந் தன்மையை,
அருத்தி செய்துஅறி யப்பெறு கின்றிலர்,
கருத்து இலாக் கயவக் கணத் தோர்களே.

         பொழிப்புரை : கருத்தில்லாத கீழ்மைக்குணமுடைய மக்கள், இராவணனது வலிய அரட்டுத்தன்மையினை ஒழித்துப் பின்னும் பேரருள் பெருக்கச்செய்த சிவபெருமானின் பெருந்தன்மையை விருப்பம் புரிந்து அறியப்பெறுகிலர் ஆவர் .

                                             திருச்சிற்றம்பலம்

5.    099 பாவநாசத் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பாவ மும்பழி பற்றுஅற வேண்டுவீர்,
ஆவில் அஞ்சுஉகந் தாடும் அவன்கழல்
மேவ ராய்,மிக வும்மகிழ்ந்து உள்குமின்,
காவ லாளன் கலந்துஅருள் செய்யுமே.

         பொழிப்புரை : பாவமும் பழியும் ஆகிய பற்றுக்கள் அறுதலை விரும்புபவர்களே ! பஞ்சகவ்வியம் உகந்து திருவபிடேகம் கொள்ளும் அப்பெருமான் கழலை மகிழ்ந்து மேவுபவராய் நினைவீராக ; காத்து ஆள்வோனாகிய இறைவன் கலந்து அருள் செய்வான்.
  
பாடல் எண் : 2
கங்கை ஆடில்என், காவிரி ஆடில்என்,
கொங்கு தண்கும ரித்துறை ஆடில்என்,
ஒங்கு மாகடல் ஓதநீர் ஆடில்என்,
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

         பொழிப்புரை : கங்கை நீராடிலும் , காவிரியில் நீராடிலும் , மணமும் குளிர்ச்சியும் உடைய குமரித்துறையில் நீராடிலும் , பெருகி ஒலிக்கின்ற கடல் நீர்த்துறைதோறும் நீராடிலும் என்ன பயன் ? எங்கும் இறைவன் என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லை .

பாடல் எண் : 3
பட்டர் ஆகில்என், சாத்திரம் கேட்கில்என்,
இட்டும் அட்டியும் ஈதொழில் பூணில்என்,
எட்டும் ஒன்றும் இரண்டு அறியில்என்,
இட்டம் ஈசன், எனாதவர்க்கு இல்லையே.

         பொழிப்புரை : பட்டர் ஆயினும் , சாத்திரங்கள் பல கேட்பினும் , இட்டும் சேர்த்தும் கொடுக்கும் தொழில் பூணிலும் , எட்டும் ஒன்றும் இரண்டும் அறிந்தாலும் என்ன பயன் ? விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம் .

பாடல் எண் : 4
வேதம் ஓதில்என், வேள்விகள் செய்யில்என்,
நீதி நூல்பல நித்தல் பயிற்றில்என்,
ஓதி அங்கம் ஓர்ஆறும் உணரில்என்,
ஈச னைஉள்கு வார்க்குஅன்றி இல்லையே.

         பொழிப்புரை : வேதம் ஓதினாலும் , வேள்விகள் செய்தாலும் , நீதிநூல்கள் பலவற்றை நித்தமும் பயிற்றினாலும் , ஆறங்கங்களை ஓதி உணர்ந்தாலும் என்ன பயன் ? ஈசனை உள்குபவர்க்கு அன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம் .

பாடல் எண் : 5
காலை சென்று கலந்துநீர் மூழ்கில்என்,
வேலை தோறும் விதிவழி நிற்கில்என்,
ஆலை வேள்வி அடைந்துஅது வேட்கில்என்,
ஏல ஈசன்என் பார்க்குஅன்றி இல்லையே.

         பொழிப்புரை : காலையில் சென்று கலந்து நீரில் மூழ்கினாலும் , வேளைகள் தோறும் விதிவழிநின்றாலும் , ஆலை போன்று வேள்வி அடைந்து வேட்பிலும் என்னபயன் ? உள்ளம் பொருந்த இறைவன் என்பார்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லை .
  
பாடல் எண் : 6
கானம் நாடு கலந்து திரியில்என்,
ஈனம் இன்றி இரும்தவம் செய்யில்என்,
ஊனை உண்டல் ஒழிந்து,வான் நோக்கில்என்,
ஞானன் என்பவர்க்கு அன்றிநன்கு இல்லையே.

         பொழிப்புரை : காட்டுப் பகுதிகளிற் கலந்து திரிந்தாலும் , இழி வின்றிப் பெருந்தவம் செய்தாலும் , ஊன் உண்ணுதலை யொழிந்து வானத்தை நோக்கினாலும் என்ன பயன் ? ஞானமயமாகியவன் என்பவர்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றால் நற்பயன் இல்லை .
  
பாடல் எண் : 7
கூட வேடத்தர் ஆகிக் குழுவில்என்,
வாடி ஊனை வருத்தித் திரியில்என்,
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனை,
பாடல் ஆளர்க்குஅல் லால்பயன் இல்லையே.

         பொழிப்புரை : வேடங்கள் கூடியவராகித் திரண்டாலும் , உடலை வாடிவருத்தித் திரிந்தாலும் என்ன பயன் ? ஆடல்வேடத்தை உடையவனாகிய அம்பலக்கூத்தனைப் பாடுபவர்க்கு அல்லால் மற்றையோர்க்குப் பயன் இல்லை .

பாடல் எண் : 8
நன்று நோற்கில்என், பட்டினி ஆகில்என்,
குன்றம் ஏறி இருந்தவம் செய்யில்என்,
சென்று நீரில் குளித்துத் திரியில்என்,
என்றும் ஈசன்என் பார்க்குஅன்றி இல்லையே.

         பொழிப்புரை : நன்கு தவம்நோற்றாலும் , உண்ணாவிரதம் கிடப்பினும் , மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும் , சென்று நீரிற் குளித்துத் திரிந்தாலும் என்ன பயன் ? என்றும் ஈசன் என்பார்க்கேயன்றி மற்றையோர்க்கு இவற்றாற் பயன் இல்லை .

 
பாடல் எண் : 9
கோடி தீர்த்தம் கலந்து குளித்து,அவை
ஆடி னாலும், அரனுக்குஅன்பு இல்லையேல்,
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்துஅட்டி
மூடி வைத்துஇட்ட மூர்க்கனோடு ஒக்குமே.

         பொழிப்புரை : கோடிதீர்த்தங்கள் தோறும் கலந்து குளித்து அவற்றில் நீராடிக் கிடந்தாலும் அரனிடத்து அன்பு இல்லையாயின் . ஓடும் இயல்பினை உடைய நீரை ஓட்டைக் குடத்திலே நிறைத்து மூடிவைத்திட்ட மூர்க்கன் ஒருவனின் செயலோடே அது ஒக்கும் .

பாடல் எண் : 10
மற்று நல்தவம் செய்து வருந்தில்என்,
பொற்றை உற்றுஎடுத் தான்உடல் புக்குஇறக்
குற்ற நல்குரை யார்கழல் சேவடி
பற்று இலாதவர்க் குப்பயன் இல்லையே.

         பொழிப்புரை : மற்றும் நற்றவங்கள் பல செய்து வருந்தினால் என்ன பயன் ? திருக்கயிலாயத்தை உற்று எடுத்த இராவணனது உடல் புகுந்து இற்றுப்போம்படிப் பொருந்திய நல்லொலிக் கழல்களணிந்த சேவடியினிடத்துப் பற்றுதல் இல்லாதவர்க்குப் பயனே இல்லை .
                                             திருச்சிற்றம்பலம்


                           5. 089 தனித் திருக்குறுந்தொகை
                  திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஒன்று வெண்பிறைக் கண்ணி,ஓர் கோவணம்
ஒன்று கீள்,உமை யோடும் உடுத்தது,
ஒன்று வெண்தலை ஏந்தி,எம் உள்ளத்தே
ஒன்றி நின்றுஅங்கு உறையும் ஒருவனே.

         பொழிப்புரை : வெண்தலை ஒன்று ஏந்தி எம் உள்ளத்தே ஒன்றிநின்று அங்கு உறையும் ஒருவனாம் இறைவன் வெண் பிறையாகிய கண்ணி ஒன்று உடையவன் ; உமையோடும் உடுத்தது ஒரு கிழிந்த கோவண உடை .

பாடல் எண் : 2
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய்தொழில்,
இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள்,
இரண்டும் இல்இள மான்எமை ஆள்உகந்து
இரண்டு போதும் என் சிந்தையுள் வைகுமே.

         பொழிப்புரை : அவர்க்கு உள்ளனவாகிச் செய்யுந்தொழில்கள் இரண்டு ; அவர்க்கு உள்ளனவாகிய கோலங்கள் இரண்டு ; எமை ஆளாகக்கொண்டு உகந்து இரவும் பகலும் என் சிந்தையுள் தங்கியிருக்கும் .
  
பாடல் எண் : 3
மூன்று மூர்த்திஉள் நின்றுஇய லும்தொழில்,
மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்,
மூன்று கண்ணினன், தீத்தொழில் மூன்றினன்,
மூன்று போதும்என் சிந்தையுள் மூழ்குமே.

         பொழிப்புரை : மும்மூர்த்திகளுள் நின்று இயலுகின்ற தொழில் மூன்றும் உடையவன்; மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவன் ; மூன்று கண்ணினன் ; தீத்தொழில் மூன்றுடையவன் ; மூன்றுபொழுதும் என் சிந்தையுள் மூழ்கியிருப்பான் .


பாடல் எண் : 4
நாலின் மேல்முகம் செற்றது, மன்நிழல்
நாலும் நன்கு உணர்ந் திட்டதும், இன்பமாம்
நாலு வேதம் சரித்தது, நல்நெறி
நாலு போல்எம் அகத்துறை நாதனே.

         பொழிப்புரை : எம் உள்ளத்து உறையும் இறைவன் நான்கின் மேலும் ஒருமிகைமுகமாகிய பிரமனது ஐந்தாவது முகத்தைச் சினந்தவன் ; நிலைபெற்ற ஆல நிழலில் நன்கு உணர்ந்திட்ட வேதங்கள் நான்கினை உடையவன் ; இன்பமாகிய நான்கு வேதங்களையே குதிரைகளாகக் கொண்டவன் ; நல்ல நெறி சரியை முதலிய நான்கு ஆகும் .

பாடல் எண் : 5
அஞ்சும் அஞ்சும் ஒர்ஆடி, அரைமிசை
அஞ்சு போல்அரை ஆர்த்தஅதின் தத்துவம்
அஞ்சும் அஞ்சும் ஓர்அஞ்சும் ஆயவன்,
அஞ்சும் ஆம்எம் அகத்துஉறை ஆதியே.

         பொழிப்புரை : என் அகத்து உறை ஆதி . ஆனைந்து ஆடி . ஐந்தொழில் நடனம் ஆடி . இடையில் ஐந்தலை அரவார்த்தவன் அவன் . தத்துவங்களாகிய இருபத்தைந்தின் கூறானவன் .

பாடல் எண் : 6
ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்,
ஆறு சூடிய அண்ட முதல்வனார்,
ஆறு கூர்மையர்க்கு அச்சம யப்பொருள்,
ஆறு போல்எம் அகத்துஉறை ஆதியே.

         பொழிப்புரை : எம் உள்ளத்துறையும் முதல்வனாகிய பெருமான் , ஆறு கால்களையுடைய வண்டு ஒலிக்கும் கொன்றையை உடையவன் ; கங்கையாற்றைச் சடையிற் சூடிய அண்டங்களுக்கெல்லாம் முதல்வன் ; கூரிய அறிவுடைய அறுவகைச் சமயத்தார்க்கு அச்சமயப் பொருளும் நெறியும் ஆயவன் .
  
பாடல் எண் : 7
ஏழு மாமலை, ஏழ்பொழில், சூழ்கடல்
ஏழு போற்றும் இராவணன் கைந்நரம்பு
ஏழு கேட்டு.அருள் செய்தவன், பொற்கழல்,
ஏழும் சூழ்அடி யேன்மனத் துஉள்ளவே.

         பொழிப்புரை : ஏழுமலை ஏழுபுவனம் ஏழ்கடல் போற்றும் இராவணனது ஏழிசைகேட்டு அருள்செய்தவன் . அவன் திருவடிகள் எழுபிறவிகளிலும் என்னுள்ளத்தின் கண்ணே உள்ளன.

பாடல் எண் : 8
எட்டு மூர்த்தியாய் நின்றுஇய லுந்தொழில்,
எட்டு வான்குணத்து ஈசன்எம் மான்தனை,
எட்டு மூர்த்தியும் எம்இறை, எம்உளே
எட்டு மூர்த்தியும் எம்முள் ஒடுங்குமே.

         பொழிப்புரை : அட்டமூர்த்தியாய்த் தொழில் செய்பவன் . எண் குணன் . எம் இறைவனாயுள்ள அவ்வெட்டுமூர்த்தி என்னுள்ளத்து எட்டும் மூர்த்தியாய் ஒடுங்கியிருப்பன்.

பாடல் எண் : 9
ஒன்பது ஒன்பது யானை ஒளிகளிறு,
ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே,
ஒன்பது ஆம்அவை தீத்தொழிலி ன்னுரை,
ஒன்பது ஒத்துநின்று என்னுள் ஒடுங்குமே.

         பொழிப்புரை : எண்பத்தொரு பதங்களில் பேசப்படுபவன் . பதினெண் சிவகணங்கள் அல்லது எண்பத்தொரு யானைகள் சூழப் பெற்றவன் . உடலிடத்துள்ள ஒன்பது வாயிலும் தீத்தொழிலிற் சேராதவாறு ஒன்பது ஒத்து எனக்குள் ஒடுங்குவான் .
  
பாடல் எண் : 10
பத்து நூறுஅவன் வெங்கண்வெள் ளேற்றுஅண்ணல்,
பத்து நூறுஅவன் பல்சடை தோள்மிசை,
பத்தி யாம்இலம் ஆதலின், ஞானத்தால்
பத்தி யான்இடம் கொண்டது பள்ளியே.

         பொழிப்புரை :அளவற்ற பெருமையன் . சிவகணங்கள் பல்லாயிரவரை உடையவன் . அடியவர் உள்ளங்களையே தங்குமிடமாகக் கொண்டவன் .

                                             திருச்சிற்றம்பலம்


5.    091 தனித் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஏயிலானை, என் இச்சை அகம்படிக்
கோயிலானை, குணப்பெரும் குன்றினை,
வாயிலானை, மனோன்மனி யைப்பெற்ற
தாயிலானைத் தழுவும்என் ஆவியே.

         பொழிப்புரை : தமக்குமேல் தலைவன் இல்லாதவன். உள்ளக் கோயிலான். குணக்குன்று. வாழ்த்துவோர் வாய் இல்லமாக உடையவன். சத்தியை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும்.

பாடல் எண் : 2
முன்னை ஞான முதல்தனி வித்தினை,
பின்னை ஞானப் பிறங்கு சடையனை,
என்னை ஞானத்து இருள்அறுத்து ஆண்டவன்,
தன்னை ஞானத் தளைஇட்டு வைப்பனே.

         பொழிப்புரை : பழைய ஞான முதல் தனி வித்தும், பின்னை ஞானம் பிறங்கு சடையனும் , என்னை இருள் நீக்கி ஞானத்தால் ஆண்டவனும் ஆகிய இறைவன் தன்னை ஞானமென்னும் தளையினால் பிணித்து உள்ளத்தே வைப்பேன்.

பாடல் எண் : 3
ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்,
ஞானத் தால்தொழு வேன்உனை நான்அலேன்,
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு,
ஞானத் தாய்,உனை நானும் தொழுவனே.

         பொழிப்புரை : சில ஞானிகள் நின்னை ஞானத்தால் தொழுவார்கள்; ஞானத்தால் உன்னை நான் தொழும் திறம் உடையேனல்லேன்; ஞானத்தால் தொழுகின்றவர்கள் தொழுதலைக் கண்டு, ஞானவடிவாகிய பொருளே! உன்னை நானும் தொழுவன்.

பாடல் எண் : 4
புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும்அதே,
புழுவுக்கு இங்கு,எனக்கு உள்ளபொல் லாங்குஇல்லை,
புழுவினும் கடையேன், புனிதன் தமர்
குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே.

         பொழிப்புரை : புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கில்லையாதலின் புழு வினுங்கடையேனாகிய அடியேன் புனிதனாகிய பெருமானைச் சார்ந்த அடியார் குழுவினுக்குச் சென்றுகூட எவ்விடத்தை உடையேன் ஆவேன்?.
  
பாடல் எண் : 5
மலையே வந்து விழினும், மனிதர்காள்,
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்,
தலைவன் ஆகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே.

         பொழிப்புரை : மனிதர்களே! மலையே வந்து விழுந்தாலும் தன் நிலையில் நின்று கலங்காதீர்கள். அவ்வாறு கலங்குவீர்களேயானால் ஈசன் அடியார்களை ஐம்பொறிகளாகிய யானைகளே கொன்றுவிடும்.

பாடல் எண் : 6
கற்றுக் கொள்வன வாயுள, நாவுள,
இட்டுக் கொள்வன பூவுள, நீருள,
கற்றைச் செஞ்சடை யான்உளன், நாம்உளோம்,
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.

         பொழிப்புரை : திருவைந்தெழுத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு வாயும் நாவும் உள்ளன; இட்டுக்கொள்ளப் பூவும், நீரும் உள்ளன; தொகுதியாகிய சிவந்த சடையான் உள்ளான்; நாம் உள்ளோம். இவை யெல்லாம் இருக்க எமனால் முனிவுண்பது எற்றுக்கு?
  
பாடல் எண் : 7
மனிதர்காள், இங்கே வம்ஒன்று சொல்லுகேன்,
கனிதந் தால்கனி உண்ணவும் வல்லிரே,
புனிதன் பொற்கழல் ஈசன்எ னும்கனி
இனிது சாலவும் ஏசற்ற வர்கட்கே.

         பொழிப்புரை : மனிதர்களே! இங்கே வாருங்கள்; ஒன்று சொல்லுவேன்; பழம் தந்தால் பழத்தை உண்ணவும் வல்லமை உடையீரோ? புனிதனும் கழல்கள் அணிந்த இறைவனும் ஆகிய கனி; ஏசற்றவர்களுக்கு மிகவும் இனியது; காண்பீராக.

பாடல் எண் : 8
என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்
தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்,
என்னைத் தன்அடி யான்என்று அறிதலும்,
தன்னை நானும் பிரான்என் றுஅறிந்தெனே.

         பொழிப்புரை : முன் என்னையே ஏதும் அறிந்திலேன்; எம் பெருமானையும் அறிந்திலேன். என்னைத் தன் அடியான் என்று பெருமான் அறிதலும் தன்னைக்காணும் தலைவன் என்று நானும் அறிந்துகொண்டேன்.

பாடல் எண் : 9
* * * * * * * * * * * *
பாடல் எண் : 10
தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பது,ஓர்
உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி,
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல்
வெள்ளத் தேனுக்கு, எவ்வாறு விளைந்ததே.

         பொழிப்புரை : மிக்குத் தெளிந்து தித்திப்பதாகிய ஒப்பற்ற உள்ளத்தேன்; அமுதப்பேரொளியும் வெளியும் ஆகிய அவ் அநுபவம் கள்ளம் உடையேனும், கவலைக்கடலைக் கடியாது அவ்வெள்ளத்தே விழுந்துகிடப்பேனுமாகிய எனக்கு விளைந்தது எவ்வாறு?
                                             திருச்சிற்றம்பலம்













No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...