திரு ஆலம்பொழில்




திரு ஆலம்பொழில்
திருவாலம்பொழில், திருவாம்பொழில்

     சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் திருவாலம்பொழில், திருவாம்பொழில் என்று வழங்கப்படுகின்றது.

         திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் திருத்தலம் இருக்கிறது.

     கண்டியூரில் இருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. கண்டியூரிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.

     திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.


இறைவர்              : ஆத்மநாதேசுவரர்

இறைவியார்           : ஞானாம்பிகை.

தல மரம்                : ஆல்

தேவாரப் பாடல்கள்    : அப்பர் - கருவாகிக் கண்ணுதலாய் (6-86).


         இவ்வாலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது.

     வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தில் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும், இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

     நேரே கருவறையில் இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவனை காசிபர், அஷ்டவசுக்கள் ஆகியேர் பூஜித்துள்ளனர். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மருக் காட்டு நீலம் பொழிற்குள் நிறை தடம்கட்கு ஏர் காட்டும் ஆலம்பொழில் சிவயோகப் பயனே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

         அப்பர் பெருமான் திருஆவடுதுறை, திருப்பழையாறை வடதளி ஆகிய திருத்தலங்களை வழிபட்டு, காவிரியின் இருகரைகளிலும் உள்ள திருத்தலங்களையும் வழிபட்டு, திருஆனைக்கா செல்லும் வழியில், திருஆலம்பொழில் வழிபட்டுப் பாடியருளிய திருப்பதிகம்.


பெரி. புராணப் பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சித்
         தமிழ்மா லைகளும் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.

         இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:

1.    திரு இன்னம்பர்: (அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை. (ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம். (இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை. (ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.

2.    திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.

3.    திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.

4.    திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.

5.    திருப்பந்தணை நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.

6.    திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.

7.    திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.

8.    தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.

9.    திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.

10.திருக்கருவிலிக் கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.

11.திரு அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.

12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.

13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.

14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80)                                                    -திருக்குறுந்தொகை

15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.

16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி: `மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.


திருநாவுக்கரசர் திருப்பதிகம்

6. 086     திருவாலம்பொழில்    திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கருஆகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னை,
         கமலத்தோன் தலைஅரிந்த காபா லிய்யை,
உருஆர்ந்த மலைமகள்ஓர் பாகத் தானை,
         உணர்வுஎலாம் ஆனானை, ஓசை ஆகி
வருவானை, வலஞ்சுழிஎம் பெருமான் தன்னை,
         மறைக்காடும் ஆவடுதண் துறையும் மேய
திருவானை, தென் பரம்பைக் குடியின் மேய
         திருஆலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

         பொழிப்புரை :எல்லாவற்றிற்கும் முதல் ஆனவனும், நுதலிடத்துக் கண் பெற்றவனும், பிரமனது தலையை அரிந்து, அரிந்த அத்தலை ஓட்டை விரும்பிக் கொண்டவனும், அழகிய உமையம்மை விளங்கும் உடலின் ஒரு கூற்றை உடையவனும், உயிர்களுடைய உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அவ்வுணர்வுகளை உணர்த்தும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழியில் மன்னும் எம்பெருமானும், மறைக் காட்டிலும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மை யுடையவனும் ஆகும், தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழில் சிவபெருமானை, நெஞ்சே ! இடைவிடாது சிந்திப்பாயாக.


பாடல் எண் : 2
உரித்தானைக் களிறு,அதன்தோல் போர்வை யாக
         உடையானை, உடைபுலியின் அதளே ஆகத்
தரித்தானை, சடைஅதன்மேல் கங்கை, அம்கைத்
         தழல்உருவை, விடம்அமுதா உண்டு இதுஎல்லாம்
பரித்தானை, பவளமால் வரைஅன் னானை,
         பாம்புஅணையான் தனக்குஅன்றுஅங்கு ஆழி நல்கிச்
சிரித்தானை, தென்பரம்பைக் குடியின் மேய
         திருஆலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

         பொழிப்புரை :களிற்றின் தோலை உரித்தவனும் , அத்தோலைப் போர்வையாகவும் , புலியின் தோலை உடையாகவும் , உடையவனும் , சடைமேல் கங்கையைத் தரித்தவனும் , அழகிய கையிடத்து உருவத் தழலை ஏந்தியவனும் , ஆலகால விடத்தை அமுது செய்தவனும் , இக்கோலத்தையெல்லாம் மேற்கொண்டு நின்றவனும் , பவளப் பெருமலையன்னவனும் , ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு திருமாலுக்கு அன்று சக்கராயுதத்தை வழங்கி மகிழ்ந்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாது சிந்திப்பாயாக .


பாடல் எண் : 3
உருமூன்றாய், உணர்வின்கண் ஒன்று ஆனானை,
         ஓங்கார மெய்ப்பொருளை, உடம்பின் உள்ளால்
கருஈன்ற எம்களவை அறிவான் தன்னை,
         காலனைத்தன் கழல்அடியால் காய்ந்து, மாணிக்கு
அருள்ஈன்ற ஆர்அமுதை, அமரர் கோனை,
         அள்ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும்
திருஈன்ற, தென்பரம்பைக் குடியின் மேய
         திருஆலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

         பொழிப்புரை :அயன் , அரி , அரன் என்னும் நிலைகளால் மூவுருவாகியும் உண்மையை உணருமிடத்து அம்மூவுருவும் ஓருரு ஆனவனும் , ஓங்காரத்தின் மெய்ப்பொருளாய்த் திகழ்பவனும் , உடம்பின் உள்ளே கருவாய்த் திகழும் மனம் எண்ணும் வஞ்சனையான கொடிய எண்ணங்களை அறிபவனும் , இயமனைக் கழலணிந்த தன் திருவடியால் உதைத்து மாணியாகிய மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த பெறுதற்கரிய அமுது அன்னவனும் , தேவர்களுக்குத் தலைவனும் அன்புமிகப் பெருகி எம்பெருமானே என்று விளித்து அடி அடைவார்க்கு என்றும் நன்மைகளை உண்டாக்குபவனும் ஆகிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே இடைவிடாது சிந்திப்பாயாக .


பாடல் எண் : 4
பார்முழுதாய் விசும்புஆகிப் பாதா ளமாம்
         பரம்பரனைச் சுரும்புஅமரும் குழலாள் பாகத்து
ஆரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை,
         வாட்போக்கி அம்மானை, எம்மான் என்று
வாரமதாம் அடியார்க்கு வாரம் ஆகி,
         வஞ்சனைசெய் வார்க்குஎன்றும் வஞ்சன் ஆகும்
சீர்அரசைத் தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

         பொழிப்புரை :முழுப்பூமியும் , விசும்பும் , பாதாளமும் ஆகிய மூவுலகங்களாய் நின்ற மிக மேலானவனும் , வண்டுகள் மொய்க்கும் குழலினையுடைய உமையம்மையைப் பாகத்திற்கொண்ட ஆரமுதம் போன்றவனும் , அழகிய தில்லையிடத்து ஆடும் கூத்தனும் , வாட் போக்கித் திருத்தலத்துத் தலைவனும் , எம் தலைவன் என்று பாராட்டி அன்பு கூரும் அடியார்பால் அன்புடையவனும் , வஞ்ச மனத்தார்க்கு என்றும் வஞ்சனும் , சிறந்த அரசனும் ஆம் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .


பாடல் எண் : 5
வரைஆர்ந்த மடமங்கை பங்கன் தன்னை,
         வானவர்க்கும் வானவனை, மணியை, முத்தை,
அரைஆர்ந்த புலித்தோல்மேல் அரவம் ஆர்த்த
         அம்மானை, தம்மானை அடியார்க்கு என்றும்,
புரைஆர்ந்த கோவணத்துஎம் புனிதன் தன்னை,
         பூந்துருத்தி மேயானை, புகலூ ரானை,
திரைஆர்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

         பொழிப்புரை :மலையில் தங்கி வளர்ந்த இளமங்கையைப் பங்கில் ஏற்றவனும் தேவர்க்குத் தேவனும் , மணி போன்றவனும், முத்து அனையானும் , அரையிற் பொருந்திய புலித்தோல் மேல் பாம்பைக் கட்டிய தலைவனும் , அடியார்க்கு என்றுந் தலைவனாய் நின்று அருளு பவனும் , வெள்ளிதாய் உயர்ந்த கோவணத்தை அணிந்த புனிதனும் , பூந்துருத்தி வாழ்வானும் , புகலூரானும் ஆகும் , அலை எழும் நீர்நிலைகளை உடைய தென்பரம்பைக்குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .


பாடல் எண் : 6
விரிந்தானை, குவிந்தானை, வேத வித்தை,
         வியன்பிறப்போடு இறப்பாகி நின்றான் தன்னை,
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா,
         ஆழ்கடல்நஞ்சு உண்டுஇமையோர் எல்லாம் உய்யப்
பரிந்தானை, பல்அசுரர் புரங்கள் மூன்றும்
         பாழ்படுப்பான் சிலைமலை,நாண் ஏற்றி அம்பு
தெரிந்தானை, தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

         பொழிப்புரை :படைப்புக் காலத்து விரிந்தவனும் , அழிப்புக் காலத்துக் குவிந்தவனும் , வேதத்தின் வித்தானவனும் , பரந்த பிறப்பும் இறப்பும் ஆகி நின்றவனும் , சலந்தரன் உடல் இருகூறாய் வேறாக அரிந்தவனும் , ஆழ்கடலிலிருந்து தோன்றிய நஞ்சையுண்டு இமையோ ரெல்லாரும் உய்ய அருள்புரிந்தவனும் , பலவாகிய அசுரர்கள் வாழ் புரங்கள் மூன்றையும் பாழ்படுத்தற்கு மலையாகிய வில்லில் பாம்பாகிய நாணை ஏற்றித் திருமாலாகிய அம்பைத் தெரிந்து எய்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவ பெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .


பாடல் எண் : 7
பொல்லாத என்அழுக்கில் புகுவான் என்னைப்
         புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை,
எல்லாரும் தன்னை இகழ அந்நாள்
         இடுபலிஎன்று அகந்திரியும் எம்பி ரானை,
சொல்லாதார் அவர்தம்மைச் சொல்லா தானை,
         தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னை,
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

         பொழிப்புரை :குற்றமிக்க என்னுடம்பில் புகுதற்பொருட்டு என் உடம்பின் புறத்தே நின்று பலகாலும் ஆராய்ந்து குற்றங்களைந்து தூய்மை செய்த புனிதனும் , தாருகாவனத்து முனிவர் எல்லாரும் தன்னை இகழ , அந்நாள் அவரகத்தார் இடுபலி என்ற ஒன்றை முன்னிட்டுக் கொண்டு அங்கே திரிந்தவனும் , தன்னைப் புகழாதாரைத் தான் என்றும் நினையாதவனும் , இடைவிடாமல் தன் பொன்னடி களையே விரும்பி ஒழுகுவாரை மற்றவர் செல்லாத ஞான நெறியிலே செலுத்த வல்லவனும் ஆகும் திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .


பாடல் எண் : 8
ஐந்தலைய நாகஅணைக் கிடந்த மாலோடு
         அயன்தேடி நாடஅரிய அம்மான் தன்னை,
பந்துஅணவு மெல்விரலாள் பாகத் தானை,
         பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னை,
பொந்துஉடைய வெண்தலையிற் பலிகொள் வானை,
         பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானை,
சிந்திய வெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னை,
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

         பொழிப்புரை :ஐந்தலைப் பாம்பாகிய படுக்கையில் கிடந்த திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாத தலைவனும் , பந்து பொருந்தும் மெல்லிய விரலினளாகிய பார்வதியைப் பாகமாகக் கொண்டவனும் , பராய்த்துறையிலும் , வெண்காட்டிலும் பயின்று நிற்பவனும் , ஓட்டைகளுடைய வெள்ளிய தலையில் பிச்சை ஏற்பவனும் , பூவணத்தும் புறம்பயத்தும் பொருந்தி நிற்பவனும் , துன்புறுத்திய எம் கொடுவினைகளைத் தீர்ப்பவனும் ஆகிய திருவாலம்பொழிற் சிவ பெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .


பாடல் எண் : 9
கையில்உண்டு உழல்வாரும் சாக்கியரும்
         கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானை,
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய் இலானை,
         பூண்நாகம் நாண்ஆகப் பொருப்பு வில்லாக்
கையின்ஆர் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
         கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே

         பொழிப்புரை :கையில் உணவை ஏற்று உண்ணும் சமணரும் சாக்கியரும் ஆகிய கல்விப்பயனடையாத வலிய மூடர்க்கு நல்லன் அல்லனும் , நெஞ்சில் கரவு இல்லாதார்க்குக் கரவாது வெளிநின்று அருள்பவனும் , பூணாக அணிகின்ற நாகமே நாணாகவும் , மலையே வில்லாகவும் , அக்கினிதேவனும் வாயுதேவனும் கையிற் பொருந்திய அம்பினுடைய ஈர்க்கும் கோலுமாகக் கொண்டு கொடிய தவத்தைச் செய்து வரங்களைப் பெற்ற அசுரர்களுடைய நெடிய புரங்கள் மூன்றையும் நெருப்பில் வீழ்த்தவனும் , வயல்கள் நிரம்பிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடை விடாமல் சிந்திப்பாயாக .


                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...