மேலைத் திருக்காட்டுப்பள்ளி




மேலைத் திருக்காட்டுப்பள்ளி
(திருக்காட்டுப்பள்ளி)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

          மக்கள் வழக்கில் திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது. (காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். இஃது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.)

         திருச்சி, தஞ்சை, திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்துகள் உள்ளன. திருவையாறு - கல்லணை சாலையில் இத்திருக்காட்டுப்பள்ளி உள்ளது.
 
இறைவர்              : அக்கினீசுவரர், தீயாடியப்பர்.

இறைவியார்           : சுந்தரநாயகி, அழகம்மை.

தல மரம்                : வன்னி, வில்வம்.

தீர்த்தம்                : அக்கினி தீர்த்தம், காவிரி.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - வாருமன் னும்முலை.
                                      2. அப்பர் - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை.

          அக்கினி வழிபட்ட தலமாதலின் இக்கோயிலுக்கு 'அக்னீஸ்வரம்' என்று பெயர்.

          உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாகப் பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள், இளைய மனைவி தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண், மாரியால் (மழை) அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப்படுகிறது.

          இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் முதலிய நாட்களில் நீராடி வழிபடுதல் சிறப்பென்பர்.

          இக்கோயிலிலுள்ள நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.

          மூலவர் - சிவலிங்கத் திருமேனி. நான்கு படிகள் பூமியில் தாழ உள்ளார். படிகள் இறங்கி சுற்றி வலம் வரலாம்.

          முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில்

          ( 'பள்ளி ' என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளதாம்.)


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 349
நெடுங்களத்து ஆதியை, "அன்பால்நின்பால்
         நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்துஅருள் செய்வாய்" என்னும்
         இன்இசை மாலைகொண்டு ஏத்தி, ஏகி
அடும்புஅணிச் செஞ்சடை யார்பதிகள்
         அணைந்து, பணிந்து, நியமம்போற்றிக்
கடுங்கை வரைஉரித் தார்மகிழ்ந்த
         காட்டுப்பள்ளிப் பதி கைதொழுவார்.

         பொழிப்புரை : திருநெடுங்களத்தில் வீற்றிருக்கின்ற மூலமூர்த்தியான இறைவரை, `அன்பால் உம்மிடம் உள்ளம் செல்லாதவாறு தகைக்கும் இடும்பைகளை யெல்லாம் தீர்த்து அருள் செய்வீராக!' என வேண்டிக் கொள்ளும் குறிப்பைக் கொண்ட இன்னிசைத் திருப்பதிகமான மாலையினால் போற்றி, மேற்சென்று, கொல்லும் இயல்புடைய பாம்பைச் சூடிய சிவந்த சடையினரான சிவபெருமானாருடைய திருப்பதிகளை வணங்கி, திருநியமத்தைப் போற்றி, வலிய துதிக்கையை உடைய யானையை உரித்த இறைவர் மகிழ்வுடன் வீற்றிருக்கும் `திருக்காட்டுப்பள்ளி' என்னும் திருப்பதியைக் கைதொழுவாராய்,

         குறிப்புரை : திருநெடுங்களத்தில் அருளியது, `மறையுடையாய்' (தி.1 ப.52) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

     இப்பதிகப் பாடல்தொறும் `இடர்களையாய்' என வருவது பற்றி, நம்மனோர்க்கெல்லாம் அவ்வப்பொழுதும், அடுக்கி வரும் உலகியல் துன்பங்களை யெல்லாம் நீக்க வேண்டும் எனும் குறிப்புடையதாக, இப்பதிகத்தைப் பன்முறையும் ஓதி வருகின்றோம். இதுவும் வாய்மை எனினும், ஆசிரியர் சேக்கிழார் தரும் விளக்கம் வேறாகும் என்பது அறியத்தக்கது. பெருமானிடத்துக் கொள்ளும் அன்புள்ளத்திற்கும் ஆற்றிவரும் வழிபாட்டிற்கும் இடையூறாக வரும் இடர்ப்பாடுகளை நீக்க வேண்டும் எனும் குறிப்பில் அருளுவதாகவே குறிக்கின்றார் சேக்கிழார். பதிகத்து வரும் பாடல்களை ஊன்றிப் படிப்பின், அவர் தம் திருவுள்ளக் கருத்தே உண்மை என்பது தெளியலாம்.


பெ. பு. பாடல் எண் : 350
சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச்
         செஞ்சடை நம்பர்தம் கோயில் எய்தி,
முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து,
         மொய்கழல் சேவடி கைதொழுவார்,
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப,
         கண்ணுதலாரை முன் போற்றி செய்து,
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார்,
         "வாருமன் னும்முலை" பாடிவாழ்ந்தார்.

         பொழிப்புரை : சென்று விளங்கும் மேலைத் திருக்காட்டுப்பள்ளியில் வீற்றிருக்கும் செஞ்சடையை உடைய சிவபெருமானின் கோயிலை அடைந்து, திருமுன்றிலை வலமாக வந்து வணங்கி, வீழ்ந்து எழுந்து வலிய கழலை அணிந்த திருவடிகளை வணங்குவாராய், கன்றைச் சேர்ந்த பசுவின் கருத்தையுடைய அன்பு உள்ளத்தில் பொருந்த நெற்றிக் கண்ணையுடைய இறைவரைத் திருமுன்பு நின்று வணங்கி, மன்றினுள் இருந்து இயற்றும் அருட்கூத்தைத் தம் உள்ளத்தில் கொண்டு, `வாரு மன்னும்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வாழ்வு பெற்றார்.

          `வாரு மன்னும்' (தி.3 ப.29) எனத் தொடங்கும் பதிகம் கொல்லிப் பண்ணிலமைந்ததாகும்.


3. 029    மேலைத்திருக்காட்டுப்பள்ளி        பண் - கொல்லி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வாருமன் னும்முலை மங்கைஓர் பங்கினன்,
ஊருமன் னும்பலி, உண்பதும் வெண்டலை,
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னும்சடை நிமலர்தம் நீர்மையே.

         பொழிப்புரை :கச்சணிந்த முலையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தி ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்பவர் . அப்பெருமான் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய நிமலராய் விளங்குவது அவர்தம் சிறந்த குணமாகும் .


பாடல் எண் : 2
நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார், கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார், அழகுஅமர் மங்கைஓர் பாகமாப்
பொருத்தனார் கழல்இணை போற்றுதல் பொருளதே.

         பொழிப்புரை :சிவபெருமான் திருநடனம் செய்பவர் . நீண்ட சடைமுடியில் சந்திரனோடு பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் கண்ணாற்காணும் பொருள்வடிவாயும் விளங்குபவர் . அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குதலே பயனுடைய செய்கையாகும் .


பாடல் எண் : 3
பண்ணின்ஆர் அருமறை பாடினார், நெற்றிஓர்
கண்ணினார், கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
விண்ணினார், விரிபுனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் எம்மைஆள் உடையஎம் மடிகளே.

         பொழிப்புரை :சிவபெருமான் அரிய வேதங்களை உரிய பண்ணோடு பாடியருளினார் . அவர் நெற்றிக்கண்ணை உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் , ஆகாயத்திலிருந்து விரிந்த கங்கையைத் தாங்கிய சடைமுடியுடையவராய் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானே எம்மை ஆட்கொண்டருளும் எம் தலைவர் ஆவார் .


பாடல் எண் : 4
பணங்கொள்நா கம்அரைக்கு ஆர்ப்பது, பல்பலி
உணங்கல்ஓடு உண்கலன், உறைவது காட்டிடை,
கணங்கள்கூ டித்தொழுது ஏத்துகாட் டுப்பள்ளி
நிணங்கொள்சூ லப்படை நிமலர்தம் நீர்மையே.

         பொழிப்புரை :சிவபெருமான் இடுப்பிலே கச்சாக அணிந்திருப்பது படமெடுத்தாடும் நாகமாகும் . பல இடங்களில் பிச்சையேற்று வந்த உணவை உண்ணும் பாத்திரம் , உலர்ந்த பிரமகபாலமாகும் . வசிப்பது சுடுகாடாகும் . அத்தகைய பெருமானார் சிவகணத்தோர் தொழுது போற்றும்படி திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார் . கொழுப்பினைக் கொண்ட சூலப்படையை ஏந்திய நிமலராய் விளங்கும் இயல்புடையவர் .


பாடல் எண் : 5
வரைஉலாம் சந்தொடு வந்துஇழி காவிரிக்
கரைஉலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
திரைஉலாம் கங்கையும் திங்களும் சூடிஅங்கு
அரைஉலாம் கோவணத்து அடிகள்வே டங்களே.

         பொழிப்புரை :மலையில் செழித்த சந்தனமரங்களை நீரோட்டத்தால் உந்தித் தள்ளிக் கரையினில் சேர்க்கும் காவிரியின் மணல் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தின் இறைவர் அலைவீசும் கங்கையையும் , சந்திரனையும் சடைமுடியிலே சூடி , இடுப்பிலே கோவண ஆடையுடன் காட்சிதரும் கோலமுடையவர் .


பாடல் எண் : 6
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம்முன்
ஓதினார், உமைஒரு கூறனார், ஒண்குழைக்
காதினார், கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார், திருவடி நாளும்நின்று ஏத்துமே.

         பொழிப்புரை :வேதத்தை அருளிச்செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர் சிவபெருமான் . வெண்ணிற மழுப்படையை ஏந்தியவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . ஒளி பொருந்திய குழையணிந்த காதை உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான அப்பெருமானின் திருவடிகளைத் தினந்தோறும் போற்றி வழிபடுவீர்களாக !


பாடல் எண் : 7
மையின்ஆர் மிடறனார், மான்மழு ஏந்திய
கையினார், கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
தையல்ஓர் பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார் அடிதொழ அல்லல்ஒன்று இல்லையே.

         பொழிப்புரை :மை போன்ற கரிய கண்டத்தையுடைய சிவ பெருமான் மானையும் , மழுவையும் ஏந்திய கையினர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடிய தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றத் துன்பம் சிறிதும் இல்லை .


பாடல் எண் : 8
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின்ஆர்
மலைதனால் வல்அரக் கன்வலி வாட்டினான்,
கலைதன்ஆர் புறவுஅணி மல்குகாட் டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவம்அது ஆகுமே.

         பொழிப்புரை :சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை அழித்தவர் . சிறப்புடைய கயிலை மலையினால் இராவணனின் வலிமையை அடக்கியவர் . மான்கள் உலவும் முல்லைநிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன் தலைதாழ்த்தி வணங்க நல்தவப்பேறு உண்டாகும் .


பாடல் எண் : 9
செங்கண்மால் திகழ்தரு மலர்உறை திசைமுகன்
தம்கையால் தொழுதுஎழத் தழல்உரு ஆயினான்,
கங்கைஆர் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழும்அவர்க்கு அல்லல்ஒன்று இல்லையே.

         பொழிப்புரை :சிவந்த கண்களையுடைய திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் தொழுது போற்ற அழல் உருவமாய் விளங்கியவர் சிவபெருமான் . கங்கையைச் சடையிலே தாங்கித் திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானை அழகிய கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கட்குத் துன்பம் இல்லை .


பாடல் எண் : 10
போதியார் பிண்டியார் என்றஅப் பொய்யர்கள்
வாதினால் உரைஅவை மெய்அல, வைகலும்
காரின்ஆர் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதுஎழ இன்பம்வந்து எய்துமே.

         பொழிப்புரை :அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின் வழிவந்த புத்தர்களும் , அசோகமர நிழலில் அமரும் அருகக் கடவுளை வணங்கும் சமணர்களும் , தங்கள் வாதத்தால் உரைப்பவை மெய்ம்மை யானவை அல்ல . மேகம் தவழும் , நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை நாள்தோறும் சீலத்தால் தொழுது போற்ற இன்பம் வந்தடையும் .


பாடல் எண் : 11
பொருபுனல் புடைஅணி புறவநல் நகர்மன்னன்
அருமறை அவைவல்ல அணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே.

         பொழிப்புரை :நீர்வளமிக்க அழகிய புறவம் என்னும் பெயர் கொண்ட சீகாழியில் அவதரித்த , அருமறைகளில் வல்ல , சிவஞானத் தையே ஆபரணமாக அணிந்த ஞானசம்பந்தன் , நீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்காட்டுப் பள்ளி என்னும் திருத்தலத்தை வணங்கிப் போற்றிய இத்திருப் பதிகத்தை ஓத , பாவம் நீங்கும் .

                                             திருச்சிற்றம்பலம்

-------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சி,
         தமிழ்மா லைகளும் சாத்திப்போய்,
எங்கும் நிறைந்த புகழாளர்
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : திருப்பழையாற வடதளியினின்றும் வரும் வழியில் பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.

         இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:

1.    திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.

2.    திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.
3.    திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.
4.    திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.
5.    திருப்பந்தணை நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.
6.    திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.
7.    திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.
8.    தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.
9.    திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.
10.திருக்கருவிலிக் கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.
11.திரு அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.
12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.
13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.
14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை
15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.

16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி: `மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.


5. 084   திருக்காட்டுப்பள்ளி       திருக்குறுந்தொகை
                                 திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மாட்டுப் பள்ளி மகிழ்ந்துஉறை வீர்க்குஎலாம்
கேட்டுப் பள்ளிகண் டீர்,கெடுவீர், இது
ஓட்டுப் பள்ளிவிட்டு ஓடல் உறாமுனம்
காட்டுப் பள்ளி உளான்கழல் சேர்மினே.

         பொழிப்புரை : செல்வத்திடத்து மகிழ்ந்து உறைவீர் ; கேட்டுப் பள்ளிகண்டீர் . உடம்பை விட்டு உயிர் ஓடலுறுவதற்கு முன்பு காட்டுப்பள்ளியிறைவன் திருவடிகளைச் சேர்வீராக .


பாடல் எண் : 2
மாட்டைத் தேடி மகிழ்ந்து,நீர் நும்உளே
நாட்டுப் பொய்எலாம் பேசிடும் நாண்இலீர்,
கூட்டை விட்டுஉயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளி உளான்கழல் சேர்மினே.

         பொழிப்புரை : செல்வத்தையே தேடி நீர் உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணமற்றவர்களே ! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளி யுள்ளான் திருவடி சேர்வீராக.


பாடல் எண் : 3
தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்
ஊனை விட்டுஉயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.

         பொழிப்புரை : தேனை வென்ற சொல்லை உடையவளாகிய மனைவியோடு செல்வமும் கெட்டு உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டு வேடர்கள் கருதும் காட்டுப்பள்ளியின் ஞான நாயகனைச் சென்று நண்ணுவீராக .


பாடல் எண் : 4
அருத்த மும்,மனை யாளொடு, மக்களும்
பொருத்தம் இல்லை,பொல் லாதது போக்கிடும்
கருத்தன், கண்ணுதல் அண்ணல்காட் டுப்பள்ளித்
திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.

         பொழிப்புரை : பொருளும் , மனைவியோடு மக்களும் பொருத்தம் இல்லை ; பொல்லாத தீமை போக்கிடும் கருத்தனும் , நெற்றிக் கண்ணுடைய அண்ணலும் ஆகிய காட்டுப்பள்ளித் திருத்தன் சேவடியைச் சென்று சேர்வீராக .


பாடல் எண் : 5
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்
அற்ற போதுஅணை யார்அவர் என்றென்றே
கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப்
பெற்றம் ஏறும் பிரான்அடி சேர்மினே.

         பொழிப்புரை : சுற்றத்தாரும் துணைவியும் மனைவாழ்க்கையும் , உயிர் உடலைவிட்டு நீங்கியபோது பொருந்தாதவர்கள் என்று , கற்றவர்கள் கருதுகின்ற காட்டுப்பள்ளியில் இடபம் ஏறிய பெருமான் அடி சேர்வீராக .


பாடல் எண் : 6
அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்,
கடம்பன் தாதை கருதும்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்குஓர் உறுதுணை ஆகுமே.

         பொழிப்புரை : அடும்பும் , கொன்றையும் , வன்னியும் , ஊமத்தமுமாகிய மலர்கள் சூடியிருக்கும் புனைதல் செய்யப்பட்ட சடையுடைய தூமணிச் சோதியானும் , கடம்பணிந்த முருகன் தந்தையும் ஆகிய பெருமானே உடம்பை உடையவர்க்கெல்லாம் உறுதுணை ஆவான் ; ஆதலின் காட்டுப்பள்ளியையே கருதுவீர்களாக .


பாடல் எண் : 7
மெய்யின் மாசுஉடை யார்,உடல் மூடுவார்,
பொய்யை மெய்என்று புக்குஉடன் வீழன்மின்,
கையின் மான்உடை யான்,காட்டுப் பள்ளி,எம்
ஐயன் தன்அடியே அடைந்து உய்ம்மினே.

         பொழிப்புரை : உடம்பில் அழுக்குடையவரும் , உடல் மூடுவாருமாகிய புத்தரது பொய்யை மெய்யென்று கருதிப் புகுந்து அவர்களுடன் வீழாதீர் ; கையின்கண் மான் உடையான் ஆகிய காட்டுப் பள்ளியில் எம் ஐயன் திருவடிகளையே அடைந்து உய்வீராக .


பாடல் எண் : 8
வேலை வென்றகண் ணாரை விரும்பி,நீர்
சீலம் கெட்டுத் திகையன்மின், பேதைகாள்,
காலையே தொழும் காட்டுப்பள் ளிய்யுறை
நீல கண்டனை நித்தல் நினைமினே.

         பொழிப்புரை : அறிவற்றவர்களே ! வேலை , அழகால் வென்ற கண்ணை உடைய பெண்டிரை விரும்பி , நீர் ஒழுக்கம் கெட்டுத் திகையாதீர் ; காட்டுப்பள்ளியில் உறையும் திருநீலகண்டனை நித்தமும் நினைந்து காலத்தே சென்று தொழுவீராக .


பாடல் எண் : 9
இன்று உளார் நாளை இல்லை எனும்பொருள்
ஒன்றும் ஓராது, உழிதரும் ஊமர்காள்,
அன்று வானவர்க் காக விடம்உண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண்டு உய்ம்மினே.

         பொழிப்புரை : ஊமர்களே ! இன்றைக்கிருப்பார் நாளைக்கில்லை எனும் பொருள் ஒன்றும் உணராது திரிதருவோரே ! அன்று தேவர்களின் பொருட்டு விடமுண்ட திருக்கழுத்தினரது காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக .


பாடல் எண் : 10
எண்இ லாஅரக் கன்மலை ஏந்திட
எண்ணி நீள்முடி பத்தும் இறுத்தவன்,
கண்உ ளார்கரு தும்காட்டுப் பள்ளியை
நண்ணு வார்அவர் தம்வினை நாசமே.

         பொழிப்புரை : நல்லெண்ணமில்லாத இராவணன் மலையை எடுக்க , அவன் திருந்துமாறு திருவுளத்து எண்ணி , அவன் நீண்ட முடிகள் பத்தையும் இறுத்தவனுக்குரிய ஞானக்கண்ணுடையவர் கருதி உணரும் காட்டுப்பள்ளியை நண்ணுவாருடைய வினைகள் நாசம் அடையும் .

                                             திருச்சிற்றம்பலம்






No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...