திரு நெடுங்களம்





திரு நெடுங்களம்

     சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. தொலைவு. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்திருத்தலம் வழியாகச் செல்கிறது.

இறைவர்              : நித்யசுந்தரேசுவரர், நெடுங்களநாதர்.

இறைவியார்           : மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.

தல மரம்              : வில்வம்.

தீர்த்தம்               : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - மறையுடையாய்


     ரண்டு கோபுரங்களுடனும், இரண்டு பிரகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன.

     வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலத்தில் நானகு கரங்களுடன்அம்பாள் காட்சி தருகிறாள். வடக்கு வெளிப் பிரகாரத்தில் அகத்தியர் சன்னதியும், இதன் எதிரே அகத்தியர் தீர்த்தமும் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும் உள்ளது.

         உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சிவபெருமான் இலிங்கத் திருமேனியுடன் சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர்.

     மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன் திருநெடுங்களத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். கோயில் கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாஎ ஐதீகம். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

         இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

     இத்தலத்தின் தீர்த்தங்களாக அகத்திய தீர்த்தம் மற்றும் சுந்தர தீர்த்தம் ஆகியவை உள்ளன. சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்யம் செய்து பலருக்கும் வழங்கினால் நோய் தீருமென்பது நம்பிக்கையாக இருந்து வருகின்றது.

     இத்தலத்தில் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல் உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது. இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "துன்று கயல் கண்ணார் நெடும் களத்தைக் கட்டு அழித்த மெய்த்தவர் சூழ் தண்ணார் நெடுங்கள மெய்த் தாரகமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 348
ஏறுஉயர்த் தார்திருப் பால்துறையும்,
         எறும்பியூர் மாமலை யேமுதலா,
வேறுபதி கள்பல வும்போற்றி,
         விரவுந் திருத்தொண்டர் வந்துசூழ,
ஈறுஇல்புகழ்ச் சண்பை ஆளியார்தாம்
         எண்திசை யோரும் தொழுதுஇறைஞ்ச,
நீறுஅணிசெம் பவளப் பொருப்பில்
         நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.

         பொழிப்புரை : விடைக்கொடியை உடைய இறைவரின் திருப்பாற்றுறையும், திருவெறும்பியூர் மாமலையும் முதலான பிறபதிகளை வணங்கி, மனமியைந்து பரவி வரும் தொண்டர்கள் பலரும் சூழவரும் எல்லையற்ற புகழையுடைய சீகாழித் தலைவர், எண்திசையில் உள்ளவர்களும் தொழுது வணங்கத் திருநீற்றை அணிந்த செம்பவள மலைபோன்ற சிவபெருமானின் திருநெடுங்கள மாநகரைச் சென்று அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 349
நெடுங்களத்து ஆதியை "அன்பால்நின்பால்
         நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்துஅருள் செய்வாய்"என்னும்
         இன்இசை மாலைகொண்டு ஏத்தி ஏகி,
அடும்புஅணிச் செஞ்சடை யார்பதிகள்
         அணைந்து, பணிந்து, நியமம்போற்றி,
கடுங்கை வரைஉரித் தார்மகிழ்ந்த
         காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.

         பொழிப்புரை : திருநெடுங்களத்தில் வீற்றிருக்கின்ற மூலமூர்த்தியான இறைவரை, `அன்பால் உம்மிடம் உள்ளம் செல்லாதவாறு தகைக்கும் இடும்பைகளை யெல்லாம் தீர்த்து அருள் செய்வீராக!' என வேண்டிக் கொள்ளும் குறிப்பைக் கொண்ட இன்னிசைத் திருப்பதிகமான மாலையினால் போற்றி, மேற்சென்று, கொல்லும் இயல்புடைய பாம்பைச் சூடிய சிவந்த சடையினரான சிவபெருமானாருடைய திருப்பதிகளை வணங்கி, திருநியமத்தைப் போற்றி, வலிய துதிக்கையை உடைய யானையை உரித்த இறைவர் மகிழ்வுடன் வீற்றிருக்கும் `திருக்காட்டுப்பள்ளி' என்னும் திருப்பதியைக் கைதொழுவாராய்,

         திருநெடுங்களத்தில் அருளியது, `மறையுடையாய்' (தி.1 ப.52) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

         இப்பதிகப் பாடல்தொறும் `இடர்களையாய்' என வருவது பற்றி, நம்மனோர்க்கெல்லாம் அவ்வப்பொழுதும், அடுக்கி வரும் உலகியல் துன்பங்களை யெல்லாம் நீக்க வேண்டும் எனும் குறிப்புடையதாக, இப்பதிகத்தைப் பன்முறையும் ஓதி வருகின்றோம். இதுவும் வாய்மை எனினும், ஆசிரியர் சேக்கிழார் தரும் விளக்கம் வேறாகும் என்பது அறியத்தக்கது. பெருமானிடத்துக் கொள்ளும் அன்புள்ளத்திற்கும் ஆற்றிவரும் வழிபாட்டிற்கும் இடையூறாக வரும் இடர்ப்பாடுகளை நீக்க வேண்டும் எனும் குறிப்பில் அருளுவதாகவே குறிக்கின்றார் சேக்கிழார். பதிகத்து வரும் பாடல்களை ஊன்றிப் படிப்பின் அவர்தம் திருவுள்ளக் கருத்தே உண்மை என்பது தெளியலாம்.


1.052    திருநெடுங்களம்                 பண் - பழந்தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மறைஉடையாய்! தோல்உடையாய்! வார்சடைமேல் வளரும்
பிறைஉடையாய்! பிஞ்ஞகனே! என்று, உனைப் பேசின்அல்லால்
குறை உடையார் குற்றம் ஓராய், கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக.


பாடல் எண் : 2
கனைத்து எழுந்த வெண் திரைசூழ் கடல் இடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை
மனத்தகத்து ஓர் பாடல் ஆடல் பேணி, இராப் பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.


பாடல் எண் : 3
நின்அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்லவந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, `என் அடியவன் உயிரைக் கவராதே` என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.


பாடல் எண் : 4
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்!
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா!
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ! நின் தாள் நிழற்கீழ்
நிலை புரிந்தார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதிதேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.


பாடல் எண் : 5
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார், பாடலோடு தொழு கழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவவேடம் தாங்கியவர்களும். பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடி நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.


பாடல் எண் : 6
விருத்தன் ஆகி, பாலன்ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து,
கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்,
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங்கொண்டும், வேதங்கள் நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலைஞானங்கள் மெய்ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருள்வாயாக.


பாடல் எண் : 7
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி, ஓர்வெங் கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல்
ஏறு கொண்டாய், சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம் மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடரை நீக்கியருள்வாயாக.

 
பாடல் எண் : 8
குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக் கீழ் அடர்த்தாய்
என்று, நல்ல வாய் மொழியால் ஏத்தி, இராப் பகலும்
நின்று நைவார் இடர்களையாய், நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலை யின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின்மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.


பாடல் எண் : 9
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான் முகனும்
சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்,
கேழல் வெண்கொம்பு அணிந்த பெம்மான், கேடு இலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய், நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினது கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன்போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாய்.


பாடல் எண் : 10
வெஞ்சொல் தம்சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்,
தஞ்சம் இல்லாச் சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார்,
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம், நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய், நெடுங்களம் மேயவனே.

         பொழிப்புரை :கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.


பாடல் எண் : 11
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங் களத்தைச்
சேடர் வாழும் மாமறுகில் சிரபுரக் கோன், நலத்தால்
நாட வல்ல பனுவல் மாலை, ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார், பாவம் பறையுமே.

         பொழிப்புரை :மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

உலகநீதி - 4

"குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்;     கொலை,களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்; கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்;     கற்புடைய மங்க...