திரு எறும்பியூர்




திரு எறும்பியூர்
(திருவெறும்பூர்)

     சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.

          தற்போது மக்கள் வழக்கில் 'திருவெறும்பூர் ' என்றும் 'திருவரம்பூர் ' என்றும் வழங்குகிறது.

இறைவர்          பிப்பிலிகேசுவரர், எறும்பீசுவரர், மதுவனேசுவரர், மணிகூடாசலபதி,  
                                    (பிப்பிலி - எறும்பு) மாணிக்கநாதர்.

இறைவியார்      : சௌந்தரநாயகி, மதுவனேசுவரி, நறுங்குழல் நாயகி             

தல மரம்          : வில்வம்.

தீர்த்தம்           : பிரம தீர்த்தம்


தேவாரப் பாடல்கள்    : அப்பர் - 1. விரும்பி யூறு விடேல்மட,
                                                   2. பன்னியசெந் தமிழறியேன்.

          இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங்கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது.

          "தாருகாசூரனை" அழிக்கத் தேவர்கள் வழிகேட்டுப் பிரமனை அனுகினர். அவர் சொல்லியவண்ணம் இந்திரனும், தேவர்களும் தங்கள் உருவம் அசுரர்களுக்குத் தெரியக் கூடாதென்றெண்ணி, எறும்பு வடிவங்கொண்டு இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர். அவ்வாறு வழிபடும்போது சிவலிங்கத்தின் மீதிருந்த எண்ணெய்ப் பசையால் மேலேற முடியாது கஷ்டப்பட, சுவாமி புற்றாக மாறி, எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். அவர்கள் மேலேறுவதற்கு வசதியாகச் சாய்ந்தும் பூசையை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

          திரிசிரன் திருச்சியில் வழிபட்டதுபோல், அவனுடைய சகோதரன் 'கரன்' என்பவன் எறும்பு உருக்கொண்டு இங்கு வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

          இக்கோயில் மலைமீது உள்ளது. மலைக்கோயில் புராணப்படி இதற்கு; பிப்பிலீச்சரம், மணிக்கூடம், இரத்தினக்கூடம், திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரமபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம் குமாரபுரம் எனப் பல பெயர்களுண்டு. தென் கயிலாயம் என்றும் இத்தலத்தைச் சொல்வர்.

          கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், 'திருமலையாழ்வார்' என்றும், 'திருவெறும்பியூர் உடைய நாயனார்' என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.

          நவக்கிரக சந்நிதியில் சூரியம் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது.

          கருவறை கல்லாலான கட்டிடம்.

          மூலலிங்கம் மண்புற்றாக மாறியிருப்பதால், நீர்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத்திருமேனி வடபால் சாய்ந்துள்ளது. மேற்புறம் சொரசொரப்பாக (தலபுராணம் தொடர்புடையது) உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன.

          கருவறையின் வெளிப்புறம் கல்வெட்டுக்கள் உள்ளன.

          கல்வெட்டில் இத்தலம் "ஸ்ரீ கண்டசதுர்வேதி மங்கலம்" என்று குறிக்கப்படுகிறது.

          எறும்பியூர் தலபுராணம் உள்ளது.

    (கி. பி. 1752-ல் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் நடந்த போரின்போது இவ்விடம் போர் வீரர்கள் தங்கும் ராணுவத் தளமாக விளங்கியது.)

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "இராப்பள்ளி நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து, உலகு வாழ்த்துகின்ற நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே" என்று போற்றி உள்ளார்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 302
சிலந்திக்கு அருளும் கழல்வணங்கி,
         செஞ்சொல் மாலை பலபாடி,
இலங்கு சடையார் எறும்பியூர்
         மலையும் இறைஞ்சிப் பாடியபின்,
மலர்ந்த சோதி திருச்சிராப்
         பள்ளி மலையும், கற்குடியும்,
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
         துறையும், தொழுவான் நண்ணினார்.

         பொழிப்புரை : நாவரசர் திருவானைக்காவில் சிலந்திக்கு அருளிய இறைவரின் திருவடிகளை வணங்கி, பலசெஞ்சொல் மாலைகளைப் பாடி, விளங்கும் சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவெறும்பியூர் மலையையும் வணங்கித் திருப்பதிகம் பாடினார். பின்பு விரிந்த பேரொளியையுடைய திருச்சிராப்பள்ளி மலையையும், திருக்கற்குடி மலையையும், நன்மையுடைய திருப்பராய்த்துறையையும் வணங்கும் பொருட்டுச் செல்லலானார்.


1.    திருவானைக்காவில் அருளிய பதிகங்கள்:
(அ) `கோனைக்காவி` (தி.5 ப.31) - திருக்குறுந்தொகை.
(ஆ) `எத்தாயர்` (தி.6 ப.62) - திருத்தாண்டகம்.
(இ) `முன்னானை` (தி.6 ப.63) – திருத்தாண்டகம்.

2.    திருவெறும்பியூர்:
(அ) `விரும்பியூறு` (தி.5 ப.74) - திருக்குறுந்தொகை.
(ஆ) `பன்னிய செந்தமிழ்` (தி.6 ப.91) - திருத் தாண்டகம்.

3.    திருச்சிராப்பள்ளி: `மட்டுவார்` (தி.5 ப.85) - திருக்குறுந்தொகை.

4.    திருக்கற்குடி: `மூத்தவனை` (தி.6 ப.60) - திருத்தாண்டகம்.

5.    திருப்பராய்த்துறை: `கரப்பர்` (தி.5 ப.30) - திருக்குறுந்தொகை.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

5. 074   திருஎறும்பியூர்      திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே,
கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்குஅவன்,
இரும்பின் ஊறல் அறாததுஓர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

         பொழிப்புரை : அறியாமை உடைய நெஞ்சமே ! வெண்தலையைக் கையில் உடையவனும் , எறும்பியூர் மலையானும் ஆகிய எங்கள் ஈசன் , கலந்த அடியவர்களுக்குக் கரும்பின் ஊறல் போல்வான் . அவனை விடாது விரும்பியுறுவாயாக .


பாடல் எண் : 2
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன், பேணுசீர்க்
கறங்கு பூத கணம்உடைக் கண்ணுதல்,
நறுங்கு ழல்மட வாளொடு நாள்தொறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

         பொழிப்புரை : எங்கள் இறைவன் , விளங்கும் செஞ்சடையையுடைய பிஞ்ஞகனும் , பேணுகின்ற புகழை உடைய சுழன்றாடும் இயல்புடைய பூதகணங்களை உடையவனும் , நெற்றிக்கண்ணனும் ஆகி , மணம் வீசும் கூந்தலை உடைய உமாதேவியோடு நாள்தோறும் விளங்கும் எறும்பியூர் மலையினன் ஆவன் .

பாடல் எண் : 3
மருந்து வானவர், தானவர்க்கு இன்சுவை,
புரிந்த புன்சடைப் புண்ணியன், கண்ணுதல்,
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

         பொழிப்புரை : எங்கள் இறைவன் வானவர்க்கு மருந்தாகவும், தானவர்க்கு இன்சுவையாகவும் , முறுக்குண்ட புன்சடையை உடைய புண்ணியனாகவும் , நெற்றிக்கண்ணனாகவும் , பூண்கள் பொருந்தும் முலையையுடைய மங்கை நல்லாளொடும் மேவும் எறும்பியூர் மலையினன் ஆவன் .


பாடல் எண் : 4
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்இறை,
மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்,
அறம்பு ரிந்துஅருள் செய்தஎம் அங்கணன்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

         பொழிப்புரை : எம் இறைவன் நீலநிறம் கொண்ட கண்டத்தை உடைய நின்மலனும், மறம் கொண்ட வேல்போன்ற கண்ணையும் , ஒளியுடைய நுதலையும் உடைய மங்கை ஒருபாகமாகி அறம் புரிந்து அருள் செய்த எம் அண்ணலும் ஆகிய எறும்பியூர் மலையினன் ஆவன் .


பாடல் எண் : 5
நறும்பொன் நாள்மலர்க் கொன்றையும், நாகமும்,
துறும்பு செஞ்சடை, தூமதி வைத்து,வான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்,
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

         பொழிப்புரை : நறுமணமும் பொன்போன்ற நிறமும் உடைய கொன்றையின் புதிய பூக்களும் , நாகமும் சுரும்புகள் அடர்ந்தது போன்ற சிவந்த சடையின்கண் தூயமதியோடு வைத்து , விண்ணை உறும் பொன்மலையாகிய இமவான்மகளாகிய உமாதேவியோடு ஊர் தோறும் வீற்றிருக்கும் எங்கள் இறைவன் , எறும்பியூர் மலையினன் .


பாடல் எண் : 6
கறும்பி ஊர்வன ஐந்துஉள காயத்தில்,
திறம்பி ஊர்வன மற்றும் பலஉள,
குறும்பி ஊர்வதுஓர் கூட்டகத்து இட்டு,எனை
எறும்பி யூர்அரன் செய்த இயற்கையே.

         பொழிப்புரை : சினந்து ஊர்வனவாகிய ஐம்பொறிகள் உள்ள உடம்பில் , மாறுபட்டு ஊர்வன மற்றும் பல உள்ளன ; அழுக்கு ஊர்வதாகிய கூடுபோன்ற அவ்வுடம்பின்கண் இட்டு என்னை எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது .


பாடல் எண் : 7
மறந்து மற்றுஇது பேர்இடர் நாடொறும்,
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே,
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டு,எனை
எறும்பி யூர்அரன் செய்த இயற்கையே.

         பொழிப்புரை : அறிவற்ற நெஞ்சமே ! பெருந்துன்பங்களால் நாள்தோறும் மற்று இதனை மறந்து மாறுபட்டு நீ நினையாதே ; புறத்தே கோலம் செய்யப்பெற்ற இக்குடிசையில் என்னை இட்டு எறும்பியூர் அரன் செய்த இயற்கை இது .


பாடல் எண் : 8
இன்ப மும்பிறப் பும்,இறப் பின்னொடு
துன்ப மும்,உட னேவைத்த சோதியான்,
அன்ப னே,அர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.

         பொழிப்புரை : எறும்பியூர் இறைவன் இன்பமும் பிறப்பும் , துன்பமும் இறப்பும் உடன் வைத்த சோதிவடிவினனும் , ` அன்பனே ! அரனே !` என்று வாய்விட்டு அரற்றுவார்க்கு இன்பமளிப்பவனும் ஆவன் .


பாடல் எண் : 9
கண்நி றைந்த கனபவ ளத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துஉரு வாய்உயிர் ஆயவன்
எண்நி றைந்த எறும்பியூர் ஈசனே.

         பொழிப்புரை : எண்ணமெங்கும் நிறைந்த எறும்பியூர் இறைவன் , கண்ணுக்கு நிறைந்த பெருமைமிக்க பவளத்திரளும் , விண்ணில் நிறைந்த சுடர் விரிகின்ற சோதி வடிவானவனும் , உள்ளத்துள் நிறைந்து உருவாகி உயிராகியவனும் ஆவன் .


பாடல் எண் : 10
நிறங்கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்,
நறுங்கு ழல்மட வாள்நடுக்கு எய்திட,
மறங்கொள் வாள்அரக் கன்வலி வாட்டினான்,
எறும்பி யூர்மலை எம்இறை காண்மினே.

         பொழிப்புரை : எறும்பியூர் மலைக்குரிய எம்மிறைவன் , நறுமணம் வீசும் கூந்தலையும் இளமையையும் உடைய உமாதேவி நடுக்கம் எய்திட வெண்ணிறம் கொண்ட திருக்கயிலைப் பெருமலையை வீரம் கொண்ட வாளை உடைய இராவணன் ஊன்றி எடுத்தலும் , அவன் ஆற்றலை வாடுமாறு செய்தான் .
                                             திருச்சிற்றம்பலம்


6. 091    திருஎறும்பியூர்               திருத்தாண்டகம்
                                      திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பன்னியசெந் தமிழ்அறியேன், கவியேல் மாட்டேன்,
         எண்ணோடு பண்நிறைந்த கலைகள் ஆய
தன்னையும், தன் திறத்துஅறியாப் பொறியி லேனை,
         தன்திறமும் அறிவித்து, நெறியும் காட்டி,
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
         அடைந்தேனைத் தொடர்ந்து,என்னை ஆளாக் கொண்ட
தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை :தொல்லாசிரியர் ஆராய்ந்து சொல்லிய செவ்விதாகிய தமிழினது இலக்கணத்தை அறியேனும் , கவிபுனைய மாட்டேனும் , எண்ணாயும் திருத்தம்பெற்ற கலைகளாயும் நிற்கும் தன்னையும் தன் கூறுபாடுகளையும் அறிதற்குரிய விதியிலேனுமாகிய எனக்கு அவற்றைக் காட்டினவனும் , அடைந்தேனைத் தாய் தந்தையரைப் போல அன்பாய்த் தொடர்ந்து ஆளாகக் கொண்டவனும் , அழகிய எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன் .


பாடல் எண் : 2
பளிங்கின்நிழ லுள்பதித்த சோதி யானை,
         பசுபதியை, பாசுபத வேடத் தானை,
விளிந்துஎழுந்த சலந்தரனை வீட்டி னானை,
         வேதியனை, விண்ணவனை, மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
         அருமருந்தை, ஆமாறு அறிந்துஎன் உள்ளந்
தெளிந்து, எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை : படிகமணியின் ஒளியுள்பதித்து விளங்கிய மாணிக்க ஒளியினனும் , பசுபதியும் , பாசுபத வேடத்தவனும், அறை கூவிப் போருக்கு எழுந்த சலந்தரனை அழித்தவனும், வேதியனும் , விண்ணவனும் , பொருந்தி வையத்தை அளந்த திருமாலும் , நான்முகனும் ஆனவனும் , துன்பந்துடைக்கும் ஆரமுது ஆனவனும் அவனே ஆமாறு அறிந்தமையால் என் உள்ளம் தெளிந்து எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகும் சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன் .


பாடல் எண் : 3
கருவை,என்தன் மனத்துஇருந்த கருத்தை, ஞானக்
         கடுஞ்சுடரை, படிந்துகிடந்து அமரர் ஏத்தும்
உருவை, அண்டத்து ஒருமுதலை, ஓத வேலி
         உலகில்நிறை தொழில்இறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழல்மடவாள் பாகம் வைத்த
         மயானத்து மாசிலா மணியை, வாசத்
திருவெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை :கருத்திற்குக் கருவானவனும் , மனத்தில் நிலைத்த கருத்தானவனும் ஞானப்பெருஞ்சுடர் ஆனவனும் , அமரர்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்து தோத்திரிக்கும் அழகிய வடிவினனும் , உலகத்திற்கு ஒப்பற்ற வித்தானவனும் , அலையையுடைய கடலாகிய எல்லையையுடைய உலகில் நிறைந்தவனும் , முதல் , இடை , இறுதியாகிய தொழில்களை இயற்றுபவனும் , மலரின் மணத்தை வென்ற குழலினை உடைய உமையம்மையை உடம்பில் பாகமாக வைத்தவனும் , மயானத்து ஆடும் மாசிலாமணியும் திரு எறும்பியூர் மலைமேல் வாசம் செய்யும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .


பாடல் எண் : 4
பகழிபொழிந்து அடல்அரக்கர் புரங்கள் மூன்றும்
         பாழ்படுத்த பரஞ்சுடரை, பரிந்து தன்னைப்
புகழும்அன்பர்க்கு இன்புஅமரும் அமுதை, தேனை,
         புண்ணியனை, புவனியது முழுதும் போத
உமிழும்அம் பொற்குன்றத்தை, முத்தின் தூணை,
         உமையவள்தம் பெருமானை, இமையோர் ஏத்தும்
திகழ்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தை,
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை :அம்புகளைத் தூவி ஆற்றல் மிக்க அரக்கர்களுடைய மூன்று புரங்களையும் பாழ்படுத்த பரஞ்சுடரும் , தன்னை விரும்பிப் புகழும் அன்பர்க்கு இன்பத்தை மகிழ்ந்தளிக்கும் அமுதமும் , தேனும் , புண்ணியனும் , புவனிமுழுதும் வெளிப்பட ஒளி உமிழும் அழகிய பொற் குன்றமும் , முத்தின் தூணும் உமையவளின் தலைவனும் , எறும்பியூர் மலைமேல் திகழ்வதும் இமையோர்கள் ஏத்துவதும் ஆகிய மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.


பாடல் எண் : 5
பாரிடங்கள் உடன்பாடப் பயின்று, நட்டம்
         பயில்வானை, அயில்வாய சூலம் ஏந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை,
         நின்மலனை, அம்மலர்கொண்ட அயனும் மாலும்
பார்இடந்தும் மேல்உயர்ந்தும் காணா வண்ணம்
         பரந்தானை, நிமிர்ந்துமுனி கணங்கள் ஏத்தும்
சீர்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தை,
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை :பூதங்கள் பலவும் சேர்ந்து பலமுறையும் பாடுதற்கு இயையக் கூத்தாடுபவனும் , கூரிய வாயினை உடைய சூலத்தைக் கையிற் கொண்டு எதிர்ப்படும் போரை வெல்லுதல் மிக வல்ல நிமலனும் , நின்மலனும் , அயன் அன்னமாய் மேலே உயர்ந்து சென்றும் மால் பூமியை அகழ்ந்து சென்றும் காணமுடியாதபடி ஒளியாக நீண்டு எங்கும் பரவினவனும் , அழகிய மலர்களைக் கொண்டு முனிகணங்களால் ஏத்தப்பட்டுப் புகழ்மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செஞ்சுடருமாகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .


பாடல் எண் : 6
கார்முகிலாய்ப் பொழிவானை, பொழிந்த முன்னீர்
         கரப்பானை, கடியநடை விடைஒன்று ஏறி
ஊர்பலவும் திரிவானை, ஊர் அதுஆக
         ஒற்றியூர் உடையனாய், முற்றும் ஆண்டு,
பேர்எழுத்துஒன்று உடையானை, பிரம னோடு
         மாலவனும், இந்திரன்,மந் திரத்தால் ஏத்தும்
சீர்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தை,
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை :கரிய மேகமாய் நீரைப் பொழிபவனும் , முன்பு முகிலாய்ப் பொழிந்த நீரைப் பின்பு கதிரவனாய் நின்று சுவற்றுபவனும் , விரைந்த நடையுடைய விடை ஒன்றை ஊர்ந்து ஊர்பலவும் திரிபவனும் , தனக்கு உரிய ஊரை ஒற்றியாகவே வைத்துக்கொண்டு உலகம் முழுதும் ஆள்பவனும் , ஓங்காரமாகிய ஒரெழுத்தையே பெயராக உடையவனும் , நான்முகன் , திருமால் , இந்திரன் ஆகியோரால் மந்திரம் கூறித் துதிக்கப்பட்டுப் புகழ் மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செழுஞ்சுசுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப்பெற்றேன் .


பாடல் எண் : 7
நீள்நிலவும், அந்தீயும், நீரும், மற்றை
         நெறியிலங்கு மிகுகாலும், ஆகா சம்மும்,
வாள்நிலவு தாரகையும், மண்ணும், விண்ணும்,
         மன்உயிரும், என்உயிரும் தானாய், செம்பொன்
ஆணிஎன்றும், மஞ்சனமா மலையே என்றும்,
         அம்பவளத் திரள்என்றும் அறிந்தோர் ஏத்தும்
சேண்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தை,
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை :ஒளிமிக்க சந்திரனும் , அழகிய நெருப்பும் , நீரும் , வன்மை , மென்மை ஆகிய இரு நெறிபற்றி விளங்கும் வன்காற்றும் மென்காற்றும் , ஆகாசமும் , ஒளி நிலவும் விண்மீனும் , மண்ணிடத்தும் விண்ணிடத்தும் , மன்னுமுயிர்களும் , என்னுயிரும் தானாய் விளங்குபவனும் , செம்பொன் உரையாணி என்றும் அஞ்சனமாலை என்றும் , அழகிய பவளத் திரட்சி என்றும் அறிந்தோரால் ஏத்தப்பட்டு உயர்ந்த எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப்பெற்றேன் .


பாடல் எண் : 8
அறம்தெரியா ஊத்தைவாய், அறிவுஇல் சிந்தை,
         ஆரம்பக் குண்டரோடு அயர்த்து, நாளும்
மறந்தும்,அரன் திருவடிகள் நினைய மாட்டா
         மதிஇலியேன், வாழ்வுஎலாம் வாளா மண்மேல்
பிறந்தநாள் நாள்அல்ல வாளா, ஈசன்
         பேர்பிதற்றிச் சீர்அடிமைத் திறத்துள் அன்பு
செறிந்து,எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தை,
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை :அறத்தைத் தெரியாதவரும் , ஊத்தை வாயினரும் , அறிவில்லாத சிந்தையினரும் ஆரம்ப வாதத்தை உடையவரும் ஆகிய சமணக் குண்டரோடும் கூடி , அரன் திருவடிகளை மறந்து, பழக்கத்தால் என்னை அறியாது அவற்றை நினைத்தலையும் ஒருநாளும் செய்யாது அறிவற்றேன். வாழ்வெல்லாம் பயனில்லாத வாழ்வாய் ஒழியவும், மண்மேற் பிறந்த நாளெல்லாம் நாளல்லவாய் வாளா ஒழியவும் இறுதியிற் சிலகாலம் ஈசன் பேர் பிதற்றிச் சிறப்புமிக்க அடிமைக் கூற்றில் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் , செழுஞ் சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப் பெற்றேன் .


பாடல் எண் : 9
அறிவுஇலங்கு மனத்தானை, அறிவார்க்கு அன்றி
         அறியாதார் தம்திறத்துஒன்று அறியா தானை,
பொறிஇலங்கு வாள்அரவம் புனைந்து பூண்ட
         புண்ணியனை, பொருதிரைவாய் நஞ்சம் உண்ட
குறிஇலங்கு மிடற்றானை, மடல்தேன் கொன்றைச்
         சடையானை, மடைதோறும் கமல மென்பூச்
செறி, எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தை,
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை :அறிவால் விளங்குகின்ற மனத்தானும் , அறிவார்க்கு அல்லாமல் அறிவில்லாதாரது ஆற்றலால் சிறிதும் அறியப் படாதவனும் , புள்ளிகள் விளங்கும் கொடிய பாம்பினைக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும் புண்ணியனும் , அலைகள் மோதும் கடலில் தோன்றிய நஞ்சுண்ட அடையாளம் திகழும் மிடற்றவனும் , இதழ்களும் தேனும் உடைய கொன்றைப் பூக்களைக் கொண்டு திகழும் சடையானும் , மடைகள் தோறும் மென்மையுடைக் கமலப் பூக்கள் செறிந்து விளங்கும் எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.

  
பாடல் எண் : 10
அருந்தவத்தின் பெருவலியால் அறிவது இன்றி,
         அடல்அரக்கன் தடவரையை எடுத்தான், திண்டோள்
முரிந்துநெரிந்து அழிந்துபா தாளம் உற்று,
         முன்கைநரம் பினைஎடுத்துக் கீதம் பாட
இருந்தவனை, ஏழ்உலகும் ஆக்கி னானை,
         எம்மானை, கைம்மாவின் உரிவை போர்த்த
திருந்துஎறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தை,
         செழுஞ்சுடரைச் சென்றுஅடையப் பெற்றேன் நானே.

         பொழிப்புரை :ஆற்றல் மிக்க அரக்கன் அரியதவத்தால் பெற்ற பெருவலியையே நினைத்துச் செருக்குக் கொண்டமையால் அறிவை இழந்து பெரிய கயிலை மலையை எடுக்க அவன் திண்ணிய தோள்கள் ஒடிந்து நசுங்கி ஆற்றல் அழிந்து பாதாளம் போன்ற பள்ளத்தில் கிடந்தானாக, பின் முன்கை நரம்பினை எடுத்து வீணை நரம்பாகக் கொண்டு இசைத்துக் கீதம் பாட அதனைக் கேட்டு மகிழ்ந்திருந்தவனும் , ஏழுலகங்களையும் படைத்தவனும், எம் தலைவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் , அழகிய எறும்பியூர் மலை மேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடைந்தேன் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

உலகநீதி - 4

"குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்;     கொலை,களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்; கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்;     கற்புடைய மங்க...