அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வரிசேர்ந்திடு
(திருவேங்கடம்)
திருவேங்கட முருகா!
திருவடி அருள்வாய்
தனதாந்தன
தானன தானன
தனதாந்தன தானன தானன
தனதாந்தன தானன தானன ...... தனதான
வரிசேர்ந்திடு
சேல்கய லோவெனு
முழைவார்ந்திடு வேலையு நீலமும்
வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ......
வலையாலே
வளர்கோங்கிள
மாமுகை யாகிய
தனவாஞ்சையி லேமுக மாயையில்
வளமாந்தளிர் போல்நிற மாகிய ......
வடிவாலே
இருள்போன்றிடு
வார்குழல் நீழலில்
மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாங்கனி வாயமு தூறல்கள் ......
பருகாமே
எனதாந்தன
தானவை போயற
மலமாங்கடு மோகவி காரமு
மிவைநீங்கிட வேயிரு தாளினை ......
யருள்வாயே
கரிவாம்பரி
தேர்திரள் சேனையு
முடனாந்துரி யோதன னாதிகள்
களமாண்டிட வேயொரு பாரத ......
மதிலேகிக்
கனபாண்டவர்
தேர்தனி லேயெழு
பரிதூண்டிய சாரதி யாகிய
கதிரோங்கிய நேமிய னாமரி ......
ரகுராமன்
திரைநீண்டிரை
வாரியும் வாலியும்
நெடிதோங்கும ராமர மேழொடு
தெசமாஞ்சிர ராவண னார்முடி ...... பொடியாகச்
சிலைவாங்கிய
நாரண னார்மரு
மகனாங்குக னேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
வரிசேர்ந்திடு
சேல், கயலோ எனும்,
உழை வார்ந்திடு வேலையும், நீலமும்,
வடு வாங்கிடு வாள்விழி மாதர்கள் ......
வலையாலே,
வளர் கோங்கு இள மாமுகை ஆகிய
தன வாஞ்சையிலே, முக மாயையில்,
வள மாந்தளிர் போல் நிறம் ஆகிய ......
வடிவாலே,
இருள் போன்றிடு வார்குழல் நீழலில்,
மயல் சேர்ந்திடு பாயலின் மீது உற,
இனிது ஆம் கனிவாய் அமுது ஊறல்கள்
......பருகாமே,
எனது
ஆம், தனது ஆனவை போய் அற,
மலமாம் கடு மோக விகாரமும்
இவை நீங்கிடவே இரு தாளினை ...... அருள்வாயே.
கரி
வாம் பரி தேர் திரள் சேனையும்
உடன் ஆமு துரியோதனன் ஆதிகள்
களமாண்டிடவே, ஒரு பாரதம் ...... அதில் ஏகிக்
கன
பாண்டவர் தேர் தனிலே, எழு
பரி தூண்டிய சாரதி ஆகிய
கதிர் ஓங்கிய நேமியனாம் அரி, ...... ரகுராமன்,
திரைநீண்டு
இரை வாரியும், வாலியும்,
நெடிது ஒங்கு மராமரம் ஏழொடு
தெசமாம் சிர ராவணனார் முடி ...... பொடியாக,
சிலைவாங்கிய
நாரணனார் மரு-
மகனாம் குகனே! பொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய ......
பெருமாளே.
பதவுரை
கரி --- யானைகளும்,
வாம் பரி --- தாவுகின்ற குதிரைகளும்,
தேர் --- தேர்களும்,
திரள் சேனையும் உடனாம் --- திரண்ட சேனகளும்
கொண்டவனாகிய
துரியோதனன் ஆதிகள் --- துரியோதனன்
முதலியவர்கள்,
களம் மாண்டிட --- போர்க்களத்தில் இறந்து
போமாறு,
ஒரு பாரதம் அதில் --- ஒரு பாரதப் போரில்
ஈடுபட்டு,
கன பாண்டவர் --- பெருமை மிக்க அர்ச்சுனனுடைய,
தேர் தனிலே --- தேரில் பூட்டிய,
எழு பரி தூண்டிய சாரதி ஆகிய --- ஏழு
குதிரைகளைத் தூண்டிச் செலுத்திய பாகனும்,
கதிர் ஓங்கிய நேமியனாம் அரி --- ஒளி மிகுந்த
சக்ராயுதத்தையுடைய அரியும்,
ரகுராமன் --- ரகுராமரும்,
திரை நீண்டு இரை வாரியும் --- அலைகள் நீண்டு
ஒலிக்கும் சமுத்திரமும்,
வாலியும் --- வாலியும்,
நெடிது ஓங்கு மராமரம் ஏழொடு --- நீண்டு
ஓங்கிய ஏழு மராமரங்களும்,
தெசமாம் சிர ராவணனார் முடி பொடி ஆக ---
பத்துத் தலைகளையுடைய இராவணனுடைய முடிகளும் தூளாகுமாறு,
சிலை வாங்கிய --- வில்லை வளைத்த,
நாரணனார் --- நாராயண மூர்த்தியுமாகிய
திருமாலின்,
மருமகனாம் குகனே --- திருமருகராகிய குகக் கடவுளே!
பொழில் சூழ்தரு --- சோலைகள் சூழ்ந்துள்ள,
திருவேங்கட மாமலை மேவிய --- திருவேங்கட மாமலை
மீது எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
வரிசேர்ந்திடு சேல் கயலோ எனும் --- வரிகள்
படர்ந்துள்ள சேல் மீனோ? கயல் மீனோ என்று
சொல்லத்தக்கதும்,
உழை --- மான் போன்றதும்,
வளர்ந்திடு வேலையும் --- நீண்ட கடல்
போன்றதும்,
நீலமும் --- நீலோற்பலம் போன்றதும்,
வடு --- மாவடு போன்றதும்,
வாங்கிடு வாள் --- செலுத்துகின்ற வாளாயுதம்
போன்றதுமான,
விழி மாதர்கள் --- கண்களையுடைய பொது
மாதர்களின்,
வலையாலே --- வலை வீசுகின்ற சூழ்ச்சியாலும்,
வளர்கோங்கு இள மாமுகை ஆகிய --- வளர்கின்ற
கோங்கின் இளமொட்டு போன்ற,
தன வாஞ்சையில் --- தனங்களின் மீது உள்ள
ஆசையாலும்,
முக மாயையில் --- முகத்தின் மீதுள்ள
மாயையாலும்,
வளமாம் தளிர்போல் நிறம் ஆகிய வடிவாலே ---
வளப்பமுள்ள மாந்தளிர் போன்ற நிறம் படைத்த அவர்களது வடிவத்தாலும்,
இருள் போன்றிடு --- இருள் போன்ற,
வார்குழல் நீழலில் --- நீண்ட கூந்தலின்
நிழலாலும்,
மயல் சேர்ந்து --- மயக்கங் கொண்டு,
இடு பாயலின் மீது உற --- விரித்த
படுக்கையின்மீது சேர்ந்து,
இனிது ஆம் கனி வாய் அமுது ஊறல்கள் ---
இனிமையான கொவ்வைக் கனிபோன்ற வாயிதழ் அமுத ஊறலை,
பருகாமே --- உண்ணாமல்,
எனது ஆம் தனது ஆனவை போய் அற --- எனது எனது
என்னும் ஆசைகளானவை என்னைவிட்டு அற்றுப்போக,
மலம் ஆம் கடு மோக விகாரமும் --- அசுத்தமாகிய
கடிய மோக விகாரங்களாகிய,
இவை நீங்கிடவே --- இக் குற்றங்கள் நீங்குமாறு,
இருதாளினை அருள்வாயே --- இரண்டு திருவடிகளைத்
தந்தருளுவீராக.
பொழிப்புரை
யானை, தாவுகின்ற குதிரை, திரண்ட சேனை ஆகிய நால்வகைப் படையுடன்
கூடிய துரியோதனனாதியர் போர்க் களத்தில் மாண்டொழியுமாறு, ஒப்பற்ற பாரதப் போரில் ஈடுபட்டுப்
பெருமை மிக்க அர்ச்சுனனுடைய தேரில் ஏழு குதிரைகளைத் தூண்டிச் செலுத்திய
பார்த்தசாரதியும், ஒளி மிகுந்த
சக்ராயுதத்தை உடையவரும், பாவத்தைப்
போக்குபவரும், ரகு குலத்தில்
வந்தவரும், அலைகள் நீண்டு
ஒலிக்கும் கடலும், வாலியும், நீண்டு வளர்ந்த மராமரங்கள் ஏழும், பத்துத் தலைகளை உடைய இராவணனது முடிகளும்
பொடியாகுமாறு வில்லை வளைத்த நாராயணரும் ஆகிய திருமாலின் திருமருகராம் குக
மூர்த்தியே!
சோலைகள் சூழ்ந்த திருவேங்கட மாமலைமீது
எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
வரிகள் படர்ந்த சேல் மீனோ? கயல் மீனோ? என்று சொல்லத்தக்கதும், மான் போன்றதும், செலுத்தத்தக்க வாள் போன்றதுமாகிய
கண்களையுடைய மாதர்களின் வலை வீச்சினாலும், வளர்கின்ற கோங்கின் இளம்மொட்டு போன்ற
தனங்களின் மீதுள்ள ஆசையினாலும்,
முகத்தின்
மாயையாலும், வளமான மந்தளிர் போன்ற
மேனியாலும், கரிய நீண்ட கூந்தலின்
நிழலாலும், மயக்கம் கொண்டு
விரித்த படுக்கையின் மீது சேர்ந்து,
இனிய
கனிபோன்ற வாயிதழ் பருகாமல், எனது எனது என்னும்
ஆசைகள் என்னை விட்டு விலகவும், தூய்மையில்லாத கடிய
மோக விகாரமானது நீங்குமாறும் தேவரீரது இரண்டு திருவடிகளை அருள்வீராக.
விரிவுரை
முன்னே
உள்ளே ஒன்பது வரிகளிலும் பெண் மயலின் தன்மையைச் சுவாமிகள் கூறினார்கள்.
எனதுஆம்
தனது ஆனவை போய் அற:-
தனது-சிநேகம், எனது எனது என்று பொருள்களில் பற்று
வைக்கின்ற பற்று அற்று ஒழிதல் வேண்டும் . பற்று அற்றாரே வீடுபேறு அடைவர்.
யான்
எனதென்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த
வுலகு புகும். ---திருக்குறள்.
மலம்-அழுக்கு.
மனதிலே மலினத்தையுண்டாகுவன ஆசாபாசங்கள்.
கரிவாம்
பரி:-
கரி
- யானை. வாம்-வாவுதல்-தாவுதல்.
தாவியோடுகின்ற குதிரைகள்.
பரி
தூண்டிய சாரதி:-
கண்ணபிரான்
அர்ச்சுனனுடைய தோழமைக்காகத் தேர்ப்பாகனாகி, அவனுடைய தேரைச் செலுத்தி, அவனுக்கு வெற்றியை உண்டாக்கினார்.
கருத்துரை
திருமால்
மருகரே! திருவேங்கடமலையில் வாழும் குகமூர்த்தியே! உலக மயல் நீங்கத் திருவடியை
யருள்வீர்.
No comments:
Post a Comment