அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நெச்சுப் பிச்சி
(திருவேங்கடம்)
திருவேங்கட முருகா!
எல்லாவற்றையும்
தரும் உமது திருவடியையே வழிபட்டு உய்ய அருள்
தத்தத்
தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் தனதான
தனத்த
தனத்த தனத்த தனத்தன
தனதன தனதன தனதன தனதன
தனதன
தனதன ...... தனதான
நெச்சுப்
பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக் கச்சுற் றறன்மேவி
நெறித்து
வெறித்து இருட்டை வெருட்டிய
நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
நிறையுறை மதுகர ...... நெடிதாடி
நிச்சிக்
கச்சப் பட்டுச் சிக்கற்
றொப்புக் கொப்புக் குயர்வாகி
நெளித்த
சுளித்த விழைக்கு ளழைத்துமை
நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு
நிகழ்புழு கொழுகிய ...... குழன்மேலும்
வச்ரப்
பச்சைப் பொட்டிட் டப்பொட்
டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல
வளைத்த
தழைத்த பிறைக்கு முறைக்குமன்
மதசிலை யதுவென மகபதி தனுவென
மதிதில தமும்வதி ...... நுதன்மேலும்
மச்சச்
செச்சைச் சித்ரச் சத்ரப்
பொற்பக் கத்திச் சையனாகி
மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத
மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்
வழிபட லொழிவனை ...... யருள்வாயே
நச்சுத்
துச்சொப் பிச்சுக் குட்டத்
துட்டக் கட்டத் தசிகாண
நடத்தி
விடத்தை யுடைத்த படத்தினில்
நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்
நகைமுக திருவுறை ...... மணிமார்பன்
நத்தத்
தைச்சக் ரத்தைப் பத்மத்
தைக்கைப் பற்றிப் பொருமாய
னரிக்கு
மரிக்கு மெரிக்கும் விருப்புற
நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த
நரகரி யொருதிரு ...... மருகோனே
கச்சுத்
தச்சுப் பொற்கட் டிட்டுப்
பட்டுக் குட்பட் டமுதாலுங்
கருப்பி
ரசத்து முருச்செய் துவைச்சிடு
கனதன பரிமள முழுகுப னிருபுய
கனகதி
வியமணி ...... யணிமார்பா
கைச்சத்
திக்குக் கெற்சித் தொக்கப்
பட்சிக் கக்கொட் டசுராதி
கறுத்த
நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய
சிறியவ கடவைகள் புடைபடு
கடவட மலையுறை ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
நெச்சுப்
பிச்சிப் புட்பத் தட்பக்
கச்சிக் கச்சு உற்று, அறல் மேவி,
நெறித்து, வெறித்து, இருட்டை வெருட்டிய,
நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
நிறை உறை மது கரம் ...... நெடிது ஆடி,
நிச்சிக்கு
அச்சப் பட்டு, சிக்கு அற்று,
ஒப்புக்கு ஒப்புக்கு உயர்வாகி,
நெளித்த, சுளித்த, விழைக்குள் அழைத்து, மை
நிகர் என அகருவும் உகுபுகை தொகுமிகு
நிகழ்புழுகு ஒழுகிய ...... குழல்மேலும்,
வச்ரப்
பச்சைப் பொட்டு இட்டு, அப்பொட்
டுக்குள் செக்கர்ப் ப்ரபை போல
வளைத்த, தழைத்த, பிறைக்கு முறைக்கு, மன்-
மதசிலை அது என, மகபதி தனு என,
மதி திலதமும் வதி ...... நுதல்மேலும்
மச்சச்
செச்சைச் சித்ரச் சத்ரப்
பொன் பக்கத்து இச்சையன்ஆகி,
மனத்தின்
அனைத்தும் அணைத்த துணைப்பதம்
மலர் அலது இலை நிலை எனமொழி தழியமெய்
வழிபடல் ஒழிவனை ...... அருள்வாயே.
நச்சுத்
துச் சொப்பிச்சுக் குட்டத்து
உள் தக்கு, அட்டத்து அசி காண
நடத்தி, விடத்தை உடைத்த படத்தினில்
நடநவில், கடல்இடை அடுபடை தொடுமுகில்,
நகைமுக திருஉறை ...... மணிமார்பன்,
நத்தத்தைச்
சக்ரத்தைப் பத்மத்தை
கைப் பற்றிப் பொருமாயன்,
நரிக்கும்
அரிக்கும் எரிக்கும் விருப்புற
நசிதரு நிசிசரர் உட குடல் இடல் செய்த
நர அரி, ஒரு திரு ......
மருகோனே!
கச்சுத்
தச்சுப் பொன் கட்டு இட்டு,
பட்டுக்கு உட்பட்டு, அமுது ஆலும்
கருப்பு
இரசத்தும் உருச்செய்து வைச்சிடு,
கனதன பரிமள முழுகு பனிருபுய!
கனக திவிய மணி ...... அணிமார்பா!
கைச்
சத்திக்குக் கெற்சித்து ஒக்கப்
பட்சிக்க, கொட்டு அசுர ஆதி
கறுத்த
நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ! கடவைகள் புடைபடு
கட வடமலை உறை ...... பெருமாளே.
பதவுரை
நச்சு து --- விடத்தை உண்ட வீமசேனன்,
சொப்பிச்சு --- இறவாமல் சோபித்து விளங்கவும்,
குட்டத்து உள் தாக்கு --- நீர் நிலையினுள் தங்கும்படி,
அட்டத்து --- குறுக்கே வைத்திருந்த,
அசி காண --- வாள் முனைகள் அப் பீமன் காணும்படியும்,
நடத்தி --- அவனுக்கு அருள் புரிந்தும்,
விடத்தை உடைத்த --- நஞ்சடைய காளிங்கன் என்னும் பாம்பின்,
படத்தினில் --- பணாமகுடத்தின் மீது நின்று,
நட நவில் --- நடனம் புரிந்தும்,
கடல் இடை அடுபடை தொடு --- சமுத்திரத்தை வற்றச் செய்யும்
பாணத்தைத் தொடுத்த,
முகில் --- நீலமேக வண்ணரும்,
நகை முக திரு உறை --- சிரித்த முகத்தையுடைய இலக்குமிதேவி
உறைகின்ற,
மணிமார்பன் --- அழகிய மார்பினரும்,
நத்தத்தை --- சங்கையும்,
சக்ரத்தை --- சக்ராயுதத்தையும்,
பத்ம கை பற்றி --- தாமரை போன்ற திருக்தரத்தில் ஏந்தி,
பொரு மாயன் --- போர் புரிகின்ற மாயத்தில் வல்லவரும்,
நரிக்கும் --- நரிக்கும்,
அரிக்கும் --- வாளுக்கும்,
எரிக்கும் --- நெருப்புக்கும்,
விருப்பு உற --- விருப்பமுண்டாகுமாறு,
நசிதரும் நிசிதரும் உடகுடல் இடல் செய்த --- அழிவைச் செய்யும் அசுரர்களது குடலை
உணவாகத் தந்தருளிய,
நரகரி --- நரகாசுரனைக் கொன்றவரும் ஆகிய
திருமாலின்,
ஒரு திரு மருகோனே --- ஒப்பற்ற அழகிய மருகரே!
கச்சு தச்சு பொன் கட்டிட்டு --- அழகிய இரவிக்கையைத் தைத்து
முடியிட்டுக் கட்டி,
பட்டுக்கு உட்பட்டு --- பட்டுத்தாவணிக்கு உட்பட்டதாய்,
அமுது ஆலும் --- அமுதம் நிறைந்து
அசைவதாய்,
கருப்பு இரசத்தும் உருச் செய்து வைச்சிடும் ---
கரும்பின் சாற்றினால் செய்து அமைத்ததாய் விளங்கும்,
கன தன --- (வள்ளி நாயகியின்) பருத்த
கொங்கைகளின்,
பரிமள முழுகு பன் இரு புய --- நறுமணத்தில்
முழுகும் பன்னிரண்டு புயங்களையுடையவரே!
கனக திவிய மணி அணி --- பொன்னில்
அழகாகப்பதித்த இரத்தின மணிகளைத் தரித்த,
மார்பா --- மார்பினரே!
கை சத்திக்கு --- கையில் விளங்கும்
வேலாயுதமானது,
கெற்சித்து ---ஆரவாரித்து,
ஒக்க பட்சிக்க --- முழுவதும் உண்ணும்படி,
கொட்டு அசுர ஆதி --- வாத்தியத்தை முழக்கிக்
கொண்டு வந்த அசுரர் தலைவனாம் சூரபன்மனை,
கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு --- கரிய
நிறமுடைய அரக்கர் கூட்டத்துடன்,
கறுவிய சிறியவ --- கோபித்த இளம் பூரணரே!
கடவைகள் புடைபடு கட --- வழிகள்
பக்கங்களில் உள்ள காடுகள் சூழும்,
வடமலை உறை --- வடவேங்கடமலையில் வாழ்கின்ற,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
நெச்சு பிச்சி புட்ப தட்ப --- நெய்
பொருந்தியுள்ள பிச்சிப்பூவின் குளிர்ச்சியைக் கொண்டதாயும்,
கச்சி கச்சுற்று --- ஒழுங்காய்
கட்டப்பட்டதாயும்,
அறல் மேவி --- கரு மணலை நிகர்த்தும்,
நெறித்து --- சுரண்டும்,
வெறித்து --- மணமுடையதும்,
இருட்டை வெட்டிய --- தனக்குள்ள கரு நிறத்தால்
அச்சுறுத்தியதும்,
நிரை தரு மருமலர் செருகிடு --- வரிசையாய்
வாசனையுள்ள மலர்கள் சொருகியியுள்ள,
பரிமள நிறை உறை --- நல்ல வாசனையில் நிரம்ப
உறைகின்ற,
மதுகரம் நெடிது ஆடி --- வண்டுகள் நெடுநேரம்
மொய்த்து மகிழவும்,
நிச்சிக்கு அச்சப்பட்டு --- இரவுக்கு
பயத்தையளித்து,
சிக்கு அற்று --- சிக்கல் இல்லாததும்,
ஒப்புக்கு --- உயர்வு அடைந்து,
நெறித்த சுளி்த்த --- வளைவும் சுருளும்
உடையதாய்,
விழைக்குள் அழைத்து --- விருப்பத்தைத் தந்து
அழைப்பதாய்,
மை நிகர் என --- மையை ஒத்ததாய்,
அகருவும் உகுபுகை தொகுமிகு --- அகிலின்
புகையின் தொகுதி மிகுந்து,
நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும் ---
விளங்குகின்ற புனுகு சட்டம் கமழ்கின்றதும் ஆகிய கூந்தலின் மீதும்,
வச்ரப் பச்சை பொட்டு இட்டு ---
வஜ்ரம்போல் ஒளிதரும் பச்சைப் பொட்டினை நெற்றியில் இட்டு,
அப்பொட்டுக்கு உள் --- அந்தப் பொட்டின்
இடையில்,
செக்கர் ப்ரபை போல் --- சிவந்த பிரபை போல,
வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்கு --- வளைவும்
செழிப்பும் உள்ள நிலாப் பிறைக்கு ஒப்பாக உறைவதாய்,
மன்மத சிலை அது என --- மன்மதனுடைய வில்லென்று
சொல்லத்தக்கதாய்,
மகபதி தனு என --- இந்திர வி்ல் என்னும்
படியும்,
மதி திலதமும் வதி --- வளைந்த
பிறைச்சந்திரனைப் போன்ற திலகம் உள்ள,
நுதல் மேலும் --- நெற்றியின் மீதும்,
மச்ச --- உடம்பிலுள்ள மச்சங்களின் மீதும்,
செச்சை சித்ர --- சிவந்த விசித்திரமான,
சத்ர பொன் பக்கத்தில் --- அதிசயிக்கத்தக்க
அழகிய உடற்பக்கங்களிலும்,
இச்சையனாகி --- விருப்பங் கொண்டவனாய்,
மனத்தின் அனைத்தும் அணைத்த --- மனதில்
நினைத்தவை யாவையும் தரவல்ல,
துணை பதமலர் அலது --- இரண்டு மலரடியன்றி,
இலைநிலை என மொழிதழிய --- நிலை வேறு இல்லை
யென்னும் மொழிகளைத் தழுவி,
மெய்வழிபடல் ஒழிவனை --- உண்மையான வழிபாடு
செய்வதை ஒழித்த,
அடியேனுக்கு அருள்வாயே --- அடியேனுக்கு அருள்
புரிவீராக,
பொழிப்புரை
நஞ்சினை உண்ட பீமன் அவ்விடத்தால்
அழியாது நலம் பெறவும், நதியில்
நாட்டியிருந்த வசிகளை அவன் கண்டு அதனின்றும் தப்பித்து அவன் பிழைக்க அருளியும், விஷம் கக்குமாறு காளிங்கன் என்ற
பாம்பின் படத்தின் மீது நடித்தும்,
சமுத்திரத்தின்
மீது கணையைச் செலுத்தியும் அருளிய நீலமேக வண்ணரும் புன்னகையுடைய திருமுகம் தாமரை
போன்ற கரங்களில் ஏந்திப் போர்புரியும் மாயா வல்லபரும், நரிகட்கும் வாளுக்கும் நெருப்புக்கும்
அரக்கர்களின் குடலை உணவாக இட்டவரும் நரகாசுரனைக் கொன்றவருமாகிய ஒப்பற்ற
திருமாலின்
திருமருகரே!
கச்சணிந்து அமுதம் நிறைந்த கரும்பின்
இரசத்தினது உருவாகிப் பருத்த வள்ளிநாயகியின் தனங்களின் நறுமணத்தில் முழுகும்
பன்னிரு தோள்களையுடையவரே!
பொன்னில் பதித்த சிறந்த மணிகளை யணிந்த
திருமார்பினரே!
கைவேல் ஆரவாரஞ் செய்தும் முற்றும்
உண்ணுமாறு வாத்திய ஒலிவுடன் வந்த அசுரர் தலைவனாம் சூரனை கருநிறமுடைய அரக்கர்
குலத்துடன் கோபித்து அழித்த இளம் பூரணரே!
வழியுடன் கூடிய காடுகள் சூழ்ந்த
திருவேங்கடமலையில் வாழும் பெருமிதம் உடையவரே!
தேன் பொருந்திய பிச்சி மலரின்
குளிர்ச்சியைக் கொண்டதாய், கச்சிதமாக
முடிந்ததாய், கருமணலை ஒத்ததாய், சுருண்டு மணமுள்ளதும் இருளை
அச்சுறுத்தியும் வாசனை மலர்களை வரிசையாகச் சொருகியுள்ளதாய் நறுமணத்தில் வாழ்கின்ற
வண்டுகள் மொய்த்து மகிழவும், இரவை பயப்படுத்திச்
சிக்கலில்லாததாய், அலங்காரத்தில்
மென்மேலும் உயர்ச்சி அடைந்ததாய்,
நெளிவும்
சுருளும் உற்றதாய், விருப்பத்தைத் தந்து
அழைப்பதாய், அஞ்சன மைக்கு ஒப்பு
கமழ்கின்றதாய் விளங்கும் கூந்தலின் மீதும், பச்சைப் பொட்டு இட்டு அதன் நடுவில்
சிவந்த பிரபை போல வளைத்த செழிப்புள்ள பிறைக்கு ஒப்பாக உறைவதாய் மன்மதன் வில்லையும்
வானவில்லையும் ஒத்து சந்திரனை நிகர்ந்த திலகம் அமைந்துள்ள நெற்றியின் மீதும், உடம்பிலுள்ள மச்சங்களின் மீதும் அழகிய
அதிசயமான சிவந்த உடம்பின் பக்கத்திலும் ஆசையுற்று, மனதில் நினைத்ததை யாவும் தருகின்ற உமது
திருவடி மலரன்றி வேறு நிலையான பொருள் இல்லையென்று சொல்லுகின்ற மொழிகளைத் தழுவிய
உண்மையான வழிபாடு செய்வதை விடுத்த அடியேனுக்குத் திருவருள் புரிவீராக!
விரிவுரை
இத்திருப்புகழில்
முதல் இரண்டு அடிகளில் விலை மகளிரின் கூந்தலழகை விரிவாக அடிகளார் கூறினார்.
மூன்றாம்
அடியில் அம்மகளிரின் நெற்றியின் பொட்டின் அழகைக் கூறினார்.
மனத்தின்
அனைத்து அணைத்த துணைப்பதம்:-
இறைவனுடைய
திருவடி, அடியார்கள் மனதில்
நினைத்தவை அனைத்தும் தரவல்லது.
“மறவாதவர் நினைப்பவை முடிக்கும் அவன்” --- பூதவேதாள
வகுப்பு
“அருள் நெறியில்
உதவுவதும், நினையும் அவை
முடிய வருவதும், அடியர் பகைகோடி சாடுவதும்” --- சீர்பாத வகுப்பு
மலர்
அலது இலைநிலை எனமொழி தழியமெய் வழிபடல்:-
எம்பெருமானுடைய
சரணமலரன்றி வேறு நிலைத்த பொருள் இல்லை. அப்பரமனது பாதமே நிலைபேறானது.
தண்தேன்
துளிக்கும் தருநிழற்கீழ் வாழ்க்கை வெஃகி,
கொண்டேன்
பெருந்துயரம், வான்பதமும் கோதுஎன்றே
கண்டேன்,
அவர்தம் பதத்தொலைவும் கண்டனனால்,
தொண்டேன்
சிவனே நின் தொல்பதமே வேண்டுவனே.
என்று
இந்திரகுமாரன் சயந்தன் கூறுவதைக் காண்க.
நச்சித்துச்
சொப்பித்து:-
துரியோதனன்
வீமசேனனுடைய ஆற்றலைக் கண்டு அழுக்காறு கொண்டான். உணவில் நஞ்சு கலந்து அவனை
உண்பித்தான். அவன் கண்ணபிரானுடைய கருணையால் பிழைத்தான்
குட்டத்
துட்டக் கட்டத் தசிகாண நடத்தி:-
ஆற்றில்
இரும்பு வசிகளை நட்டு துரியோதனன்,
பீமனை
அதில் குதிக்குமாறு செய்தான். அவன் வஞ்சனையறியாத பீமன் அதில் குதிக்கும் பொருட்டு
ஒடி வந்தான். கண்ணன் அந்த இடத்தில் வண்டு வடிவாக இருந்தார். வீமசேனன் சீவகருணை உள்ளவன்.
ஆதலினால் வண்டுகள் உள்ள இடத்தில் குதித்தால் வண்டுகள் மாயும் என்று கருதி அதனைத்
தாண்டிக் குதித்தான். நீந்தி வரும்போது நீரில் உள்ள இரும்பு வசிகளைக் கண்டு தெளிந்தான்.
இவ்வாறு கண்ணபிரான் அவனுக்கு அருள் புரிந்தார்.
விடத்தை
உடைத்த படத்தினில் நட நவில்:-
யமுனா
நதியில் காளிங்கன் என்ற பாம்பு அவ்வப்போது நஞ்சினைக் கக்கிப் பலரையும் கொன்றது.
பகவான் கண்ணன் அங்கு சென்று மக்களின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு அம் மாநதியில்
குதித்து, பாம்பினுடன்
போர்புரிந்து வென்று அப்பாம்பின் படத்தின்மீது திருவடிவைத்து நடனம்
புரிந்தருளினார்.
காளிங்கன்
என்பது மனம். அது ஐந்து புலன்களின் வழியே நஞ்சினைக் கக்கிக் கொடுமை புரிகின்றது.
அந்த ஐம்புலன்களமாகிய ஐந்து தலைகளுடன் கூடிய மனமாகிய காளிங்களை அடக்கி அறிவு என்ற
கண்ணன் ஆனந்த நடனம் புரிகின்றான்.
கடலிடை
அடுபடை தொடுமுகில்:-
இராமாவதாரத்தில்
வருணைனை வழிவிட வேண்டியும் அவன் வந்து உதவாமையால், அக்கினிக் கணையைக் கடலின் மீது ஏவி, கடலை நடுங்குமாறு செய்தார்.
நத்தத்தை:-
நத்து-சங்கு.
திருமால் பாஞ்சஜன்யம் என்ற அரிய சங்கத்தைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளார். அதம்
மூலம் பிரணவ நாதத்தையுண்டாக்குவார்.
சக்ரத்தைப்
பத்மத்தைக் கைப்பற்றி:-
திருமால் கொடிய அரக்கர்களைக் கொன்று உத்தமரை
உய்விக்கும் பொருட்டு தாமரைக் கரத்தில் சக்ராயுதத்தைத் தாங்கியுள்ளார்.
கத்மத்தை-என்ற சொல்லில் அத்து ஐ என்ற இரண்டும் சாரியை.
நரிக்கும்
அரிக்கும் எரிக்கும் விருப்புற நிசிதரு நசிசரர் உடகுடல் இடல் செய்த:-
திருமால்
கொடியவர்களான அரக்கர்களைச் சக்ராயுதத்தால் கொன்று, அவர்களுடைய கொழுத்த குடல்களை நரிக்கும்
வாளுக்கும் நெருப்புக்கும் விருந்து வைத்தருளினார்.
நர
அரி:-
நரகன்
என்ற அரக்கனைக் கொன்றவர் நரகரி,
கைச்
சத்திக்குக் கெற்சித்து ஒக்கப் பட்சிக்க:-
முருகவேள்
சூராதியவுணர்களின் குலத்தைக் கொன்று வேலாயுதத்துக்கு விருந்து வைத்தருளினார்.
கருத்துரை
திருமாலின்
திருமருகரே! திருவேங்கடமலை நாதரே! உமது திருவடியில் வழிபடுமாறு திருவருள்
புரிவீர்.
No comments:
Post a Comment