திருவேங்கடம் - 0249. சாந்தம் இல் மோக எரி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சாந்தமில் மோகவெரி (திருவேங்கடம்)

திருவேங்கட முருகா! 
மோகத்தால் வாடி, காலன் வசப்பட்டு அழியாமல் காத்து அருள்.


தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான


சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
     மூண்டவி யாதசம ...... யவிரோத

சாங்கலை வாரிதியை நீந்தவோ ணாதுலகர்
     தாந்துணை யாவரென ...... மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
     தோய்ந்துரு காவறிவு ...... தடுமாறி

ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
     யான்தனி போய்விடுவ ...... தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்
     காந்தவி சாகசர ...... வணவேளே

காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
     யாண்டகை யேயிபமின் ...... மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
     வேங்கட மாமலையி ...... லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சாந்தம் இல் மோக எரி காந்தி, அவா அனிலம்
     மூண்டு, வியாத சமய ...... விரோத,

சாம் கலை வாரிதியை நீந்த ஒணாது, லகர்
     தாம் துணை ஆவர் என ...... மடவார்மேல்

ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு
     தோய்ந்து உருகா, அறிவு ...... தடுமாறி,

ஏங்கிட ஆர் உயிரை வாங்கிய காலன் வசம்,
     யான் தனி போய்விடுவது ...... இயல்போ தான்?

காந்தளின் ஆன கர மான் தரு கானமயில்
     காந்த! விசாக! சர ...... வண! வேளே!

காண் தகு தேவர் பதி ஆண்டவனே! சுருதி
     ஆண்தகையே! இபமின் ...... மணவாளா!

வேந்த! குமார! குக! சேந்த! மயூர! வட
     வேங்கட மாமலையில் ...... உறைவோனே!

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
     வேண்ட வெறாது உதவு ...... பெருமாளே.

பதவுரை


      காந்தளின் ஆன கர --- காந்தள் மலரைப் போன்ற திருக்கரத்தை உடையவரே!

     மான் தரு --- மானால் தரப்பட்ட

     கானமயில் --- காட்டில் வாழ்ந்த மயிலைப் போன்ற சாயலையுடைய வள்ளியம்மையாருடைய,

     காந்த --- கணவரே!

      விசாக --- விசாக நட்சத்திரத்திலே அனல் பிழம்பாக வெளிப்பட்டவரே!

      சரவண --- சரவண தடாகத்தில் தோன்றியவரே!

      வேளே --- எல்லோராலும் விரும்பத்தக்கவரே!

      காண்தகு தேவர் பதி ஆண்டவனே --- பார்ப்பதற்குத் தகுதியான (பேரழகுடைய) பொன்னுலகத்தை (அசுரரிடமிருந்து மீட்டு) ஆட்கொண்டவனே!

      சுருதி ஆண் தகையே --- வேதங்களால் துதிக்கப்பெற்ற சிறந்த வீரரே!

      இப மின் மணவாளா --- தெய்வயானை யம்மையாருடைய கொழுநரே!

      வேந்த --- அரசரே!

      குமார --- என்றும் அகலாத இளமையுடையவரே!

      குக --- ஆன்மாக்களின் இதய குகையில் உறைபவரே!

      சேந்த --- சேந்தரே!

      மயூர --- மயில்வாகனத்தை உடையவரே!

      வடவேங்கட மா மலையில் --- தமிழ் நாட்டிற்கு வட எல்லையாகவுள்ள திருவேங்கடம் என்னும் பெருமை தங்கிய திருமலையில்,

     உறைவோனே --- எழுந்தருளியவரே!

      அடியர் --- திருவடிக்குத் தொண்டு பூண்ட அடியவர்கள்,

     வேண்டிய போது --- விரும்பிய சமயங்களிலெல்லாம்,

     வேண்டிய போகம் அது --- விரும்பிய போகபாக்கியங்களை,

     வேண்ட --- அவர்கள் விரும்பிக்கேட்க,

     வெறாது உதவும் --- வெறுக்காமல் வழங்கி யருள்புரிகின்ற,

     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      சாந்தம் இல் --- பொறுமை சிறிதுமில்லாத,

     மோக எரி காந்தி --- மோகத்தினாலுண்டாகிய நெருப்பு மிகவும் வெப்பத்தைச் செய்யவும்,

     அவா அனிலம் மூண்டு --- ஆசையாகிய பெருங்காற்று மிகுந்து வீசவும்,

     அவியாத --- ஒருபோதும் ஓயாத,

     சமய விரோத -- “என் சமயம் மெய்; உன் சமயம் பொய்” என்று வாதிட்டு போராடிப் பகை கொள்ளச் செய்யும்,

     சாம் கலை --- அழிகின்ற சாத்திரமாகிய,

     வாரிதியை --- பெருங்கடலை,

     நீந்த ஒணாது --- கடக்க முடியாது,

     உலகர் தாம் துணை ஆவர் என --- உலகிலுள்ள மனைவி மக்கள் தமர் நண்பராதியோர் ஆவிக்குத்துணை செய்வர் என்று நம்பியும்,

     மடவர் --- பெண்களுடைய,

     மேல் ஏந்து --- உடலில் தாங்கிக் கொண்டிருப்பதும்,

     வார் --- இரவிக்கையுடன் கூடியதும்,

     முளரி --- தாமரை மொட்டைப் போல் இருப்பதும்,

     சாந்து அணி --- சந்தனக் கலவை தரித்துக் கொண்டிருப்பதுமாகிய,

     இளமார்பின் ஒடு தோய்ந்து --- இளைய தனங்களுடன் கலந்து,

     உருகா --- உள்ளம் உருகி,

     அறிவு தடுமாறி --- புத்தி தடுமாற்றத்தை அடைந்து, ஏங்கிடவும் --- ஏக்கத்தை அடைந்தும் உள்ள அடியேனுடைய,

     ஆர் உயிரை --- அருமையான ஆவியை,

     வாங்கிய காலன் வசம் --- பற்றிய காலனுடைய வசப்பட்டு,

     யான் தனி பொய் விடுவது --- அடியேன் துணையின்றி தனித்து நரக லோகத்திற்குப் போய்விடுவது,

     இயல்போதான் --- தகுதியாகுமோ?


பொழிப்புரை


         காந்தள் மலர் போன்ற திருக்கரங்களை யுடையவரே!

         மான் பெற்ற மயில் போன்ற வள்ளி பிராட்டியாருடைய மகிணரே!

         விசாகரே!

         சரவணப் பொய்கையில் தோன்றியவரே!

         யாவராலும் விரும்பப்படுகின்றவரே!

         பார்க்கத் தக்கதாகிய தேவ லோகத்தைச் சூராதி அவுணரிடமிருந்து மீட்டு காப்பாற்றியவரே!

         வேதங்களால் துதிக்கப்பெற்ற சிறந்த வீரரே!

         தெய்வயானை யம்மையாருடைய கணவரே!

         எப்பொருட்கும் இறைவரே!

         என்றும் இளையவரே!

         ஆன்மாக்களுடைய உள்ளக் குகையில் உறைபவரே!

         சேந்தரே!

         மயில் வாகனரே!

         வட திசையிலுள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவரே!

         அடியார்கள் வேண்டிய போதெல்லாம் வேண்டிய போகங்களை வேண்டும்போது வெறுக்காமல் வழங்கியருள் செய்கின்ற பெருமிதம் உடையவரே!

         பொறுமை என்பது சிறிதுமில்லாமல் மோகமாகிய தீ மூண்டு வெப்பத்தை உண்டு செய்யவும், ஆசையாகிய சண்ட வாயு வீசவும், ஒருபோதும் ஓயாத விரோதத்தை உண்டுபண்ணும் அழிகின்ற சமயக் கலைகளாகிய கடலைக் கடக்க வொண்ணாது, (என உணராது அதில் சுழன்றும்) உலகிலுள்ள மனைவி மக்கள் சுற்றம் நண்பராதியோரை உயிர்க்குத் துணையென எண்ணியும், கச்சணிந்து களபங்களை அணிந்து, தாமரை மொட்டை யொத்து இருக்கும் பெண்களுடைய இளமுலைகளிற் கலந்தும், (காமாக்கினியால்) உள்ளம் உருகியும், அறிவு தடுமாற்றத்தை அடைந்தும் அடியேன் ஏங்கியிருக்கும் வேளையில் எனது அருமையான ஆவியைக் காலன் வந்து பற்றிக்கொண்டு செல்ல, அடியேன் அவன் வசப்பட்டுத் தனியே நரகக் குழியை நாடிச் சென்றுவிடுவது தக்கதாமோ?
    
விரிவுரை

சாந்தம் இல் ---

சாந்தம்-பொறுமை; மனிதனுக்கு சிறந்த அணிகலன் பொறுமையேயாம். தவமென்னும் பைங்கூழ்ச் செய்வதற்கு பொறையென்னுந் தண்ணீர் இன்றியைமையாததாம். பொறுமையின்றி பிறர் குற்றத்தைக் கண்டு சினங்கொண்டால் பல நாள் பாடுபட்டுச் செய்த தவம் ஒரு கணத்தில் அழிந்துபோம். பொறையின்றி கோபத்தினால் கௌசிக முனிவன் பல்லாயிரமாண்டுகள் வருந்திச் செய்த நற்றவத்தை வறிதாக்கினான்.

இவ்வரிய கருத்தை நம் திருவள்ளுவர், “பட்டினி கிடந்து தவம் செய்வோர் மிகவும் பெரியவர்; ஆனால் அவர் பிறர் கூறும் கடுஞ்சொல்லைக் கேட்டுப் பொறுக்குஞ் சாந்த சீலருக்குப் பின்னிற்பவர்தான்”

உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும்
   இன்னார்சொல் நோற்பாரின் பின்”

உண்ணாது நோற்பாரினும் பெரியர் பொறுமை உடையவரே” என்று மிக அழகாக உபதேசிக்கின்றார்.

சாந்தமு லேக சௌக்யமு லேது” (சாந்தமில்லை அதனால் சௌக்கியமில்லை) என்கிறார் தியாகய்யர் அவர்கள். இதன் ஆழத்தையும் அருமையும் சிந்தித்தால் சாந்த சீலர்களாக வாழ்வார்கள்.

 
மோக எரி காந்தி ---

மோகம் - இது உட்பகை ஆறில் ஒன்று. இதைப் பெருந்தீயாக உருவகப் படுத்தினார்.

அவா அனிலம் ---

மோகமாகிய தீயை வளர்ப்பதற்கு ஆசையாகிய காற்றும் துணை செய்கின்றது. அதனால் மோகத் தீ மிகவும் மூண்டெரிய ஆரம்பித்து விட்டது. “ஆசை ஆகிய பெருங்காற்றூடு” என்றார் தாயுமானார்.


அவியாத விரோத சாங்கலை ---

சமய சாத்திரங்கள் ஒன்றோடொன்று பகைத்து நிற்பன. அச்சமய வெறி கொண்டோரும் ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளும் புறமும் பகைத்து அமைதியின்றி அலைந்துழல்வர்.

"கலைகொடு பவுத்தர்காம கருமிகள் துருக்கர்மாய
         கபிலர்பக ரக்கணாதர்                உலகாயர்
கலகம்இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரொடு
         கலகலென மிக நூல்கள்             அதனாலே
சிலுகி எதிர் குத்தி வாது செயஒரு வர்க்குநீதி
         தெரிவரிய சித்தியான                உபதேசம்
தெரிதர விளக்கி ஞான தரிசனம் அளித்துவீறு
         திருவடி எனக்கு நேர்வது             ஒருநாளே”         --- திருப்புகழ்

பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
    கல்விக் கலாத்து அலையலாமோ...                 --- (வெல்லிக்கு வீக்கு) திருப்புகழ்

சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கொண்டு
    அறுவறும் கைக்குத்திட்டு ஒருவர்க்குந்
    தெரிவரும் சத்யத்தை”                                         --- (புன மடந்தை) திருப்புகழ்

       சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்
      சமய பஞ்ச பாதகர் அறியாத”                              --- (நிகரில் பஞ்ச) திருப்புகழ்


உலகர் தாந்துணை யாவரென ---

என்றுந் துணையாக நின்று நல்லருள் புரியும் இறைவனைத் துணை கொள்ளாது, “நாய் வாலைப் பற்றிக்கொண்டு நதியின் வெள்ளத்தைக் கடக்க நினைந்தானைப் போல் உலகிலுள்ள மனைவி மக்கள் முதலியோரை நான் துணையென்று எண்ணவும் அவர் என்னைத் துணை என்று எண்ணவும் நின்று முடிவில் வறிதே அழிகின்றேன்” என்று குறிப்பிடுகின்றார்.
  
யான் தனி போய் விடுவது இயல்போ தான் ---

உடம்போடு கூடியிருந்தபோது அறத்தையும் அருந்தவத்தையுஞ் செய்யாதோர் காலன் வசப்பட்டுப் போகும்போது தனித்துச் செல்வர் எனக் குறிப்பிடுகின்றார். 

காந்தளின் ஆன கர ---

காந்தள்-கார்த்திகைப்பூ. இப்பூவை கரத்திற்கு உவமையாகக் கூறுவது மரபு. திருவீழிமலையில் மேகம் முழங்குகின்றது; பல மயில்கள் அம்மேகத்தைக் கண்டு மகிழ்ந்து தோகையை விரித்து ஆடுகின்றன; வண்டுகள் இன்னிசை பாடுகின்றன. கொன்றை மலர்கள் உதிர்கின்றன; காற்றினால் உதிர்ந்த மலர்கள் ஆங்கு பூத்திருக்கும் காந்தள் மலரில் வீழ்கின்றன. அது பெரிய சதிர் போல் இருக்கின்றது. மேகமென்னும் ஒருவன் மத்தளம் வாசிக்க, வண்டு என்னும் நட்டுவன் பாட, மயில்கள் என்னும் பெண்கள் சதிராட, அதற்குப் பரிசாக கொன்றை மரங்கள் தம்மிடம் பூத்துள்ள தங்கக் கட்டிகள் போன்ற மலர்களை வீச, அப்பொற் கட்டிகலை காந்தள் மலர்களாகிய கரங்கள் வாங்குகின்றன. என்ன அழகிய வர்ணனை! என்னே இயற்கையின் அமைப்பு! அதன் தாண்டவம் இப்படி என்றும் ஓயாது நிகழ்கின்றது. இதனை இயற்கையாசிரியராகிய திருஞானசம்பந்தர் கூறுமாறு காண்க.

வரைசேரு முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
 விரைசேர் பொன்இதழிதர மென்காந்தள் கை ஏற்கும் மிழலையாமே”

மான் தரு மயில் ---

மான் வயிற்றிலே ஒரு மயில் பிறந்தது என்றார்; அந்தப் பதங்கள் என்ன அழகாக அமைந்திருக்கின்றன என்பதனை அன்பர்கள் உற்றுப் பார்த்து மகிழ்க. பல முறை சொல்லி இன்புறுக. மான் என்பது இலக்குமி; மயில் என்பது வள்ளியம்மை; உவமை ஆகுபெயராக இரண்டும் நிற்கின்றன; இனி வள்ளி மலையில் தவம் புரிந்து கொண்டிருந்த திருமாலின் அவதாரமாகிய சிவ முனிவருக்கு முன்னே இலக்குமி தேவி மன் வடிவு தாங்கிவர, அம்முனிவர் கண்ணாற் புணர, மான் கருக்கொண்டு உலகீன்ற அன்னையாகிய பச்சைப் பசுங் குழவியை வள்ளிக் குழியில் ஈன்றது என்ற வரலாற்றை அது குறிப்பிடுகின்றது.

மாமுனிவன் புணர் மான் உதவும் தனி
 மானை மணம் செய்த       பெருமாளே”         --- (பார நறுங்குழல்) திருப்புகழ்

சேந்த ----

செம்மைப் பண்புடையவன்.

வேங்கட மாமலையில் உறைவோனே ---

தற்போது விஷ்ணு ஸ்தலமாக விளங்குகின்ற திருவேங்கட மலை, முருக க்ஷேத்திரமுமாகும்.

வடவேங்கடம்

திருவேங்கடம் என்னும் வானமளாவிய வலமலி தமிழ் நாட்டிற்கு வடவெல்லையாகத் திகழ்வது.

       வடவேங்கடம் தென் குமரி யாயிடைத்
        தமிழ் கூறு நல்லுலகத்து”        --- பனம்பாரனார்

இத்தகைய திருமலையில் பண்டைக் காலத்தில் திருமால் கோயிலும் திருமுருகன் கோயிலும் இருந்திருத்தல் வேண்டும். அருணகிரிநாதரே இரண்டையுங் கூறுகின்றார். “திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே” என்று முருக க்ஷேத்திரமாகவும், உலகீன்ற பச்சை உமையணன் வடவேங்கடத்திலுறைபவன் உயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே” என்று திருமால் திருத்தலமாகவும் கூறுகின்றனர். இதனை நுனித்து நோக்க அம்மலையில் திருமாலும் திருவேலிறைவனும் திருக்கோயில் கொண்டிருக்கின்றனர் என்பது விளங்குகின்றது.

இதுவேயும் அன்றி ஆழ்வாராதிகளும் அங்குள்ள திருமாலைப் பாடியருளியதாலும், கந்தபுராணம் வழிநடைப் படலத்தில்,

அண்ட மன்னுயி ரீன்றவ ளுடன் முனிவாகித்
   தொண்டகங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
   மாண்டுபாதலத் தேகியே யோர் குகை வழியே
   பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்”

என வருவதனாலும் இரு கடவுளரும் கோயில் கொண்டு இருந்தனரெனத் தோன்றுகின்றது.

திருப்பதி மலையின் மேலுள்ள சுவாமி புஷ்கரணி. வில்வ அர்ச்சனை, “பாலாஜி” என்னும் வழக்கு இவைகளும் முருக க்ஷேத்திரம் என்பதனை வலியுறுத்துகின்றன. பல மாறுதல்கள் உண்டாவது உலக வழக்கே யாதலின் முருகனாலயம் மறைந்தோ மாறியோ போய்விட்டது.

வேண்டிய போதடியர்.......வெறாது உதவு ---

முருகக் கடவுள் அன்பர்கள் விரும்பிய அனைத்தும் விரும்பிய போதெல்லாம் வெறுக்காமல் தரும் வள்ளல்.

" யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும்
    த்யாகாங்க சீலம் போற்றி”                           --- (நாகங்க) திருப்புகழ்

" வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
    வேண்டும் அளவில் உதவும்     பெருமாளே”        --- (கோங்கை முகையு) திருப்புகழ்

  அடியவர் இச்சையில் எவை எவை உற்றன
    அவை தருவித்து அருள்     பெருமாளே”           --- (கலகலெனச்சில) திருப்புகழ்

என்ற அமுத வாக்குகளை உன்னுக.

கருத்துரை


வள்ளி மணவாளா! விசாகா! சரவண! வடவேங்கடத்தில் வாழும் வள்ளலே! மோகாசையால் வாடி வறிதே அடியேன் காலன் வசப்பட்டு மடியாவண்ணம் ஆட்கொள்வீர்.




No comments:

Post a Comment

9. விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

  "திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்      இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்      பகலாமோ? உறவாய் வந்த பெருவ...