திருவேங்கடம் - 0248. சரவண பவநிதி அறுமுக





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சரவண பவநிதி (திருவேங்கடம்)

திருவேங்கட முருகா!
உலகத் துன்பங்களில் இருந்து விடுபட்டு
உன் திருவடி அடைய அருள்.

தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன தனதன தனதன
          தனதன தனதன தனதன தனதன ...... தனதான


சரவண பவநிதி யறுமுக குருபர
     சரவண பவநிதி யறுமுக குருபர
          சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித்

தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
     சனனம ரணமதை யொழிவுற சிவமுற
          தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே

கருணைய விழிபொழி யொருதனி முதலென
     வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
          கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா

கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
     கலகமி னையதுள கழியவும் நிலைபெற
          கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே

திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
     குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
          சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய .....வடிவேலா

தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
     மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
          திமிரம லமொழிய தினகர னெனவரு ......பெருவாழ்வே

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
     மருகனெ னவெவரு மதிசய முடையவ
          அமலிவி மலிபரை உமையவ ளருளிய .....முருகோனே

அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
     வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
          அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சரவணபவ நிதி அறுமுக குருபர!
     சரவணபவ நிதி அறுமுக குருபர!
          சரவணபவ நிதி அறுமுக குருபர! ...... என ஓதித்

தமிழினில் உருகிய அடியவல் இடம் உறு
     சனன மரணம் அதை ஒழிவுற, சிவம் உற,
          தருபிணி துளவரம் எமது உயிர் சுகம் உற ...... அருள்வாயே.

கருணைய விழிபொழி ஒருதனி முதல் என,
     வருகரி திருமுகர் துணைகொளும் இளையவ!
          கவிதை அமுதமொழி தருபவர் உயிர்பெற ...... அருள்நேயா!

கடல் உலகினில் வரும் உயிர்படும் அவதிகள்
     கலகம் இனையது உள கழியவும், நிலைபெற
          கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ......ஒருநாளே?

திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய
     குமர! சமரபுரி, தணிகையும், மிகும் உயர்
          சிவகிரியிலும், வடமலையிலும் உலவிய .....வடிவேலா!

தினமும் உனது துதி பரவிய அடியவர்
     மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ!
          திமிர மலம் ஒழிய தினகரன் என வரும்....... பெருவாழ்வே!

அரவு அணை மிசைதுயில் நரஅரி, நெடியவர்
     மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ!
          அமலி, விமலி,பரை, உமையவள் அருளிய...... முருகோனே!

அதல விதல முதல் கிடுகிடு கிடு என
     வரும் மயில் இனிது ஒளிர், ஷடுமையில் நடுவுற
          அழகினுடன் அமரும் அரகர சிவசிவ ...... பெருமாளே.

பதவுரை

      திரிபுரம் எரிசெயும் இறையவர் --- முப்புரங்களை எரித்த சிவபெருமான்,

     அருளிய குமர --- பெற்றருளிய குமாரக் கடவுளே!
        
      சமரபுரி --- திருப்போரூரிலும்,

     தணிகையிலும் --- திருத்தணியிலும்,

     மிகும் உயர் சிவகிரியிலும் --- மிகவும் உயர்ந சிவகிரியிலும்,
    
     வடமலையிலும் உலாவிய --- திருவேங்கட மலையிலும் உலாவுகின்ற,

     வடிவேலா --- கூரிய வேலாயுதரே!

      தினமும் --- நாள் தோறும்,

     உனது துதி பரவிய அடியவர் --- தேவரீருடைய புகழைக் கூறும் அடியார்களின்,

     மனது குடியும் --- உள்ளக் கோயிலில் குடி கொண்டிடும்,

     இரு பொருளிலும் இலகுவ --- அருட்செல்வம் பொருட்செல்வம் என்ற பொருள்களிலும் விளங்குபவரே!

      திமிர மலம் ஒழிய --- இருண்ட ஆணவமாகிய மலம் ஒழிய,

     தினகரன் என வரு --- ஞான சூரியன் என்னும்படி வருகின்ற,

     பெருவாழ்வே --- பெரிய வாழ்வே!

      அரவு அணமிசை துயில் --- பாம்பணையில் அறிதுயில்  புரிகின்றவரும்,

     நரகரி --- நரகாசுரனைக் கொன்றவரும்,

     நெடியவர் --- நீண்ட வடிவுள்ளவரும் ஆகிய திருமாலின்,

     மருகன் என வரும் அதிசயம் உடையவ --- மருகர் என்று கூறுமாறு வந்துள்ள அதிசய மூர்த்தியே!

      அமலி --- மலம் அற்றவரும்,

     விமலி --- மலம் இல்லாதவரும்,

     பரை --- பெரியோரும் ஆகிய,

     உமையவள் அருளிய --- உமாதேவியார் தந்தருளிய,

     முருகோனே --- முருகக்கடவுளே!

      அதல விதல முதல் கிடுகிடுகிடு என வரும் --- அதலம் விதலம் முதலிய ஏழுவுலகங்களும் கிடுகிடுகிடு என்று நடுங்க வருகின்ற,

     மயிலின் இனிது ஒளிர் --- மயிலின்மீது இனிதாக ஒளி செய்பவரே!

      ஷடுமையில் நடு உற --- ஆறுகோண சக்கரத்தின் நடுவில்,

     அழகினுடன் அமரும் --- அழகுடன் பொருந்தியுள்ள,

     அர அர சிவ சிவ --- அர அர, சிவ சிவ!

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     சரவணபவ --- சரவணபவ,

     நிதி --- நிதியே!

     அறுமுக --- ஆறுமுகக் கடவுளே!

     குருபர --- குருபர!

     என ஓதி --- என்று பலமுறை ஓதி,

     தமிழினில் உருகிய --- தமிழ்க் கவிகளில் உள்ளம் உருகிய,

     அடியவர் இடம் உறு --- அடியார்களுக்கு உற்ற,

     சனன மரணம் அதை ஒழிவு உற --- பிறப்பு இறப்பு என்பவை நீங்குதலையடையவும்,

     சிவம் உற --- சிவப்பேறு அடையவும்,

     தருபிணி துள --- வினைகள் தருகின்ற துன்பமானது துள்ளி ஓடவும்,

     எமது உயிர் சுகம் உற --- எங்கள் உயிர் இன்பம் அடையவும்,

     வரம் அருள்வாயே --- வரத்தை வழங்குவீர்,

     விழி பொழி கருணைய --- கண்களினின்றும் பொழிகின்ற கருணையைக் கொண்டவரே!

      ஒருதனி முதல் என வரு --- ஒப்பற்ற தனிப்பெருந் தலைவன் என வந்த,

     கரி திருமுகர் துணை கொளும் இளையவ --- யானையின் திருமுகத்துடன் விளங்கும் விநாயக மூர்த்தியைத் துணையாகக் கொண்ட இளையவரே!

      கவிதை அமுதமொழி தருபவர் --- கவிதைகளாகிய அமுத மொழியை வழங்குபவர்களுடைய,

     உயிர் பெற அருள் நேயா --- உயிர் நற்கதி பெற அருள் புரிகின்ற நேசமுடையவரே!

      கடல் உலகினில் வரும் --- கடல் சூழ்ந்த உலகில் தோன்றும்,

     உயிர் படும் அவதிகள் --- உயிர்கள் அடைகின்ற துன்பங்களும்,

     கலகம் --- கலகங்களும்,

     இனையது உள கழியவும் --- இன்னும் இத்தகையவாய் உள்ள வேதனைகளும் நீங்குதலையும்,

     நிலை பெற கதியும் --- நிலைபெறுமாறு நற்கதி பெறுதலையும்,

     உனது திருவடி நிழல் தருவதும் --- உமது திருவடி நிழல் தருவதும் ஆகிய,

     ஒரு நாளே --- ஒருநாள் எனக்கு கிடைக்குமோ?


பொழிப்புரை


         முப்புரங்களையும் எரித்த சிவபெருமானுடைய புதல்வரே!

         திருப்போருரிலும் திருத்தணிகையிலும், மிக உயர்ந்த மகிமையுள்ள சிவகிரியிலும், திருவேங்கட மலையிலும் உலாவுகின்ற வடிவேலவரே!

         தினந்தோறும் உமது புகழைப் பரவுகின்ற அடியார்களின் உள்ளத்தில் குடிகொண்டு, அருட்செல்வம், பொருட்செல்வம் என்ற இரு செல்வங்களிலும் விளங்குபவரே!

         இருள் மயமான ஆணவமலம் நீங்க ஞான சூரியனாக வருகின்ற பெருவாழ்வே!

         பாம்பணையில் அறிதுயில் கொண்டவரும், நரகாசுரனை வதைத்தவரும் நெடுயவருமாகிய நாராயனரது திருமருகன் என்று கூறும் அதிசயம் உடையவரே!

         மலரகிதராகிய பராசக்தியாம் பார்வதி தேவி பெற்ற முருகக் கடவுளே!

         அதல விதல முதலிய உலகங்கள் கிடு கிடு என்று நடுங்குமாறு வருகின்ற மயிலினில் ஒளிர்கின்றவரே!
              
         ஆறு கோணத்தின் நடுவில் அழகுடன் அமர்கின்றவரே!

     ஹரஹரா!

     சிவசிவா!

     பெருமிதம் உடையவரே! ‘சரவணபவ! நிதியே! ஆறுமுகா! குருபர! ‘சரவணபவ! நிதியே! ஆறுமுகா! குருபர! ‘சரவணபவ! நிதியே! ஆறுமுகா! குருபர!’ என்று தமிழினில் துதி செய்து உருகும் அடியார்களின் பிறப்பு இறப்பு நீங்கவும், சிவப் பேறு பெறவும், நோய்கள் துள்ளி ஓடவும், எமது உயிர் இன்பமுறவும் அருள்புரிவீர்; கண்களில் பொழிகின்ற கருணை உடையவரே!

         ஒப்பற்ற தனிப்பெருந் தலைவராம் யானை முகவரது துணையை நாடும் இளையவரே!

         கவிதையாம் அமுத மழை பொழிகின்றவருடைய உயிர் நற்கதி பெற அருள்பவரே!

         கடல் சூழ்ந்த உலகினில் தோன்றுகின்ற உயிர்கள் படுகின்ற துன்பங்கள் கலக்கம் முதலிய இடர் அகலவும், நிலைபெறவும், நற்கதியும் தேவரீருடைய திருவடி தருவதுமாகிய நாள் ஒன்று அடியேனுக்கு உண்டாகுமோ?


விரிவுரை

சரவணபவ:-

சரம்-தர்ப்பை; வனம்-காடு. பவன்-வெளிப்பட்டவன்.

ரகரத்தின் பின்வரும் னகரம் ணகரமாகத் திரியும் என்பது வியாகரண விதி; அதனால் சரவனம் என்பது சரவணம் ஆயிற்று.

நிதி:-

இறைவன் என்றும் அழியாத சேமநிதி.

தமிழினில் உருகிய அடியவர்:-

தமிழ்-இனிமையான மொழி. இனிய தமிழில் இறைவனைத் துதிசெய்தால் உள்ளம் உருகும்.

சனன மரணமதை யொழிவுற:-

பிறப்பிறப்பில்லாத பெருந்தகை முருகன், அப்பெருமான் அடியாரது பிறப்பிறப்பினை யொழித்து அருள்புரிவான்.
  
சிவமுற:-

சிவத்துடன் இரண்டறக் கலக்கும் அத்துவித முத்தி.
  
கருணைய விழி பொழி:-

முருகவேளின் கண்கள் கடல்போல் கருணை பொழியும்.

கருணை பொழி கமல முகமாறும்”                         ---   (ஒருவரையு) திருப்புகழ்.

மறுஅறு கடல் என மருவு பனிரு விழி
   வழிந்த அருளே பொழிந்தது ஒருபால்”                ---  கொலுவகுப்பு.

கடலுலகினில் வரும் உயிர்படும் அவதிகள் கழியவும்:-

முருகா! உலகில் உள்ள எல்லாவுயிர்களும் கவலையற்று வாழ வேண்டும்” என்று சுவாமிகள் வேண்டுகின்றார்.

சமரபுரி:-

திருப்போரூர். இத்தலம் திரிபுராதிகளின் தந்தையான தாரகன் என்ற அவுணனுடன் முருகவேள் போர் புரிந்த இடம்.

தினமுமுனது துதிபரவிய அடியவர் மனது குடிபுகும்:-

சதா இறைவனைப் பரவும் உத்தம அடியார்களின் உள்ளக் கோயிலில் அப் பரமபதி வீற்றிருக்கின்றான்.

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்”        ---  அப்பர்.

அடியவர் சிந்தை வாரிசு நடுவினும் உறைபவ”         ---  (கொந்துவார்) திருப்புகழ்.

ஷடுமையில் நடுவுற:-

ஆறக்கரங்களும் அடங்கிய ஆறு கோணமாகிய யந்திரத்தின் இடையில் முருகன் ஒளிமயமாக விளங்குபவன்.


கருத்துரை


திருவேங்கடத்துறையுந் தேவனே! உன் திருவடி பெற அருள்வாய்.


No comments:

Post a Comment

9. விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

  "திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்      இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்      பகலாமோ? உறவாய் வந்த பெருவ...