திருவேங்கடம் - 0247. கோங்கிள நீரிளக




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கோங்கிள நீரிளக (திருவேங்கடம்)

திருவேங்கட முருகா! 
மாதர் இன்பம் விரும்பி,  
அவநெறியில் செல்லாமல் காத்து அருள்.

தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான


கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
     வாங்கிய வேல்விழியும் ...... இருள்கூருங்

கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
     மாந்தளிர் போல்வடிவும் ...... மிகநாடிப்

பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
     தீங்குட னேயுழலும் ...... உயிர்வாழ்வு

பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்
     வீழ்ந்தலை யாமலருள் ...... புரிவாயே

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்
     வேங்கையு மாய்மறமி ...... னுடன்வாழ்வாய்

பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
     பாண்டிய னீறணிய ...... மொழிவோனே

வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
     வேங்கட மாமலையி ...... லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

கோங்கு, ளநீர் இளக வீங்கு பயோதரமும்,
     வாங்கிய வேல்விழியும், ...... இருள்கூரும்

கூந்தலும், நீள்வளை கொள் காந்தளும், நூல்இடையும்,
     மாந்தளிர் போல் வடிவும், ...... மிகநாடிப்

பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி, மிகு
     தீங்கு உடனே உழலும், ...... உயிர்வாழ்வு

பூண்டு, டியேன் நெறியில் மாண்டு, ஙனே நரகில்
     வீழ்ந்து, லையாமல் அருள் ...... புரிவாயே.

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட, மாமுனியும்
     வேங்கையுமாய் மறமின் ...... உடன்வாழ்வாய்!

பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக!
     பாண்டியன் நீறு அணிய ...... மொழிவோனே!

வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர்
     வேங்கட மாமலையில் ...... உறைவோனே!

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
     வேண்ட வெறாது உதவு ...... பெருமாளே.


பதவுரை

      பாங்கியும் --- தோழியும்,

     வேடுவரும் --- வேடர்களும்,

     ஏங்கிட --- திகைக்கும் படியாக,

     மாமுநியும் --- சிறந்த தவமுநிவராகவும்,

     வேங்கையும் ஆய் --- வேங்கை மரமாகவும் வடிவங்கொண்டு,

     மறமின் உடன் வாழ்வாய் --- மின்னல் போன்ற வடிவுடைய வேடர் மங்கையாகிய வள்ளிபிராட்டியுடன் வாழ்பவரே!

      பாண்டவர் தேர் கடவும் --- பாண்டு மகனாகிய அர்ச்சுனருடைய தேரைச் செலுத்திய,

     நீண்ட பிரான் மருக --- நெடியவராகிய திருமாலின் மருகரே!

      பாண்டியன் நீறு அணிய --- கூன் பாண்டியன் திறுநீறு அணியும்படி,

     மொழிவோனே --- ”மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தைப் பாடியவரே!

      வேங்கையும் --- புலியும்,

     வாரணமும் --- யானையும்,

     வேங்கையும் --- வேங்கை மரமும்,

     மானும் வளர் --- மானும் வாழ்ந்து வளர்கின்ற,

     வேங்கட மாமலையில் உறைவோனே --- பெருமை மிக்க திருவேங்கட மலையில் வாழ்கின்றவரே!

     அடியர் வேண்டிய போது --- அடியார்கள் வேண்டியபோது,

     வேண்டிய போகம் அது --- அவர்கட்கு விரும்பிய சுகங்களை,

     வேண்ட --- அவர்கள் விரும்பிக் கேட்ட போது,

     வெறாது உதவு பெருமாளே --- வெறுக்காமல் வழங்குகின்ற பெருமையில் சிறந்தவரே!

      கோங்கு --- கோங்கின் அரும்பு,

     இளநீர் --- இளநீர் என்ற இரண்டும்,

     இளக --- தோல்வியடையுமாறு,

     வீங்கு பயோதரமும் --- பருத்து வளர்ந்துள்ள தனங்களும்,

     வாங்கிய வேல் விழியும் --- செலுத்தப்பட்ட வேல் போன்ற கண்களும்,

     இருள்கூரும் கூந்தலும் --- இருள் மிகுந்த கூந்தலும், நீள்

     வளைகொள் காந்தளும் --- பெரிய வளையல்கள் அணிந்துள்ள காந்தள் மலர்போன்ற கரங்களும்,

     நூல் இடையும் --- நூல் போன்ற மெல்லிய இடையும்,

     மாந்தளிர் போல் வடிவும் --- மாந்தளிர் போன்ற மேனியும் ஆகிய இவைகளை,

     மிக நாடி --- மிகவும் விரும்பி,

     பூ கொடியார் கலவி --- மலர்க்கொடி போன்ற மாதர்களின் சேர்க்கையை,

     நீங்க அரிது ஆகி --- விடுவதற்கு முடியாதவனாகி,

     மிகு தீங்கு உடனே உழலும் --- மிகுந்த தீச்செயல்களொடு திரிகின்ற,

     உயிர் வாழ்வு பூண்டு --- உயிர் வாழ்க்கையை மேற்கொண்டு,

     அடியேன் நெறியில் மாண்டு --- அடியேன் அந்த அவநெறியிலேயே கிடந்து இறந்து,

     இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் --- இங்ஙனம் நரகிலே விழுந்து அலையாமலிருக்க,

     அருள் புரிவாயே --- திருவருளைப் புரிவீராக.


பொழிப்புரை


         தோழியும் வேடர்களும் திகைக்குமாறு, வேங்கை மரமாகி நின்று, தவமுநிவராக வந்தும், வள்ளிபிராட்டியை மணந்து வாழ்பவரே!

         அர்ச்சுனப் பெருமானுடைய தேரைச் செலுத்திய நெடியவராம் திருமாலின் திருமருகரே!

         கூன் பாண்டியன் திறுநீறு தரிக்குமாறு “மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளியவரே!

         புலியும், யானையும், வேங்கை மரமும், மானும் வாழ்ந்து வளர்கின்ற திருவேங்கட மலையில் உறைபவரே! அடியார்கள் வேண்டிய சுகங்களை அவர்கள் விரும்பிய போதெல்லாம் வெறுக்காமல் வழங்கியருளும் பெருமிதம் உடையவரே!

         கோங்கின் அரும்பும், இளநீரும் நாணுமாறு பருத்து வலர்ந்துள்ள தனங்களும், செலுத்திய வேல் போன்ற கண்களும், இருள் மிகுந்த கரிய கூந்தலும், பெரிய வளைகள் தரித்துள்ள காந்தள் மலர் போன்ற கரங்களும், நூல் போன்ற மெல்லிய இடையும், மாந்தளிர் போன்ற மேனியும் ஆகிய இவைகளை மிகவும் விரும்பி மலர்க்கொடி போன்ற பெண்களின் சேர்க்கையை விட முடியாதவனாகி, தீமையுடனே திரிகின்ற உயிர் வாழ்க்கையைக் கொண்டு, அடியேன் அத் தீ நெறியிலேயே நின்று இறந்து, இவ்வண்ணமே நரகில் விழுந்து அலையாத வண்ணம் அருள் புரிவீராக.


விரிவுரை
  
கோங்கு:-

கோங்கின் அரும்பு, தனத்திற்கு உவமையாக விளங்கும்.

வாங்கிய வேல்:-

வாங்குதல்-செலுத்துதல். இந்தப் பொருளில் வேல் வாங்கு வகுப்பு என வருவதைக் காண்க.

சேல் வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி,
மால் வாங்கி ஏங்கி மயங்காமல், வெள்ளிமலை எனவே
கால் வாங்கி நிற்கும் களிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டு
நூல் வாங்கிடாது, அன்று வேல் வாங்கி பூங்கழல் நோக்கு செஞ்சே.                                                                                             --- கந்தர் அலங்காரம்.
 
காந்தள்:-

காந்தள் என்பது ஒரு மலர். இது குறிஞ்சி நிலத்தில் மலர்வது. சிவப்பாகவும், அழகாகவும் இருக்கும். முருகனுக்கு உரிய மலர்.

சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
   பெருந்தண் கண்ணி மிலைந்த செனியன்”                --- திருமுருகாற்றுப்படை.

இம்மலர் மகளிரது கரத்துக்கு உவமையாகும்.

மென்காந்தள் கை ஏற்கும் மிழலையாமே”                   --- திருஞானசம்பந்தர்.

இங்கே காந்தள் என்பது உவமை ஆகுபெயராக கரத்தைக் குறிக்கின்றது.

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட:-

வள்ளி பிராட்டியை மணஞ் செய்யும் பொருட்டு முருகவேள் வள்ளிமலையில் வேங்கை மரமாகவும், விருத்த வேதிய முனிவராகவும் ஆனார். அப்போது, வள்ளிநாயகியின் தோழியும், வேடுவர்களும் ‘ஆ’ என்று திகைத்து நின்றார்கள்.

பாண்டவர் தேர் கடவு நீண்ட பிரான்:-

திருமால் இராமாவதாரம் எடுத்தபோது சூரிய குமாரனாகிய சுக்ரீவனுக்கு உதவியாக நின்று இந்திர குமாரனாகிய வாலியை வதைத்தார். அதற்கு நேர்மாறாக,  கிருஷ்ணாவதாரத்தில் இந்திர குமாரனாகிய அர்ஜுனனுக்கு உதவியாகத் தேர் ஓட்டி, சூரிய குமாரனாகிய கர்ணனை வதைத்தார்.

திருமால் நெடியவர். ஆதலால் அவருக்கு நெடியோன் என்று ஒரு பேருண்டு.

       உவணபதி நெடியவனும்”         --- (கரிய குழல்) திருப்புகழ்.

பாண்டியன் நீறு அணிய மொழிவோனே ---

தொன்று தொட்டு வைதிக சைவ சமயமே எங்கும் நிறைந்து விளங்கும் பாண்டி நாட்டிலே, கொல்லாமை மறைந்துறையும் சமண சமயம் பரவி, அரசனும் அம்மாய வலைப்பட்டு சைவசமய சீலங்கள் மாறின; உலகெலாஞ் செய்த பெருந்தவத்தின் வடிவால், சோழ ராஜனது திருமகளாய், பாண்டிமா தேவியாய் விளங்கும் மங்கையர்க்கரசியாரும், அவருக்கு ஸ்ரீதனமாக சோழராஜனால் தரப்பட்டு வந்து பாண்டிய அமைச்சராயிருந்து, சைவநிலைத் துணையாய், அரசியார்க்கு உடனுதவி செய்து வருகின்ற குலைச்சிறை நாயனாரும் மிகவும் வருந்தி, ஆலவாயண்ணலை நோக்கி, “சமண இருள் நீங்கி சைவ ஒளி ஓங்கும் நாள் என்றோ” என்று ஏங்கி நின்றார்கள். அப்போது திருஞான சம்பந்தரது அற்புத மகிமையையும், அவர் திருமறைக்காட்டில் எழுந்தருளி யிருப்பதையும் உணர்ந்து, முறைப்படி அவரை அழைத்து வருமாறு சில தகுந்த ஏவலரை யனுப்பினார்கள்; அவர்கள் வேதாரணியத்திற்கு வந்து பாலறாவாயரைப் பணிந்து, பாண்டிய நாட்டில் சைவநிலை கரந்து சமண நிலை பரந்திருப்பதை விண்ணப்பித்து, அதனை ஒழுங்குபடுத்த அம்மையாரும் அமைச்சரும் அழைத்துவருமாறு அனுப்பினார்கள் என்று தெரிவித்து நின்றார்கள். சம்பந்தர் மறைக்காடு மணிகண்டரை வணங்கி, அப்பரிடம் விடை கேட்டனர்: திருநாவுக்கரசர் சமணர்களது கொடுமையை யுன்னி ”பிள்ளாய்! வஞ்சனையில் மிக்க சமணர்களுள்ள இடத்திற்கு நீர் போவது தகுதியன்று; கோளும் நாளும் வலியில்லை” என்றனர்.

வேயுறு தோளிபங்கன்விடமுண்ட கண்டன்
         மிகநல்ல வீணைதடவி
 மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ
         னுளமே புகுந்த வதனால்
 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
         சனி பாம்பிரண்டு முடனே
 ஆசறு நல்லநல்ல வவைநல்லநல்ல
         அடியாரவர்க்கு மிகவே”

என்ற திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து, அப்பரை உடன்படச் செய்து விடைபெற்று, முத்துச் சிவிகை ஊர்ந்து, பல்லாயிரம் அடியார்கள் “அரகர” என்று கடல்போல் முழங்க, பாண்டி நாட்டிற்கு எழுந்தருளி வருவாராயினார். எண்ணாயிரஞ் சமண குருமார்களுக்கும் அவரைச் சார்ந்த பல்லாயிரஞ் சமணர்களுக்கும் பற்பல துற்சகுனமேற்பட்டது. எல்லாரும் மதுரையில் கூடி நின்றார்கள். புகலிவேந்தர் வரவை யுணர்ந்த மங்கையர்க்கரசியார் வரவேற்குமாறு அமைச்சர் பெருமானையனுப்பித் தாம் திருவாலவாய்த் திருக்கோயிலில் எதிர் பார்த்து நின்றனர்.

சீகாழிச் செம்மல் பல விருதுகளுடன் வருவதை நோக்கி, குலச்சிறையார் ஆனந்தக் கூத்தாடி, கண்ணீர் ததும்பி கூகைகூப்பி, மண் மிசை வீழ்ந்து வணங்கிய வண்ணமாய்க் கிடந்தார். இதனை யறிந்த கவுணியர் கோன் சிவிகை விட்டிழிந்து, அவரை யெடுத்து “செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீருமக்கும் நம் பெருமான்றன் திருவருள் பெருகு நன்மைதான் வாலிதே” என்னலும், குலச்சிறையார் கைகூப்பி, “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி யெதிர் காலத்தின் சிறப்பும், இன்றெழுந்தருளப் பெற்ற பேறிதனால் எற்றைக்குந் திருவருள் உடையேம்; நன்றியில் நெறியிலழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து நலம் பெற்றனர்” என்றார்.

மதுரையும் ஆலவாயான் ஆலயமும் தெரிய, மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் சிறப்பித்து சம்பந்தர் பதிகம் பாடி, கோயிலுட் புகுதலும், அங்கு எதிர்பார்த்திருந்த அம்மையார் ஓடிவந்து அடிமிசை வீழ்ந்து வணங்க, பிள்ளையார் அவரை யெடுத்து அருள் புரிந்து இன்னுரை கூறி, ஆலவாயானைத் தெரிசித்து, தமக்கு விடுத்த திருமடத்தில் தங்கியருளினார். சமணர்கள் அது கண்டு வருந்தி, “கண் முட்டு” “கேட்டு முட்டு” என்று பாண்டியனிடம் இதனைக் கூறி அவனநுமதி பெற்று திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரஞ் செபித்தனர். அம்மந்திர சக்தி அடியார் திருமடத்திற்கு தீங்கிழைக்கும் ஆற்றலற்றது. சமணர்கள் அது கண்டு கவன்று, தாமே இரவிற் போய் திருமடத்தில் தீ வைத்தனர். அதனை யடியார்கள் அவித்து, ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவிக்க, சம்பந்தர் இது அரசனாணையால் வந்ததென்றுணர்ந்து,

    செய்ய னேதிரு வாலவாய் மேவிய
  ஐயனே அஞ்ச லென்றருள் செய்யெனைப்
  பொய்யராம் அம ணர்கொளு வுஞ்சுடர்
  பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”

என்று பாடியருளினார். “பையவே” என்றதனால் அந்நெருப்பு உயிர்க்கு மிகவும் கொடுமை செய்யாது சுர நோயாகி பாண்டியனைப் பிடித்து வருத்தியது. அந்நோயை நீக்க ஆயிரக்கணக்கான சமணர்கள் வந்து மந்திரஞ் சொல்லி, மயிற்பீலியால் பாண்டியன் உடம்பைத் தடவினர். அம்மயிற் பீலிகளெல்லாம் வெந்து நீறாயின. அண்மி வந்த அமணர்களுடைய உடலும் உயிருங் கருகின. அரசன் அவரைக் கடிந்து விரட்டினான். மங்கையர்க்கரசியார் மகிணனை வணங்கி, திருஞானசம்பந்தர் திருமடத்திற்குச் செய்த தீங்கினால் தான் இச்சுரநோய் பிடித்ததென்றும், அவர் வந்தாலொழிய இது தீராதென்றுங் கூற; அரசன் “இந்நோய் தீர்த்தார் பக்ஷத்தில் நான் சேருவேன்; அவரை அழைமின்” என்றான். அது கேட்டு அம்மையாரும் அமைச்சரும் திருமடத்திற்கு வந்து,

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையின்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங்
கானத்தி னெழுபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.”

கண்டு வணங்கி நிகழ்ந்தது கூறி, அரசனையும் தம்மையும் உய்விக்க எழுந்தருளுமாறு விண்ணப்பஞ் செய்தனர். சம்பந்தர் அபயந்தந்து, அடியார் குழத்துடன் புறப்பட்டு திருக்கோயில் சென்று, தென்னவனாயுல காண்ட கன்னிமதிச் சடையானைப் பணிந்து, “ஞாலம் நின்புகழே மிகவேண்டுந் தென் ஆலவாயிலுறை மெம்மாதியே” என்று பாடி விடைபெற்று, பாண்டியர் கோன் மாளிகை புக்கார். பாண்டியன் சுவாமிகளைக் கண்டு கைகூப்பி, தலைப்பக்கத்தில் பீடந்தரச் செய்து இருக்கச் செய்வித்தனன். சுவாமிகள் இனிது வீற்றிருக்க சமணர் பலரும் அது கண்டு பொறாராய் சீறினர். அம்மையார் அது கண்டு அஞ்ச, கவுணியர் வேந்து,

மானின்நேர் விழிமாதராய், வழுதிக்கு மாபெருந் தேவி,கேள்
பானல்வாய் ஒருபாலன் ஈங்கு இவன்என்று நீ பரிவு எய்திடேல்
ஆனை மாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு ஏளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே.”

என்று பாடித் தேற்றினார்.

         அரசன் சமணரையும் சம்பந்தரையும் சுரநோயைத் தீர்ப்பதன் மூலம் தமது சமயத்தின் உண்மையைக் காட்டலாமென; அமணர் இடப்புற நோயை நீக்குவோமென்று மந்திர உச்சாடனத்துடன் மயிற் பீலியால் தடவ நோய் அதிகப்பட்டது. அரசன் வருந்தி புகலி வேந்தரை நோக்க, சுவாமிகள், "மந்திரமாவது நீறு" என்ற திருப்பதிகம் பாடி, வலப்பக்கத்தில் தடவியருள நோய் தீர்ந்தது. இடப்பக்கம் அதிகரித்தது. இறைவன் சமணரைக் கடிந்து வெருட்டிவிட்டு, பாலறாவாயரைப் பணிய, பிள்ளையார் மீண்டுத் திருநீறு பூச, நோய் முற்றும் நீங்கியது. அரசன் பன்முறை பணிந்து ஆனந்தமுற்றான்.
 


வேண்டிய போதடியார் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு:-

முருகவேள் தன்னை நினைக்கின்ற அடியார்கள், எதனை எதனை எப்போது எப்போது விரும்பி வேண்டுவார்களோ, அதனை அதனை அவ்வப்போது, மறுக்காமல் - வெறுக்காமல், வழங்குவர்.

கருத்துரை

திருவேங்கடமலை மேவும் திருமுருகா! அவல நெறி சென்று அருநரகிடை உழலாவண்ணம் காத்தருள்.






No comments:

Post a Comment

9. விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

  "திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்      இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்      பகலாமோ? உறவாய் வந்த பெருவ...