திருவேங்கடம் - 0246. கறுத்த தலை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கறுத்ததலை வெளிறு (திருவேங்கடம்)

திருவேங்கட முருகா! 
அடியேன் உனது அடியாருக்குத் தொண்டுபட்டு அய்ய அருள.

தனத்ததன தனதன தனந்த
     தனத்ததன தனதன தனந்த
          தனத்ததன தனதன தனந்த ...... தனதான


கறுத்ததலை வெளிறு மிகுந்து
     மதர்த்த இணை விழிகள் குழிந்து
          கதுப்பிலுறு தசைகள் வறண்டு ...... செவிதோலாய்க்

கழுத்தடியு மடைய வளைந்து
     கனத்தநெடு முதுகு குனிந்து
          கதுப்புறுப லடைய விழுந்து ......     தடுநீர்சோர்

உறக்கம்வரு மளவி லெலும்பு
     குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
          உரத்தகன குரலு நெரிந்து ......       தடிகாலாய்

உரத்தநடை தளரு முடம்பு
     பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
          உனக்கடிமை படுமவர் தொண்டு ...... புரிவேனோ

சிறுத்தசெலு வதனு ளிருந்து
     பெருத்ததிரை யுததி கரந்து
          செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே

செறித்தவளை கடலில் வரம்பு
     புதுக்கியிளை யவனோ டறிந்து
          செயிர்த்தஅநு மனையு முகந்து ...... படையோடி

மறப்புரிசை வளையு மிலங்கை
     யரக்கனொரு பதுமுடி சிந்த
          வளைத்தசிலை விஜய முகுந்தன் ......மருகோனே

மலர்க்கமல வடிவுள செங்கை
     அயிற்குமர குகைவழி வந்த
          மலைச்சிகர வடமலை நின்ற ......    பெருமாளே.


பதம் பிரித்தல்


கறுத்த தலை வெளிறு மிகுந்து,
     மதர்த்த இணை விழிகள் குழிந்து,
          கதுப்பில் உறு தசைகள் வறண்டு, ......செவிதோலாய்,

கழுத்து அடியும் அடைய வளைந்து,
     கனத்த நெடு முதுகு குனிந்து,
          கதுப்பு உறு பல் அடைய விழுந்து, ...... உதடுநீர்சோர்,

உறக்கம் வரும் அளவில், எலும்பு
     குலுக்கி விடும் இருமல் தொடங்கி,
          உரத்த கன குரலும் நெரிந்து, ......    தடி கால் ஆய்,

உரத்த நடை தளரும் உடம்பு
     பழுத்திடும் முன், மிகவும் விரும்பி
          உனக்கு அடிமை படும்அவர் தொண்டு ...... புரிவேனோ?

சிறுத்த செலு அதனுள் இருந்து,
     பெருத்த திரை உததி கரந்து,
          செறித்த மறை கொணர நிவந்த ...... ஜெயமாலே,

செறித்த வளை கடலில் வரம்பு
     புதுக்கி, இளையவனோடு, அறிந்து
          செயிர்த்த அநுமனையும் உகந்து, ...... படை ஓடி,

மறப்புரிசை வளையும் இலங்கை
     அரக்கன் ஒரு பது முடி சிந்த,
          வளைத்த சிலை விஜய முகுந்தன் ......மருகோனே!

மலர்க் கமல வடிவுள செங்கை
     அயில் குமர! குகைவழி வந்த
          மலைச் சிகர வடமலை நின்ற ......   பெருமாளே.


பதவுரை

      சிறுத்த செலு அதனுள் இருந்து --- சிறிய மீன் சிறையில் மீனுருவங் கொண்டு,

     பெருத்த திரை உததி கரந்து செறித்த --- பெரிய அலைகளுடன் கூடிய கடலின்கண் ஒளித்து வைத்த,

     மறை கொணர நிவந்த --- வேதங்களைக் கொணரும் பொருட்டுத் தோன்றிய,

     ஜெயமால் ---  வெற்றியையுடைய திருமாலும்,  

     ஏ செறித்து --- கனையைச் செலுத்தி,

     அ வளை கடலில் வரம்பு புதுக்கி --- அந்த வளைந்த சமுத்திரத்தில் அணையைப் புதுக்கி,

     இளையவனோடு --- இலக்குவனோடு,

     அறிந்து செயிர்த்த ---- இராவணன் உடைய நிலையை அறிந்து சீறிய,

     அநுமனையும் உகந்து --- அநுமனுடன் மகிழ்ந்து,

     படை ஓடி --- படையைச் செலுத்தி,

     மறப்புரிசை வளையும் இலங்கை --- வீரம் பொருந்திய மதில்கள் சூழ்ந்துள்ள இலங்கையில் வாழ்ந்த,

     அரக்கன் --- இராவணனுடைய,

     ஒருபது முடி சிந்த --- பத்துத் தலைகளும் அற்று விழுமாறு,

     சிலை வளைத்த --- வில்லை வளைத்த,

     விஜய முகுந்தன் --- சிறந்த வெற்றியுடையவரும் ஆகிய முகுந்தனுடைய,

     மருகோனே --- திருமருகரே!

      மலர்க்கமல வடிவு உள செம் கை --- தாமரை மலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கரத்தில்,

     அயில் குமர --- வேல் ஏந்திய குமாரக் கடவுளே!

      குகை வழி வந்த --- குகை வழியே வந்து,

     மலை சிகர வடமலை நின்ற --- மலையாகிய சிகரங்களையுடைய திருவேங்கட மலையில் நிற்கும்,

     பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!

      கறுத்த தலை வெளிறு மிகுந்து --- கறுத்த மயிருடன் இருந்த தலை வெண்மை நிறத்தை மிகுதியாக அடைந்து,

     மதர்த்த இணைவிழிகள் குழிந்து --- செழித்த இரு கண்களும் குழிவிழுந்து ஒடுங்கி,

     கதுப்பில் உறு தசைகள் வறண்டு --- கன்னங்களில் இருந்த சதைகள் வற்றி,

     செவி தோலாய் --- காதுகள் தோலாய் மெலிய,

     கழுத்து அடியும் அடிய வளைந்து --- கழுத்தின் அடிப்பாகம் முழுதும் வளைந்து,

     கனத்த நெடு முதுகு குனிந்து --- பருத்திருந்த நீண்ட முதுகு குனிந்து குறுக,

     கதுப்பு உறு பல் அடைய விழுந்து --- தாடையில் இருந்த பல் யாவும் விழுந்து ஒழிய,

     உதடு நீர் சோர் --- உதடுகளில் சொள்ளு ஒழுக,

     உறக்கம் வரும் அளவில் --- தூக்கம் வரும் சமயத்தில்,

     எலும்பு குலுக்கி விடும் இருமல் தொடங்கி --- எலும்புகளைக் குலுக்கித் தள்ளும்படி இருமல் வரவும்,

     உரத்தக் கன குரலும் நெரிந்து --- வலிமையும் உறுதியும் கொண்ட குரல் நெரிபட்டு அடங்க,

     தடி காலாய் --- கைத்தடி கால் போல் உதவ,

     உரத்த நடை தளரும் --- உரம் உள்ள நடை தளர்ந்து போகும்,

     உடம்பு பழுத்திடுமுன் --- இந்த உடம்பு முதுமை அடைவதற்குமுன்,

     மிகவும் விரும்பி --- மிகுந்து அன்பு வைத்து,

     உனக்கு அடிமைபடும் அவர் தொண்டு புரிவேனோ --- தேவரீருக்கு அடிமை பூண்டுள்ள தொண்டர்களுக்கு அடியேன் தொண்டு புரியமாட்டேனோ?


பொழிப்புரை


         சோகுகன் என்ற அரக்கன், பெரிய அலைகள் வீசுகின்ற கடலில் வேதங்களை மறைத்து வைத்தபோது, மீன் உருவங்கொண்டு, அவ்வேதங்களைக் கொணர்ந்தவரும், வெற்றியுடைய திருமாலும், கடலின்மீது கணை தொடுத்து, அணைகட்டி, இலக்குமணனோடு இருந்து, இராவணனது தன்மையை அறிந்து, சீற்றமடைந்த அநுமனை மகிழ்ந்து, படைகளைச் செலுத்தி, வீரம் பொருந்திய மதில்கள் சூழ்ந்த இலங்கையில் வாழ்ந்த இராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழும்படி, கோதண்டத்தை வளைத்த, சிறந்த வெற்றி படைத்தவரும் ஆகிய நாராயணமூர்த்தியின் திருமகரே!

         தாமரை மலர் போன்ற வடிவுள்ள திருக்கரத்தில் வேலையேந்திய குமாரக் கடவுளே!

         குகை வழியே வந்து, மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கட மலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         கருமையான தலை மயிர் நரைத்தும், செழித்த இருகண்கள் குழிந்தும், கன்னத்தில் உள்ள சதைகள் வற்றியும், காதுகள் தோலாகித் தொங்கியும், கழுத்தின் அடிப்பகுதி முழுதும் வளைந்தும், நீண்டு வலிமையாயிருந்த முதுகு கூனலாகியும், தாடையில் உள்ள பற்கள் உதிர்ந்தும், உதட்டில் எச்சில் நீர் ஒழுகியும், தூக்கம் வரும்போது, எலும்புகள் அப்படியே குலுங்குமாறு இருமல் வந்தும், உரத்த, வலிய குரல் நடுங்கியும் தடி ஊன்றியும், நடை தடுமாறியும், உடம்பு முதுமைப் பருவத்தை அடையும் முன்னர், தேவரீருடைய திருத்தொண்டர்கட்கு அடியேன் மிக்க அன்புடன் தொண்டு செய்ய மாட்டேனோ?


விரிவுரை


இத் திருப்புகழில் இளமை நிலையாமையைப் பற்றி அடிகளார் அழகாக எடுத்து உரைக்கின்றார்.

நரை திரை மூப்பு ஆகிய இவைகளால் இந்த உடம்பு பெருந் துன்பம் எய்தும்.
    
மிகவும் விரும்பி உனக்கடிமை படும் அவர் தொண்டு புரிவேனோ ---

இறைவனுடைய திருத்தொண்டர்கட்கு மிகுந்த நேசத்துடன் தொண்டு புரிவதே முத்தி பெறுவதற்கு எளிய வழியாகும். தொண்டர்க்குத் தொண்டு புரிவோர் எல்லா நலன்களையும் எளிதிற் பெறுவர்.

இறைவனுக்குத் தொண்டு புரிவது ஒரு மடங்கு பயனும் தொண்டர்க்குத் தொண்டு செய்வது இருமடங்கு பயனும் விளைவிக்கும். ஏனெனில், தொண்டர் உள்ளத்தில் இறைவன் உறைகின்றான் ஆதலின் இருமடங்காகின்றது. மானக்கஞ்சாற நாயனாரைப் பற்றிக் கூற வந்த சேக்கிழார் பெருமான், அவருடைய அடியாரின் அடித்தொண்டினைக் கூறும் திறங் காண்க.

பணிவுடைய வடிவு உடையார் பணியினொடும் பனிமதியின்
அணிவு உடைய சடைமுடியார்க்கு ஆள் ஆகும் பதம்பெற்ற
தணிவுஇல் பெரும் பேறு உடையார், தம்பெருமான் கழல்சார்ந்த
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல்செயும் தொழில் பூண்டார்.  --- பெரியபுராணம்.

சிறுத்தசெலு......கொணர நிவந்த ---

செலு-மீன் சிறை.

சோமுகன் என்ற அரக்கன் பிரமதேவர்பாலிருந்த வேதங்களை அவர் அறியாவண்ணம் கவர்ந்து சென்று கடலில் ஒளித்து வைத்தான் திருமால் கடலில் மீனாக அவதரித்து சோமுகனைக் கொன்று, நான்கு வேதங்களையும் கொணர்ந்து பிரமதேவர்பால் தந்து அருள் புரிந்தார்.

ஏ செறித்தவளை கடலில் வரம்பு புதுக்கி ---

ஸ்ரீராமர் திருப்புல்லணையில் சாய்ந்து ஏழு நாட்கள் வருணனை வழிபடவேண்டி மனம் ஒருமைப்பட்டுக் கிடந்தார். வருணன் வெளிப்படாமை கண்டு வெகுண்டு கடல்மீது பாணத்தை விடுத்தார். கடல் வெந்தது. வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து, ஸ்ரீராமரைத் தஞ்சம் புகுந்து, “பெருமானே! புறக் கடலில் இரு பெரிய திமிங்கலங்கள் புரிந்த போரை மாற்றிச் சமாதானஞ் செய்யும் கருமத்தில் ஈடுபட்டிருந்தேன் அதனால் நீங்கள் நினைத்ததை உணர்ந்தேனில்லை. மன்னித்தருள்க. கடலில் அணைகட்ட அடியேன் உதவுகின்றேன்” என்று கூறி வேண்டிக் கொணடான்.

பின்னர் ராமர் “நளன்” என்ற வானர வீரனைக் கொண்டு, ஏனைய வானரங்கள் மலைகளைக் கொணர்ந்து கொடுக்க சேது பந்தனம் புரிந்தார்.

இராமர் திருப்புல்லணையில் இருந்த திருத்தலம் திருப்புல்லாணி என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. இராமநாதபுரம் அருகே உள்ளது.

  
குகைவழி வந்த மலைச்சிகர வடமலை ---

முருகப் பெருமான் ஒரு சமயம் ஒரு திருவிளையாடலை யுன்னி, உமையம்மையாருடன் பிணங்கி, கயிலாய மலையை விடுத்து நீங்கி, பாதலம் போய் அங்கிருந்து, ஒரு குகை வழியே வந்து, திருவேங்கட மலையில் தங்கினார். இதனை, கந்தபுராணம் வழிநடைப் படலத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறுகின்றார்.

அண்ட மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்
தொண்டகங் கெழு சுவாமிதன் மாலவரை துறந்து
மண்டு பாதலத் தேகியே ஓர்குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்.

கருத்துரை


திருவேங்கடமலை மேவும் திருமுருகா! அடியேன் தொண்டருக்குத் தொண்டு செய்ய அருள்செய்.





No comments:

Post a Comment

9. விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

  "திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்      இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்      பகலாமோ? உறவாய் வந்த பெருவ...