ஸ்ரீசைலம் - 0245. திருமலை - ஒருபதும் இருபதும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஒருபதும் இருபதும் (ஸ்ரீசைலம் - திருமலை)

திருப்பருப்பத முருகா! 
திருவடி அருள்

தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன ...... தனதான


ஒருபது மிருபது மறுபது முடனறு
     முணர்வுற இருபத ...... முளநாடி

உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
     வெளியொடு வொளிபெற ...... விரவாதே

தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
     திரிதொழி லவமது ...... புரியாதே

திருமகள் மருவிய திரள்புய அறுமுக
     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே

பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
     பயறொடு சிலவகை ...... பணியாரம்

பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
     எழுதிய கணபதி ...... யிளையோனே

பெருமலை யுருவிட அடியவ ருருகிட
     பிணிகெட அருள்தரு ...... குமரேசா

பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
     பிணையமர் திருமலை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஒருபதும் இருபதும் அறுபதும் உடன் அறும்
     உணர்வு உற, இருபதம் ...... உளம் நாடி,

உருகிட, முழுமதி தழல் என ஒளிதிகழ்
     வெளியொடு ஒளிபெற ...... விரவாதே,

தெருவினில் மரம்என எவரொடும் உரைசெய்து
     திரிதொழில் அவம் அது ...... புரியாதே,

திருமகள் மருவிய திரள் புய! அறுமுக!
     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே.

பரிவுடன் அழகிய பழமொடு, கடலை, கள்,
     பயறொடு, சிலவகை ...... பணியாரம்,

பருகிடு பெருவயிறு உடையவர், பழமொழி
     எழுதிய கணபதி ...... இளையோனே!

பெருமலை உருவிட, அடியவர் உருகிட,
     பிணிகெட, அருள்தரு ...... குமரஈசா!

பிடியொடு களிறுகள் நடைஇட, கலைதிரள்
     பிணை அமர் திருமலை ...... பெருமாளே.


பதவுரை

      பரிவுடன் அழகிய பழமொடு --- அன்போடு நல்ல பழங்களுடன்,

     கடலை, கள் --- கடலை, தேன்,

     பயறொடு --- பயறு உடனே,

     சில பணியாரம் --- சிலவகைப்பட்ட பணியாரங்கள் முதலியவைகளை,

     பருகிடு --- உண்ணுகின்ற,

     பெறுவயிறு உடையவர் --- பெரிய வயிற்றினை உடையவரும்,

     பழமொழி எழுதிய --- பழமையான மொழியாகிய மகாபரதத்தை மேருமலையில் எழுதியருளிய,

     கணபதி இளையோனே --- விநாயகப் பெருமானுக்குத் தம்பியே!

      பெருமலை உருவிட --- பெரிய கிரவுஞ்சமலையை ஊடுருவவும்,

     அடியவர் உருகிட --- அடியார்கள் உள்ளம் உருகவும்,

     பிணிகெட அருள் தரு --- அடியார்களின் பிறவி நோய் தொலையவும் திருவருள் புரிகின்ற,

     குமர ஈசா --- குமாரக் கடவுளே!

      பிடியொடு களிறுகள் நடை இட --- பெண் யானைகளுடன் ஆண் யானைகள் உலாவவும்,

     கலை திரள் --- கலை மான்களின் கூட்டம்,

     பிணை அமர் --- பெண் மான்களுடன் விரும்புகின்ற,

     திருமலை --- திருப்பருப்பதத்தில் எழுந்தருளியுள்ள,


     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      ஒருபதும் இருபதும் அறுபதும் உடன் அறும் --- ஒரு பத்தும் இருபதும் அறுபதும் அவையுடன் ஆறும் கூடிய தொண்ணூற்று ஆறு தத்துவங்களின்,

     உணர்வு உற --- உண்மையை உணர்ந்து,

     இரு பதம் உளம் நாடி --- தேவரீருடைய இரண்டு திருவடிகளை உளத்தில் தியானித்து,

     உருகிட --- அதனால் உள்ளம் உருக,

     முழுமதி தழல் என ஒளிதிகழ் --- பூரண சந்திரனது தீப்போன்ற ஒளிவீசும்,

     வெளியொடு ஒளிபெற விரவாதே --- பரவெளியின் ஒளிபெறுமாறு அதில் அடியேன் கலந்து கொள்ளாமல்,

     தெருவினில் மரம் என --- தெருவில் மரம்போல் நின்று,

     எவரொடும் உரை செய்து திரிதொழில் --- யாரோடும் பேசிப் பேசித் திரிகின்ற தொழிலை,

     அவம் அது புரியாதே --- அடியேன் மேற்கொண்டு வீணாக அலையாது,

     திரு மகள் மருவிய --- இலட்சுமி தேவியின் புதல்வியாகிய வள்ளி நாயகி தழுவுகின்ற,

     திரள் புய --- திரண்ட புயங்களை உடையவரே!

     அறு முக --- ஆறுமுக சுவாமியே!

     தரிசனை பெற அருள் புரிவாயே --- தேவரீரது அருட்காட்சி பெற அடியேனுக்கு அருள் புரிவீர்.


பொழிப்புரை


         அன்புடன் இனிய பழங்கள், கடலை, தேன், பயறு சிலவகையான பணியாரங்கள் இவைகளை உண்ணுகின்ற பெருவயிற்றினை உடையவரும், பழமொழியான மகாபாரதத்தை எழுதியவருமாகிய கணபதியின் தம்பியே!

         பெரிய கிரவுஞ்சமலை ஊடுருவவும், அடியார்கள் உள்ளம் உருகவும், அவர்கள் பிறவிப் பிணி நீங்கவும் அருள் செய்கின்ற குமாரக் கடவுளே! பெண் யானையுடன் ஆண் யானைகள் உலாவவும், ஆண் மான்களுடன் பெண்மான்கள் விரும்பவும் விளங்குகின்ற, திருப்பருப்பதத்தில் வாழும் பெருமிதம் உடையவரே!

         தொண்ணூற்றாறு தத்துவங்களின் உண்மையை யுணர்ந்து, தேவரீருடைய திருவடியை உள்ளத்தில் தியானித்து உள்ளம் உருகவும், முழு நிலாவின் ஒளிபோல் திகழும் பரவெளியின் அருள் ஒளியைப் பெறவும் விரும்பாமல், வீதியில் மரம்போல் நின்றும் கண்டவருடன் பேசித் திரியும் பயனற்ற தொழிலைச் செய்யாமல் இலக்குமி தேவியின் புதல்வியாகிய வள்ளிபிராட்டி தழுவுகின்ற திரண்ட புயாசலங்களையுடையவரே! ஆறுமுகப் பெருமானே! உமது தரிசனையை அடியேன் பெறுமாறு திருவருள் புரியவேணும்.

விரிவுரை


ஒருபதும் இருபதுமு அறுபதும் உடனுஅறும் உணர்வுற:-

ஒருபது, இருபது, அறுபது, ஆறு (10+20+60+6) ஆக 96 தத்துவங்கள். தத்துவங்களின் தன்மையுணர்ந்து தத்துவ தரிசனை எனப்படும்.
ஆன்ம தத்துவம் 24, வித்தியா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஆக 36. மண் நீர் தீ காற்று வெளி என்ற ஐம்பூதங்களின் தன்மைகள் ஐயைந்து 25, வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4 ஆக 60 ஆக மொத்தம் 96.

இருபதம் :-

நான் என்ற அகங்காரம் அற்ற இடம் ஒரு திருவடி; எனது என்ற மமகாரம் அற்ற இடம் ஒரு திருவடி. இந்த அகங்காரம் மமகாரம் அற்ற நிலையில் நிற்றலே திருவடித் தியானமாகும்.

உளநாடி உருகிட:-

இறைவனை நினைந்து நினைந்து உள்ளம் அழலிடைப்பட்ட மெழுகுபோல் உருகுதல் வேண்டும். உள்ளம் உருகிய அடியார்களின் இருவினை இருளை முருகன் நீக்கி யருள் புரிவான் அன்றியும் அவர்கள் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றி வைப்பான்.

உருகு மடியவர் இருவினை யிருள்பொரும்
   உதயதினகர இமனரன் வலம் வரும்
   உலக முழுதொரு நொடியினில் வலம்வரு பெருமாளே.                                                                                                                       ---  (பகிர நினைவொரு) திருப்புகழ்

மறவாதவர் நினைப்பவை முடிக்கும் அவன்,
   உருகுமு அடியார் இருவினைத் தொகை அறுக்கும் அவன்”   ---  பூதவேதாள வகுப்பு.

முழுமதி தழலென ஒளிதிகழ் வெளியொடு ஒளிபெற:-

சிவயோகத்தால் பிரமரந்திரங் கடந்து சென்ற இடத்தில் ஆயிரம் ஆயிரம் சந்திரர்கள் உதித்தாலன்ன தண்ணிய ஒளி திகழும். அந்த வெளியில் மகிழ்ந்து அருட்காட்சியில் திகழ்ந்து மகிழ்வார்.

தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்திபெற
   சந்திர வெளிக்குவழி அருள்வாயே”             ---  (ஐங்கரனை) திருப்பகழ்.

பலகோடி வெண்மதி போலவே வருவாயே”
                                                                       ---  (மதனேவிய) திருப்புகழ்.

தெருவினில் மரமென எவரொடும் உரை செய்து திரிதொழில் அவமது புரியாதே:-

மரம் தன்னையும் அறியாது. தன்னை வைத்தவன் யார்? தண்ணீர் வார்த்து வளர்க்கின்றவன் யார்? என்பதையும் அறியாது நிற்கும். அதுபோல், ஆன்ம இலக்கணம் யாது? ஆன்மாவாகிய நமக்குத் தலைவன் யாவன்? அப்பரமனை அடையும் வழி யாது? உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பனவற்றை உணராது, நடக்கின்ற மரம் போல் திரிந்து, கண்ட மக்களுடன் வீண் பேச்சுக்களைப் பேசி அவத்தொழில் புரிகின்றனர்.

திருமகள் மருவிய:-

திரு-இலக்குமிதேவி. இலக்குமியின் புதல்வி வள்ளி நாயகி.

திருமாலின் கண்மலரில் பிறந்த சுந்தரவல்லி, முருகவேளின் கட்டளைப்படி தொண்டை நன்நாட்டில் வள்ளிமலையில் தவஞ் செய்துகொண்டிருந்தார். அங்கு நாராயணர் சிவ முனிவராகப் பிறந்து தவஞ் செய்து கொண்டிருந்தார். மகாலட்சுமியே மானாக வந்து உலாவினாள். அம் மானை அம் மாதவர் விரும்பி நோக்கினார். அம் மான் வயிற்றில் சுந்தரவல்லி கருவாகி, வள்ளிக்குழியில் பிறந்தாள். வள்ளிக் குழியில் பிறந்தபடியால் வள்ளி யென்ற நாமம் பெற்றாள்.

திருமாலின் அவதாரமாகிய உபேந்திரன் நம்பியாகப் பிறந்தான். நம்பிராஜன் வள்ளிக் குழியில் கிடந்து அழுது கொண்டிருந்த வள்ளி பிராட்டியைக் கொண்டுபோய் இனிது வளர்த்தான்.

பரிவுடன் அழகிய பழமொடு:-

பரிவு-அன்பு. அன்புடன் அடியார்கள் நிவேதிக்கின்ற நல்ல கனிகளை கணபதி உண்டு அவர்கட்கு அருள் புரிவார்.

கடலை கள்:-

நிலக்கடலை, வேர்க்கடலை, குண்டுக்கடலை என்ற பலவகையான கடலைகள். அன்றி, கடலை கள் எனப் பதச்சேதம் புரிந்து, கடலையும், கள்- தேனையும் என்றும் பொருள் கொள்ளலாம்.

 
பெறுவயிறு உடையவர்:-

அகில உலகங்களையும் தமது வயிற்றினுள் அடக்கியவர் என்ற குறிப்பை விநாயகருடைய பெருவயிறு உணர்த்துகின்றது.

பழமொழி எழுதிய கணபதி:-

பழமொழி-மகாபாரதம். வியாச முனிவர் பாட உலகம் உய்யும் பொருட்டு விநாயகமூர்த்தி வடமேருகிரியில் தமது கோட்டினால் எழுதியருளினார்.

இலகுகடலைகற் கண்டு தேனொடும்
   இரதமுறு நினைப் பிண்டி பாகுடன்
     இனிமையி னுகருற் றெம்பிரா னொரு   கொம்பினலே
எழுதென மொழியப் பண்டுபாரதம்
     வடகன சிகரச் சொம்பொன் மேருவில்
       எழுதிய பவளக் குன்று”
                                                                          --- (அலகிலவுணரை) திருப்புகழ்.

பாரதம் எழுதிய வரலாறு

கிருஷ்ணத்வைபாயனர் என்னும் வேதவியாசர் இமாசலத்தில் மூன்று ஆண்டுகள் யோகத்தில் அசைவற்றிருந்தனர். அந்த யோகக் காட்சியில் கண்ட பாரத வரலாற்றைச் சுலோக வடிவாகப் பாட வேண்டுமென்று துணிந்தனர். பாடுகின்ற கவிவாணன் பக்கலில் எழுதுகின்றவன் வேறு இருத்தல் அவசியம். பாடுகின்றவனே எழுதினால் பாடுகின்ற கவன சக்தி தடைப்படும். எழுதுகின்றவர் சிறந்த மதிநலம் வாய்ந்தவராக இருத்தல் அதனினும் அவசியம். பதங்களிலுள்ள எழுத்துக்களைச் சிறிது இடம் பெயர்த்து நிலை மொழியின் ஈற்றெழுத்தை வருமொழியோடு சேர்த்துவிட்டால் பேராபத்தாக முடிந்துவிடும். உதாரணமாக;

"மாதேவா சம்போ கந்தா" என்ற பதங்களை எழுதுகின்றவன், "மாதே வா சம்போகந் தா" என்று எழுதினால் எவ்வளவு பெரிய விபரீதமாக ஆகின்றது என்று பாருங்கள். 

ஆதலினால் விநாயகராகிய ஐந்துகர பண்டிதரே எழுதவல்லாரென்று வியாசர் நினைத்தனர். விநாயகமூர்த்தியை வேண்டிய தவ மிழைத்தனர். ஆனைமுகத்தண்ல் ஆகு வாகனமீது தோன்றி யருளினார். விநாயகர் விரைமலரடி மேல் வியாசர் வீழ்ந்து பன்முறை பணிந்து, “எந்தையே! அடியேன் பாரதம் பாட மேற்கொண்டிருக்கிறேன். அதனைத் தேவரீர் மேருகிரியில் எழுதி உதவிசெய்தல் வேண்டும்” என்று வேண்டிநின்றனர். விநாயகர் புன்னகை புரிந்து, “அன்பனே! நன்று நன்று. நின் எண்ணம் நன்று. நான் உன்னிடம் பாரதம் எழுத ஒப்புக் கொண்டேனாயின் எத்தனையோ அன்பர்களின் காரியங்களில் இடர்கெடுத்து உதவுதல் வேண்டியதற்குத் தடைபடுமல்லவா? அதுவும் நீ நூதனமாகப் பாடிக்கொண்டிருந்தால் பாரதம் பாடி முடிய எத்துணை ஆண்டுகள் செல்லுமோ? ஆதலின் இதற்கு நாம் உடன்பட மாட்டோம்” என்றனர்.

வியாசர், “ஆண்டவரே! அருட்கடலே! தேவரீரைத் தவிர இதனை எழுத வல்லார் வேறு இல்லை. வேண்டிய வரங்கொடுக்கும் கருணை வள்ளலாகிய நீர் இதனை மன்பதைகட்கெல்லாம் நலன் விளையும் பொருட்டு எழுதல் வேண்டும்” என்று வேண்டி வணங்கினார். விநாயகர், “அன்பனே! அங்ஙனமே நின் கருத்தின்படி நாம் எழுதுவோம். ஆனால் உனக்கும் எமக்கும் ஓர் உடன்படிக்கையிருத்தல் வேண்டும். அதாவது நாம் மிக்க வேகமாக எழுதுவோம். எமது எழுத்தாணி ஒழியாமல் நீ சொல்ல வேண்டும். சிறிது தடைபட்டாலும் நாம் எழுதுவதை நிறுத்தி விடுவோம்” என்றனர். வியாசர், “எம்பெருமானே! அங்ஙனமே மிக்க விரைவுடன் கூறுவேன்; ஆனால் அடியேன் கூறும் சுலோகங்களுக்குப் பொருள் தெரிந்து கொண்டு எழுதுதல் வேண்டும்” என்றார். விநாயகரும் அதற்கு உடன்பட்டனர்., வியாசர் விநாயகரைத் தியானித்துப்பாடத் தொடங்கினார். திருவருள் துணைசெய்ய வேகமாகப் பாடுவாராயினார். இடையில் மிக்கக் கடினமான பதங்களுடைய ஒரு சுலோகத்தைச் சொன்னார். விநாயகர் சற்று அதன் பொருளைச் சிந்திப்பதற்குள் பல்லாயிரம் சுலோகங்களை மனதில் சிந்தனை செய்து கொண்டனர். அவைகளை மிக்க விரைவுடன் கூறிய பின் மீண்டும் ஒரு கடின பதங்களமைந்த சுலோகத்தைக் கூறினார். ஐயங்கரனார் அதன் பொருளைச் சிந்திப்பதற்குள் பல சுலோகங்களை உள்ளத்தில் ஆவாகனம் பண்ணிக் கொண்டனர். இப்படியாக விநாயகர் சிந்தித்து எழுதும் பொருட்டு வியாசர் கூறிய சுலோகங்கள் எண்ணாயிரத்து எண்ணூறு. வியாசர், “இதற்குப் பொருள் எனக்கு தெரியும்; என் மைந்தன் சுகனுக்குத் தெரியும்., சஞ்சயனுக்குத் தெரியுமோ தெரியாதோ” என்று அநுக்கிரமணிகா பர்வதத்தில் கூறியிருக்கின்றனர், வியாசர் மொத்தம்பாடிய சுலோகங்கள் 60 லட்சம்.

பகைகொள் துரியோதனன் பிறந்து
    படைபொருத பாரதந்தெரிந்து
      பரியது ஒரு கோடு கொண்டு சண்ட  வரைமீதே
 பழுதுஅற வியாசன்அன்று இயம்ப
    எழுதிய விநாயகன் சிவந்த
       பவளமத யானை பின்பு வந்த        முருகோனே”     --- (குகையில்) திருப்புகழ்.
  
பிணிகெட அருள் தரு ---

அடியார்களுடைய உடற்பிணிகளையும் உயிர்ப்பிணிகளையும் பிறவி நோயையும் அகற்றும் மருத்துவ மன்னர் முருகவேள். அதனால்,

பரரோக வயித்தியநாதப் பெருமாளே”

என்கின்றார் திருத்தணித் திருப்புகழில்.

திருமலை:-

திருமலை என்பது திருப்பருப்பதம் என்ற திருத்தலம். இது ஸ்ரீசைலம் எனவும் வழங்கும். அரிய திருத்தலம். சிலாதனர் செய்த வேள்வியில் திருநந்திதேவர், திரு அவதாரம் புரிந்த இடம். இங்குள்ள சுவாமி மல்லிகார்ச்சுனர். பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று. ஸ்ரீசைலத்தின் சிகரத்தைத் தரிசித்தவர்க்கு மறுபிறப்பு இல்லை என்று சிவாகமம் கூறுகின்றது.

ஸ்ரீசைல சிகரம் த்ருஷ்ட்வா புனர்ஜன்ம நவித்யதே”

மிகுந்த புண்ணியம் புரிந்தவர்க்கே இத்திருத்தலத்தைத் தரிசிக்கும் பேறு கிடைக்கும். மூவர் தேவாரங்களும் பெற்றது.

கருத்துரை

திருப்பருப்பதம் மேவிய திருமுருகா! உமது தரிசனையைத் தந்து அருள்வாய்.

No comments:

Post a Comment

9. விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

  "திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்      இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்      பகலாமோ? உறவாய் வந்த பெருவ...