அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குடருமல சலமுமிடை (பொது)
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன ...... தனதான
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு
கொழுவுமுதி ரமும்வெளிறு ...... அளறுமாகக்
கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி
குமுகுமென இடைவழியில் ...... வரநாறும்
உடலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக
வுலகமரு ளுறவரும் ...... அரிவையாரன்
பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன
தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே
வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய
வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென
மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக்
கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில
ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
குடரும், மலசலமும் இடை இடை தடியும் உடை அளவு
கொழுவும் உதிரமும் வெளிறு ...... அளறுமாக,
கொளகொள என அளவு இல் புழு நெளுநெளு என, விளைகுருதி
குமுகுகு என, இடைவழியில் ...... வரநாறும்
உடலில், மணம் மலிபுழுகு தடவி, அணி கலம் இலக
உலகம் மருள் உற வரும் ...... அரிவையார்அன்பு
ஒழிய, வினை ஒழிய, மனம்ஒழிய, இருள் ஒழிய, எனது
ஒழிவு இல் அகல் அறிவை அருள் ...... புரிவாயே.
வடகனக சயிலம் முதலிய சயிலம் என, நெடிய
வடிவுகொளும் நெடியவிறல் ...... மருவாரை
வகிரும் ஒரு திகிரி என, மதி முதிய பணிலம் என,
மகரசல நிதிமுழுகி ...... விளையாடி,
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என, அகில
ககனமுகடு உறநிமிரும் ...... முழுநீலக்
கலப கக மயில் கடவி, நிருதர் கஜ ரத துரக
கடகம் உடன் அமர் பொருத ...... பெருமாளே.
பதவுரை
வடகனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொ(ள்)ளு நெடிய விறல் மருவாரை --- வடக்கே உள்ள பொன்மலை ஆகிய மேரு முதலிய மலைகள் என்னும்படி பெருத்த வடிவைக் கொண்டு மிக்க வலிமை வாய்ந்த பகைவர்களை
வகிரும் ஒரு திகிரி என --- பிளந்து எறியும் திருமாலின் ஒப்பற்ற சக்கரப்படை என்றும்,
மதி முதிய பணிலம் என --- முழுநிலவைப் போன்ற ஒளியை உடைய (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கு என்றும்,
மகர சலநிதி முழுகி விளையாடி கடல் உலகை அளவுசெய வளரும்முகில் என --- மகர மீன்கள் உள்ள கடலில் முழுகி விளையாடி, கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட நீண்ட திரிவிக்கிரமனாக வளர்ந்த மேகநிறத் திருமால் என்றும் சொல்லும்படியாக,
அகில ககனமுகடு உற நிமிரும் முழுநீலக் கலப ககம் மயில் கடவி --- இந்த உலகமும் வானமுகடும் பொருந்தும்படி நிமிர்ந்து எழுகின்ற முழுநீல நிறமுள்ள தோகையினை உடைய பறவையாகிய மயிலை விரைந்து செலுத்தி,
நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே --- அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!
குடரும் மலசலமும் இடை இடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக ... குடல், மலம், நீர் நெருங்கியதாய், இடையிடையே மாமிசமும் உடையதாய், அளவுக்கு ஏற்ப கொழுப்பும், குருதியும் நிறம் கெட்டு வெளுத்து குழம்பு போல் ஆக,
கொள கொள என அளவுஇல் புழு நெளு நெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும் உடலின் --- கொள கொள என்று ஆகி கணக்கில்லாத புழுக்கள் நெளுநெளு என்று நெளிய, உண்டாகும் இரத்தம் குமுகுமு என்று பெருகும் வழியின் மத்தியில் வரும்போதே துர்நாற்றம் வீசும் உடலில்,
மணம்மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் --- நறுமணம் மிக்க புனுகு சட்டம் முதலான மணப் பொருள்களைப் பூசி, அதன் மேல் ஆபரணங்கள் விளங்க, உலக மக்கள் காம மயக்கம் கொள்ளும்படி வருகின்ற விலைமாதர்களின் (மீது வைத்த)
அன்பு ஒழிய, வினை ஒழிய, மனம் ஒழிய, இருள் ஒழிய, எனது ஒழிவில், அகல் அறிவை அருள் புரிவாயே --- மோகம் நீங்க, அந்த மோகத்திற்கு ஏதுவாகிய தீவினை அடியேனை விட்டு ஒழிய, மனம் ஒடுங்க, அஞ்ஞான இருள் அகல, யான், எனது எனப்படும் அகங்கார மகங்காரங்கள் நீங்குவதால் பெருகி எழும் ஞானத்தை அருள் புரிவாயாக.
No comments:
Post a Comment