"மேட்டுக்கே விதைத்த விதை, வீணருக்கே
செய்த நன்றி, மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்தவிலை, பரத்தையர்க்கே
தேடியிட்ட வண்மை யெல்லாம்
பாட்டுக்கே அருள்புரியும் தண்டலையார்
வீதிதொறும் பரப்பி டாமல்
காட்டுக்கே யெறித்தநிலா, கானலுக்கே
பெய்தமழை கடுக்குந் தானே!"
இதன் பொருள் ---
மேட்டுக்கே விதைத்த விதை - மேட்டிலே தூவிய விதையும், வீணருக்கே செய்த நன்றி - சோம்பேறிகட்குச் செய்த நன்மையும், மேயும் பட்டி மாட்டுக்கே கொடுத்த விலை - (பயிரையெல்லாம்) மேய்கின்ற, கட்டுக்கு அடங்காத மாட்டுக்குக் கொடுத்த விலையும், பரத்தையர்க்கே தேடியிட்ட வண்மை - விலைமாதருக்கு உழைத்துக் கொடுத்த கொடையும் (செல்வமும்), எல்லாம் - ஆகிய இவை, யாவும், காட்டுக்கே எறித்த நிலா - காட்டிலே (ஒருவருக்கும் பயனின்றிப்) பரப்பிய நிலாவையும், கானலுக்கே பெய்த மழை - கடற்கரையிலே பெய்த மழையையும், கடுக்கும் - ஒக்கும்.
மேட்டில் விதைத்த விதை மழை பெய்தாலும் நீர் பாய்ச்சினாலும் பள்ளத்திலே சென்று விழுந்துவிடும். கட்டுக்கடங்காத மாட்டைப் பட்டிமாடு என்பது வழக்கம். ‘காட்டுக்கு எறித்த நிலவும் கானலுக்குப் பெய்த மழையும்' என்பது பழமொழி.
No comments:
Post a Comment