57. கலிகாலக் கொடுமை

 


"தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்;உயர்

     தந்தையைச் சீறுகாலம்;

சற்குருவை நிந்தைசெய் காலம்;மெய்க் கடவுளைச்

     சற்றும்எண் ணாதகாலம்;


பேய்தெய்வம் என்றுப சரித்திடுங்காலம்;

     புரட்டருக் கேற்றகாலம்;

பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்;நற்

     பெரியர்சொல் கேளாதகாலம்;


தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்'மிகு

     சிறியவன் பெருகுகாலம்;

செருவில்விட் டோடினார் வரிசைபெறு காலம்;வசை

     செப்புவோர்க் குதவுகாலம்;


வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு

     வாய்த்தகலி காலம், ஐயா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"


இதன் பொருள் ---


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் - அன்னை மொழியை ஏற்றுக்கொள்ளாத காலம்; 

உயர் தந்தையைச் சீறுகாலம் - பெருமைமிக்க தந்தையை வெறுத்து உரைக்குங் காலம்; 

சற்குருவை நிந்தைசெய் காலம் - நல்லாசிரியனைப் பழிக்கின்ற காலம்; 

கடவுளைச் சற்றும் எண்ணாத காலம் - கடவுளைச் சிறிதும் நினையாத காலம்; 

பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் - பேயைத் தெய்வமென்று போற்றும் காலம்; 

புரட்டருக்கு ஏற்ற காலம் - ஏமாற்றுகின்றவர்க்குத் தக்க காலம்; 

பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் - மனைவி வைதாலும் பொறுத்துக்கொள்ளும் காலம்; 

நல் பெரியர் சொல் கேளாத காலம் - நல்ல பெரியோர் மொழியை ஏற்றுக்கொள்ளாத காலம்; 

பெரியவன் தேய்வுடன் சிறுமை உறு காலம் - உயர்ந்தவன் கலங்கித் தாழ்வு உறும் காலம்; 

மிகு சிறியவன் பெருகு காலம் - மிகச் சிறியவன் பெருமையுறுங் காலம். 

செருவில் விட்டு ஓடினோர் வரிசை பெறுகாலம் - போரிலே தோற்று ஓடியவர்கள் சிறப்புப் பெறுங் காலம்; 

வசை செப்புவோர்க்கு உதவு காலம் - இழிவாகப் பேசுவோர்க்கு உதவி செய்யுங் காலம்; 

ஐயா! வாய்மதம் பேசிவிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் - ஐயனே! இறுமாப்பான மொழிகளைக்கூறும் ஒழுங்கீனர்க்குப் பொருந்திய கலிகாலம்.


No comments:

Post a Comment

பொது --- 1101. குதறுமுனை அறிவுகொடு

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குதறும்முனை அறிவுகொடு (பொது) முருகா!  திருவடி ஞானத்தை அடியேனுக்கு அருள்வீராக. தனதனன தனதனன தனதனன தனதனன   ...