"தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்;உயர்
தந்தையைச் சீறுகாலம்;
சற்குருவை நிந்தைசெய் காலம்;மெய்க் கடவுளைச்
சற்றும்எண் ணாதகாலம்;
பேய்தெய்வம் என்றுப சரித்திடுங்காலம்;
புரட்டருக் கேற்றகாலம்;
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்;நற்
பெரியர்சொல் கேளாதகாலம்;
தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்'மிகு
சிறியவன் பெருகுகாலம்;
செருவில்விட் டோடினார் வரிசைபெறு காலம்;வசை
செப்புவோர்க் குதவுகாலம்;
வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு
வாய்த்தகலி காலம், ஐயா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!"
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் - அன்னை மொழியை ஏற்றுக்கொள்ளாத காலம்;
உயர் தந்தையைச் சீறுகாலம் - பெருமைமிக்க தந்தையை வெறுத்து உரைக்குங் காலம்;
சற்குருவை நிந்தைசெய் காலம் - நல்லாசிரியனைப் பழிக்கின்ற காலம்;
கடவுளைச் சற்றும் எண்ணாத காலம் - கடவுளைச் சிறிதும் நினையாத காலம்;
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் - பேயைத் தெய்வமென்று போற்றும் காலம்;
புரட்டருக்கு ஏற்ற காலம் - ஏமாற்றுகின்றவர்க்குத் தக்க காலம்;
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் - மனைவி வைதாலும் பொறுத்துக்கொள்ளும் காலம்;
நல் பெரியர் சொல் கேளாத காலம் - நல்ல பெரியோர் மொழியை ஏற்றுக்கொள்ளாத காலம்;
பெரியவன் தேய்வுடன் சிறுமை உறு காலம் - உயர்ந்தவன் கலங்கித் தாழ்வு உறும் காலம்;
மிகு சிறியவன் பெருகு காலம் - மிகச் சிறியவன் பெருமையுறுங் காலம்.
செருவில் விட்டு ஓடினோர் வரிசை பெறுகாலம் - போரிலே தோற்று ஓடியவர்கள் சிறப்புப் பெறுங் காலம்;
வசை செப்புவோர்க்கு உதவு காலம் - இழிவாகப் பேசுவோர்க்கு உதவி செய்யுங் காலம்;
ஐயா! வாய்மதம் பேசிவிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் - ஐயனே! இறுமாப்பான மொழிகளைக்கூறும் ஒழுங்கீனர்க்குப் பொருந்திய கலிகாலம்.
No comments:
Post a Comment