அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வதைபழக மறலி (பொது)
முருகா!
விலைமாதர் கண்வலையில் வீழ்ந்து துன்புறாமல்,
தேவரீர் திருக்கண் பார்த்து அருளவேண்டும்.
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
வயிரமர கதமகர ...... மளவாக
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
வளையிளைஞ ருயிர்கவர ...... வருமாய
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா
இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன
திருநயன கருணைசிறி ...... தருள்வாயே
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை
பயறுபெரு வயிறுநிறை ...... யவிடாமுப்
பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை
பரியதனி யெயிறுகொடு ...... குருநாடர்
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய
கடலுலகு நொடியில்வரு ...... மதிவேகக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வதைபழகு அ மறலி, விறல் மதனன், வழி படுதும் என
வயிர மரகத மகரம் ...... அளவாக,
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலகவிழி
வளை இளைஞர் உயிர் கவர ...... வருமாய,
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி,
எழுபிறவி நெறி ஒழிய ...... வழிகாணா,
இடர்கள் படு குருடன் எனை அடிமைகொள, மகிழ்வொடு உனது
இரு நயன கருணை சிறிது ...... அருள்வாயே.
பத யுகள மலர்தொழுது, பழுது இல் பொரி, அவல், துவரை,
பயறு, பெரு வயிறு நிறைய ...... விடா, முப்
பழமும் இனிது உதவி முனி பகர, வட சிகரிமிசை
பரியதனி எயிறுகொடு, ...... குருநாடர்
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட, நெடிய
கடல் உலகு நொடியில் வரும், ...... அதிவேகக்
கலப கக மயில் கடவி, நிருதர் கஜ ரத துரக
கடகம் உடன் அமர் பொருத ...... பெருமாளே.
பதவுரை
பதயுகள மலர் தொழுது --- தாமரை மலர் போன்ற திருவடி இணையை வணங்கி,
பழுது இல் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா --- மாசில்லாத (தூய) பொரி, அவல், துவரை, பயறு, இவற்றைப் பெரு வயிற்றில் நிறைய நிவேதித்து,
முப்பழமும் இனிது உதவி --- மா, பலா, வாழை என்னும் முக்கனிகளையும் இனிய மனத்துடன் நிவேதித்து,
முனி பகர --- (வியாச) முனிவர் சொல்ல,
வட சிகரிமிசை --- வடதிசையில் உள்ள மேருமலையில் இருந்து,
பரிய தனி எயிறு கொடு --- பருத்த, சிறந்த தந்தத்தைக் கொண்டு,
குருநாடர் கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட --- குரு நாட்டவர்களான பாண்டவர்களின் வரலாறு முழுதும் எழுதிய ஒப்பற்ற விநாயகன் ஆகிய யானை பிளிறிடும்படியாக
நெடிய கடல் உலகு நொடியில் வரும் --- நீண்ட கடலால் சூழப்பட்டு உள்ள உலகத்தை ஒரு நொடியில் வலமாக வருகின்ற,
அதிவேகக் கலப கக மயில் கடவி --- அதிக வேகத்தைக் கொண்டதும், தோகையினை உடைய பறவை ஆகிய மயிலினைச் செலுத்தி,
நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே --- அசுரர்களின் யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நாற்படைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!
வதை பழகு அ மறலி --- உயிரை வதைக்கின்ற தொழிலையே செய்து வருகின்ற அந்த எமனும்,
விறல் மதனன் --- வெற்றியினை உடைய மன்மதனும்,
வழிபடுதும் என --- (நாங்கள் உன் கொடுமையைக் கற்றறிய உன்னை) வழிபடுவோம் என்று சொல்லத்தக்க வகையில்
வயிர மரகத மகரம் அளவாக --- வயிரத்தாலும், பச்சை மரகதத்தாலும் ஆன மகரமீன் போன்ற வடிவில்,
வரி சிதறி --- வரிகள் படர்ந்து,
விடம் அளவி வளரும் --- விடத்திலே தோய்ந்து வளர்ந்துள்ள.
இரு கலகவிழி வளை --- (காமுகர் உள்ளத்திலே) கலகத்தை உண்டு பண்ணுகின்ற இரண்டு கண்களைக் கொண்டு வளைத்து,
இளைஞர் உயிர் கவர வரும் மாய --- இளைஞர்களின் உயிரைக் கொள்ளை கொள்ளும் மாயக்காரிகளும்,
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி --- தங்கள் இதயத்தின் உள்ள கருத்தைப் பிறர் அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான விலைமாதர்களின் வழியிலே நடந்து,
எழுபிறவி நெறி ஒழிய வழிகாணா --- எடுத்த பிறவி நெறியானது ஒழிதற்கான வழியைக் காணாது,
இடர்கள்படு குருடன் எனை அடிமைகொள --- துன்பத்தை அனுபவிக்கின்ற (அறிவற்ற) குருடனாகிய அடியேனை அடிமை கொள்வதற்கு,
மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே --- திருவுள்ளம் மகிழ்ந்து தேவரீரது இரு கண்களைக் கொண்டு கருணையுடன் சிறிதே பார்த்து அருள் புரிவீராக.
பொழிப்புரை
தாமரை மலர் போன்ற திருவடி இணையை வணங்கி, மாசில்லாத (தூய) பொரி, அவல், துவரை, பயறு, இவற்றைப் பெரு வயிற்றில் நிறைய நிவேதித்து, மா, பலா, வாழை என்னும் முக்கனிகளையும் இனிய மனத்துடன் நிவேதித்து, வியாச முனிவர் சொல்ல, வடதிசையில் உள்ள மேருமலையில் இருந்து, பருத்த, சிறந்த தந்தத்தைக் கொண்டு, குரு நாட்டவர்களான பாண்டவர்களின் வரலாறு முழுதும் எழுதிய ஒப்பற்ற விநாயகன் ஆகிய யானை பிளிறிடும்படியாக, நீண்ட கடலால் சூழப்பட்டு உள்ள உலகத்தை ஒரு நொடியில் வலமாக வருகின்ற, அதிக வேகத்தைக் கொண்டதும், தோகையினை உடைய பறவை ஆகிய மயிலினைச் செலுத்தி அசுரர்களின் யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நாற்படைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!
உயிரை வதைக்கின்ற தொழிலையே செய்து வருகின்ற அந்த எமனும், வெற்றியினை உடைய மன்மதனும், எங்களது தொழிலை மேலும் சிறப்பாகச் செய்ய, நாங்கள் உன் கொடுமையைக் கற்றறிந்து உன்னை வழிபடுவோம் என்று சொல்லத்தக்க வகையில், வயிரத்தாலும், பச்சை மரகதத்தாலும் ஆன மகரமீன் போன்ற வடிவில், வரிகள் படர்ந்து, விடத்திலே தோய்ந்து வளர்ந்துள்ள. காமுகர் உள்ளத்திலே கலகத்தை உண்டு பண்ணுகின்ற இரண்டு கண்களைக் கொண்டு, இளைஞர்களை வளைத்து, அவரது உயிரைக் கொள்ளை கொள்ளுகின்ற மாயக்காரிகளும், தங்கள் இதயத்தின் உள்ள கருத்தைப் பிறர் அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான விலைமாதர்களின் வழியிலே நடந்து, எடுத்த பிறவி நெறியானது ஒழிதற்கான வழியைக் காணாது, துன்பத்தை அனுபவிக்கின்ற அறிவற்ற குருடனாகிய அடியேனை அடிமை கொள்வதற்கு, திருவுள்ளம் மகிழ்ந்து தேவரீரது இரு கண்களைக் கொண்டு கருணையுடன் சிறிதே பார்த்து அருள் புரிவீராக.
விரிவுரை
இப் பாடலின் முற்பகுதியில் அடிகளார் விலைமாதர்களின் கண்களைக் குறித்து விளக்கி, அவர்களால் காமுகர்கள் படுகின்ற துன்பத்தை விளக்கினார். இதனால், பிறவிநெறியில் இருந்து ஈடேற வழி காணாது துன்புறுகின்ற உயிர்களைக் காப்பாற்ற இறைவன் திருக்கண் நோக்கம் ஒன்றே வழி எனவும் காட்டினார்.
இடர்கள்படு குருடன் எனை அடிமைகொள ---
அறிவுக் கண் இல்லாத குருடன்.
பதயுகள மலர் தொழுது ---
உகளம் - இரண்டு.
மலர் - "பூ எனப்படுவது பொறிவாழ் பூவே" என்று நால்வரு நான்மணி மாலையில் வரும். மலர் என்றாலே தாமரை மலரைத் தான் குறிக்கும்.
பழுது இல் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா, முப்பழமும் இனிது உதவி ---
குணங்கள் மூன்று --- சத்துவம், இராஜசம், தாமதம் என்பன. இந்த முக்குணங்களும் உண்ணும் உணவினாலேயே விளைகின்றன. குண வேற்றுமையாலேயே மனிதனுக்கு உயர்வு தாழ்வுகள் ஏற்படுகின்றன.
மது மாமிச உணவினால் தாமத குணமும், வெள்ளுள்ளி, வெங்காயம், முள்ளங்கி, சுரைக்காய் முதலிய உணவுகளினால் இராஜச குணமும், கடலை, அவல், துவரை, அவரை, தேன் முதலிய உணவுகளினால் சத்துவ குணமும் உண்டாகும்.
மூலாதாரத்தில் எழுந்தருளி உள்ள விநாயகப் பெருமானுக்கு சத்துவகுண பதார்த்தங்களை நிவேதிக்க வேண்டும். அவைகளால் அவர் நமக்கு சத்துவகுணத்தைத் தருகின்றார். என்பதைக் குறிக்கும்.
முனி பகர ---
முனிவர்களில் சிறந்தவர் வியாச முனிவர் சொல்ல
வட சிகரிமிசை ---
சிகரி - மலை. வடசிகரி - வடதிசையில் உள்ள மேருமலை.
குருநாடர் கதை முழுதும் எழுதும் ஒரு களிறு ---
வேதவியாசர் இமாசலத்தில் மூன்று ஆண்டுகள் யோகத்தில் அசைவற்று இருந்தார். அந்த யோகக் காட்சியில் கண்ட பாரத வரலாற்றைப் பாடல் வடிவாகப் பாடவேண்டுமென்று துணிந்தார். பாடுகின்ற கவிவாணன் பக்கத்தில் எழுதுகின்றவன் இருத்தல் அவசியம். பாடுகின்றவனே எழுதினால் பாடுகின்ற கவனம் தடைப்படும். எழுதுகின்றவர் சிறந்த மதி நலம் வாய்ந்தவராக இருத்தல் அதனினும் அவசியம். பதங்களிலுள்ள எழுத்துக்களைச் சிறிது இடம் பெயர்த்து நிலை மொழியின் ஈற்றெழுத்தை வருமொழியோடு சேர்த்துவிட்டால் பேராபத்தாக முடிந்துவிடும். உதாரணமாக;
"மாதேவா சம்போ கந்தா" என்ற பதங்களை எழுதுகின்றவன் "மாதே வா சம்போகந் தா" என்று எழுதினால் எவ்வளவு பெரிய விபரீதமாக ஆகின்றது என்று பாருங்கள்.
ஆதலினால் ஆனைமுகவர் ஆகிய ஐந்துகர பண்டிதரே எழுதவல்லகவர் என்று வியாசர் எண்ணினார். விநாயகமூர்த்தியை வேண்டிய தவம் இருந்தார். ஆனைமுகத்து அண்ணல் ஆகு (பொருச்சாளி) வாகனம் மீது தோன்றி அருளினார். விநாயகப் பெருமானின் திருவடி மலர் மேல் வியாசர் வீழ்ந்து பன்முறை பணிந்து, “எந்தையே! அடியேன் பாரதம் பாட மேற்கொண்டிருக்கிறேன். அதனைத் தேவரீர் மேருகிரியில் இருந்து எழுதி உதவிசெய்தல் வேண்டும்” என்று வேண்டி நின்றார். விநாயகர் புன்னகை புரிந்து, "அன்பனே! நன்று நன்று. உமது எண்ணம் நன்று. நான் உன்னிடம் பாரதம் எழுத ஒப்புக் கொண்டேனாயின் எத்தனையோ அன்பர்களின் காரியங்களில் இடர் கெடுத்து உதவுதல் வேண்டியதற்குத் தடைபடுமல்லவா? அதுவும் நீ நூதனமாகப் பாடிக்கொண்டிருந்தால் பாரதம் பாடி முடிய எத்துணை ஆண்டுகள் செல்லுமோ? ஆதலின் இதற்கு நாம் உடன்பட மாட்டோம்" என்றனர்.
வியாசர், "பெருமானே! அருட்கடலே! தேவரீரைத் தவிர இதனை எழுத வல்லார் வேறு இல்லை. வேண்டிய வரங்கொடுக்கும் கருணை வள்ளலாகிய நீர் இதனை மன்பதைகட்கெல்லாம் நலன் விளையும் பொருட்டு எழுதுதல் வேண்டும்" என்று வேண்டி வணங்கினார்.
விநாயகர், "அன்பனே! அங்ஙனமே உனது கருத்தின்படி நாம் எழுதுவோம். ஆனால் உனக்கும் எமக்கும் ஓர் உடன்படிக்கை இருத்தல் வேண்டும். அதாவது நாம் மிக்க வேகமாக எழுதுவோம். எமது எழுத்தாணி ஒழியாமல் நீ சொல்ல வேண்டும். சிறிது தடைபட்டாலும் நாம் எழுதுவதை நிறுத்திவிடுவோம்" என்றார்.
வியாசர், "எம்பெருமானே! அங்ஙனமே மிக்க விரைவுடன் கூறுவேன். ஆனால் அடியேன் கூறும் சுலோகங்களுக்குப் பொருள் தெரிந்து கொண்டு எழுதுதல் வேண்டும்” என்றார். விநாயகரும் அதற்கு உடன்பட்டார்.
வியாசர் விநாயகரைத் தியானித்துப் பாடத் தொடங்கினார். திருவருள் துணைசெய்ய வேகமாகப் பாடுவாராயினார். இடையில் மிக்கக் கடினமான பதங்களுடைய ஒரு சுலோகத்தைச் சொன்னார். விநாயகர் சற்று அதன் பொருளைச் சிந்திப்பதற்குள் பல்லாயிரம் சுலோகங்களை மனதில் சிந்தனை செய்து கொண்டார். அவைகளை மிக்க விரைவுடன் கூறிய பின் மீண்டும் ஒரு கடின பதங்கள் அமைந்த சுலோகத்தைக் கூறினார். ஐங்கரனார் அதன் பொருளைச் சிந்திப்பதற்குள் பல சுலோகங்களை உள்ளத்தில் ஆவாகனம் பண்ணிக் கொண்டார். இப்படியாக விநாயகர் சிந்தித்து எழுதும் பொருட்டு வியாசர் கூறிய சுலோகங்கள் எண்ணாயிரத்து எண்ணூறு. வியாசர் மொத்தம் பாடிய சுலோகங்கள் 60 இலட்சம்.
"பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்,
கோடு ஒடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்,
பால் நிறக் கணேசர் குவா குவாகனர் ...... இளையோனே!"
"இலகு கடலை கல்கண்டு, தேனொடும்,
இரதம் உறு தினைப் பிண்டி, பாகுடன்,
இனிமையின் நுகருற்ற, எம் பிரான், ஒரு .......கொம்பினாலே
எழுது என மொழிய, பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று, தாதையை ...... அன்றுசூழ
வலம்வரும் அளவில், சண்ட மாருத
விசையினும் விசை உற்று, எண் திசாமுக
மகிதலம் அடையக் கண்டு, மாசுணம் ......உண்டு உலாவு
மரகத கலபச் செம்புள் வாகனம்
மிசைவரு முருக! சிம்புளே! என
மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு...... தம்பிரானே."
“பகைகொள் துரியோதனன் பிறந்து
படைபொருத பாரதந்தெரிந்து
பரியது ஒரு கோடு கொண்டு சண்ட வரைமீதே
பழுதுஅற வியாசன்அன்று இயம்ப
எழுதிய விநாயகன் சிவந்த
பவளமத யானை பின்பு வந்த முருகோனே”
எனவரும் திருப்புகழ்ப் பாடல்களையும் கருத்தில் கொள்ளுதல் நலம்.
உலகை ஒரு நொடியில் வலமாக வருகின்ற மயிலின் வேகத்தைக் கண்டு யானை அஞ்சிப் பிளறினதாம்.
அதிவேகக் கலப கக மயில் கடவி ---
கலபம் - தோகை. ககம் - பறவை.
நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே ---
கடகம் - படை.
கருத்துரை
முருகா! விலைமாதர் கண்வலையில் வீழ்ந்து துன்புறாமல், தேவரீர் திருக்கண் பார்த்து அருளவேண்டும்.
No comments:
Post a Comment