"மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினத்து இருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
வனந்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"
இதன் பதவுரை ---
மனம் - உள்ளமானது, போனபோக்கு எல்லாம் - சென்றவாறெல்லாம், போக வேண்டாம் - செல்லாதே.
மாற்றானை - பகைவனை, உறவு என்று - உறவினன் என்று, நம்ப வேண்டாம் - தெளியாதே.
தனம் தேடி - பொருளை (வருந்தித்) தேடி, உண்ணாமல் - நுகராமல், புதைக்கவேண்டாம் - மண்ணில் புதைக்காதே.
தருமத்தை - அறம் செய்தலை, ஒருநாளும் - ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறக்காதே.
சினம் - வெகுளியை, தேடி - தேடிக்கொண்டு, அல்லலையும்- (அதனால்) துன்பத்தினையும், தேட வேண்டாம் - தேடாதே.
சினந்து இருந்தார் - சினம் கொண்டு இருந்தாருடைய, வாசல்வழி - வாயில் வழியாக, சேறல் வேண்டாம் - செல்லாதே.
வனம் தேடும் - காட்டின்கண் (விலங்கு முதலியன) தேடித் திரியும், குறவருடை - குறவருடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.
பொழிப்புரை---
மனம்போன வழியில் தான் போகாமல் தன்வழியில் மனத்தைநிறுத்த வேண்டும். "எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். அதுபோல நெஞ்சை விளித்து, `மனம்போன போக்கெல்லாம்' என்றார்.
பகைவன் உறவினன் ஆயினும் அவனை நம்பலாகாது. பகைவன் நண்பன்போல் நடித்தாலும் அவனை நண்பன் என்று நம்பிவிடக்கூடாது.
பொருளைத் தேடி அனுபவிக்காமல் புதைத்து வைத்தல் கூடாது. உண்ணாமல் என்பதனோடு அறஞ்செய்யாமல் என்பதும் சேர்த்துக்கொள்க. நாள்தோறும் அறத்தினை மறவாது செய்தல்வேண்டும். மறக்கவேண்டாம் என்றமையால், நினைந்து செய்தல்வேண்டும் என்பது ஆயிற்று.
கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பம் அடையலாகாது. கோபம் கொண்டு இருந்தாருடைய வீட்டின் வழியாக நடத்தல் கூடாது.
No comments:
Post a Comment