"குறும்பெண்ணா துயர்ந்தநல்லோர் ஆயிரஞ்சொன்
னாலும்அதைக் குறிக்கொ ளாமல்
வெறும்பெண்ணா சையிற்சுழல்வேன் மெய்ஞ்ஞானம்
பொருந்தியுனை வேண்டேன்! அந்தோ!
உறும்பெண்ணார் அமுதிடம்சேர் தண்டலைநீள்
நெறியே! என் உண்மை தேரில்
‘எறும்பெண்ணா யிரம்அப்பா! கழுதையும்கை
கடந்ததெனும்' எண்ணம் தானே!"
இதன் பொருள் ---
உறும் பெண்ணாள் அமுது இடம் சேர் தண்டலை நீள் நெறியே - சிறந்த பெண்களின் அமுது ஆகிய உமையம்மையார் இடப்பக்கத்தில் பொருந்தி உள்ள, திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் 'நீள்நெறி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!
உயர்ந்த நல்லோர் குறும்பு எண்ணாது ஆயிரம் சொன்னாலும் - சிறந்த நற்பண்பு உடையோர் குறும்பாக நினையாமல் ஆயிரம் (நன்மொழிகளைக்) கூறினாலும், அதைக் குறிக் கொளாமல் - அவர்கள் கூறுவதை மனத்தில் கொள்ளாமல், வெறும் பெண் ஆசையில் சுழல்வேன் - வீணே பெண்ணின் காமத்தால் அலைவேன். உனை மெய்ஞ்ஞானம் பொருந்தி வேண்டேன் - தேவரீரை உண்மை அறிவுடன் வழிபடேன். அந்தோ - ஐயோ!, என் உண்மை தேரில் - என் உண்மையான நிலைமையை ஆராய்ந்தால், அப்பா! எறும்பு எண்ணாயிரம் கழுதையும் கை கடந்தது எனும் எண்ணந்தான் - அப்பா! எறும்பு எண்ணாயிரம் போனது, அப்பால் கழுதையும் போய்விட்டது என்போனுடைய எண்ணம் போன்றதே.
(விளக்கம்) பெண்ணார் அமுது - பெண்களிற் சிறந்தவர். ‘பெண்ணின் நல்லாள்' என்று குறிப்பதுங் காண்க. கழுதையைப் பார்த்துக் கொண்டிருப்போன் எறும்பை எண்ணிக் கொண்டிருந்து கழுதையை விட்டு விட்டாற்போல, பெண்ணாசையிலே உள்ளத்தைச் செலுத்தி இறைவரை வழிபடுவதைக் கைநெகிழ விட்டதாக வருந்துகிறார். ‘எறும்பு எண்ணாயிரம், அப்பால் கழுதையும் கைகடந்தது என்றோன் எண்ணந்தானே' என்றும் பாடம்.
No comments:
Post a Comment