75. கவிஞர் இலக்கணம்

 


"தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்

     தேன்மடை திறந்த தெனவே

  செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்

     தெரிந்துரைசெய் திறமை யுடனே


விள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்

     விரிவிலக் கணவி கற்பம்

  வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்

     மிக்கப்ர பந்த வண்மை


உள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை

     யொத்ததிக சபைகண் டபோ

  தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கம

     துரைப்பவன் கவிஞ னாகும்!


அள்ளிவிடம் உண்டகனி வாயனே! நேயனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

விடம் அள்ளி உண்ட கனி வாயனே - நஞ்சை அள்ளிப் பருகிய கனிபோலும் சிவந்த வாயனே!, நேயனே - (உயிர்களிடம்) அன்புடையவனே!, அமலனே - தூயவனே!, அருமை மதவேள் -  அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

தெள் அமிர்த தாரை என மதுரம் கதித்த பைந்தேன் மடை திறந்தது என - தெளிந்த அமுத ஒழுக்குப் போலவும்; 

இனிமை மிகுந்த புதிய தேன் மடை திறந்தது போலவும்; செப்பும் முத்தமிழினொடு - சொல்லப்படும் முத்தமிழுடன், 

நாற்கவிதை நாற்பொருள் தெரிந்து - (ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் (அறம், பொருள், இனபம், வீடு என்னும்) நால்வகைப் பொருளையும் அறிந்து,

உரைசெய் திறமையுடனே - கூறும் ஆற்றலோடும், 

விள்ள அரிய காவியத்து உட்பொருள், அலங்காரம், விரிவு இலக்கண விகற்பம் - கூறுதற்கரிய காவியத்தின் உட்பொருளையும் அணியையும் விரிவான ஐவகை இலக்கணத்தையும், 

வேறும் உள தொன்னூல் வழக்கும் உலகத்து இயல்பும் மிக்கப் பிரபந்த வன்மை உள்ள எல்லாம் அறிந்து - மற்றும் இருக்கின்ற பழைமையான நூல்வழக்கையும் உலகவழக்கையும் மிகுந்த பிரபந்தங்களின் சிறப்பையும் மேலும் உள்ள யாவற்றையும் அறிந்து, 

அலை ஒடுங்கும் கடலை ஒத்து - அலை அடங்கிய கடலைப்போல இருந்து, அதிக சபை கண்டபோது - பேரவையைப் பார்த்த காலத்தில், ஓங்கு அலை ஒலிக்கின்ற கடல்போல் பிரசங்கம் அது உரைப்பவன் கவிஞன் ஆகும் - பேரலை முழங்கும் கடலைப்போலச் சொற்பொழிவு செய்பவன் கவிஞன் ஆவான்.


No comments:

Post a Comment

10. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி

  "பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும்      கொடுப்பதென்ன பொருளோ? என்று நற்கமல முகம்மலர்ந்தே உபசாரம்      மிக்கஇன்சொல் நடத்தல் நன்றே; ...