"துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்
பெரிதாகும் தோற்றம் போலச்
செப்பிட்ட தினையளவு செய்த நன்றி
பனையளவாய்ச் சிறந்து தோன்றும்!
கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்
வளநாட்டிற் கொஞ்ச மேனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
நினைக்கும் இந்த உலகந் தானே!"
இதன் பொருள் ---
கொப்பு இட்ட உமைபாகர் தண்டலையார் வளநாட்டில் - கொப்பு எனும் காதணியை அணிந்த உமையம்மையை இடப்பாகத்திற் கொண்ட திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளின், வளம் பொருந்திய நாட்டில், துப்பிட்ட ஆலம் வித்து சிறிது எனினும் பெரிது ஆகும் தோற்றம் போல - துப்பிவிட்ட ஆலம் வித்து சிறியதாயினும் பெரிய மரம் ஆகும் காட்சியைப் போல, செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி பனை அளவாய்ச் சிறந்து தோன்றும் - கூறப்பட்ட தினையின் அளவாகச் செய்த நன்மை (ஏற்கும் இடத்தால்) பனையின் அளவாகச் சிறப்புடன் காணப்படும், இந்த உலகம் கொஞ்சமேனும் உப்பிட்ட பேர்கள் தமை உள வரையும் நினைக்கும் - இந்த உலகம் சிறிதளவாக உப்பு இட்டவரையும் உயிருள்ள வரையும் நினைத்துப் பார்க்கும்.
கொப்பு - ஒரு காதணி. ‘துப்பிவிட்ட' என்பது ‘துப்பிட்ட' என வந்தது. செப்பு - சொல்.
‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.'
என்பது திருக்குறள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது பழமொழி.
No comments:
Post a Comment