12. தினையவளவு பனை அளவாகும்.

 



"துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்

     பெரிதாகும் தோற்றம் போலச்

செப்பிட்ட தினையளவு செய்த நன்றி

     பனையளவாய்ச் சிறந்து தோன்றும்!

கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்

     வளநாட்டிற் கொஞ்ச மேனும்

உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்

     நினைக்கும் இந்த உலகந் தானே!"


இதன் பொருள் ---


கொப்பு இட்ட உமைபாகர் தண்டலையார் வளநாட்டில் - கொப்பு எனும் காதணியை அணிந்த  உமையம்மையை இடப்பாகத்திற்  கொண்ட திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளின், வளம் பொருந்திய நாட்டில், துப்பிட்ட ஆலம் வித்து சிறிது எனினும் பெரிது ஆகும் தோற்றம் போல - துப்பிவிட்ட ஆலம் வித்து சிறியதாயினும் பெரிய மரம்  ஆகும் காட்சியைப்  போல, செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி பனை அளவாய்ச் சிறந்து தோன்றும் - கூறப்பட்ட தினையின் அளவாகச் செய்த நன்மை (ஏற்கும் இடத்தால்) பனையின் அளவாகச் சிறப்புடன் காணப்படும், இந்த உலகம் கொஞ்சமேனும் உப்பிட்ட  பேர்கள் தமை உள வரையும் நினைக்கும் - இந்த உலகம் சிறிதளவாக  உப்பு இட்டவரையும் உயிருள்ள வரையும்  நினைத்துப் பார்க்கும்.

கொப்பு - ஒரு காதணி. ‘துப்பிவிட்ட' என்பது ‘துப்பிட்ட' என வந்தது. செப்பு - சொல்.

 ‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

 கொள்வர் பயன்தெரி வார்.'

என்பது திருக்குறள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது  பழமொழி.


No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவ...