"காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே
கண்ணிணைகள் செய்புண் ணியம்;
கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு
காதுசெய் திடுபுண் ணியம்;
பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்
பேசில்வாய் செய்புண் ணியம்;
பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை
பெரிதுசெய் திடுபுண் ணியம்;
வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்
மேனிசெய் திடுபுண் ணியம்;
விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே
மிக்கபூ ருவபுண்ணியம்;
ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
ஆணவம் எனும் களை களைந்து அறிவினைத் தந்த அண்ணலே - நான் என்னும் களையை எடுத்து, அறிவை அருளிய பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
காண் அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பது கண் இணைகள் செய் புண்ணியம் - காண்பதற்கு அரிய பெரியோர்களின் சேவை கிடைப்பது இருவிழிகளின் நல்வினைப் பயன் ஆகும்.
கருணையாய் அவர் சொல்மொழி கேட்டிட லபிப்பது இரு காது செய்திடு புண்ணியம் - அவர்கள் அருளுடன் கூறும் மொழியைக் கேட்கக் கிடைப்பது இரு காதுகளும் செய்த நல்வினைப் பயன் ஆகும்.
அவர் புகழையே பேணித் துதிசெய லபித்திடுதல் பேசில், வாய் செய்புண்ணியம் - அவர்களுடைய புகழையே விரும்பிப் போற்றிடக் கிடைப்பது கூறினால் வாய் செய்த நல்வினைப் பயன் ஆகும்.
அவர்தமைப் பிழையாமல் தொழுதிட லபிப்பது கை பெரிது செய்திடு புண்ணியம் - அவர்களைத் தவறாமல் வணங்கக் கிடைப்பது கைகள் பெரிதும் செய்து நல்வினைப் பன் ஆகும்.
வீண்நெறி செலாமல் அவர் பணிவிடை லபிப்பது தன் மேனி செய்திடு புண்ணியம் - பயனற்ற வழிகளில் செல்லாமல் அவர்களுக்குத் தொண்டு செயக் கிடைப்பது தன் உடம்பு செய்திட்ட நல்வினைப் பயன் ஆகும்.
விழைவொடு அவர் சொற்படி நடந்திட லபிப்பது மிக்க பூருவ புண்ணியம் - விருப்பத்துடன் அவர் கூறியவாறு நடந்திடும் பேறு கிடைப்பது முற்பிறப்பில் செய்த பெரிய நல்வினைப் பயன் ஆகும்.
'நான்' என்னும் செருக்கு ஆணவம். செருக்கு என்பது 'அறிவு மயக்கம்' என்றும் பொருள்படும். யாவும் இறைவன் திருவருளாலே நடைபெறுகின்றன என்ற எண்ணத்தைவிட்டு நானே செய்கிறேன் என்று நினைத்துக்கொள்வது அறிவு மயக்கம். ‘நல்லாரைக் காண்பதும் நன்றே' எனத் தொடங்கும் ஒளவையார் பொன்மொழி இங்குக் கருதத்தக்கது.
பெரியோர்களைக் கண்டு பழகி அவர் சொற்படி நடந்து வருவது நல்லது என்று சொல்லப்பட்டது. "பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் நான் கண்டு போற்றிக் கொண்டாடி அறியேன்" என்பது காமாட்சியம்மன் திருவிருத்தத்தில் வருவது.
"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன், கல்வி
கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்,
கனிவுகொண்டு உனது திருவடியை ஒருகனவிலும்
கருதிலேன், நல்லன் அல்லேன்,
குற்றமே செய்வது என்குணம் ஆகும், அப்பெரும்
குற்றம் எல்லாம் குணம் எனக்
கொள்ளுவது நின் அருட்குணம் ஆகும், என்னில், என்
குறை தவிர்த்து அருள் புரிகுவாய்!"
என்று "தெய்வமணி மாலை"யில் வள்ளல் பெருமான் பாடி உள்ளார். "கல்வியைக் கற்கும் நெறி அறிந்து நான் கற்கவில்லை. கற்றுணர்ந்த மேன் மக்களோடு கூடி நிற்கவில்லை. அப்படிச் செய்யாமையால், உள்ளத்தில் உருக்கம் கொண்டு தேவரீரது திருவடியைக் கனவிலும் நினைத்தது இல்லை. எனவே, நான் நல்ல பண்புடையவன் அல்லன் ஆயினேன். அதனால், குற்றம் செய்வதே எனது குணம் ஆகும்; அப்பெரிய குற்றங்கள் எல்லாவற்றையும் குணமாகக் கொண்டு அருளுவது தேவரீருடைய அருட்குணம் ஆகும் என்பதால் என்னுடைய குறைகளைப் போக்கி அருள வேண்டுகிறேன்" என்று சென்னையில் கந்தகோட்டத்துள் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானிடத்து வேண்டுகிறார் வள்ளல்பெருமான். கற்ற மேலவரோடு கூடி, அவர் காட்டும் நல்வழியில் நிற்கவும், கல்வியை அவர்கள் காட்டும் நெறியில் தேர்ந்து கற்கவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
"ஒருதாய் வயிற்றில் உடன்பிறந்தா ரேனும்
பெரியார் நட்பு உற்றார் பெரியர், --- பெரியார் நட்பு
இல்லரேல் புல்லவரே, இன்பனை நீர் சுண்ணம் உறின்
நல்லது, இன்றேல் பொல்லதாம் நாடு". --- தருமதீபிகை.
இதன் பொருள் ---
ஒரே பனைமரத்தில் ஊறிய நீரில் ஒரு பகுதியை எடுத்து சுண்ணாம்போடு கூட்டினால், அது, உடலுக்கு நன்மை தருகின்ற, இனிய சுவை உடைய "பதநீர்" ஆகின்றது. சுண்ணாம்போடு சேராத மற்றொரு பகுதியானது, உடம்பைக் கெடுப்பதோடு, உள்ள உணர்வையும் மயக்குகின்ற, புளிப்புச் சுவையுள்ள கள்ளாக மாறுகின்றது. அதுபோல, ஒரு தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளே ஆனாலும், பெரியவர்களோடு கூடி இருந்தால் பெரியவர் என்று போற்றப்படுகின்றார். பெரியாரோடு கூடாமல், சிற்றினத்தாரோடு கூடி இருந்தால், இழிநிலைக்கு ஆளாகின்றதோடு, எல்லோராலும் பழிக்கப்படுகின்றார்.
கற்ற பெரியவர்களை, அவரது வாழ்க்கை முறையைக் கொண்டும், அவர்களது தோற்றத்தைக் கொண்டும் கணிப்பது கூடாது. அவரது அருட்குணத்தை மட்டுமே நோக்கவேண்டும். கடலில் தோன்றிய உப்பு வெள்ளை நிறத்தில் இருக்கிறது. சருக்கரையும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. உப்பு இனிக்காது. சருக்கரை இனிக்கும். கல்வி கற்றவர் என்பதாலேயே ஒருவர் பெரியவர் ஆக முடியாது. கற்ற கல்வியின் வழியே நின்று, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்தவரே பெரியவர் ஆவார்.
No comments:
Post a Comment