"சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்
தீரா அலைச்ச லுண்டாம்;
திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடு
திருமாதின் அருளும் உண்டாம்,
வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்
வாராது சுகம தென்பார்;
மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்
வாரத் துடன்கூ டினால்;
நன்மைதரு குருவார மதுசேர்ந்து வரில்ஆடை
நன்மையுட னேவந் திடும்;
நாரிய ருடன்போகம் மிகவும்உண் டொருவெள்ளி
நல்லவா ரத்தில் வந்தால்;
அன்மருவு பீடையுண் டாமென்பர் சனியனுக்(கு);
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
அமலனே - தூயவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
சென்ம நட்சத்திரத்து - பிறந்த நட்சத்திரத்துடன்.......
ஆதிவாரம் வரின் தீரா அலைச்சல் உண்டாம் - ஞாயிற்றுக்கிழமை வந்தால் நீங்காத அலைச்சல் உண்டாகும்,
திங்களுக்கு ஆகில் வெகு சுகபோசனத்தினோடு திருமாதின் அருளும் உண்டாம் - திங்கள் வந்தால் மிகவும் நல்லுண்டியோடு திருமகளின் அருளும் கிடைக்கும்,
வன்மை தரும் அங்கார வாரம் வந்தால் சிறிதும் சுகமது வாராது என்பர் - வலிய செவ்வாய்க்கிழமை வந்தாற் சற்றும் நலம் கிடையாது என்று கூறுவர்,
மேன்மை ஆம் புந்தி எனும் வாரத்துடன் கூடினால் மாசுஇல் பலகலை பயில்வர் - உயர்வான புதன் கிழமையுடன் (பிறந்த நாள்) சேர்ந்தாற் குற்றமற்ற பல நூல்களையும் ஆராய்வார்,
நன்மைதரு குருவாரமது சேர்ந்துவரில் ஆடை நன்மையுடனே வந்திடும் - நலந் தரும் வியாழக்கிழமை சேர்ந்து வந்தால் ஆடைகள் நலம்பெறக் கிடைக்கும்,
ஒரு நல்ல வெள்ளி வாரத்தில் வந்தால் நாரியருடன் மிகவும் போகம் உண்டு - ஒப்பற்ற நல்ல வெள்ளிக்கிழமையில் வந்தாற் பெண்களின் இன்பம் மிகவும் கிடைக்கும்.
சனியனுக்கு அல்மருவு பீடை உண்டாம் என்பர் - சனிக்கிழமை வந்தால் மயக்கந் தரும் நோய் உண்டாகும் என்பர்.
No comments:
Post a Comment