77. பிறந்த நட்சத்திரத்துடன் வரும் நாளின் பலன்

 



"சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்

     தீரா அலைச்ச லுண்டாம்;

  திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடு

     திருமாதின் அருளும் உண்டாம்,


வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்

     வாராது சுகம தென்பார்;

  மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்

     வாரத் துடன்கூ டினால்;


நன்மைதரு குருவார மதுசேர்ந்து வரில்ஆடை

     நன்மையுட னேவந் திடும்;

  நாரிய ருடன்போகம் மிகவும்உண் டொருவெள்ளி

     நல்லவா ரத்தில் வந்தால்;


அன்மருவு பீடையுண் டாமென்பர் சனியனுக்(கு);

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அமலனே - தூயவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

     சென்ம நட்சத்திரத்து - பிறந்த நட்சத்திரத்துடன்....... 

ஆதிவாரம் வரின் தீரா அலைச்சல் உண்டாம் - ஞாயிற்றுக்கிழமை வந்தால் நீங்காத அலைச்சல் உண்டாகும், 

     திங்களுக்கு ஆகில் வெகு சுகபோசனத்தினோடு திருமாதின் அருளும் உண்டாம் - திங்கள் வந்தால் மிகவும் நல்லுண்டியோடு திருமகளின் அருளும் கிடைக்கும், 

வன்மை தரும் அங்கார வாரம் வந்தால் சிறிதும் சுகமது வாராது என்பர் - வலிய செவ்வாய்க்கிழமை வந்தாற் சற்றும் நலம் கிடையாது என்று கூறுவர், 

மேன்மை ஆம் புந்தி எனும் வாரத்துடன் கூடினால் மாசுஇல் பலகலை பயில்வர் - உயர்வான புதன் கிழமையுடன் (பிறந்த நாள்) சேர்ந்தாற் குற்றமற்ற பல நூல்களையும் ஆராய்வார்,

நன்மைதரு குருவாரமது சேர்ந்துவரில் ஆடை நன்மையுடனே வந்திடும் - நலந் தரும் வியாழக்கிழமை சேர்ந்து வந்தால் ஆடைகள் நலம்பெறக் கிடைக்கும், 

ஒரு நல்ல வெள்ளி வாரத்தில் வந்தால் நாரியருடன் மிகவும் போகம் உண்டு - ஒப்பற்ற நல்ல வெள்ளிக்கிழமையில் வந்தாற் பெண்களின் இன்பம் மிகவும் கிடைக்கும். 

சனியனுக்கு அல்மருவு பீடை உண்டாம் என்பர் - சனிக்கிழமை வந்தால் மயக்கந் தரும் நோய் உண்டாகும் என்பர்.


No comments:

Post a Comment

12. தினையவளவு பனை அளவாகும்.

  "துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்      பெரிதாகும் தோற்றம் போலச் செப்பிட்ட தினையளவு செய்த நன்றி      பனையளவாய்ச் சிறந்து தோன்றும்! கொப்...