தானா சரித்துவரு தெய்வமிது என்றுபொய்ச்
சத்தியம் செயின்விடாது;
தன்வீட்டில் ஏற்றிய விளக்கென்று முத்தந்
தனைக்கொடுத் தால்அதுசுடும்;
ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனதென்
றடாதுசெய் யிற்கெடுதியாம்;
ஆனைதான் மெத்தப் பழக்கம்ஆ னாலுஞ்செய்
யாதுசெய் தாற்கொன்றிடும்;
தீனான தினிதென்று மீதூண் விரும்பினால்
தேகபீ டைகளே தரும்;
செகராசர் சூனுவென ஏலாத காரியம்
செய்தால் மனம்பொறார்காண்;
வானாடு புகழும்ஒரு சோணாடு தழையஇவண்
வந்தவ தரித்தமுதலே!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
வான்நாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே! - வானவர் புகழும் ஒப்பற்ற சோழநாடு சிறப்புற இங்கு வந்து தோன்றிய முதல்வனே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச் சத்தியம் செயின் விடாது - தான் வழிபட்டு வரும் தெய்வம் இது என்று எண்ணி (அதன் முன்னிலையிலே) பொய்ம்மொழி கூறினால் தண்டிக்காமல் விடாது.
தன் வீட்டில் ஏற்றிய விளக்கு என்று முத்தம் தனைக் கொடுத்தால் அது சுடும் - தன்னுடைய வீட்டிலே ஏற்றிய விளக்குதானே என்று முத்தம் கொடுத்தால் அவ் விளக்குச் சுடும்.
ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யின் கெடுதி ஆம் - எப்படி இருப்பினும் உயர்நிலையில் உள்ளவர்கள் தனக்கு ஆதரவாக உள்ளவர்கள்தானே என்று கருதித் தவறு செய்தால் கேடு உண்டாகும்.
ஆனைதான் மெத்த பழக்கம் ஆனாலும், செய்யாது செய்தாற் கொன்றிடும் - யானை நன்றாகப் பழகியிருந்தாலும் அதற்கு விருப்பம் அல்லாததைச் செய்தால் கொன்றுவிடும்.
தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும் - உணவு இனியது என்று மிகைப்பட விரும்பி உண்டால் உடலுக்கு நோயையே உண்டாக்கும்.
செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் - உலக மன்னவரின் அரும்புதல்வன் நான்தானே என்று நினைத்துத் தகாத வேலைகளைச் செய்தால் அரசர் உள்ளம் பொறுக்கமாட்டார்.
ஆசரித்தல் - வழிபடுதல். தீன் - உணவு. சூனு (வட) - மகன்.
யாவராயினும் வம்பு மீறினால் கெடுதியே உண்டாகும் என்பது கருத்து.
No comments:
Post a Comment