58. அவரவர்க்கு உற்ற கடமை.

 




"கல்வியொடு கனமுறச் சபையின்மேல் வட்டமாக்

     காணவைப் போன்பிதாவாம்,

கற்றுணர்ந் தேதனது புகழால் பிதாவைப்ர

     காசம்செய் வோன்புத்திரன்,


செல்வமிகு கணவனே தெய்வமென் றனுதினம்

     சிந்தைசெய் பவள்மனைவியாம்,

சிநேகிதன் போலவே அன்புவைத் துண்மைமொழி

     செப்புமவ னேசோதரன்,


தொல்வளம் மிகுந்தநூல் கரைதெரிந் துறுதிமொழி

     சொல்லும்அவ னேகுரவன்ஆம்,

சொன்னநெறி தவறாமல் வழிபாடு செய்துவரு

     துய்யனே இனியசீடன்,


வல்விரகம் மிஞ்சுசுர குஞ்சரி யுடன்குறவர்

     வஞ்சியை மணந்தகணவா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."  


இதன் பொருள் ---


வல்விரகம் மிஞ்சு சுர குஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா - மிகுந்த காதலை உண்டாக்கும் தெய்வயானை அம்மையுடன் குறவர் மகளாகிய வள்ளிநாயகியையும் மணம்புரிந்தவரே!


  மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


சபையின் மேல்வட்டம் ஆ கல்வியொடு கனம் உறக் காண வைப்போன் பிதாவாம் - பேரவையிலே உயர்ந்த நிலையிலே கல்வியும் சிறப்பும் பொருந்துமாறு தனது மகனை இருக்க வைப்பது தந்தையின் கடமை;  (கனம் - பெருமை) ("தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு இங்கு வைத்து எண்ணத் தக்கது)


கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவைப் பிரகாசம் செய்வோன் புத்திரன் - கலைகளைக் கற்றறிந்து தன் புகழினாலே தந்தைக்குப் பெயர் தேடித் தருவது மகன் கடமை; 


செல்வம்மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தை செய்பவள் மனைவி ஆம் - செல்வத்தில் சிறந்த கணவனே தெய்வம் என்று எப்போதும் மனத்தில் கொண்டிருப்பது மனைவியின் கடமை;  (செல்வம் - பொருட்செல்வத்தோடு அருட்செல்வத்தையும் குறிக்கும்)


சிநேகிதன் போலவே அன்பு வைத்து உண்மைமொழி செப்பும் அவனே சோதரன் - நண்பனைப்போல அன்புகொண்டு உண்மையாகப் பேசுவது உடன்பிறந்தோன் கடமை; 


தொல்வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன்ஆம் - பழைமையான பொருள்வளம் செறிந்த நூல்களின் கரை கண்டு முடிவான பொருளைக் கூறுவது ஆசிரியன் கடமை; 


சொன்ன நெறி தவறாமல் வழிபாடு செய்துவரு துய்யனே இனிய சீடன் - ஆசிரியன் கூறிய ஒழுக்கத்தில் தவறாமல் தொண்டு செய்து வருவது தூய மாணவன் கடமை.


No comments:

Post a Comment

9. விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

  "திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்      இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்      பகலாமோ? உறவாய் வந்த பெருவ...