புலவர் வறுமை

 



"எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை

     இணையிலாச் சேடன் என்றும்,

  ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்

     இணையிலாக் கர்ணன் என்றும்,


அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனை

     அதிவடி மாரன் என்றும்,

  ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனை

     ஆண்மைமிகு விசயன் என்றும்,


முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை

     மொழிஅரிச் சந்த்ர னென்றும்,

  மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்

     முறையின்றி ஏற்ப தென்னோ?


அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!

     அமலனே! அருமை மதவேள்!

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அழல் என உதித்துவரு விடம்உண்ட கண்டனே - நெருப்பைப் போலத் தோன்றி வந்த நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனே!, அமலனே - குற்றம் அற்றவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே! 


எழுதப்படிக்க வகைதெரியாத மூடனை இணை இலாச் சேடன் என்றும் - எழுதவும் படிக்கவும் வழியறியாத பேதையை ஒப்பற்ற ஆதிசேடன் என்றும், 


ஈவது இல்லாத கனலோபியைச் சபையதனில் இணைஇலாக் கர்ணன் என்றும் - கொடுத்தறியாத பெரிய அழுக்கனை அவையிலே ஒப்பற்ற கொடையிற் சிறந்த கர்ணன் என்றும், 


அழகு அற்ற வெகு கோரரூபத்தை உடையோனை அதிவடிவ மாரன் என்றும் - அழகு இல்லாத மிகுந்த அருவருப்பான உருவமுடையவனைப் பேரழகுடைய மன்மதன் என்றும், 


ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை ஆண்மை மிகு விசயன் என்றும் - படைக் கலத்தை ஏந்தவும் பழகாத ஆண்மை அற்றவனை வீரத்தில் சிறந்த விசயன் என்றும், 


முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை மொழி அரிச்சந்திரன் என்றும் - முற்றிலும் பொய் புகன்று திரியும் வஞ்சகனைச் சொல்லில் அரிச்சந்திரன் என்றும், 


இவ்வணம் மூதுலகில் கவிராசர் சொல்லியே முறையின்றி ஏற்பது என்னோ - இவ்வாறு பழைமையான இந்த உலகத்தில் பாவலர்கள் செல்வந்தரைப் புகழ்ந்து பாடி, தகுதியின்றி இரப்பது என்ன காரணமோ?


      ஆதிசேடன் கல்வியிற் சிறந்தவன். முதுமை + உலகு - மூதுலகு. இப்பாடலில் புலவர்களின் அறியாமையை வியந்து பாடினார் ஆசிரியர். "கொடிது கொடிது, வறுமை கொடிது" என்றார் ஔவைப் பிராட்டியார். வறுமை மிகவும் கொடியதாகையால், புலவர்கள் ஒருவனுக்கு ‘இல்லாத சொல்லிப்'  புகழ்தல் இயற்கையாக அந்நாளில் இருந்தது. இக் காலத்திலும் இருக்கிறது.  எவ்வளவுதான் செல்வந்தரைப் புகழ்ந்து பாடினாலும், புலவர்களின் வறுமை தீர்ந்தபாடு இல்லை. காரணம், அவர்கள் வாயில் இருந்து பிறப்பது பொய். "பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது" என்பது பழமொழி.


மிகவும் சிறந்த மொழி தமிழ்.  தெய்வீகம் உடைய செம்மொழி.  அதனால்தான் "தண்தமிழ்", "செந்தமிழ்", "தீந்தமிழ்" என்றெல்லாம் பேசப்படுகின்றது.   இத்தகைய தெய்வத் தமிழைப் பயின்று, புலமை பெற்று, எவன் பிறப்பு இறப்பை நீக்கி பேரானந்தத்தைத் தருவானோ - எவன் பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமானோ - எவன் மறையாகமங்களால் துதிக்கப் பெறும் மாதேவனோ, அந்த எம்பெருமானைப் பாடி உய்வு பெறாமல், கேவலம் உண்டு உடுத்து உழலும் சிறுதொழிலும்,  சிறுமையும் உடைய மனிதர்களைப் பாடுவது மதியீனம். காமதேனுவின் பாலை கமரில் உகுப்பதை ஒக்கும்.  தமது அறிவையும் தமிழையும் அறிவுக்கு அறிவாகிய இறைவன் மாட்டுப் பயன்படுத்தாமல்,  கேவலம் பொருள் விருப்பால் மனிதர்மாட்டுப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது.


"யாம்ஓதிய கல்வியும், எம்அறிவும்

தாமேபெற வேலவர் தந்ததனால்

பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீர் இனியே."


என்ற கந்தரநுபூதித் திருவாக்கை உய்த்து உணர்தல் வேண்டும்.  


அறிவிலாப் பித்தர்கள் பலர் உண்டு. ஆனால், முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாக, இப் பிறப்பில் இவர்களிடம் செல்வம் மிகுந்து இருக்கும். ஆனால், நல்லறிவு என்பது ஒரு சிறிதும் இல்லாது உலகில் பயனற்று அலைவர்.  பித்தன் எப்படித் திரிந்து உழல்வானோ, அதுபோல பணப்பித்தும், பெண்பித்தும் பிடித்துத் திரிவர்.


இத்தகைய பயனில்லாத பதடிகள் இருக்கும் இடம் தேடிப் போய், தூய செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களைப் புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடி, அவர்கள் தரும் பொருளைப் பெற்று மகிழ்வர்.  சிறிது காலமே நின்று மின்னலைப்போல் விரைவில் அழியும் பொருளையே பெற்று வீணாக வாழ்நாளைக் கழிக்கின்றனர். என்றும் அழியாத திருவருட் செல்வத்தை வாரி வாரி வழங்கும் இறைவனைப் பாடி உய்யும் திறன் அறியாது இவர்கள் கெடுவர்.  


அறிவு அற்றவர்கள், ஈனத் தன்மை உடையவர்கள்,  இருவிதமாகப் பேசும் நாவினை உடையவர்கள், கஞ்சத்தனம் உடையவர்கள், தீய குணங்களுடன், மிகுந்த பாவங்களைப் புரிபவர்கள், மேற்கொண்டு மிக்க பாவங்களைச் செய்பவர்கள்,  பொதுமகளிருக்கு அணிகலன்களைப் புனைந்து அழகு பார்க்கும் அறிவிலிகள், கீழ்மக்கள், பூமியில் பிறந்து பயனற்றவர்களாகத் திரிகின்ற மனிதர்கள், பெண்கள் மீது இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர்,  நீதி நூல்களின் பயன்களைத் தெரியாதவர்,  நன்னெறியில் நில்லாதவர்கள்,  சூதாட்டத்தால் பிறர் பொருளைக் கவர்ந்து பெருக்கும் கீழ்மக்கள், ஆசைப் பெருக்கால் உலகியல் இன்பத்திலேயே உழலுகின்ற மூடர்கள், ஆகிய இவர்களிடம் சிறப்பு மிக்க தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி, நினைவானது பாழ்பட்டுப் போய், உடம்பும் உள்ளமும் வாடி, பார்வையும் இழந்து, வறுமை என்னும் தீயின் மேல் கிடந்து நெளிகின்ற, நீண்ட புழுவைப் போல ஆன அடியவனுக்கு மனம் இரங்கி அருள் புரிவாயாக என்று ஒரு திருப்புகழ்ப் பாடலில் அருணகிரிநாதர் முருகப் பெருமானிடத்து வேண்டுகின்றார். வறுமை தீர இதுவே சிறந்த வழி.


வேண்டுவார் வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாக, யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலம் உடையவனாகப் பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற நல்வினைப் பயனும்,  முயற்சியும் இல்லாத அறிவிலிகள், தாம் கற்ற கல்வியின் பயன், இறைவனுடைய திருவடியைத் தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம்தேடிச் சென்று,  இல்லாததை எல்லாம் சொல்லி, வாழ்த்திப் பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும், உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து உள்ளதாககவும், கற்பனையாகப் பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும் கற்பனையே.


ஈயாத உலோபிகளை, பலகாலம் முயன்று அவர்கள் இடம் தேடிச் சென்று பலபடப் புகழ்ந்து பாடியும், பொருள் ஒன்றும் கிடைக்காமையால் மனம் வருத்தம் அடையும். உள்ளமும் உடம்பும் வாட்டம் உறும். பொய்யாகப் புகழ்ந்து பாடியதால் எதுவும் கிடைக்கவில்லை. பொய் சொன்ன வாய்க்குப் போசனம் இல்லை என்பதுதான் உண்மை. இறைவனைப் பாடினால் எல்லாம் கிடைக்கும்.


தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்

     சார்வினும் தொண்டர் தருகிலாப்

பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

இம்மையே தரும், சோறும் கூறையும்;

     ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.                       ---  சுந்தரர் தேவாரம்.

                                        


தமிழால் வைதாலும் முருகப் பெருமான் வாழவைப்பான் என்கின்றார் அருணகிரிநாதர்.


"மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்

வைதாரையும் அங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல்

கைதான் இருபது உடையான் தலைபத்தும் கத்தரிக்க

எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே."          --- கந்தர் அலங்காரம்.


"இவர் அலாது இல்லையோ பிரானார்" என்று வைத சுந்தரருக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான். "வாழ்ந்து போதீரே" என்று வசை பாடியவருக்குக் கண்ணளித்தவர் சிவபெருமான். "பித்தா" என்று தொடக்கத்திலேயே தம்மை வசை பாடிய வன்தொண்டருக்கு,  முடிவில்,  சிவபெருமான் வெள்ளை யானையை அனுப்பினார் என்பது சிந்தனைக்கு உரியது.


"பெண்அருங் கலமே, அமுதமே எனப் பெண்

      பேதையர்ப் புகழ்ந்து, அவம் திரிவேன்,

பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ

      பயன்தரல் அறிந்து, நின் புகழேன்"


என்னும் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சோணசைல மாலையையும் சிந்திக்கவும்.


No comments:

Post a Comment

9. விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

  "திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்      இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்      பகலாமோ? உறவாய் வந்த பெருவ...