நடுவுநிலைமை தவறியவன் என்ன ஆவான்

 


ஓரவிவ காரமா வந்தவர் முகம்பார்த்

     துரைப்போர் மலைக்குரங்காம்;

உயர்வெள் ளெருக்குடன் முளைத்துவிடு மவர்இல்லம்;

     உறையும் ஊர் பாழ்நத்தம்ஆம்;


தாரணியில் இவர்கள்கிளை நெல்லியிலை போல்உகும்;

     சமானமா எழுபிறப்பும்

சந்ததியிலா துழல்வர்; அவர்முகத் தினின்மூத்த

     தையலே குடியிருப்பாள்;


பாரமிவர் என்றுபுவி மங்கையும் நடுங்குவாள்;

     பழித்ததுர் மரணமாவார்;

பகர்முடிவி லேரவுர வாதிநர கத்தனு

     பவிப்பர்எப் போதுமென்பார்;


வாரமுடன் அருணகிரி நாதருக் கனுபூதி

     வைத்தெழுதி அருள் குருபரா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா - அன்புடன் அருணகிரியாருக்கு (கந்தர்) அநுபூதி எழுதும்  உன்னத நிலையை அருளிய குருபரனே!

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

ஓர விவகாரம் ஆ(க) வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலைக்குரங்கு ஆம் - ஒருதலை வழக்காக வந்தவர்களுடைய முகத்தைப் பார்த்துத் தீர்ப்புக் கூறுவோர் மலைக்குரங்கு ஆவர். 

அவர் இல்லம் உடன் உயர் வெள் எருக்கு முளைத்து விடும் - அவர் வீட்டிலே உடனே உயரமான வெள் எருக்கஞ் செடிகள் தோன்றிவிடும்.

உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் - அவர்கள் குடியிருக்கும் ஊரும் பாழான நத்தம் ஆகிவிடும். 

தாரணியில் இவர்கள் கிளை நெல்லி இலை போல் உகும் - உலகிலே இவர்களுடைய உறவினர் நெல்லியின் இலைபோலப் பிரிந்து விடுவார்கள்.

சமானமாம் எழுபிறப்பும் சந்ததியிலாது உழல்வர் - அவர்கள் எடுக்கும் ஏழுபிறப்பிலும் ஒன்றுபோல் கால்வழியில்லாமல் வருந்துவர்.

அவர் முகத்தினில் மூத்த தையலே குடியிருப்பாள் - அவர்களுடைய முகத்திலே மூதேவியே வாழ்வாள். 

புவிமங்கையும் இவர் பாரம் என்று நடுங்குவாள் - நிலமகளும் இவர்களைத் தாங்கமுடியாமல் அஞ்சுவாள்;

  பழித்த துர்மரணம் ஆவார் - பிறர் பழிக்கும்படி கெடுதியான சாவு நேரும்.

  பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து எப்போதும் அனுபவிப்பர் என்பர் - இவ்வாறு இழித்துக் கூறும் முடிவுக்குப் பின் எக்காலத்தும் இரவுரவம் முதலான நரகங்களிலே கிடப்பர் என்று பெரியோர் கூறுவர்.

     ஓரமாக வழக்கு உரைத்தலைவிடக் கொடிய தீமை வேறொன்றும் இல்லை.  அத் தீமைக்குப் பலன் இப் பாடலில் சொல்லப்பட்டது. ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு சொன்னவனுக்கு மேலே சொல்லப்பட்டது.  எனவே, நன்றாக ஒருவன் வாழ்வேண்டுமானால், உள்ளத்தில் பொய் கூடாது. "உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தால் உள்ளத்துள் எல்லாம் உளன்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.


"வேதாளம் சேருமே, வெள்ளெருக்குப் பூக்குமே,

பாதாள மூலி படருமே, -மூதேவி

சென்று இருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே,

மன்றோரம் சொன்னார் மனை."

என்று ஔவைப் பிராட்டியார் அருளி உள்ளதும் இங்கு கருத்தில் கொள்ளத் தக்கது.

இதன் பொருள் ---

நியாய சபையிலே (நியாயமானதைச் சொல்லாமல்) ஓரம் சொன்னவருடைய வீட்டிலே பேய்கள் (வந்து) சேரும். வெள்ளெருக்கு (முளைத்து) மலரும். பாதாளமூலி என்னும் கொடி படரும். மூதேவியானவள் அவனது வீட்டில் போய் நிலைபெற்று வாழ்வாள். பாம்புகள் குடியிருக்கும்.


No comments:

Post a Comment

பொது --- 1102. வதைபழக மறலி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் வதைபழக மறலி (பொது) முருகா!  விலைமாதர் கண்வலையில் வீழ்ந்து துன்புறாமல்,  தேவரீர் திருக்கண் பார்த்து அருளவ...