"பொன்னாசை உள்ளவர்க்கு உறவுஏது? குருஏது?
பொங்குபசி உள்ள பேர்க்குப்
போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டு
பொதுமாதர் வலைவி ழியிலே
எந்நாளும் அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம்ஏது,
என்றென்றும் உறுகல் விமேல்
இச்சையுள பேர்க்குஅதிக சுகம்ஏது? துயில்ஏது?
வெளிதாய் இருந்து கொண்டே
பன்னாளும் அலைபவர்க்கு இகழ்ஏது? புகழ்ஏது?
பாரில்ஒரு வர்க்கு அதிகமே
பண்ணியிடு மூடருக்கு அறம்ஏது மறம்அலால்?
பகர்நிரயம் ஒன்று உளதுகாண்!
அன்னாண வருகரி உரித்தணியும் மெய்யனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
அல்நாண வருகரி உரித்து அணியும் மெய்யனே - இருள் நாணுமாறு (கருநிறத்துடன்) வந்த யானையின் தோலை உரித்து அணியும் திருமேனியினை உடைய சிவபரம்பொருளே!! அமலனே - குற்றம் அற்றவனே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,
பொன் ஆசை உள்ளவர்க்கு உறவு ஏது குரு ஏது - பொருளாசை பிடித்தவர்க்குச் சுற்றமும் ஆசிரியரும் இல்லை.
பொங்கு பசி உள்ள பேர்க்குப் போதவே சுசி ஏது ருசி ஏது - மிகுதியான பசி உடையோர்க்கு நிறைந்த தூய்மையும் உணவு இனிமையும் பார்த்தல் இயலாது.
பொதுமாதர் விழிவலையிலே எந்நாளும் அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம் ஏது - விலைமகளிரின் கண்வீச்சில் எப்போதும் அகப்பட்டு உழல்பவர்க்கு அச்சமும் நாணமும் இல்லை.
என்றென்றும் உறு கல்வி மேல் இச்சை உ(ள்)ள பேர்க்கு அதிக சுகம் ஏது துயில் ஏது - எப்போதும் சிறந்த கல்வியின் மேல் விருப்பம் உடையோர்க்கு மிக வசதியிலும் தூக்கத்திலும் மனம் செல்லாது.
எளிதாய் இருந்துகொண்டே பலநாளும் அலைபவர்க்கு இகழ் ஏது புகழ் ஏது - எளிய வாழ்வில் இருந்து பலநாளும் திரிபவர்க்கு இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இல்லை.
பாரில் ஒருவர்க்கு அதிகமே பண்ணியிடும் மூடருக்கும் மறம் அ(ல்)லால் அறம் ஏது - உலகில் ஒருவருக்குத் துன்பத்தையே செய்யும் பேதையருக்குப் பாவத்தைத் தவிர புண்ணியம் இல்லை, பகர் நிரயம் ஒன்று உளது - கூறப்படும் நரகம் ஒன்று நிச்சயம் இருக்கிறது.
No comments:
Post a Comment