"திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்
பகலாமோ? உறவாய் வந்த
பெருவிருந்துக் குபசாரம் செய்தனுப்பி
இன்னுமெங்கே பெரியோர் என்று
வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா
துணுஞ்சோறு மருந்து தானே."
இதன் பொருள் ---
திரு இருந்த தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் - செல்வம் தங்கிய திருத்தண்டலைத் திருநகர் உள்ள செழித்த நாட்டினில் இல்லறம் நடத்தும் பெரியோர்கள், ஒரு விருந்து ஆயினும் இன்றி உண்ட பகல் பகலாமோ - ஒரு விருந்தினரேனும் இல்லாமல் உணவு கொண்ட நாள் (ஒரு) நாளாகுமோ, உறவாய் வந்த பெரு விருந்துக்கு உபசாரம் செய்து அனுப்பி - நட்புடன் வந்த பெரிய விருந்தினருக்கு முதலில் உணவளித்துக் களைப்பாற்றிப் பேசி விடுத்த பின்னர், இன்னும் பெரியோர் எங்கே என்று - மேலும் வரக்கூடிய சான்றோர்கள் எங்கே என்று, வருவிருந்தோடு உண்பது அல்லாமல் - வரும் விருந்தினருடன் உண்பது அன்றி, விருந்து இல்லாது உணும் சோறு மருந்து தானே - விருந்தினர் இல்லாமல் உண்பது மருந்து போலத்தான் (கசப்பாக) இருக்கும்.
"செல்விருந்(து) ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு" - என்பது திருவள்ளுவ நாயனார் அருளிய மறைமொழி. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்பது ஔவையின் அருள்மொழி. ‘விருந் தில்லாத சோறு மருந்து' என்பது கருத்து.
No comments:
Post a Comment