"குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்;
கொலை,களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்;
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்;
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்;
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்;
கோயில்இல்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்;
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயில்ஏறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"
பதவுரை ---
குற்றம் ஒன்றும் - (ஒருவர் செய்த) குற்றத்தை மாத்திரமே, பாராட்டி - எடுத்துச் சொல்லி, திரிய வேண்டாம் - அலையாதே.
கொலை களவு - கொலையும் திருட்டும், செய்வாரோடு -செய்கின்ற தீயோருடன், இணங்கவேண்டாம் - நட்புச்செய்யாதே.
கற்றவரை - (அறிவு நூல்களைக்) கற்றவரை; ஒரு நாளும் - ஒரு பொழுதும், பழிக்கவேண்டாம் - பழிக்காதே.
கற்பு உடைய மங்கையரை - கற்புடைய பெண்களை, கருத வேண்டாம் - சேர்தற்கு நினையாதே.
எதிர் - எதிரேநின்று, கொற்றவனோடு - அரசனோடு, மாறு - மாறான சொற்களை, பேசவேண்டாம் - பேசாதே.
கோயில் இல்லா - கோயில் இல்லாத, ஊரில் - ஊர்களில், குடிஇருக்க வேண்டாம் - குடியிருக்காதே.
மற்று - பிறிதொன்று, நிகர் இல்லாத - ஒப்புச்சொல்ல முடியாத, வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் -வாழ்த்துவாயாக.
பொழிப்புரை --
ஒருவரிடத்துள்ள குற்றத்தையே எடுத்துத் தூற்றுதல் கூடாது. குற்றத்தை விட்டுக் குணத்தைப் பாராட்ட வேண்டும்.
கொலை செய்வாருடனும், களவு செய்வாருடனும் கூடுதல் கூடாது. செய்வாருடன் சேர்தல் கூடாது என்றமையால் அவை செய்தல் ஆகாது என்பது தானே பெறப்படும்.
அறிவு நூல்களைக் கற்று, அதன்வழி ஒழுகும் பெரியாரை நிந்தித்தல் கூடாது. பழிக்கவேண்டாம் என்றமையால் புகழவேண்டும் என்பது பெறப்படும்.
கற்புடைய மாதர்மேல் விருப்பம் வைத்தல் கூடாது. 'மங்கையர்' என்றது தம் மனைவியல்லாத பிற மாதர்களை நினைத்தலும் கூடாது என்றார்.
அரசன் முன்னின்று அவனுக்கு மாறாகப் பேசுதல் கூடாது. மாறு - விரோதம். (இக் காலத்தில் மேல் அதிகாரிகளை என்பதாகவும் கொள்ளலாம்)
கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் கூடாது. திருக்கோயில் இல்லாத ஊர் கொடிய காட்டை ஒக்கும். "திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும்...... ஊரல்ல, அடவி காடே" என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.
வள்ளிநாயகன் ஆகிய முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து இந்த நூல் பாடப்பட்டது. பிற கடவுளரை வழிபடுவோருக்கும் இந்த உலகநீதி பொருந்தும்.
No comments:
Post a Comment