பொது --- 1101. குதறுமுனை அறிவுகொடு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குதறும்முனை அறிவுகொடு (பொது)


முருகா! 

திருவடி ஞானத்தை அடியேனுக்கு அருள்வீராக.


தனதனன தனதனன தனதனன தனதனன

     தனதனன தனதனன ...... தனதான


குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு

     குமுதமிடு பரசமய ...... மொருகோடி


குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது

     கொடியஇரு வினையெனும ...... ளறுபோக


உதறிவித றியகரண மரணமற விரணமற

     வுருகியுரை பருகியநு ...... தினஞான


உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத

     யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே


சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை

     சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ்


செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக

     திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற்


கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை

     யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங்


கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக

     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.



                       பதம் பிரித்தல்



குதறு முனை அறிவுகொடு, பதறி எதிர் கதறி, மிகு

     குமுதம் இடு பரசமயம், ...... ஒருகோடி


குருடர் தெரிவு அரியது ஒரு பொருள் தெரிய, நிகழ் மனது,

     கொடிய இரு வினை எனும் ...... அளறுபோக


உதறி, விதறிய கரண மரணம் அற, விரணம் அற,

     உருகி உரை பருகி, அநு ...... தினம் ஞான


உணர்வு விழி பெற, உனது மிருகமத நளினபத

     யுகளம் இனி உணர அருள் ...... புரிவாயே.


சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம்அவை

     சிறுபொறிகள் என, உரக ...... பிலம் ஏழும்


செகதலமும் நிகர் சிகரி பலவும் நல கெச புயக

     திசையும் உடன் உருக வரு ...... கடைநாளில்


கதறும் எழு கடல்பருகி, வடவைவிடு கரியபுகை

     என, முடிவில் ககனமுகடு ...... அதில் ஒடும்


கலப கக மயில்கடவி, நிருதர் கஜ ரத துரக

     கடகம் உடன் அமர்பொருத ...... பெருமாளே.


பதவுரை


சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடுபடலம் அவை சிறு பொறிகள் என -- ஒளிக் கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, 


உரக பிலம் ஏழும், செக தலமு(ம்) நிகர் சிகரி பலவு(ம்) ந(ல்)ல கெச புயக திசையும் உடன் உருக வரும் --- நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற


கடை நாளில் கதறும் எழுகடல் பருகி வடவை விடு கரியபுகை என ---  யுகமுடிவான அந்த இறுதி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு, வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி, 


முடிவில் ககன முகடு அதில் ஓடும் கலப கக(ம்) மயில் கடவி --- இறுதியில்யலாது பரந்து கிடக்கும் ஆகாய முகட்டில் ஓடுகின்ற, தோகையை உடைய பறவையாகிய மயிலைச் செலுத்தி, 


நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே --- அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால்வகைச் சேனைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே! 


குதறும் முனை அறிவுகொடு பதறி --- நெறிதவறி மூண்டு நிற்கின்ற சிற்றறிவைக் கொண்டு, பதற்றத்தோடு,


எதிர் கதறி --- ஆரவாரத்தோடு எதிர்வாதம் புரிந்து, 


மிகு குமுதம் இடு பரசமயம் --- மிகுதியாகக் கூச்சல் இட்டுப் பேரொலியை எழுப்புகின்ற பரசமயவாதிகள் ஆகிய 

ஒரு கோடி குருடர் தெரி அரியது --- ஒரு கோடி குருடர்களால் அறிந்து கொள்ள முடியாத,


ஒரு பொருள் தெரிய நிகழ் மனது --- ஒப்பற்ற பொருளை அறிந்து கொள்ள ஓடிக்கொண்டே இருக்கும் அடியேனுடைய மனம், 


கொடிய இருவினை எனும் அளறு போக --- பொல்லாத நல்வினை, தீவினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேற்றில் இருந்து நீங்கும்படியாகவும்,


உதறி விதறிய கரண(ம்), மரண(ம்) அற, விரணம் அற --- உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும், 


உருகி --- மனம் உருகி,


அனுதினம் உரை பருகி --- தேவரீரது திருப்புகழைப் பொருள் உணர்ந்து நாள்தோறும், அனுபவித்து, 


ஞான உணர்வு விழி பெற --- ஞான உணர்வு என்னும் அகக் கண்களைப் பெற, 


உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள் புரிவாயே --- இனி தேவரீருடைய கத்தூரி மணம் கமழுகின்ற, தாமரைமலர் போன்ற திருவடி இணையை அடியேன் உணர்ந்து உய்யத் திருவருள் புரிவீராக.


பொழிப்புரை


ஒளிக் கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற யுகமுடிவான அந்த இறுதி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு, வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி,  இறுதியில்லாது பரந்து கிடக்கும் ஆகாய முகட்டில் ஓடுகின்ற, தோகையை உடைய பறவையாகிய மயிலைச் செலுத்தி,  அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால்வகைச் சேனைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே! 


நெறிதவறி மூண்டு நிற்கின்ற சிற்றறிவைக் கொண்டு, பதற்றத்தோடு, ஆரவாரத்தோடு எதிர்வாதம் புரிந்து,  மிகுதியாகக் கூச்சல் இட்டுப் பேரொலியை எழுப்புகின்ற பரசமயவாதிகள் ஆகிய  ஒரு கோடி குருடர்களால் அறிந்து கொள்ள முடியாத, ஒப்பற்ற பொருளை அறிந்து கொள்ள ஓடிக்கொண்டே இருக்கும் அடியேனுடைய மனம், பொல்லாத நல்வினை, தீவினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேற்றில் இருந்து நீங்கும்படியாகவும், உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும்,  மனம் உருகி, தேவரீரது திருப்புகழைப் பொருள் உணர்ந்து நாள்தோறும், அனுபவித்து, 

ஞான உணர்வு என்னும் அகக் கண்களைப் பெற,  இனி தேவரீருடைய கத்தூரி மணம் கமழுகின்ற, தாமரைமலர் போன்ற திருவடி இணையை அடியேன் உணர்ந்து உய்யத் திருவருள் புரிவீராக.


விரிவுரை


குதறும் முனை அறிவுகொடு பதறி எதிர் கதறி ---


குதறுதல் - நெறி தவறுதல், சிதறுதல்,


முனை - மூண்டு நிற்றல், ஊக்கம் கொற்றுதல்.


முனை அறிவு - நான் எனது எனது என்னும் தன்முனைப்பு உள்ள அறிவு.


பதறி - பதற்றம் கொண்டு. 


நான் என்னும் எண்ணம் உள்ளவரையில் அடுத்தவர் சொல்லுக்குச் செவி கொடுக்கும் எண்ணம் இருக்காது. ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால், பதற்றம் கொண்டு அதை எதிர்மறுத்துப் பேசுவது உள்ளவரையில் உண்மை அறிவு விளங்காது. எதிர்வாதம் அத்தகையது.


மிகு குமுதம் இடு பரசமயம் ஒரு கோடி குருடர் தெரி அரியது --- 


குமுதம் - பேரொலி. இங்கே சமயக் கூச்சலைக் குறித்து நின்றது. "ஒரு கோடி" என்பது அளவு இறந்தமையை உணர்த்திற்று.


"சமயத்துக் கத்துத் திரையாளர்" என்று சமயவாதிகள் குறித்து, காஞ்சிபுரம் திருப்பகழில் அடிகளார் கூறி உள்ளது காண்க. திரை - அலை.  கடல் அலைபோல் ஆரவாரம் செய்து சமயவாதிகள் தர்க்கம் செய்து கதறுவார்கள். அருணகிரிநாதருக்கு இந்தச் சமயச் சண்டையில் மிகவும் வெறுப்பு.  பல இடங்களில் சமயப் பூசலைக் கண்டிக்கின்றார்.


"கலகல கலெனக் கண்ட பேரொடு

சிலுகிடு சமயப் பங்க வாதிகள்

கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்


கலைகளு மொழியப் பஞ்ச பூதமு

மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன

கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்"  


என்கிறார் மதுரைத் திருப்புகழில்.


தெளிந்த அறிவு உள்ளவர்கள் ஒருபோதும் வாதம் புரியமாட்டார்கள். நூலறிவு மட்டுமே உள்ளவர்கள், தாம் உணர்ந்தவற்றையே உணர்ந்து, அவர்கள் உணர்ந்ததை நிறுவுவதற்காக, பிறரோடு வாதம் புரிவார்கள்.


அருணகிரிநாதருக்கு இந்தச் சமயச் சண்டையில் மிகவும் வெறுப்பு. பல இடங்களில் சமயப் பூசலைக் கண்டிக்கின்றார்.


நிகரில் பஞ்ச பூதமும், நினையும் நெஞ்சும், ஆவியும்

   நெகிழ, வந்து நேர்படும்                    அவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர! நிரவ யம்ப ராபர!

   நிருப அம் குமாரவெள்                     என,வேதம்

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்

   சமய பஞ்ச பாதகர்                         அறியாத

தனிமை கண்டது ஆனகிண் கிணிய தண்டை சூழ்வன

   சரண புண்டரீகம் அது                       அருள்வாயே..          ---  திருப்புகழ்.

பள்ளிக்குச் சென்று படிநிலையிலே நின்று அறிவைப் பெற்றுப் பெருக்கிக் கொள்வது போல, பரம்பொருளின் நிறைவான தன்மையை உணர்ந்து, அந்த உணர்விலேயே திளைத்து, நுண்ணுர்வு பெற்று இருப்பதற்கான வழியாக, ஆங்காங்கே சமய நெறிகள் உண்டாயின. நாமம் (NAME) ரூபம் (FORM) இல்லாத கடவுளை, ஒரு குறியில் வைத்து வழிபடுவதற்காக, சமய நெறிகள் வகுக்கப்பட்டன. 

அவ்வாறு வகுக்கப்பட்ட, அறுவகைச் சமயங்களும் இறைவனை அடைதற்கு வகுக்கப்பட்ட நெறிகளே. அவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து தெளியாது, சமய நெறிகளுக்கு உரை சொல்லுகின்ற அறிவற்றவர்கள், அவரவர் உணர்ந்தபடியே, சமய நெறிகளில் நல்லது இது, தீயது இது என்று, சொல்லித் திரிகின்றனர். இவர்களைப் பார்த்து, 

"ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள,

என்றது போல இருமுச் சமயங்கள்,

நன்று இது, தீது இது என்ற உரை ஆதர்கள்,

குன்று குரைத்து எழு நாஐ ஒத்தார்களே"


என்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நயானார்.

 

சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும், கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. நாம் கூறும் இதுவே நன்று, பிறர் கூறும் இது தீது என்று இங்ஙனம் தம்முள் பிணங்குகின்ற சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

எல்லாச் சமயங்களும், மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு, மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே"  என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், 'ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள' என்றார்.

அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத்தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார். மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன?. குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன. தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்"

 என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது இதன் பொருள்.

சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை. இதைத்தான், "தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதனால்தான் "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும் பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக் கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது. 

"பித்தர்குணம் அதுபோல, ஒரு கால் உண்டாய்ப்

⁠பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

⁠கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.


சரயு நதியின் அழகைப் பாடவந்த கம்பர், மேற்குறித்த திருமந்திரப் பாடலின் கருத்தை வைத்துப் பின்வருமாறு பாடியுள்ளார்.

கல் இடைப் பிறந்து போந்து

    கடல் இடைக் கலந்த நீத்தம்

எல்லை இல் மறைகளாலும் இயம்பு

    அரும் பொருள் இது என்னத்

தொல்லையின் ஒன்றே ஆகித்

    துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்

பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்

    போல் பரந்தது அன்றே.    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

இமய மலையில் தோன்றி, அங்கிருந்து வந்து, கடலிலே கலந்துவிட்ட சரயு நதியின் வெள்ளமானது, அளவிட முடியாத வேதங்களாலும் சொல்லுதற்கரிய பரம்பொருள் போன்றது  இந்த வெள்ளம்’  என்று சொல்லும்படியாக, ஆதிமுதலில் ஒன்றாகவே  இருந்து, ஏரி குளம் முதலிய வேவ்வேறு இடங்களில் எல்லாம்; விரிந்த ஆராய்ச்சியுடைய  பல்வேறு சமயவாதிகள் விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போலப் பரந்து ஓடியது.  

பரம்பொருள் ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப் பரம்பொருளும் வெவ்வேறு நாம,  ரூப பேதங்களாக விளங்குகிறது.  அதுபோலவே சரயுவின் வெள்ளநீரும் ஏரி,  குளம்,  கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கிறது.

 

தாயுமான அடிகளாரும், இக் கருத்தையே வலியுறுத்திப் பாடுகின்றார்...

 

"வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,

விளங்கு பரம்பொருளே! நின் விளையாட்டு அல்லால்,

மாறுபடும் கருத்து இல்லை, முடிவில் மோன

     வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா."

 

இதன் பொருள் ---

 

ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பலவகைச் சமயங்கள் அனைத்தினையும் புகுந்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, அனைத்திற்கும் மேலாகத் திகழும் தனிமுதற்பொருளே!  உன்னுடைய திருவிளையாடலே அல்லாமல் மாறுபாடு எய்தும் கருத்துகள் இல்லையாகும். பல ஆறுகளின் வெள்ளமானது, கடலில் கலந்த போது, கடல் நீரில் உள்ளது எந்த ஆறு என்று பகுத்து அறியமுடியாதவாறு போல முடிவில்லாத மவுனப் பெருங்கடலில், எல்லாச் சமயங்களும் கலந்து வேறுபாடு இன்றி, சமரசம் உற்று விளங்குகின்றன. 

 

எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்ப மதித்தல் வேண்டும் என அறுவுறுத்தி உள்ளார்கள். "ஆறு அனைத்தும் புகும் கடல்போல் சமய கோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே" என்று தாயுமான அடிகளார் வேறு ஒரு பாடலிலும் காட்டி உள்ளார்.

 

இவ்வுண்மையை வள்ளல்பெருமானும்,

"பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்

புகுந்து கலந்திட, நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே! எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர்

தங்க நிழல் பரப்பி,மயல் சோடை எல்லாம்

தணிக்கின்ற தருவே! பூந் தடமே! ஞானச்

செங்குமுதம் மலரவரு மதியே! எல்லாம்

செய்யவல்ல கடவுளே! தேவ தேவே!"

 

என்று அருளிச் செய்தார்.

 

சமயநூல்கள், உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்குத் துணை பிரிவதற்காக எழுந்தவை ஆகும். சண்டையிட்டுப் பிணங்கி, அறிவழிந்து போவதற்கு அல்ல.

 

"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

பொய்யான சமயங்களும், ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்து, தடுமாறுகின்ற துன்பத்தைப் போக்கி,  தனது திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற திருவருட்செயலைப் போற்றி, நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

ஆக, அருளாளர்கள் அனைவரும், அவரவர் சார்ந்து உள்ள சமயத்தின் உட்பொருளை உணர்ந்து தெளிந்து, திருவருள் பெற்று உயரவேண்டும் என்பது அல்லாமல், சமயக் கருத்துக்களைத் தெளியாமல், உயர்வு தாழ்வு கற்பித்து, ஒருவரோடு ஒருவர் பிணக்கம் கொண்டு அறிவிழந்து அழிந்து போதல் கூடாது என்றே அருளி உள்ளனர்.

 

ஒரு சமயத்தைச் சார்ந்தவர், பிற சமயத்தாரை இகழ்ந்து, பரிகசிப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவரவர் கொண்ட சமயத் தெய்வத்தைப் புகழ்ந்து பேசுவதும், பிற சமயத்தார் கருதும் தெய்வங்களை இகழ்ந்து பேசுவதும் நன்மையைத் தராது. ஆனால், இவ்வாறுதான் மனிதர்கள் உள்ளார்கள் என்பதை, கம்பர் காட்டுமாறு காண்போம்.

 

மிதிலை நகரின் வீதிகளில் அழியா அழகு உடையவனாகிய இராமபிரான், தனது தம்பியோடும், விசுவாமித்திரரோடும் போகின்றான். அவனது அழகைக் கண்டு மயங்கிய பெண்களில், இராமனின் தோளைக் கண்டவர்கள், அதை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தோள்களின் அழகில் மயங்கிய பெண்களுக்கு, மற்ற உறுப்புக்களின் அழகு தோன்றவில்லை. இது எப்படி இருந்தது? ஒவ்வொரு சமயத்தாரும் தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று கொண்டாடுகின்றார்கள். மற்ற மதங்கள் போற்றுகின்ற கடவுளர்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட மாட்டாதவர்களைப் போல் உள்ளது. 

 

சமயவாதிகள் யாரும், நாமரூபம் அற்ற கடவுளின் தன்மையை முழுமையாக உணரவில்லை என்பது போல, மிதிலை நகரில் உள்ள பெண்களில் யாரும் இராமனது முழு அழகைக் கண்டு களிக்கவில்லை என்கிறார் கம்பர்.

 

"தோள் கண்டார் தோளே கண்டார்;

    தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்;

    தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே

    வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான்

    உருவு கண்டாரை ஒத்தார்."    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

(மிதிலையில் இருந்த மகளிருள்) இராமபிரானது தோள்  அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டு, களித்து முடியாமையால், பிற உறுப்புக்களின் அழகைப் பார்க்க  இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவண்ணம் இருந்தார்கள். வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள்  போன்ற (இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு பார்க்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அவனது) பெரிய திருக்கரங்களின் அழகைப் பார்த்தவர்களும் அவ்வாறே (பிறவற்றை நோக்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, வாள் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்களுள் இராமனது திருமேனி அழகினை முழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள், பிற சமயங்கள் கூறும் தெய்வங்களின் வடிவங்களை நோக்காது, தமது தெய்வ வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல,  இராமனைக் காண வந்த மகளிர் (அப் பெருமானின்) உறுப்புக்கள்  பலவும் நோக்காது, அவர்கள் தாம் தாம் கண்ட ஓர் உறுப்பின் 

அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர். 

 

எனவே, சார்ந்துள்ள சமயம் பற்றிய உண்மையையே முழுதும் அறியாமல், பிற சமயக் கருத்துக்களோடு பிணங்குவது அறியாமை என்பதை அறிதல் வேண்டும்.


ஞானம் என்பது, பசு ஞானம், பாச ஞானம், பதி ஞானம் என மூவகைப்படும்.


பசு ஞானம் என்பது உயிர் அறிவு, ஆன்ம அறிவு. ஆன்மபோதம் எனப்படும்.


பாச ஞானம் என்பது ஆன்மாவானது பண்டங்களால் பெறுகின்ற அறிவு.


பதி ஞானம் என்பது, மேற்குறித்த இரண்டிலும் சாராது இறையைச் சார்வதால் பதிகின்ற உண்மை அறிவு. பதிவதால் பதி அறிவு என்றும் பதிஞானம் என்றும் காட்டப்பட்டது.  


பாச ஞானம்


ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறிவதால் பெறுகின்ற அறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறி கருவிகளாகிய அவையும், அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையின் காரியங்களே ஆகும். மாயை பாசம் எனப்படும் என்பது நாம் அறிந்தது. எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் "பாசஞானம்" எனப்படுவது. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானாகவும் தனது என்றும் மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பையோ, அறிகின்ற பொருள்களின் உண்மை இயல்பையோ அறியாது போகிறது.


பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.


பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்,

பொன்னில் மறைந்தது பொன் அணி பூடணம்,

தன்னை மறைத்தது தன் கரணங்களாம்,

தன்னில் மறைந்தது தன்கரணங்களே.


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதல் பூவே.


என்னும் திருமூலர் திருமந்திரப் பாடல்களின் கருத்தை ஓர்க.


பசு ஞானம்


ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெற்றால், ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும், தான் அவற்றின் வேறாகிய அறிவுப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்து, அக் கருவிகள் நாம் அல்ல என்று அவற்றினின்றும் நீங்கும்.  அவற்றினின்றும் நீங்குதலாவது, அவற்றின் வசப்படாமை. அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பது, எங்கும் நிறைந்த பொருளாய் இருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்கு உரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில், அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாகவுள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாக, மேக படலம் மூடி இருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேக படலம் நீங்கிய போது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்ம உணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். 


கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் கூறப்படும். அஃது ஆன்மாவின் பொதுவியல்பு செயற்கையியல்பு வியாபக அறிவே அதன் உண்மையியல்பு.


இவ்வாறு கருவி அறிவாகிய பாச ஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரிய வொளி அதன்கண் உடன் கலந்து அதனை விளக்கி நிற்பதேயாகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.


நாம் அல்ல இந்திரியம்; நம் வழியின் அல்ல; வழி

நாம் அல்ல; நாமும் அரன் உடைமை. - ஆம் என்னில்

எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை;

முற்செய்வினை யும்தருவான் முன்.  --- சிவஞானபோத வெண்பா.


"பார்ஆதி பூதம் நீ அல்லை --- உன்னிப்

பார், இந்திரியம் கரணம் நீ அல்லை,

ஆராய் உணர்வு நீ என்றான் --- ஐயன் 

அன்பாய்உரைத்த சொல் ஆனந்தம் தோழி". --- தாயுமானார்.


"பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்கும் கால், அப்பரத்தின்

சீர் ஆக நிற்கும் கண்டாய் --- நேர் ஆக

சிற்கும் திருவருளில் நெஞ்சே, யாம் நிற்பது அல்லால்

கற்கும் நெறி யாது இனிமேல் காண்." --- தாயுமானார்.


"பார்ஆதி அண்டம்எலாம் படர்கானல் சலம்போல்

பார்த்தனையே, முடிவில் நின்று பார், எதுதான் நின்றது?

ஆராலும் அறியாத சத்து அன்றோ? அதுவாய்

    அங்கு இரு நீ, எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய்,

பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்துப்

புலம்பாதே, சஞ்சலமாப் புத்தியை நாட்டாதே,

ஓராதே ஒன்றையும் நீ, முன்னிலை வையாதே,

    உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே."--- தாயுமானார்.


பதிஞானம்


இறைவனது அருளின் உண்மையை ஆன்மா உள்ளத்தில் கொள்ளுமாறு ஆசாரியர் அறிவுறுத்துவார். இத்தனை நாள் வரையில் பிறப்பு இறப்பிற்பட்டு இடர்ப்பாடு உற்று வந்த நீ பதி ஆவாயோ? பாசத்தோடு கூடிய நீ பசு ஆவாய். உன்னைப் பாசத்தினின்றும் நீக்கி எடுத்து உனது வியாபக அறிவை விளக்கிய முதற் பொருள் தூய அருளே ஆகும் என்பதை உணர்வாயாக என்று உணர்த்துவார். இங்ஙனம் ஞானாசிரியர் உணர்த்த, அவ்வான்மா அதனைச் சிந்தித்துத் தன்னுள்ளே ஊன்றி நோக்கியபோது, தன் அறிவிற்கு அறிவாய் நிற்கும் பதிப்பொருளினது அறிவாகிய திருவருள் அதற்குப் புலப்படும். அதுவே பதிஞானம் எனப்படுவது. அந்தப் பதிஞானமாகிய பேருணர்வில் ஆன்மவுணர்வு அடங்கித் தன் முனைப்பின்றி நிற்பின், அவ்வருளுக்கு முதலாகிய சிவமானது பேரின்பப் பொருளாய் அனுபவப்படும்.


மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன ஆதலின் பொய் எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். அதுவே மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காட்ட வல்லது. சேய்மையில் உள்ள சூரியனை அதன்கண் உள்ள ஒளியை நமது கண்ணிற்குக் காட்டி நிற்கும். அது போல, அறிய வாராத இறைவனை அவனது அருளொளியாகிய பதிஞானமே காட்டவல்லதாகும். ஏனைய ஞானங்களால் அவனை அறிய ஒண்ணாது. 


பதிஞானம் என்னும் உண்மை ஞானம் உணர்ந்தோர் எப்படி இருப்பர் என்பதைப் பட்டினத்து அடிகள் கூறுமாறு காண்க.


பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சை எல்லாம்

நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்

தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்

சேய்போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!


அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்

பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?

செறிவு ஒன்று அற வந்து இருளே சிதைய,

வெறி வென்றவரோடு உறும் வேலவனே. --- கந்தர் அனுபூதி.


பதிஞானத்தைப் பெறாதவர்கள், சமய நூல்களால் பெற்ற அறிவையே தமது அறிவு என்று கொண்டு, தம்மைத் தாமை உவந்துகொண்டும், பிறரைக் காய்ந்து கொண்டும், ஏற்றத் தாழ்வுகளைத் தமது அறிவிற்கு ஏற்றவாறு கற்பித்துக் கொண்டு, கலகமிட்டுத் திரிவர். "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். மேலும்,


"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"


என்றும் பாடினார் மணிவாசகப் பெருமான்.


ஒரு பொருள் தெரிய நிகழ் மனது --- 


பெற்ற நூலறிவால் மன நிறைவு பெற முடியாது என்பது உணர்ந்துகொண்ட போது, மனமானது மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளத் தலைப்படும். 


கொடிய இருவினை எனும் அளறு போக உதறி --- 


பொல்லாத நல்வினை, தீவினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேற்றில் இருந்து நீங்க, இறைவன் பொருள்சேர் புகழை எப்போதும் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். "இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு" என்னும் பொய்யாமொழியை எண்ணிப் பார்க்க வேண்டும்.


விதறிய கரண(ம்), மரண(ம்) அற, விரணம் அற, உருகி, அனுதினம் உரை பருகி, ஞான உணர்வு விழி பெற, உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள் புரிவாயே  --- 


விதறி, விதறுதல் - நடுங்குதல், பதற்றம் கொள்ளுதல்.


விதறிய கரணம் --- பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கு.


விரணம் - பகைமை. உயிரின் ஈடேற்றத்திற்குப் பகையாக உள்ளவை காமம், குரோதம், உலாபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களும். இவை ஒழிய வேண்டும் என்கிறார் அடிகளார். இந்நிலையில், யான் எனது என்னும் செருக்கும் அறும்.


மிருகமதம் - கத்தூரி.


உரகம் - பாம்பு.


நளினம் - தாமரை.


உகளம் - இரண்டு. பத உகளம் - திருவடி இணை.


"இருவினை அற, மலம் அற, இரவு பகல் அற, எனது அற, நினது அற, அநுபூதி இனிமை தரும் ஒரு தனிமையை, மறைகளின் இறுதி அறுதி இட அரிய பெறுதியை, இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே" என்று பிரிதொரு திருப்புகழில் அடிகளார் அருளி உள்ளதை எண்ணுக.


முகத்தில் கண்கொண்டு காண்கின்றவர்கள் மூடர்கள் என்று கூறி, அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம் என்று காட்டினார் திருமூலதேவ நாயனார். இங்கே, "ஞான உணர்வு விழிபெற" என்றார் அடிகளார்.


"கழித்திலேன் காம வெந்நோய் 

  காதன்மை என்னும் பாசம்

ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி 

  உணர்வெனும் இமை திறந்து

விழித்திலேன் வெளிறு தோன்ற 

  வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்

அழித்திலேன் அயர்த்துப் போனேன் 

  அதிகைவீ ரட்ட னீரே."


என்னும் அப்பர் தேவாரத்தை ஓதி உணர்தல் வேண்டும்.


இதன் பொருள் ---


திருவதிகைப் பெருமானே! என்னிடத்துள்ள ஆசாபாசம், காமம் என்ற கொடியநோய் நீங்கப் பெற்றிலேனாய்வ, ஆசை என்னும் பற்றினை விடுத்திலேனாய், உடலுயிர் வாழ்க்கையையே நோக்குபவனாய் இருத்தலால், அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலக, விழிக்கும் மெய்யுணர்வாகிய விழி விழிக்கும் நிலையைப் பெற்றிலேன். அதற்குத் தடையாகிய வினை என்னும் பண்டத்தையும் நிரம்பக் கொண்டுள்ளேன். அதே வேளை, இவற்றின் விருத்திக்கு ஊக்கும் இழிதகவு உடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன். 


"உள்ளக் கண் நோக்கும் அறிவு ஊறி, உள்ளத்தை நோக்க அருள்வாயே" என்று வள்ளிமலைத் திருப்புகழில் அடிகளார் கூறி உள்ளதும் காண்க.


கருத்துரை


முருகா! திருவடி ஞானத்தை அடியேனுக்கு அருள்வீராக.


































No comments:

Post a Comment

பொது --- 1101. குதறுமுனை அறிவுகொடு

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குதறும்முனை அறிவுகொடு (பொது) முருகா!  திருவடி ஞானத்தை அடியேனுக்கு அருள்வீராக. தனதனன தனதனன தனதனன தனதனன   ...