61. நடுவு நலைமை

 


"வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்

     வருமென்றும் நேசரென்றும்

வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன

     வானென்றும் ஏழையென்றும்


இந்தவகை யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்

     எள்ளள வுரைத்திடாமல்

எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்

     ஏற்கச்ச பாசமதமாம்


முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்

     மொழிந்திடின் தர்மமதுகாண்

முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று

     முன்தருமர் சொன்னதலவோ?


மைந்தனென அன்றுமை முலைப்பால் கொடுத்திட

     வளர்ந்தருள் குழந்தைவடிவே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

அன்று உமை, மைந்தன் என்று முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே! - முற்காலத்தில் உமையம்மை, மகன் என்று முலைப்பால் அளிக்க வளர்ந்தருளிய குழந்தை உருவம் உடையவனே!

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வந்த விவகாரத்தில் - தன்னிடத்தில் வந்த வழக்கிலே, இனிய பரிதானங்கள் வரும் என்றும் - நல்ல இலஞ்சப் பொருள்கள் கிடைக்கும் எனவும், நேசர் என்றும் - நண்பர்கள் எனவும், வன் பகைஞர் என்றும் - கொடிய பகைவர்கள் எனவும், அயலோர் என்றும் - முன்னர் பழக்கம் இல்லாதவர்கள் எனவும், மிக்க தனவான் என்றும் - பெரிய செல்வன் எனவும், ஏழை என்றும் - வறியவன் எனவும், இந்த வகையைக் குறித்து ஒரு பட்சபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் - இத்தகைய நிலையைக் குறித்து விருப்பு  வெறுப்புக்கள் எள்ளளவேனுங் கூறாமல், எண்ணமுடனே இலிகித புத்தியொடு - (நடுநிலை) நினைவுடன் எழுத்து மூலமான சான்றுகளோடு, சாட்சிக்கும் ஏற்க - சாட்சி கூறியதற்குந் தக, சபா சமதம் ஆம் - அவையோர் ஒப்பும் முறையில், முந்த இருதலையும் சமன்செய்த கோல்போல் - முதன்மை பெற இருசார்பிலும் சமப்படுத்திய துலாக்கோல் போல, மொழிந்திடில் தர்மம் அது - முறை கூறுவது அறமாகும், முன் முனை வீமன் உடல்பாதி மிருகந்தனக்கு என்று தருமர் சொன்னது அலவோ? - முற்காலத்தில் வலிய வீமனுடைய பாதிமெய் புருடா மிருகத்துக்குத்தான் எனத் தருமபுத்திரர் கூறியது அறம் அன்றோ?

தருமர் நீதி வழங்கிய கதை

     தருமபுத்திரன் செய்த வேள்வி ஒன்றுக்குப் புருடாமிருகத்தை அழைத்துவர வீமன் சென்றான். அது ஓர் ஒப்பந்தம் பேசியது. வீமன் விரைந்து முன்னே செல்ல வேண்டும். புருடா மிருகம் பின்னே வரும். அது வீமனைப் பற்றுவதற்கு முன்னாலே அவன் தன் நாட்டின் எல்லையைத் தொட்டுவிட வேண்டும். இதற்கிடையிலே அது வீமனைப் பிடித்துவிட்டால் அவன் அதற்கு உணவாகவேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு வீமன் இசைந்தான், ஆனால், அவன் தன் நாட்டின் எல்லையிலே ஒரு காலை வைத்தவுடன் அது அவனைப் பற்றிக்கொண்டது. வீமன், தன்காலைத் தன் எல்லையில் வைத்து விட்டதால் தன்னை அது உணவாக்கிக் கொள்ளலாகாது என்றான். ஆனால், அவ் விலங்கு மற்றொரு காலை அவன் எல்லையிலே வைக்கவில்லை என்று வற்புறுத்தியது. இருவரும் தருமபுத்திரரிடம் சென்று வழக்கு உரைத்தனர். அவர் நடுநிலை தவறாமல் வீமனுடைய பாதிமெய் விலங்கிற்கு உரியதுதான் என்று தீர்ப்புக் கூறினார். இவ்வாறு பாரதக்கதை கூறும்.

முறை அல்லது நீதி வழங்குவதில் விருப்பு வெறுப்புக் காட்டாமல் நடுநிலையாக இருத்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது. "முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல் மொழிந்திடின் தர்மம் அதுகாண்" என்பதை, திருவள்ளுவ நாயனார் "நடுவு நிலைமை" என்னும் அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில்,  "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல், அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்று, பொதுவாக இந்த இறம் எல்லோருக்கும் பொருந்தும் என்று காட்டியது காண்க "முன்னர் தான் சமனாக நின்று, பின்னர் தன்னிடத்தில் வைத்த பாரத்தை அளவு செய்யும் துலாக் கோல் போல், இலக்கணங்களால் நிறைந்து, ஒரு பக்கம் சாயாமல் இருத்தல் அறிவால் நிறைந்த சான்றோருக்கு அழகு ஆகும்" என்பது இத் திருக்குறளின் பொருள். எனவே, திருவள்ளுவ நாயனார் அருளியது போல, நீதி வழங்குதல் என்பது நீதிமன்றத்துக்கு மட்டும் பொருந்துவதாக எண்ணுதல் கூடாது. இந்த நீதி, எல்லா அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு கோப்பிலும் ஒரு மனிதனுடைய வாழ்க்கைப் பிரச்சினை உள்ளது. அதை துலாக்கோல் போல் அமைந்து, முறையாக உரிய காலத்தில் தீர்த்து வைப்பது அல்வலகங்களில் பணி புரியும் ஒவ்வொருவரது கடமை ஆகும். யாரும் தேவை இல்லாமல் எந்த அலுவலகத்துள்ளும் நுழையப் போவது இல்லை. தேவை இருக்கவேதான் தேடிப் வருகிறார்கள். அவர்களுக்கு நீதி வழங்குவது நமது கடமை என்பதை அலுவலர்கள் உணர வேண்டும். மேற்குறித்த பாடலில் சொல்லப்பட்ட அவலங்கள் யாவும் அரசு அலுவலகங்களில் இன்னமும் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளன என்பது வெள்ளிடை மலை என விளங்கும். 

"இலக்கணம்" என்னும் சொல் வடமொழியில், "இலக்ஷணம்" எனப்படும். துலாக் கோலுக்கு உரிய இலக்கணம் குறித்து தமிழ் இலக்கண நூல்கள் கூறுமாறு காண்க.

'துலாக்கோல் இயல்பே தூக்கும் காலை

மிகினும் குறையினும் நில்லாது ஆகலும்,

ஐயம் தீர்த்தலும், நடுவு நிலைமையோடு

எய்தக் கூறுப இயல்பு உணர்ந்தோரே. --- தொல்காப்பியம்.


ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்

மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே.--- நன்னூல்.

துலாக்கோல் எனப்படும் தராசு நமக்கு அறிமுகமான ஒரு கருவி. பொருளை எடை போடுவதற்குப் பயன்படுத்தும் கருவி. அது ஓர் இயந்திரம். அதற்கு விருப்பு வெறுப்பு கிடையாது. தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு  இல்லை. எடை சரியாக இருந்தால், அது தன் கடமையைச் செய்து உண்மையான எடையைக் காட்டும். இது  நாம் அன்றாடம் காண்கின்ற ஒரு காட்சி. ஒரு பக்கம் உள்ள தட்டில் 100 கிராம் தங்கத்தையும், இன்னொரு பக்கம் உள்ள தட்டில் ஒரு கிலோ இரும்பையும் இட்டால் இரும்பு உள்ள தட்டுத் தான் தாழ்ந்து காட்டும். ஒரு கிலோ இரும்பை விட 100 கிராம் தங்கம் விலை அதிகம் உடையது. தன்மையிலும், தரத்திலும் உயர்ந்தது. இரும்பைவிட மக்கள் தங்கத்தையே விரும்புவர், இருப்பினும், தராசு, தங்கத்திற்காகத் தாழ்ந்து கொடுக்காது.  சலுகை காட்டாது. காரணம்,  தராசிற்குத் தட்டிலிருக்கும் பொருளைப் பற்றிக் கவலை இல்லை. அதன் வேலை பொருளை எடை போடுவதுதான்.  பொருள் பொன்னா, இரும்பா அதைப் பற்றிக் கவலை இல்லை,அதன் எடைதான் முக்கியம். நபர் முக்கியம் அல்ல, அவரது செயல் அல்லது பண்புதான் முக்கியம். அதன் அடிப்படையில்தான் நீதி வழங்கப்படும்.  இத்தகைய நடுவுநிலைமை என்ற கொள்கை பின்பற்றப்படுமானால், குடும்பமும், குடும்பத்தோடு தொடர்பு உடைய பிறரும் நன்மை பெறுவர் என்பது மேற்குறித்த பாடலும், திருவள்ளுவ நாயனார் கட்டடும் வாழ்வியலும் ஆகும்.


No comments:

Post a Comment

12. தினையவளவு பனை அளவாகும்.

  "துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்      பெரிதாகும் தோற்றம் போலச் செப்பிட்ட தினையளவு செய்த நன்றி      பனையளவாய்ச் சிறந்து தோன்றும்! கொப்...