"பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும்
கொடுப்பதென்ன பொருளோ? என்று
நற்கமல முகம்மலர்ந்தே உபசாரம்
மிக்கஇன்சொல் நடத்தல் நன்றே;
கற்கரையும் மொழிபாகர் தண்டலையார்
வளநாட்டிற் கரும்பின் வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
பொழிந்துவிடும் தன்மை தானே!"
இதன் பொருள் ---
கல் கரையும் மொழி பாகர் தண்டலையார் வளநாட்டில் - கல்லும் கரையும் இனிய மொழியை உடைய உமையம்மையாரைத் தனது திருமேனியின் இடப்பக்கத்தில் கொண்டு உள்ள, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் வளம்பொருந்திய நாட்டிலே,
பொன் குடையும் பொன் துகிலும் பொன் பணியும் கொடுப்பது என்ன பொருளோ என்று - பொன்னாலான குடையும் ஆடையும் அணிகலன்களும் கொடுப்பது என்ன சிறப்புடையதோ? என அறிந்து,
நல் கமலம் முகம் மலர்ந்தே உபசாரம் மிக்க இன்சொல் நடத்தல் நன்றே - அழகிய தாமரை மலர் போலும் முகத்திலே மலர்ச்சியுடன் ஆதரித்து மிகுந்த இனிய மொழி கூறுதலே நல்லது,
(அவ்வாறு செய்வது) கரும்பின் வேய்ந்த சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை - கரும்பினால் ஆக்கப்பட்ட சர்க்கரைப் பந்தலிலே தேன்மழை பொழிந்து விடுவது போல ஆகும்.
இனிய மொழியில்லாத கொடை பயனளிக்காது என்பது கருத்து. "முகம் பாதி, பண்டம் பாதி" என்பது ஒரு பழமொழி. ஒருவருக்குக் கொடுத்து உதவும் உதவியானது, கொடுப்பவரது முகத்தால் பாதியும், கொடுக்கப்படும் பொருளால் பாதியுமாக முழுமை பெறுகிறது என்பது இப் பழமொழியின் பொருள்.
முகம் - தன்னிடத்து வருபவரைத் தொலைவில் கண்டபோதே இன்முகம் காட்டி வரவேற்றல்.
பண்டம் - வரவேற்று அழைத்து வரப்பட்டவர் விரும்பும் பொருளை நல்லதாகக் கொடுப்பது.
"சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதன மூன்று" என்று, "மோப்பக் குழையும் அனிச்சம், முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்னும் திருக்குறளுக்கு விளக்கமாக, பரிமேலழகர் கூறியுள்ளது காண்க.
No comments:
Post a Comment