அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நகைத்து உருக்கி
(கயிலைமலை)
திருக் கயிலை முருகா!
மாதர் மயக்கில் வீழாமல் அருள்.
தனத்த
தனத்த தனத்த தனத்த
தனத்த தனத்த ...... தனதான
நகைத்து
வுருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தி ...... லதிமோகம்
நடத்து
சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தி லணைத்து ...... மொழியாலுந்
திகைத்த
வரத்தி லடுத்த பொருட்கை
திரட்டி யெடுத்து ...... வரவேசெய்
திருட்டு
முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ
பகைத்த
அரக்கர் சிரத்தை யறுத்து
படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப்
பணைத்த
கரத்த குணத்த மணத்த
பதத்த கனத்த ...... தனமாதை
மிகைத்த
புனத்தி லிருத்தி யணைத்து
வெளுத்த பொருப்பி ...... லுறைநாதா
விரித்த
சடைக்கு ளொருத்தி யிருக்க
ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
நகைத்து,
உருக்கி, விழித்து மிரட்டி,
நடித்து, விதத்தில் ...... அதிமோகம்
நடத்து
சமத்தி முகத்தை மினுக்கி,
நலத்தில் அணைத்து, ...... மொழியாலும்
திகைத்த
வரத்தில் அடுத்த பொருள் கை
திரட்டி எடுத்து, ...... வரவேசெய்
திருட்டு
முலைப்பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ?
பகைத்த
அரக்கர் சிரத்தை அறுத்து,
படர்ச்சி கறுத்த ...... மயில்ஏறி,
பணைத்த
கரத்த, குணத்த மணத்த
பதத்த, கனத்த ...... தனமாதை,
மிகைத்த
புனத்தில் இருத்தி, அணைத்து,
வெளுத்த பொருப்பில் ...... உறைநாதா!
விரித்த
சடைக்குள் ஒருத்தி இருக்க,
ம்ருகத்தை எடுத்தொர் ...... பெருமாளே.
பதவுரை
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து --- பகை
கொண்டு வந்த அசுரர்களின் தலைகளை அறுத்து,
படர்ச்சி கறுத்த மயில் ஏறி --- படர்ந்து உள்ள
கருநிறம் படைத்த மயிலின் மீது ஆரோகணித்து,
பணைத்த கரத்த --- பருமைத் தன்மையுடையதும்,
குணத்த மனத்த --- குணமான நன் மணம்
பொருந்தியதும், பதத்த
கனத்த --- பக்குவநிலை எய்தி பெருமை பெற்றதும்
ஆகிய,
தன மாதை --- தனங்களை உடைய குறமகளை,
மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து ---
சிறந்த தினைப்புனத்தில் வைத்துத் தழுவி,
வெளுத்த பொருப்பில் உறை நாதா --- வெள்ளி
மலையில் வாழ்கின்ற தலைவரே!
விரித்த சடைக்கு உள் --- விரித்துள்ள
சடா பாரத்தினுள்,
ஒருத்தி இருக்க --- கங்காதேவி உறைய,
ம்ருகத்தை எடுத்தொர் --- மானைக் கரத்தில்
ஏந்திய சிவபெருமானுக்கு உரிய,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
நகைத்து உருக்கி --- புன் சிரிப்புச்
செய்து மனதை உருகச் செய்து,
விழித்து மிரட்டி --- நன்கு விழித்துப்
பார்த்து மிரளுமாறு செய்து,
நடித்து --- பொய்மையாக அன்பு உள்ளாரைப்போல்
நடித்து,
விதத்தில் அதிமோகம் நடத்து --- விதவிதமாக
அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற,
சமத்தி --- சாமர்த்தியத்தைக் காட்டி,
முகத்தை மினுக்கி --- முகத்தை மஞ்சள் முதலியன
இட்டு மினுக்கி,
நலத்தில் அணைத்து --- நலமிக்க
படுக்கையிடத்தில் தழுவி,
மொழியாலும் --- பேச்சின் திறத்தினாலும்,
திகைத்த வரத்தில் --- திகைக்கச் செய்து கேட்ட
வரத்தின்படி,
அடுத்த பொருள் கை திரட்டி --- கிடைத்த
பொருள்களைச் சேகரித்துக் கொண்டு,
எடுத்து வரவே செய் --- எடுத்துக் கொண்டு
வருமாறு செய்கின்ற,
திருட்டு முலை பெண் --- கரவுடைய முலைகளைப்
படைத்த விலைமாதரின்,
மருட்டு வலைக்குள் --- மயங்கச் செய்யும்
ஆசைவலைக்குள்ளும்,
தெவிட்டு கலைக்குள் --- நிறைந்த காம
நூல்களிலும்,
விழுவேனோ --- அடியேன் விழக் கடவேனோ?
பொழிப்புரை
பகைத்து வந்த சூராதி அவுணர்களின் தலைகளை
யறுத்து, நீல நிறம்
படர்ந்துள்ள மயிலின் மீது ஏறி, பருத்தும், குணமான நல்ல மணங் கமழப்பெற்றும், பக்குவப்பட்டுப் பெருமை பெற்றும் விளங்கும்
தனங்களையுடைய வள்ளிநாயகியை, சிறந்த
தினைப்புனத்தில் வைத்துத் தழுவி, மணஞ் செய்து கொண்டு, திருக்கயிலாய மலையில் எழுந்தருளியுள்ள
தலைவரே!
விரிந்த சடைமுடியில் கங்காதேவி இருக்குமாறு
செய்து, மானை ஏந்திய
சிவபெருமான் மகிழும் பெருமிதம் உடையவரே!
சிரித்து மனத்தை உருக்கி, விழித்துப் பார்த்து, அச்சத்தைத் தந்து, அன்புள்ளவரைப் போல் நடித்து, விதம் விதமாக அதிக மோகத்தைத் தருகின்ற
சாமர்த்தியத்தைக் காட்டி, முகத்தை மினுக்கி, நலம் மிகுந்த படுக்கைத் தலத்தில் தழுவி, இனிய பேச்சினாலும், திகைக்கச் செய்து, அவர்கள் கேட்ட வரத்தின்படி கையில்
கிடைத்த பொருள்களைத் திரட்டிக் கொணர்ந்து வரும்படிச் செய்கின்ற திருட்டுத்தனமான
கொங்கையை உடைய பெண்களின் மருட்சியைத் தரும் ஆசை வலையிலும், காமக் கலைக்குள்ளும் அடியே விழக்கடவேனோ?
விரிவுரை
நகைத்து ---
பொதுமகளிர், ஆடவரைக் கண்டு காரணம் இன்றியே முல்லை அரும்பு
போன்ற பற்கள் சிறிது தோன்றப் புன்னகை புரிவர். அந் நகை விடம்போல் ஆடவரை மயக்கும்.
உருக்கி ---
ஆடவருடைய
திண்ணிய மனத்தை உருக்கி விடுவார்கள்.
“பெண்கள்
நெருப்புக்குச் சமம். ஆண்கள் நெய்க் குடத்திற்குச் சமம்” என்று நாரத பரிவ்ராஜகம்
என்ற உபநிடதம் கூறுகின்றது. (நெருப்பு அருகில் உள்ள குடத்தில் உள்ள நெய்
உருகும்-நெய் மனத்திற்கு உவமை).
விழித்து
மிரட்டி
---
தம்மை
விரும்பிய ஆடவர்களை அம்மகளிர் கண்களை உருட்டிப் பார்ப்பர். அப் பார்வையால் ஆண்கள்
“இவள் நம்மை வெறுத்து விடுவாளோ” என்று எண்ணி அஞ்சுவர்.
நடித்து
விதத்தில் அதிமோகம் நடத்து சமத்தி ---
பொருளையே
விரும்பி, உள்ளத்தில் அன்பு
சிறிதேனும் இன்றி, ஆழ்கடல் போன்ற
அன்புள்ளாரைப் போல் நடிப்பார்கள்.
“உம்மைக் காண்கின்ற
போதெல்லாம் என் உடம்பில் மின்சார உணர்ச்சி பாய்கின்றது” “ஆ! உமது சொல் தேன் போல்
தித்திக்கின்றது”, “நீர் தொட்டால் அமுதம்
போல் உடம்பு குளிர்கின்றது” என்பது போன்ற சொற்களைக் கொஞ்சி மழலை மொழியால் கிளிபோல்
அசைந்து மொழிந்து, எத்தனை எத்தனையோ
விதத்தில் ஆடவர்க்கு மோகத்தை உண்டாக்குவார்கள்.
காட்டுத்
தீயைப்போல் ஆசைத் தீயை வளர்ப்பதில் மிக்க சாமர்த்தியம் உள்ளவர்கள்.
முகத்தை
மினுக்கி
---
தங்கள்
முகத்தை மஞ்சள் முதலிய சாதனங்களால் நன்கு மினுக்குவார்கள். முகத்தை ஒரு முறை ஆடவர்
கண்டவுடன் காந்தத்தைக் கண்ட ஊசிபோல் ஈர்க்கப் பெறுவர்.
மொழியாலும் ---
கண், முகம், நடிப்பு இவைகளால் மயக்குவதேயன்றி, தேன்போன்ற இனிய சொற்களாலும்
மயக்கத்தைப் புரிவர்.
திகைத்த
வரத்தில் அடுத்த பொருள்கை திரட்டி எடுத்து வரவே செய் ---
மேலே
கூறிய சாகசங்களால் ஆடவர் திகைப்புறுவர். அம்மகளிர் கேட்ட வரங்களை நல்கி, அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு தங்கள்
கரத்தில் கிடைத்த பொருள்களை எல்லாம் திரட்டிக் கொணர்ந்து தருமாறு செய்வார்கள்.
மருட்டு
வலைக்குள்
---
மயக்கத்தைச்
செய்யும் வலைக்குள் அகப்பட்டு மயங்குதல் கூடாது.
மாதர்
யமன் ஆம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும்
அல்குல் பெருநரகம்,- ஓத அதில்
வீழ்ந்தோர்க்கும்
ஏற விரகு இல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும்
இல்லை தவறு. --- திருப்போரூர்ச்சந்நிதிமுறை
தெவிட்டு
கலைக்குள்
---
இன்பத்தை
தெவிட்ட வைக்கின்ற காம சாத்திரங்கள். கலை என்ற சொல் ஆடையையும் குறிக்கும்.
வெளுத்த
பொருப்பு
---
வெண்மையான
மலை. வெள்ளி மலை. திருக்கயிலாயம். இம்மலை கோடி கோடி சூரிய ஒளிபோன்று தகதக என்று
விளங்கா நிற்கும்.
அண்ணல்
வீற்றுஇருக்கப் பெற்றது, ஆகலின்
நண்ணு
மூன்று உலகும் நான்மறைகளும்
எண்ணில்
மாதவம் செய்யவந்து எய்திய
புண்ணியம்
திரண்டு உள்ளது போல்வது. --- பெரியபுராணம்.
விரித்த
சடைக்குள் ஒருத்தி இருக்க. ம்ருகத்தை எடுத்தார் ---
உமாதேவியாருடைய
விரல்களில் இருந்து தோன்றிய கங்கை உலகங்களை எல்லாம் அழிக்குமாறு பெருகித் திரண்டு
வெள்ளமாய் வந்தபோது சிவபெருமான் அக் கங்கையைத் தமது சடைமுடியில் ஓர் உரோமத்தில்
அடக்கி அகில உலகங்கட்கும் அருள் புரிந்தார்.
கங்கையை
முடித்த தன்மை சிவபெருமானுடைய பேராற்றலைக் குறிப்பது ஆகும்.
மானை
ஏந்தியது - துள்ளி ஓடும் நமது மனமாகிய மானை இறைவன் அடக்கிப் பிடித்து அருளும்
தன்மையை உணர்த்துவதாகும்.
இத்தகைய
ஒரு மானை ஏந்திய பெருமான் மகிழுகின்ற பெருமையை உடையவர் முருகவேள்.
கருத்துரை
கயிலாய
மலை உறையும் கந்தவேளே, மாதர் மயக்கு
உறாவண்ணம் அருள் செய்.
No comments:
Post a Comment