திருச் சிராப்பள்ளி




திரி சிராப்பள்ளி
(திருச்சிராப்பள்ளி)

     சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. திருச்சி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் திருச்சிக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.

இறைவர்              : மாத்ருபூதேசுவரர், தாயுமானேசுவரர்,                                                                தாயுமானவர்.

இறைவியார்           : மட்டுவார்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை.

தீர்த்தம்               : காவிரி.

தேவாரப் பாடல்கள்         : 1. சம்பந்தர் - நன்றுடையானை
                                                        2. அப்பர் - மட்டு வார்குழ லாளொடு.

         திருச்சி நகரை எந்த திசையிலிருந்து நெருங்கும் போதும் கம்பீரமாக காட்சி தரும் மலைக்கோட்டையில் அமைந்துள்ள கோயில்தான் தாயுமானவர் கோவில். மலைக்கோட்டை என்று சொல்லப்படும் ஒரு குன்றின் மேல் 273 அடி உயரத்திலும், 417 படிகளும் கொண்டு அமைந்திருக்கும் இந்த ஆலயம் தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது.

     திரிசரன் என்ற அரக்கன் இங்கே ஆட்சி புரிந்து இறைவனைப் பூசித்து பேறு பெற்றான். அதனால் இத்தலம் திரிசிரபுரம் என்றும் பெயர் பெற்றது.

         தென் கயிலாயம் என்று பெயர் வரக் காரணமும் சுவையானது. ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானை வணங்க வந்தவர்களுள் ஆதிசேஷனும் வாயுபகவானும் இருந்தனர். ஆதிசேஷன் வருகையைப் பலரும் புகழ்ந்து கொண்டாடியதைக் கண்டு வாயுவுக்குப் பொறாமை ஏற்பட்டது. வாயு ஆதிசேஷனை எதிர்க்க, இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேஷன் கைலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக வாயுதேவன் பலத்த காற்றை வீச கைலாயம் அதிர்ந்தது. அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் எனும் மூன்று இடங்களில் வீழ்ந்தன. இப்படித்தான் திருசிரமலை தென் கயிலாயம் என்ற பெயர் பெற்றது.

         இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலையில் உள்ள பாறைகள் மீது மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

     முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதியும், இரண்டாம் தளத்தில் இறைவன் தாயுமானசுவாமியின் சந்நிதியும் அமைந்துள்ளன. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் மேற்குப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது. மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் இருக்கிறது.

         இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய திருத்தலம் இதுவாகும்.

     இத்திருத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வரமுடியவில்லை. அக்கரையில் இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இத் திருத்தலம் விளங்குகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தாரைக் கட்டி அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக விநியோகிப்பார்கள்.

         மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.


     சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான கங்காள மூரத்தம் இத்திருத்தலத்தில் உள்ளது. மலையில் பல்லவர் காலத்திய இரண்டு குகைகள் உள்ளன.

         இத்திருத்தலத்தில் முருகப் பெருமான் குத்துக்குமாரசாமியாக பன்னிரு திருக்கரங்களும், ஆறு திருமுகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி, தெய்வானை தேவியர் இருபுறமும் விளங்குகின்றனர். மற்றொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் பாடப் பெற்ற திருப்புகழில் 15 பாடல்கள் உள்ளன.

         இங்குள்ள தீர்த்தம் சிவதீர்த்தம். இது கோயிலுள் உள்ளது. திருப்பராய்த்துறையில் இருந்து வாழ்ந்து வந்த அன்பரொருவர் திருநீற்றைப் பெற்று வாயால் ஊதிய பாவத்திற்காகக் காட்டுப் பன்றியாய்ப் பிறந்தார். பல்காலம் அலைந்து திரிந்து கடைசியில் வில்வ வனமாகிய இத்தலத்தை அடைந்து அதை அழிக்கத் தொடங்கியபோது வேடர்கள் அதுகண்டு துரத்தினர். அப்போது அப்பன்றி ஓடமாட்டாது இங்குள்ள சிவதீர்த்தத்தில் வீழ்ந்தது. இத் தீர்த்தத்தில் வீழ்ந்தமையால் அப் பன்றி பேறு பெற்று உய்ந்தது. அத்தகைய உயர்ந்த தீர்த்தம் இத் தீர்த்தமாகும்.

         இச்சிறப்பினை விளக்கும் சிற்பம், இத் திருக்குளத்தில் இறங்கும் போது வலப்புறத்தில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மல்செய் அராப்பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும் சிராப்பள்ளி ஞானத் தெளிவே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 343
கற்குடி மாமலை மேல்எழுந்த
         கனகக் கொழுந்தினை, கால்வளையப்
பொன்திரள் மேருச் சிலைவளைத்த
         போர்விடை ஆளியை, போற்றிஇசைத்து,
நல்தமிழ் மாலை புனைந்து அருளி,
         ஞானசம் பந்தர் புலங்கள் ஐந்தும்
செற்றவர் மூக்கீச் சரம்பணிந்து,
         திருச்சிராப் பள்ளிச் சிலம்புஅணைந்தார்.

         பொழிப்புரை : திருக்கற்குடி மாமலையின் மீது வீற்றிருக்கும் பொற்கொழுந்து போன்றவரை, பொன்மேரு மலையை வளைத்த ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டவரைப் போற்றி, நல்ல தமிழ் மாலையைச் சூட்டி, ஞானசம்பந்தர், பொறிவாயில் ஐந்து அவித்த புனிதரின் `திருமூக்கீச்சரத்தினைப்' பணிந்து சென்று, `திருச்சிராப்பள்ளி' மலையை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 344
செம்மணி வாரி அருவிதூங்கும்
         சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரை,
கைம்மலை ஈர்உரி போர்வை சாத்தும்
         கண்ணுத லாரைக் கழல்பணிந்து,
மெய்ம்மகிழ்வு எய்தி உளம் குளிர,
         விளங்கிய சொல்தமிழ் மாலைவேய்ந்து,
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை
         வணங்கும் விருப்பொடு வந்துஅணைந்தார்.

         பொழிப்புரை : செந்நிறமான மணிகளை வாரிக் கொணரும் அருவிகள் பாய்தற்கு இடனான `திருச்சிராப்பள்ளி\' மலையின் மேல் வீற்றிருக்கும், யானையின் தோலை உரித்து அதைப் போர்த்திக் கொண்ட, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, உண்மையான மகிழ்ச்சியை அடைந்து, மனம் குளிர்ந்து விளங்கிய சொல் தமிழ் மாலையைப் புனைந்து, கருமை விளங்கும் கழுத்தினையுடைய இறைவரின் `திருவானைக்கா' என்ற பதியை வணங்கும் விருப்புடனே பிள்ளையார் வந்து அடைந்தார்.

         திருச்சிராப்பள்ளியில் அருளியது, `நன்றுடையான' (தி.1 ப.98) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகம்.


1.098    திருச்சிராப்பள்ளி              பண் - குறிஞ்சி
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நன்றுஉடையானை, தீயதுஇலானை, நரைவெள்ஏறு
ஒன்றுஉடையானை, உமைஒருபாகம் உடையானை,
சென்றுஅடையாத திருவுடையானை, சிராப்பள்ளிக்
குன்றுஉடையானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே.

         பொழிப்புரை :நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.


பாடல் எண் : 2
கைம்மகவு ஏந்தி, கடுவனொடு ஊடி, கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரைஏறும் சிராப்பள்ளி,
வெம்முகவேழத்து ஈர்உரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழிஅன்றே.

         பொழிப்புரை :சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரியமலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழி தரும் செயல் அன்றோ?


பாடல் எண் : 3
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமும் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேல்உடையார் விடைஊரும்
எந்தம்அடிகள் அடியார்க்குஅல்லல் இல்லையே.

         பொழிப்புரை :மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 4
துறைமல்குசாரல் சுனைமல்குநீலத்து இடைவைகிச்
சிறைமல்குவண்டும் தும்பியும்பாடும் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனல்எரிஆடும் கடவுள்எம்
பிறைமல்குசென்னி உடையவன்எங்கள் பெருமானே.

         பொழிப்புரை :பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.


பாடல் எண் : 5
கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதின்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர்அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரைநீலம் உண்டதும்வெள்ளை நிறம்ஆமே.

         பொழிப்புரை :கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும் மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?


பாடல் எண் : 6
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேரும் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுஉண்பர் தலைஓட்டில்
ஐயமுங்கொள்வர் ஆர்இவர்செய்கை அறிவாரே.

         பொழிப்புரை :எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.


பாடல் எண் : 7
வேயுயர்சாரல் கருவிரல்ஊகம் விளையாடும்
சேய்உயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேய்உயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீஉகந்துஆடல் திருக்குறிப்புஆயிற்று ஆகாதே.

         பொழிப்புரை :கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு, சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.


பாடல் எண் : 8
மலைமல்குதோளன் வலிகெடஊன்றி மலரோன்தன்
தலைகலன்ஆகப் பலிதிரிந்துஉண்பர் பழிஓரார்
சொலவலவேதம் சொலவலகீதம் சொல்லுங்கால்
சிலஅலபோலும் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.

         பொழிப்புரை :மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?


பாடல் எண் : 9
அரப்பள்ளியானும் மலர்உறைவானும் அறியாமைக்
கரப்புஉள்ளிநாடிக் கண்டுஇலரேனும் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புஉள்ளீர்உம்மை ஏதிலர்கண்டால் இகழாரே.

         பொழிப்புரை :பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக்கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே, நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?


பாடல் எண் : 10
நாணாதுஉடைநீத் தோர்களும்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகல்உண்டு ஓதுவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுஉறுசீர் பெறுதும்என்பீர்எம் பெருமானார்
சேண்ஆர்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.

         பொழிப்புரை :நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர், எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.


பாடல் எண் : 11
தேன்நயம்பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்குஏறும் கழுமலவூரில் கவுணியன்
ஞானசம்பந்தண் நலமிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத்து அவரொடுமன்னி வாழ்வாரே.

         பொழிப்புரை :தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகில் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.

                                             திருச்சிற்றம்பலம்

-------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 302
சிலந்திக்கு அருளும் கழல்வணங்கிச்
         செஞ்சொல் மாலை பலபாடி,
இலங்கு சடையார் எறும்பியூர்
         மலையும் இறைஞ்சிப் பாடியபின்,
மலர்ந்த சோதி திருச்சிராப்
         பள்ளி மலையும், கற்குடியும்,
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
         துறையும் தொழுவான் நண்ணினார்.

         பொழிப்புரை : நாவரசர் திருவானைக்காவில் சிலந்திக்கு அருளிய இறைவரின் திருவடிகளை வணங்கி, பலசெஞ்சொல் மாலைகளைப் பாடி, விளங்கும் சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவெறும்பியூர் மலையையும் வணங்கித் திருப்பதிகம் பாடினார். பின்பு விரிந்த பேரொளியையுடைய திருச்சிராப்பள்ளி மலையையும், திருக்கற்குடி மலையையும், நன்மையுடைய திருப்பராய்த்துறையையும் வணங்கும் பொருட்டுச் செல்லலானார்.

         குறிப்புரை :
1.    திருவானைக்காவில் அருளிய பதிகங்கள்:
(அ) `கோனைக்காவி` (தி.5 ப.31) - திருக்குறுந்தொகை. (ஆ) `எத்தாயர்` (தி.6 ப.62) - திருத்தாண்டகம். (இ) `முன்னானை` (தி.6 ப.63) – திருத்தாண்டகம்.

2.    திருவெறும்பியூர்: (அ) `விரும்பியூறு` (தி.5 ப.74) - திருக்குறுந்தொகை. (ஆ) `பன்னிய செந்தமிழ்` (தி.6 ப.91) - திருத் தாண்டகம்.

3.    திருச்சிராப்பள்ளி: `மட்டுவார்` (தி.5 ப.85) - திருக்குறுந்தொகை.

4.    திருக்கற்குடி: `மூத்தவனை` (தி.6 ப.60) - திருத்தாண்டகம்.

5.    திருப்பராய்த்துறை: `கரப்பர்` (தி.5 ப.30) - திருக்குறுந்தொகை.


5. 085   திருச்சிராப்பள்ளி       திருக்குறுந்தொகை
                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாஉகந்து ஏறும் இறைவனார்,
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே.

         பொழிப்புரை : சிராப்பள்ளிச் செல்வர், தேன் ஒழுகும் நீண்ட குழலை உடைய உமாதேவியோடு பெரிய விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவர்; பாசக்கட்டு நீத்தவர்க்கு இன்னருளே புரியும் மேலோர்.


பாடல் எண் : 2
அரி அயன்தலை வெட்டிவட்டு ஆடினார்
அரி அயன்தொழுது ஏத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரி அயன்தொழ அங்குஇருப் பார்களே.

         பொழிப்புரை : திருமால், அயன் ஆகியோர் தலைகளை வெட்டி வட்டுப்போல் ஆடியவரும், அவ்விருவரும் தொழுது வணங்கும் அரும்பொருளும், பெரியவரும் ஆகிய அப்பெருமானுக்குரிய சிராப்பள்ளியைச் சிந்தையுள் பேணும் அன்பர், திருமாலும் பிரமனும் தொழச் சிவலோகத்திருப்பார்கள்.


பாடல் எண் : 3
அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.

         பொழிப்புரை : நெஞ்சே! ஐம்புலக் கள்வரால் இராப்பகலாக அரிக்கப்பெற்று ஆட்டப்பெற்று வருந்தியிராமல் இருக்க ஓர் உபாயம் சொல்லக் கேட்பாயாக! திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை பொருந்தி இருக்காமல் உன்னைவிட்டு நடக்கும்; நடக்கும்!

பாடல் எண் : 4, 5, 6, 7, 8, 9,
* * * * * * *

பாடல் எண் : 10
தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே.

         பொழிப்புரை : தாயுமாகி எனக்குத் தலைகண்ணுமாகிப் பேயனேனாகிய என்னையும் ஆட்கொண்டருளிய பெருந்தகையும் தேயங்கட்கெல்லாம் நாதனும் ஆகிய பெருமானைச் சிராப்பள்ளி மேவிய நாயனார் என்று கூறி வாழ்த்த நம்வினை நாசம் அடையும்.
                                             திருச்சிற்றம்பலம்

        
தாயுமான சுவாமிகள்
அருளிய
சின்மயானந்தகுரு
பன்னிருசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
(உரையாசிரியர், திருவள்ளுவரகம் ப. இராமநாத அடிகள்)

திருச்சிற்றம்பலம்

பாடல் எண். 1
அங்கைகொடு மலர்தூவி, அங்கம்அது புளகிப்ப,
                 அன்பினால் உருகி, விழிநீர்
      ஆறாக வாராத முத்தியினது ஆவேச
            ஆசைக் கடற்குள் மூழ்கி;
சங்கர! சுயம்புவே! சம்புவே! எனவும்,மொழி
                 தழுதழுத் திடவணங்கும்
       சன்மார்க்க நெறிஇலாத் துன்மார்க்க னேனையும்
                 தண்அருள் கொடுத்து ஆள்வையோ?
துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள்
                 தொழுதுஅருகில் வீற்றிருப்ப,
      சொல்லரிய நெறியைஒரு சொல்லால் உணர்த்தியே
                 சொரூபஅநு பூதிகாட்டி,
செங்கமல பீடமேல் கல்ஆல் அடிக்குள்வளர்
                 சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயா னந்தகுருவே!

          (பொருள்.) "அங்கைகொடு . . . வணங்கும்" - (மெய்யன்பர்கள்) அழகிய கைகளினால் நறு மலர்களினைக் கொண்டு (செந்தமிழ்த் திருமாமறை முறைகளிற் காணப்படும் போற்றி யெனும் மந்திர முடிபினையுடைய தொடர்புகளைப் புகன்று) திருவடிக்கண் தூவி, மெய் மயிர் பொடிப்பக் காதலால் உள்ளம் உருகி, இன்பக்கண்ணீர் விழியிரண்டினின்று அருவியென வழிய, தெவிட்டாத வீடுபேற்றினது வெறி வேட்கை யென்னும் பெருங்கடற்குள் மூழ்கி இறவா இன்பம் அளிக்கும் அறவோனே! தான்றோன்றிய தண்ணருளே! பேரின்பத் தோற்றத்துப் பெருகிய நிலைக்களமே! (என வாயார வாழ்த்தி) என்று நாத்தமும் பேற (வனப்புற) வணக்கஞ் செய்யும்;

          "சன்மார்க்க . . . வீற்றிருப்ப" - நன்னெறி நான்மைவழி நில்லாத, புன்னெறிச் செல்லும் புலையனேனையும் (நின்னுடைய அந்தண்மையாகிய தண்ணளி புரிந்து ஆட்கொண்டருள்வையோ? மிகவும் உயர்ந்த செல்வி வாய்ந்த சனகன் முதலாய முனிவேந்தர்கள் உச்சிமேற் கைகுவித்து முறையுறத் தொழுது (திருவடியின் அண்மையில் வேறோர் எண்ண மின்றி நின் திருமுகச் செவ்வி நோக்கி) வீற்றிருப்ப;

         "சொல்லரிய . . . . . . குருவே" - (திருவடிப் பேரின்பத்தை எய்துவிக்கும் நெறி சொல்ல வொண்ணாதது, நினைக்க முடியாதது) சொல்லுதற்கரிய ஒளிநெறியை (சொல்லாமற் சொல்லும் கையடையாளமாகிய) ஒரு சொல்லால் அறிவுறுத்தியருளி, (உணர்விற்கு உணர்வாய் உள்கலந்து உணர்த்தும்) உண்மைப் பேரின்ப நுகர்வினை உணர்த்தியருளிச் செந்நிறமும் செம்மையும் ஒருங்கமைந்த இருக்கைமீது, கல்லால மரத்தடியில் எழுந்தருளியிருக்கின்ற, செம்பொருட்டுணிவாகிய சித்தாந்தப் பேற்றிற்குரிய விழுமிய முழுமுதலே! திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 2
ஆக்கைஎனும் இடிகரையை மெய்என்ற பாவி,நான்
                 அத்துவித வாஞ்சைஆதல்,
         அரியகொம் பில்தேனை முடவன்இச் சித்தபடி
                 ஆகும்; அறிவு அவிழஇன்பம்
தாக்கும்வகை ஏது? இந்நாள் சரியைகிரி யாயோக
                 சாதனம் விடுத்தது எல்லாம்
         சன்மார்க்கம் அல்ல; இவை நிற்க, என் மார்க்கங்கள்
                   சாராத பேரறிவதாய்,
வாக்குமனம் அணுகாத பூரணப் பொருள்வந்து
                வாய்க்கும் படிக்கு,உபாயம்
         வருவித்து உவட்டாத பேரின்பம் ஆனசுக
                 வாரியினை வாய்மடுத்து,
தேக்கித் திளைக்க, நீ முன்நிற்பது என்றுகாண்?
                 சித்தாந்த முத்திமுதலே!
         சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயா னந்தகுருவே!

           (பொருள்.) "ஆக்கையெனு . . . ஆகும்" - உடம்பென்று சொல்லப்படும் அழிந்த ஆற்றங்கரையை (அழியாதிருக்கக் கூடிய) உண்மைப் பொருளென்று கருதிவாழுந் தீவினையேனாகிய நான், (இரண்டிணை ஒன்றாகிய) மெய்ப்புணர்ப் பென்னும் அத்துவிதத்தில் வேணவாக் கொள்ளுதல் உறுப்புக் குறைபாடுடைய முடவன் ஒருவன், எட்டுதற்கரிய இடத்தினுள்ள கொம்பில் வைக்கப்பட்ட தேனை விரும்பியதோடொக்கும்;

           "அறிவு அவிழ . . . நிற்க" - (எளியேனது) அறிவானது நன்றாக விரியும்படி, இன்பம் மெய்யுணர்வின்கண் நிறையும்படிக்குள்ள வழிவகை உண்டாகுமோ? இந்நாள்வரை சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நாற்படியினுள் மூன்றினும் முறையே பழக்கங் கொள்ளாது விட்டுவிட்டதெல்லாம் நன்னெறி யாகாது; அவை நிற்க;

          "என்மார்க்கங்கள் . . . என்றுகாண்" - எவ்வகையான நெறிகளிலும் அணுகப் பெறாத மெய்யுணர் வென்னும் மூதறிவாய், மாற்றம் மனங்கழிய நின்றுள்ள முழு நிறைவாய் விளங்கும் மெய்ப்பொருள் எளியேனுக்கு வந்து வாய்க்கும்படி சூழ்ச்சியாகிய வழிவகை யொன்றினை வருவித்துத், தெவிட்டுத வில்லாத பேரின்ப வண்ணமான மாளா நன்மைப் பெருங்கடலினை உணர்வினுள் உண்டு நிறைவித்து மூழ்கி இன்புற நீ முன்னின்றருள்வது எந்நாளில்?

           "சிரகிரி . . . குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 3
ஒளவியம் இருக்க, நான் என்கின்ற ஆணவம்
                  அடைந்திட்டு இருக்க, லோபம்,
      அருள்இன்மை கூடக் கலந்து, உள் இருக்க,மேல்
                   ஆசா பிசாச முதலாம்
வெவ்விய குணம்பல இருக்க, என் அறிவூடு
                    மெய்யன்நீ வீற்றிருக்க
         விதிஇல்லை என்னிலோ பூரணன் எனும்பெயர்
                   விரிக்கில் உரை வேறும் உளதோ?
கவ்வுமலம் ஆகின்ற நாகபா சத்தினால்
                   கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை
      கடிதுஅகல வலியவரு ஞானசஞ் சீவியே!
                   கதியான பூமிநடுவுள்
செவ்விதின் வளர்ந்துஓங்கு திவ்யகுண மேருவே!
                   சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                  சின்மயா னந்தகுருவே!

          (பொ - ள்.) "ஒளவிய . . . இருக்க" - (எளியேன் பால் சிறிதும் பொருந்தாத) அழுக்காறாகிய பொறாமை குடிகொண்டு முடிவின்றிருக்கவும், நானென்று சொல்லப்படும் உயிர்முனைப்பாகிய ஆணவம் மேலோங்கி நிற்கவும், இவறன்மையாகிய பிசுனத்தன்மை நீங்காதிருக்கவும் இரக்கம் என்பது எள்ளளவும் இல்லாதிருக்கவும், இக்கலப்புடனே ஆசையென்னும் பேய்பிடித்து வெறியாட்டாடவும், இங்ஙனம் சொல்லப்பட்டவை முதலான பொல்லாக்குணம் பலவும் அடியேன் பால் கல்விப் பற்றிக் குறைவற நிறைந்து மேலோங்கி நீங்காது நிற்கவும்.

          "என்அறிவூடு . . . உயிர்கள்" - (இத்தகைய பொல்லா இழிகுணம் பலவுடைய) எளியேன் அறிவினூடு (என்றும் ஒரு படித்தாய்த் தோற்ற மாற்றமாகிய பிறப்பு இறப்புகளின்றி நின்று நிலவும்) மெய்ப் பொருளாகிய நீ வீற்றிருந்தருள முறைமையில்லை யென்று கூறியருள் வாயாகில், நீ எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாய் என்பதற்கும், அதுவே நின் பெருந்தண்ணளிப் பெற்றிசேர் பேரியல்பு என்பதற்கும் மாறாகிவிடும். அங்ஙனம் விரித்துரைக்கவும் வழியில்லை. இவற்றிற்கு வேறாகவும் உண்டாகுமோ? பண்டே புல்லிய ஆணவமலம் என்னும் பாம்புக் கயிற்றால் கட்டுண்டு செயலற்றுக்கிடக்கும் ஆருயிர்களின்;

           "மூர்ச்சை . . . . . . . மேருவே" - மூர்ச்சித்துக் கிடக்கின்ற துன்பநிலை வல்விரைவில் நீங்க, (கழிபேரிரக்கத்தால்) வலியவந்தருளும் நஞ்சினை நீக்கும் மருந்தாகிய பொருளே! வீடுபேறென்னும் நீடுலகின் நடுவில் செவ்விதாகிய நிலைமையுடன் வளர்ந்தோங்கும் மிகவுஞ் சிறந்த குணமாகிய மேரு என்னும் பொன்மலையே!

           "சிரகிரி . . . குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 4
ஐவகை எனும்பூதம் ஆதியை வகுத்து,அதனுள்
                 அசரசர பேதம்ஆன
     யாவையும் வகுத்து, நல் அறிவையும் வகுத்து, மறை
                 ஆதிநூ லையும்வகுத்து,
சைவமுத லாம்அளவில் சமயமும் வகுத்து, மேல் 
                 சமயம் கடந்தமோன
      சமரசம் வகுத்தநீ,  உன்னையான் அணுகவும்
                 தண்அருள் வகுக்கஇலையோ?
பொய்வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே!
                 பொய்இலா மெய்யர்அறிவில்
     போதபரி பூரண அகண்டிதா காரமாய்ப்
                 போக்குவரவு அற்றபொருளே!
தெய்வமறை முடிவான பிரணவ சொரூபியே!
                 சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயா னந்தகுருவே.

           (பொ - ள்.) "ஐவகை . . . . . . வகுத்தநீ" - ஐவகையாகச் சொல்லப்படும் (நுண்ணிய நிலையாகிய) பூதங்களையும் (பருமை நிலையாகிய) பூதகாரியங்கள் எனப்படும் பௌதிகங்களையும் இவைமுதலாக விளங்குகின்ற உலகங்களைத் திருக்குறிப் (சங்கற்பம்) பாகிய கண்ணுதலால் படைத்தருளி, அவ்வுலகத்தின்கண் இயங்குதிணை (சரம்) உயிர்களையும் நிலைத்திணை (அசரம்) உயிர்களையும் அவ்வவற்றிற்குரிய உடம்புகளோடு கூடிவருமாறு செய்தருளி, (அவ்வுடலகத்து அவ்வப் பிறப்பிற்குரிய அறிவு விளங்குமாறு புறக்கருவி அகக்கருவிகளின் விளக்கத்தை யமைத்து அவற்றால்) நல்லறிவையும் வகுத்தருளி, (அவ்வறிவு விளக்கத்திற்கு உறுதுணையாகிய) மறை முறைகள் என்று சொல்லப்படும் வேதாகம முதலாகிய நூல்களையும் அமைத்தருளி, அந்நூல்களால் (ஆருயிர்களின் தகுதிக்கு ஏற்பப் படிமுறையான் விளங்கிப் பள்ளி வகுப்புப் போல் மேன்மேலாகக் கைக்கொள்ளப்படும்) சைவ முதலாகச் சொல்லப்படும் அளவில்லாத நெறிகளையும் வகுத்தருளி, அவற்றிற்கு மேலாக நெறிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டதாகிய வாய்வாளாமை (மோனம் என்னும் பொதுமையும் வகுத்தருளிய நீ;

          "உன்னைநா . . . . . . அறிவில்" - உன்னை அடியேன் (அன்புடன்) அணுகி (உய்யுமாறு) அந்தண்மை வாய்ந்த திருவருள் வகுத்தருளவில்லையோ? (மீட்டும் மீட்டும் பிறப்பினைத் தந்து பேதுறுத்திச் சிறைப் படுத்தும்) பொய் முதலிய தீமைகளே நாளும் பெருகி வளர்ந்து கொண்டிருக்கும் மனமுடைய தீயவர்கள் கண்டுகொள்ள முடியாதபடி மறைந்து நின்றருளும் பேரறிவுப் பெரும்பிழம்பே! (அத்தகைய) தீமைகள் சிறிதும் இல்லாத திருவருள் துணையால் மெய்யுணர்வு கைவரப்பெற்றுத் திகழும் அவ்வடியவர் தம் தூய அறிவில்;

          "போதபரி . . . முதலே" - (எங்கும் நிலைபெற்று விளங்கும்) முழுநிறைவாகிய மெய்யுணர்வாய்த் திகழ்ந்து, எல்லையற்ற பெருவடிவாய் யாண்டும் (உருவுடைப் பொருள்போல்) போக்கும் வரவும் உள்ளதென்னும் இயல்பு இல்லதாய் மாறாது திகழ்ந்து கொண்டிருக்கும் (பெரும் பெயர்க் கிளவியாகிய) பெரும் பொருளே! (பண்டைச் செந்தமிழ்மறைகளே) தெய்வ மறையின் திருமுடியாகிய ஓங்காரத்தின் உட்பொருளே! முடிந்த முடிவெனப்படும் செம்பொருட்டுணிவின் விழுமிய முழுமுதலே!

           "சிரகிரி.....குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 5
ஐந்துவகை ஆகின்ற பூதபே தத்தினால்
                 ஆகின்ற ஆக்கை, நீர்மேல்
      அமர்கின்ற குமிழிஎன நிற்கின்றது என்ன, நான்
                 அறியாத காலம்எல்லாம்,
புந்திமகிழ் உறஉண்டு உடுத்துஇன்பம் ஆவதே
                 போந்தநெறி என்றுஇருந்தேன்;
      பூராய மாகநினது அருள்வந்து உணர்த்த,இவை
                 போனவழி தெரியவில்லை;
எந்தநிலை பேசினும் இணங்கவிலை; அல்லால்
                 இறப்பொடு பிறப்பை உள்ளே
      எண்ணினால் நெஞ்சுஅது பகீர்எனும்; துயில்உறாது
                 இருவிழியும், இரவுபகலாய்ச்
செந்தழலின் மெழுகுஆனது அங்கம்; இவை என்கொலோ?
                 சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயா னந்தகுருவே!

          (பொ - ள்) "ஐந்துவகை . . . . . . என்றிருந்தேன்" - நிலம், நீர், நெருப்பு, உயிர் (காற்று), நீள்விசும்பு. ஐந்துவகையாகி இருக்கின்ற பூதங்களும், அவற்றின் வேறுபாடுகளும் கூடித் தோன்றும் இவ்வுடம்பு நீர்மேல் காணப்படும் குமிழி போன்று நிற்கின்றது என்னும் மெய்ம்மையினை அடியேன் உணராது இருந்த காலமெல்லாம் உள்ளம் கழிமகிழ்வு கொள்ள (அறுசுவை மிக்க நறுமணங் கமழும் உண்பொருள்களைச் சுவை பெருக) உண்டும், (பஞ்சினும், பட்டினும், மயிரினும் நெய்தமைத்த உடைவகைகளை உவப்புற) உடுத்தும், (இன்பத்துட் சிறந்த உடனுறைவாகிய) காதலின்பங் கனிவுறத் துய்த்தும், இவையே பிறவிப்பயனாகிய இன்பமெனப் பெரிது உவந்தெண்ணி, அந்நெறியே ஆர்வமொடு கொண்டு இறுமாந்திருந்தேன் ;

          "பூராய . . . முதலே" - (இவ்வாறு சிலகாலமெல்லாம் நலமின்றிக் கழிந்தன) அந்நிலையில் (மாணவனுக்குப் பள்ளிப் பருவம் வருதலும், ஆசான் தொடர்பு அருளால் அமைவதுபோன்று) எளியேன்பால் திருவருள் மிக்கோங்கி எழுந்தருளி வந்து, முதலும் முடிவும் தெளிவாக உணர்த்தியருளலும் நிலையென்றிருந்த உலகியலின்பங்கள் எவ்வாறு மறைந்து போயின என்று சிறிதும் புலனாகவில்லை. (அவற்றைப் பற்றிய நிலைகளில்) எவ்வகை நிலையைச் செவ்வையுற யார் எடுத்துப் பேசினும் உள்ளங்கொள்ள இணங்குவதில்லை; அல்லாமலும் இறக்குங் காலத்தும் பிறக்குங் காலத்தும் உயிர்படுந் துன்பங்களை உள்ளத்துள்ளே எண்ணினால் எளியேன் நெஞ்சம் திடுக்கிட்டு அரண்டு இரு கண்களும் இரவுபகலாய்ச் சிறிதும் உறக்கங் கொள்ளவில்லை. என் உடம்பும், செந்தீயிற்பட்ட மெழுகென இரவு பகலாய் உருகுகின்றது. இவ்வாறாக எளியேன்பால் நிகழ்வதற்குக் காரணம் யாதோ? (ஆகமமாகிய திருமாமுறையின் முடிவெனப்படும்) செம்பொருட்டுணிவின் சிறப்பெனப்படும் விழுமிய முழுமுதலே!

           "சிரகிரி . . . குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 6
கார்இட்ட ஆணவக் கருவறையில் அறிவுஅற்ற
                 கண்இலாக் குழவியைப்போல்
      கட்டுண்டு இருந்தஎமை வெளியில்விட்டு, அல்லலாம்
                 காப்புஇட்டு, அதற்குஇசைந்த
பேர்இட்டு, மெய்என்று பேசுபாழ்ம் பொய்உடல்
                 பெலக்க, விளை அமுதம்ஊட்டி,
      பெரியபுவ னத்தின்இடை போக்குவரவு உறுகின்ற
                 பெரியவிளை யாட்டுஅமைத்திட்டு,
ஏர்இட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்டு
                 இடர்உறஉறுக்கி, இடர்தீர்த்து,
      இரவுபகல் இல்லாத பேரின்ப வீட்டினில்
                 இசைந்துதுயில் கொண்மின்என்று
சீர்இட்ட உலகுஅன்னை வடிவான எந்தையே!
                 சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயா னந்தகுருவே!

         (பொ - ள்) "காரிட்ட . . . . . . அமுதமூட்டி" - கருமையாகிய ஆணவ மலத்தால் அமைந்துள்ள கரு இல் என்று சொல்லப்படும் சிறு வீட்டில் அறிவு விளங்குவதற்குச் சிறிதும் வழியில்லாத கண்ணில்லாத பச்சிளம் பிள்ளையைப்போல், கட்டுப்பட்டுக் கிடந்த எளியேங்களை வெளியில் வருமாறு பணித்தருளி (நீக்கமுடியாத) பெருந்துன்பத்தினைக் காவலாக வைத்து, (உயிர்ப்பெனப்படும் மூச்சினை அகத்து வாங்குதலும், புறத்து விடுதலும் ஆகிய செயல்களை இடையறாது செய்யும் இயல்பினால்) வெளிவந்து காவலுடன் நிற்கும் நிலையில் அதற்குப் பொருந்திய பெயராகிய 'ஆருயிர்' எனப் பெயரிட்டு, (கற்றாரும் கல்லாருமாகிய அனைவர்களும் ஒருங்கு) மெய்யென்று பெருமைபடப் பேசப்படும் வீணான நிலையில்லாத பொய்யுடல் வலுவுடன் நிலை நிற்கும்படி (அவ்வுடல் வளர்ச்சிக்கு வேண்டும்) இருவினையென்று சொல்லப்படும் அமிழ்தினை நுகரவூட்டி;

          "பெரியபுவ . . . . . . அமைத்திட்டு" - (இருநூற்றிருபத்து நான்கு என எண்ணப்படும் புவனங்களுள்) பெருமைமிக்க ஒரு புவனத்தினிடை (இறப்புப் பிறப்புகளாகிய) போக்குவரவுகள் இடையீடின்றிப் புரிந்து வருகின்ற உலகியல்பானும், ஆணவ மறைப்பாலும்) பெரிய விளையாட்டு அமைத்திட்டு;

          "ஏரிட்ட முதலே" - (அழகு மிக்கதாய் ஆருயிர் உய்வதாய் அனைத்து மொழிகளிலும் அவரவர் நிலைக்கேற்ற அளவினதாய்க் காணப்படுவது போன்று) செந்தமிழ்மொழிக்கண் சீர்சால் இறைவனூல் என்று சொல்லப்படும் திருமாமறை திருமாமுறைகளை வகுத்தமைத்து அவற்றின்கண் விதித்த திருஆணைவழி நில்லாது தவறின் நடுவன் என்று சொல்லப்படும் நமனைக் கொண்டு துன்பமுண்டாகும்படி தண்டித்து, அத் துன்பினையும் அகற்றி (நினைப்பும் மறப்பும் ஒளியும் இருளுமாகிய) இரவு பகலில்லாத இறவா இன்பத்து எழில் நிலமாகிய திருவடிப்பேரின்ப உறையுளினில் வல்விரைந்து நீங்காது தங்கித் தேனுண்ட வண்டென இன்ப நுகர்கவென்று பணித்தருளிய பண்டைப் பெருஞ்சிறப்பு மிக்க பேருலக அன்னையின் ஆரருள் வடிவான எளியேங்கள், தந்தையே! செம்பொருட்டுணிவின் தம்பெரும் பேறருள் விழுமிய முழுமுதலே;

             "சிரகிரி . . . . . . குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 7
கருமருவு குகைஅனைய காயத்தின் நடுவுள்
                 களிம்புதோய் செம்புஅனைய யான்
      காண்தக இருக்க, நீ ஞானஅனல் மூட்டியே
                 கனிவுபெற உள் உருக்கிப்
பருவமது அறிந்துநின் அருளான குளிகைகொடு
                 பரிசித்து, வேதிசெய்து,
      பத்துமாற் றுத்தங்கம் ஆக்கியே பணிகொண்ட
                 பக்ஷத்தை என்சொல்லுகேன்?
அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாந்தம்
                 ஆதியாம் அந்தம் மீதும்
      அத்துவித நிலையராய் என்னை ஆண்டு, உன்அடிமை
                ஆனவர்கள் அறிவின் ஊடும்,
திருமருவு கல்ஆல் அடிக்கீழும் வளர்கின்ற
                 சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயா னந்தகுருவே!

          (பொ - ள்) "கருமருவு . . . . . . . . சொல்லுகேன்" - கருப்பையிற் பொருந்திய குகையை யொத்த உடம்பின் நடுவில் (இயல்பாகத் தொன்மையிலே) களிம்பு பொருந்திய செம்பைப் போன்று (மலத்தோடு கூடிக்கிடந்த) யான் காணுமாறிருக்கின்றபோது (அந்தண்மை மிக்க ஆண்டவனே) நீ மூதறிவுப் பெருந்தீயினை மூள்வித்தருளி (எளியேன் உள்ளம்) இளகும்படி உள்நின்று உருகுவித்துத் தக்க செவ்வி வாய்ந்தது நோக்கியருளி, நின்னுடைய பொன் மருந்தென்னும் திருவருளாம் குளிகையினைக் கொண்டு தோய்வித்துக் களிம்பகற்றி மாற்றுயர்ந்த பத்துமாற்றுப் பசும்பொன் ஆக்கி அருளி (மீளா ஆளாய் அடிமைகொண்டருளி) பணி செய்யுமாறு கொண்டருளிய நின் அளப்பருந்  தண்ணளியாம் பெருங் கருணையினை (அடிமையின் புல்லிய நாவால்) என்னென்று நவில்வேன்;

          "அருமைபெறு . . . . . முதலே" - அருமை மிகுந்த பொருள்சேர் புகழ்நிறைந்த (மறை முடிபும் முறை முடிபுமாகிய) வேதாந்த சித்தாந்த முதலாகச் சொல்லப்படுகின்ற முடிவுகளின் மீதும், மெய்ப்புணர்ப்பின் நிலைமையினை யுடையராகி, எளியேனை ஆட்கொண்டருளி, நின்னுடைய பழவடியார் தம் கிழமை உணர்வினிடத்தும், திருவருட்பெருஞ் செல்வம் நனிமிகப் பொருந்தியுள்ள (கற்றற்குரிய பெருநிலையம் எனப்படும்) கல்லால மரத்தின் அடியின் கீழும் சிறந்து வீற்றிருந்தருளும் திருமாமுறை முடிவாம் செம்பொருட்டுணிவின் தனிப்பேற்றின் இனித்த முழுமுதலே!

          "சிரகிரி . . . . . . ..குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 8
கூடுத லுடன்பிரிதல் அற்று, நிர்த் தொந்தமாய்க்
                 குவிதலுடன் விரிதல்அற்று,
      குணம்அற்று வரவினொடு போக்குஅற்று, நிலையான
                 குறிஅற்று, மலமும்அற்று
நாடுதலும் அற்று,மேல் கீழ்நடுப் பக்கம்என
                 நண்ணுதலும் அற்று, விந்து
      நாதம்அற்று, ஐவகைப் பூதபேதமும் அற்று,
                 ஞாதுருவின் ஞானம்அற்று,
வாடுதலும் அற்று, மேல் ஒன்றுஅற்று, இரண்டுஅற்று,
                 வாக்குஅற்று,  மனமும்அற்று,
      மன்னுபரி பூரணச் சுகவாரி தன்னிலே
                 வாய்மடுத்து உண்டு, அவசமாய்த்
தேடுதலும் அற்றஇடம் நிலைஎன்ற மௌனியே!
                 சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயானந்த குருவே!

          (பொ - ள்) "கூடுத . . . . . . ஞானமற்று" - (வேறிடத்துள்ள பொருள்போல் வந்து) கலத்தலும், பின் நீங்குதலும் இல்லாததாகி, தொடர்பு ஏதும் இல்லதாகி, (செல்வம் இன்மையாற்) குவிதலும் (அஃதுண்மையான்) மலர்தலும் இல்லாததாகி, (மாயாகாரியமாக வெளிப்படும்) மூன்று குணங்களும் இல்லாததாகி, (உரியதாயுள்ள இடத்தினின்று) வருதலும் (பின் அவ்விடத்திற்குப்) போதலும் இல்லாததாகி, (மாயாகாரிய உருவங்களிற் காணப்பட்டு மாறுதலின்றி, நிலைப்பாயுள்ள) அடையாளங்களும், பெயர்களும் இல்லாததாகி (அன்பறிவாற்றல்களை மறைத்துப் பிறப்புக்கு வித்தாம் இருவினைகட்கு ஏதுவாய்த் தொன்மையிலேயே குற்ற இயல்பாய் ஒட்டியுள்ள) ஆணவ மலமும் இல்லாததாகி, (குறையிடையார் தங்குறை நிறைக்கப் பிறிதொன்றனைக் கிட்டும் வரையும் இடையறாது எண்ணும் எண்ணம் போன்று) யாதோர் எண்ணமும் இல்லாததாகி, (வரையறைப்பட்ட பொருள்போன்றும் உருவுடைப் பொருள்போன்றும்) மேற்புறமென்றும், கீழ்ப்புறமென்றும், நடுவென்றும், பக்கமென்றும் சொல்லப்படுவதொன்றும் இல்லாததாகி, வட்டமாகிய விந்துவும், ஒலியாகிய நாதமும் இல்லாததாகி, ஐந்து வகையாகச் சொல்லப்படும் பூதங்களின் வேறுபாடுகள் ஒன்றும் இல்லாததாகி, (ஞாதுருவாகிய) காண்பானும், (ஞானமாகிய) காட்சியும் இல்லாததாகி;

          "வாடுதலு . . . .. முதலே" - கருதியது கைகூடாமையினால் ஏற்படும்) வாட்டமுறுதலும் இல்லாததாகி, ஒன்றென்று சொல்லப்படுந் தன்மையும் இரண்டென்று சொல்லப்படுந் தன்மையும் இல்லாததாகி, (சொல்லுதற்குக் கருவியாகிய) நாவும் (எண்ணுதற்குக் கருவியாகிய) மனமும் இல்லாததாகி, நிலைபெற்ற எங்கும் நீக்கமில் நிறைவான, பேரின்பப் பெருங்கடலனைய முழு முதல்வன் திருவடியில் (திருவருட்டுணையால்) இரண்டறக் கலந்து, உணர்வு வாய்மடுத்து இன்புற்று, (தன்னை மறந்து) அதன்வயமாய்த் தேடுதலும் இல்லாத திருஇடம் நீங்கா உண்மை நிலையென்று (அடியேனுக்கு) செவியறிவுறுத்தருளிய, (உணர்வின் எல்லையாம்) உரையொழி குருவே! திருமாமறை முடிவாம் திருவடிப்பேற்றுச் சீர்சால் முழுமுதலே!

           "சிரகிரி . . . . . . .குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 9
தாராத அருள்எலாம் தந்துஅருள மௌனியாய்த
                 தாய்அனைய கருணைகாட்டித்
      தாள்இணைஎன் முடிசூட்டி, அறிவில் சமாதியே
                 சாசுவத சம்ப்ரதாயம்;
ஓராமல், மந்திரமும் உன்னாமல், முத்திநிலை
                 ஒன்றோடு இரண்டுஎனாமல்,
      ஒளிஎனவும், வெளிஎனவும், உருஎனவும், நாதமாம்
                ஒலிஎனவும், உணர்வு உறாமல்
பாராது பார்ப்பதே ஏதுசா தனம்அற்ற
                 பரமஅநு பூதிவாய்க்கும்
      பண்பு என்று; உணர்த்தியது பாராமல், அந்நிலை
                 பதிந்தநின் பழஅடியார்தம்
சீராய் இருக்கநினது அருள்வேண்டும்,  ஐயனே!
                 சித்தாந்த முக்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயா னந்தகுருவே!

           (பொ - ள்) "தாராத . . . இரண்டெனாமல்" - (பிறரெவராலும் தரவொண்ணாத) பொருள் முழுவதும் தந்தருளத் திருவுளங் கொண்டு உரையாட ஒருவராய் (பால் நினைந்தூட்டும்) நற்றாயை ஒத்த பெருந்தண்ணளி காட்டி, (நின் பொன்னார் திருவடியினை அடியேன் முடி மீது சூட்டியருளி, உணர்வின்கண் (திருவருளால்) திருவடியுணர்வாய்த் தணவாது ஒருங்கி நிற்பதாகிய என்றும் பொன்றாத சமாதியே தொல் வழக்கென்றும், (ஒன்றையும்) பகுத்து உணராமலும் (அருமறை எனப்படும்) மந்திரங்களைக் கணிக்காமலும், திருவடிப்பேற்று நிலையினை ஒன்று இரண்டு என்று உரையாமலும்;

           "ஒளியெனவும் . . . . . வாய்க்கும்" - இயற்கைப் பேரொளி யென்றும், திருவருட் பெருவெளி யென்றும், உருவம் என்றும், நாதமென்று சொல்லப்படும் ஒலியென்றும், அறிவு கொள்ளாமலும் (கருவிகளைக் கொண்டு) காணாமல் (திருவருளைக் கண்ணாகக் கொண்டு) காண்பதே, (எவ்வகைப்பட்ட காட்டுக்களாகிய) துணை சிறிதுமில்லாத, மேலான தன்னுகர் வுண்மை யெனும் மெய்யுணர்வு கைவரப்பெறுவதாம்;

          "பண்பென் . . . . . . முதலே" - அதுவே (திருவடியுணர்வு கைவர) வருதற்குரிய வழிவகைத் தன்மையென்றும், நீ அறிவுறுத்தி அருளினமையைப் பகுத்தறியாமல், அவ்வரிய நிலையிற் றங்கிய உன் பேரருட்குரிய பழைய அடியார்களுடைய, தொன்மைச் சிறப்பினை எய்தியிருக்க, (அடியேனுக்கு) நின் திருவருள் வேண்டும். (அழகும், வியப்பும், முதன்மையும் ஒருங்கமைந்த) கடவுளே! முடிந்த முடிவாம் திருவடிப் பேற்றினை அளித்தருளும் விழுமிய முழு முதல்வனே!

          "சிரகிரி . . . . . . .குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 10
போதமாய், ஆதிநடு அந்தமும் இலாததாய்,
                 புனிதமாய், அவிகாரமாய்,
      போக்குவரவி இல்லாத இன்பமாய் நின்றநின்
                 பூரணம் புகல்இடமதா
ஆதரவு வையாமல், அறிவினை மறைப்பதுநின்
                 அருள், பின்னும் அறிவுஇன்மைதீர்த்து
      அறிவித்து நிற்பதுநின் அருள்; ஆகில், எளியனேற்கு
                 அறிவுஆவது ஏது? அறிவுஇலா
ஏதம்வரு வகைஏது? வினைஏது வினைதனக்கு
                 ஈடுஆன காயம்ஏது? என்
      இச்சா சுதந்தரம் சிறிதும் இலை; இகபரம்
                 இரண்டினுள் மலைவுதீரத்
தீதுஇல்அருள் கொண்டுஇனி உணர்த்தி,எனை ஆள்வையோ?
                 சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                 சின்மயா னந்தகுருவே!
  
         (பொ - ள்) "போதமா . . . நின்அருள்" - (இயற்கைப் பேரறிவுப் பிழம்பாம்) வாலறிவே தன் உண்மை வடிவாகி, முதலும் நடுவும் முடிவுமாகிய தென்று சொல்லப்படாத நிறைவாகி, இயற்கைத் தூய்மையதாய், வேறுபாடு ஏதும் இல்லதாய், போக்கும் வரவும் இல்லாத பேரின்பப் பெருநிலையாய், நின்றருளுகின்ற நின் குறைவிலா நிறைவே நிலைத்த அடைக்கலப் பேரிடமாய்க் கொண்டு (அடியேன்) அதன்கண் பெருவேட்கை கொள்ளாதபடி எளியேன் அறிவினை மறைப்பதும் நின் திருவருளே;

           "பின்னு . . . நின்னருள்" - மேலும் அடியேனுடைய (மலமறைப்பாம்) அறியாமையை (படிமுறையான்) தீர்த்தருளி (முப்பொருளுண்மை தெளிவிக்கும் முறைநூல் வழியாக) மெய்ப்பொரு ளுணர்த்தி நின்றருள்வதும் நின்னருளே;

          "ஆகில் . . . .முதலே" - அவ்வாறாயின் அடியேனுக்கு அறிவென்பது யாதோ? அறிவில்லாமல் குற்றமுண்டாந் தன்மை யாதோ? அவ்வினைகட்கு நிலைக்களமாகிய உடல் ஏது? அடியேனுக்குள்ள அன்பு எனப்படும் இச்சைக்குரிய தலைமைப்பாடு அடியேனுக்குச் சிறிதும் இன்றாகும். இம்மை மறுமை என்னும் ஈரிடத்தும் அடியேனுடைய மயக்கம் நீங்கும்படியாக, நின்மெய்யான திருவருளினைக் கொண்டு இனி எளியேனுக்கு அறிவித்துத் தொழும்பனாக அடியேனைக் கொண்டருள் வையோ? முடிந்த முடிவான பெறுபேற்றின் முழுமுதலே.

           "சிரகிரி . . . . குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


பாடல் எண். 11
பத்திநெறி நிலைநின்றும், நவகண்ட பூமிப்
                    பரப்பைவலம் ஆகவந்தும்,
      பரவையிடை மூழ்கியும், நதிகளிடை மூழ்கியும்,
                     பசிதாகம் இன்றி, எழுநா
மத்தியிடை நின்றும், உதிர் சருகுபுனல் வாயுவினை
                    வன்பசி தனக்குஅடைத்து,
      மௌனத்து இருந்தும், உயர் மலைநுழைவு புக்கும்,
                    மன்னுதச நாடிமுற்றும்
சுத்தி செய்தும், மூலப்பிராணனோடு அங்கியைச்
                  சோம வட்டத்து அடைத்தும்,
      சொல்அரிய அமுதுஉண்டும், அற்பவுடல் கற்பங்கள்
                  தோறும்நிலை நிற்கவீறு
சித்திசெய் தும், ஞானம் அலதுகதி கூடுமோ?
                  சித்தாந்த முத்திமுதலே!
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே!
                   சின்மயா னந்தகுருவே!

          (பொ - ள்) "பத்திநெறி . . . . . . தனக்கடைத்து" - பேரன்பின் பெருக்காம் பத்திவழியில் உறைத்து நின்றும், ஒன்பது பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உலகங்களையெல்லாம் (சிறிதும் சலிப்பின்றிப் பதி நடையாகச் சென்று) வலஞ்சுற்றி வரினும், (தீர்த்தங்களுட் சிறந்த) கடல் நீராடினாலும் (புனிதமாகச் சொல்லப்படும்) காவிரி முதலிய யாறுகளிற் சென்று முறைப்படி தீர்த்தமாடினாலும், பசியும் விடாயும் இல்லாமல் எழுநா என்று சொல்லப்படும் தீயின் நடுவில் நின்றும், உற்ற பசியினுக்கு (கொடுத்தல் வேண்டு மென்னும் வெறுப்பொடு) முறையே உதிர்ந்த சருகுகளையும், நன்னீரையும், காற்றினையும் வயிற்றுக்கு அடைத்தும்;

          "மௌனத் . . . . . . .வட்டத்தடைத்தும்" - வாய்வாளா திருந்தும், அளவிடப்பட முடியாத பெரிய மலைகளின் குகைக்குளிருந்து தனித்தவம் புரிந்தும், நிலைபெற்ற நாடிகள் பத்தையும் (அகத்தவமாகிய யோகவாயிலாக) தூய்மைப்படுத்தியும், மூலத்திடத்துக் காணப்படும், உயிர் மூச்சினொடு அகத்தீயினைத் திங்கள் மண்டலத்தடைத்தும்;

          "சொல்லரிய .......... முதலே"(அத் திங்கள் மண்டலத்துள்ள) சொல்லொண்ணாத அமிழ்தினை உண்டும், (நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத) புல்லிய உடலை ஊழி ஊழியாக அழியாது நிலை நிறுத்திடப் பெருமை மிக்க சித்திகளைச் செய்தும் திருவடியுணர்வு திருவருளால் கைவரப் பெறாதாருக்குத் திருவடிநிலை பெற்று இன்புறுதல் ஒரு ஞான்று மில்லை. முடிந்த முடிவுப்பேறருளும் விழுமிய முழுமுதல்வனே.

           "சிரகிரி . . . .குருவே" திருச்சிராப்பள்ளிக் கண், ஆருயிர்கள் மெய்ம்மை தெளிந்து செம்மையுற்றுத் திகழும் பொருட்டு எழுந்தருளிய தென்முகக் கடவுளே! உண்மை அறிவு இன்பங்களைக் கொடுத்தருள்கின்ற மெய்க்குருமணியே!


திருச்சிற்றம்பலம்     

No comments:

Post a Comment

10. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி

  "பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும்      கொடுப்பதென்ன பொருளோ? என்று நற்கமல முகம்மலர்ந்தே உபசாரம்      மிக்கஇன்சொல் நடத்தல் நன்றே; ...