திரு மூக்கீச்சரம்
(உறையூர்)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
திருச்சி நகரின் ஒரு பகுதி உறையூர்.
தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் இதுவே மூக்கீச்சுரம் எனப்பட்டது. உறையூரில் கடைத்
தெருவில் உள்ளது.
இறைவர்
: பஞ்சவர்ணேசுவரர்.
இறைவியார்
: காந்திமதியம்மை.
தல
மரம் : வில்வம்
தீர்த்தம் : சிவ தீர்த்தம், நாக தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - சாந்தம்
வெண்ணீறெனப்பூசி.
காவிரிக் கரையில் இருந்து சுமார் 1 கி.மி. தொலவில், திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான
உறையூர் என்னும் திருத்தலம் ஒரு மிகப் பழமையான 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன்
இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட சிவாலயத்தைக் கொண்டுள்ளது.
கி.பி. 885-ம் ஆண்டு கல்வெட்டிலிருந்து இக்கோயிலில்
பூசைகள் சிறப்பாக நடைபெற தங்க நாணயங்கள் தானமாக உறையூர் கிராம சபைக்கு
கொடுக்கபட்டதை அறியமுடிகிறது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர்
ஆலயத்திலுள்ள கல்வெட்டுகளும் இரண்டாம வரகுண பாண்டிய மன்னன் உறையூர் கோயிலுக்கு
செய்த தான தருமங்கள் பற்றிய விபரங்களைக் குறிக்கின்றன.
உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த
சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி
மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும்
தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து சிராப்பள்ளி சென்று
கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை
வழிபாடு தடைபட்டு விட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின்
மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி
தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீசுவரர் என்ற பெயர் பெற்றார்.
மற்றுமொரு வரலாறும் இத்திருத்தலத்திற்கு
உண்டு. சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம்
வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த
ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர்.
சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான்.
சிவபெருமானும் கருனை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால்
நோக்க, அக்கோழியும் அசுர
பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித்
தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ
மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக்
கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு
இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன்
விளங்கியது. இத்தல வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் மூலவர் கருவறை வெளிச்
சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் ஒன்றைக்
காண்லாம்.
கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன்
ஆலயம் அமைந்துள்ளது. உள் மண்டபத்தைத் தாண்டி ஆலயத்தில் நுழைந்தவுடன் அழகிய சிற்ப
வேலைப்பாடுகளுடன் கூடிய நந்தியைக் காணலாம். கோயிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்து சென்றால் மூலவர்
கருவறை இருக்கிறது. இங்கு சிவபெருமான் உதங்கமுனிவருக்கு ஐந்து வர்ணமுடைய
திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். காலையில் இரத்தின லிங்கமாகவும், உச்சிக் காலத்தில் படிக லிங்கமாகவும், மாலையில் சுவர்ண லிங்கமாகவும், இரவில் வைர லிங்கமாகவும், அர்த்த சாமத்தில் சித்திர லிங்கமாகவும்
காட்சி அளித்ததால் இறைவன் பஞ்சவர்ணேசுவரர் எனப்படுகிறார். உதங்க முனிவரின் சந்நிதி
இறைவன் பஞ்சவர்ணேசுவரர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது.
கருவறையில் மூலவர் லிங்க உருவில் அகன்ற
ஆவுடையார் மீது தான்தோன்றீசுவரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். மூலமூர்த்தி
மிகவும் சிறிய சிவலிங்கத் திருமேனி. சுயம்பு மூர்த்தியாகத் திகழும் இத் திருவுரு
உள்ளங்கையளவே உள்ளது. உள் மண்டபத்தில் இடப்பக்க முதல் தூணில் உட்புறம் "யானை
மீது அம்பாரியில் சோழ மன்னன் வரும் போது, அவ்யானையைக்
கோழி குத்தித் தாக்கும் சிற்பம் உள்ளது. இறைவி காந்திமதி அம்மை தெற்கு நோக்கி தனி
சந்நிதியில் கைகளில் அங்குசமும்,
தாமரை
மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள். இத்திருத்தலத்தில் அமைந்துள்ள
காந்திமதியம்மை நாகலோகத்தில நாககன்னியர்களால் பூசிக்கப்பட்டு சோழ மன்னனால் கொண்டு
வரப்பட்டு இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது ஐதீகம். இச்சந்நிதிக்கு
அருகில் மஹாவிஷ்னு, சூரியன், காலபைரவர் மற்றும் சனீஸ்வரன் அகியோரின்
உருவச் சிலைகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தில் கருவறையின்
நுழைவாயிலின் இருபுறமும் சுமார் 6 அடி உயரமுள்ள
துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன. 8-ம் நூற்றாண்டைச்
சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த இரு சிலைகளும் சிறந்த வேலைப்பாடுகளுடன்
சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. கருவறையின் தென்புற வெளிச்
சுவற்றில் தட்சினாமூர்த்தியும்,
வடபுற
வெளிச் சுவற்றில் பிரம்மாவும் காட்சி அளிக்கின்றனர். பெரியதும் சிறியதுமாக இரு
தட்சிணாமூர்த்தி உருவங்கள் உள்ளன. பெரிய உருவம் சிறந்த சிற்பக் கலையழகுடன்
திகழ்கின்றது. சிறியது சோழர் காலத்தியது. பெரியதாக வைக்க எண்ணி நாட்டுக் கோட்டை
நகரத்தார் தம் திருப்பணியில் செய்து வைத்தார்கள். 4 அடி உயரமுள்ள சண்டிகேசுவரரின் உருவச்
சிலையும் காணவேண்டிய ஒன்றாகும்.
திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில்
பிட்சாடனர் உருவம் உள்ளது. இதற்கு எதிர்க் கம்பத்தில் தாருகாவனத்து
ரிஷிபத்தினிகளின் உருவங்கள் உள. உறையூர்க் கோயிலில் சிற்பங்களுக்குக் குறைவில்லை
என்பதுபோல, கருவறையின்
வெளிபக்கச் சுவரில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கருவறை வெளிச் சுவரில்
மேற்புறத்தில் நான்கு பக்கங்களிலும், வரிசையாக
இறைவனின் பல்வகையான தாண்டவங்களின் சிற்பங்கள் மிக்க கலையழகுடன் காணப்படுகின்றன.
சுற்றியுள்ள தூண்களில் பலவகையான சிற்பங்கள் உள்ளன. ஒரு தூணில் ஐந்து பெண்கள்
உருவத்தையே ஒரு குதிரையாக அமைத்துள்ள சிற்பமும், நான்கு பெண்கள் உருவத்தையே ஒரு
குதிரையாக அமைத்துள்ள சிற்பமும் பார்த்து ரசிக்கத் தக்கவை. யானை முகம், மனித உடல், பறவை கால் கொண்ட விசித்திரமான சிற்பம்
ஒன்றும் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்புறம் மிகப்பெரிய காளி உருவம் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது. ஜெயகாளி என்று அழைக்கப்படும் இந்தக் காளி மிகவும் சக்தி
வாய்ந்தவள். இத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு
திருமுகமும் இரண்டு திருக்கரங்களும் விளங்க தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளத்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து
அருள் புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம்
என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல
இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் படைப்புக் கடவுளாகிய பிரம்மாவே
இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய இத்தல மூலவராகிய
பஞ்சவர்ணேசுவரரை வழிபட்டால் நலம் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.
கார்க்கோடகன் ஆகிய பாம்பும் கருடனும்
இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம்
கிடைக்கும் தலம் இதுவாகும். மற்றும் காசியப முனிவர், அவன் மனைவி கத்துரு இங்கு இறைவனை
வழிபட்டுள்ளார். நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழ நாயனார் பிறந்த தலம் இதுவே.
புகழ்ச்சோழ நாயனார்
வரலாறு
புகழ்ச்சோழ நாயனார் சேழநாட்டை ஆண்ட
மன்னருள் ஒருவர். ஊறையூரிலே ஆட்சி புரிந்தவர். சைவம் தழைக்க முயன்றவர். திருக்கோயில்களில்
பூசனைகளை வழாது நடத்துவித்தவர். திருத்தொண்டர்களின் குறிப்பறிந்து உதவுபவர்.
கொங்கு நாட்டு அரசர்களிடம் இருந்தும்
குடகு நாட்டு அரசர்களிடம் இருந்தும் திறை வாங்குதல் பொருட்டுப் புகழ்ச்சோழ நாயனார்
கருவூருக்குச் சென்றார். அத் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள ஆனிலைப்
பெருமானை வழிபட்டுத் திருமாளிகை சேர்ந்து, அரியாசனத்தில் வீற்றிருந்தார்.
மேலும் சோழர் பெருமான், அமைச்சர்களை நோக்கி, "நமது ஆணைக்குக்
கீழ்ப்படாத அரசர் எவரேனும் உளரோ?
அறிந்து
சொல்லுங்கள்" என்று கட்டளை இட்டார்.
அந்நாளில், சிவகாமியாண்டார் என்னும் அடியவர்
ஆனிலைப் பெருமானுக்கு வழக்கம்போல் திருப்பள்ளித்தாமம் கொண்டு போனார். அதனைப்
பட்டத்து யானை, பற்றி ஈர்த்துச்
சிதறச் செய்தது. எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டிக் கொன்றார். அதனை உணர்ந்த
புகழ்ச்சோழ நாயனார், எறிபத்த நாயனார்
எதிரே சென்று, நேர்ந்த
அபராதத்திற்கு, பட்டத்து யானையையும், பாகரையும், பறிக்கோல் காரர்களையும் கொன்றது போதாது.
தன்னையும் கொல்லுமாறு, தனது உடைவாளை எறிபத்த
நாயனாரிடம் கொடுத்தார். எறிபத்த நாயனார் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தபோது, இறைவர் வானிலே காட்சி கொடுத்தருளினார். பட்டத்து
யானையும், மாண்டோரும்
எழுந்தனர். இவ்வாறு கருவூரில் இருந்த காலத்தில் புகழ்ச்சோழ நாயனார் திருத்தொண்டில்
மேம்பட்டவராக விளங்கினார்.
அமைச்சர்கள் மன்னரிடம் வந்து நின்று, "உங்கள் ஆட்சிக்குக்
கீழ்ப்படியாத அரசன் ஒருவனே உள்ளான். அவன்
அதிகன் என்பவன். அவன் அருகே உள்ள மலை
அரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள்.
உடனே, புகழ்ச்சோழ நாயனார்
அமைச்சர்களைப் பார்த்து, "அவ் அரணை அதம் செய்து
வாருங்கள்" என்றார். அமைச்சர்கள்
அப்படியே செய்தார்கள். அதிகன் ஓடி
ஒளித்துக் கொண்டான். புகழ்ச்சோழரின் சேனை
வீரர்கள் அதிகனுடைய சேனை வீரர்களின் தலைகளையும், செல்வங்களையும், பிறவற்றையும் எடுத்துக்கொண்டு
வந்தார்கள்.
ஒரு வீரரின் சடைத்தலை புகழ்ச்சோழ
நாயனாரின் கண்ணுக்குப் புலனாயிற்று.
நாயனார் அலறுகிறார், கதறுகிறார். "சைவம் தழைக்க அரசு இயற்றுபவன் நானா? நல்லது! நல்லது!" என்றார். "சோற்றுக் கடன் முடிக்கப் போர்புரிந்த
அடியவரையோ என் சேனை கொன்றது?"
என்றார். "இப் பழிக்கு என் செய்வேன் என் உயிர்
நீங்கவில்லையே" என்றார்.
இவ்வாறு நாயனார் புலம்பி, அமைச்சர்களை நோக்கி, "இவ் உலகத்தை
ஆளுமாறும், சிவத்தொண்டைத் தவறாது
நடத்துமாறும் என் புதல்வனுக்கு முடி சூட்டுங்கள்" என்று கட்டளை இட்டார். அமைச்சர்கள் மனம் கலங்கி நின்றார்கள். நாயனார் அவர்களைத் தேற்றினார். நெருப்பை வளர்ப்பித்தார். நீற்றுக் கோலப் பொலிவுடன், திருச்சடைத் தலையை ஒரு மாணிக்கத்
தட்டிலே ஏந்தினார். அதைத் தமது
திருமுடியிலே தாங்கினார். நெருப்பை வலம்
வந்தார். திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டே
நெருப்பில் இறங்கினார். ஆண்டவன் திருவடி
நீழலை அடைந்தார்.
வள்ளல்
பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சிற்சுகத்தார் பின் சனனம் இல்லாப் பெருமை தரும் உறையூர்ச்
சற்சனர் சேர் முக்கீச்சரத்து அணியே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 343
கற்குடி
மாமலை மேல்எழுந்த
கனகக் கொழுந்தினை, கால்வளையப்
பொன்திரள்
மேருச் சிலைவளைத்த
போர்விடை ஆளியைப்
போற்றிஇசைத்து,
நல்தமிழ்
மாலை புனைந்து அருளி,
ஞானசம் பந்தர்
புலங்கள் ஐந்தும்
செற்றவர்
மூக்கீச்சரம் பணிந்து
திருச்சிராப் பள்ளிச்
சிலம்புஅணைந்தார்.
பொழிப்புரை : திருக்கற்குடி
மாமலையின் மீது வீற்றிருக்கும் பொற்கொழுந்து போன்றவரை, பொன்மேரு மலையை வளைத்த ஆனேற்றை
ஊர்தியாகக் கொண்டவரைப் போற்றி, நல்ல தமிழ் மாலையைச்
சூட்டி, ஞானசம்பந்தர், பொறிவாயில் ஐந்து அவித்த புனிதரின் `திருமூக்கீச்சரத்தினைப்' பணிந்து சென்று, `திருச்சிராப்பள்ளி' மலையை அடைந்தார்.
திருக்கற்குடியில்
அருளியது, `வடந்திகழ் மென்முலை' (தி.1 ப.43) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
திருமூக்கீச்சரத்தில் அருளிய பதிகம் `சாந்தம் வெண்ணீறென' (தி.2 ப.120) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த
பதிகமாகும். திருமூக்கீச்சரம் இதுபொழுது உறையூர் என வழங்கப் பெறுவதாம்.
2.120 திருமூக்கீச்சரம் பண்
- செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சாந்தம்வெண்ணீறு
எனப்பூசி
வெள்ளம்சடை வைத்தவர்,
காந்தள்ஆரும்
விரல்ஏழை
யொடுஆடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங்கு
அறியந்
நிறைந்தார்
அவர்ஆர்கொலோ,
வேந்தன்மூக்கீச்
சரத்துஅடிகள்
செய்கின்றதுஓர் மெய்ம்மையே.
பொழிப்புரை :சந்தனம்போலத்
திருநீற்றை உடல் முழுதும் பூசி,
கங்கையைச்
சடைமீது வைத்துள்ளவராகிய சிவபிரான்,
காந்தள்
போன்ற கைவிரல்களை உடைய உமையம்மையோடு கூடியிருந்ததற் குரிய காரணத்தை
ஆராய்ந்தறிந்தவர்கள் யார்? கோச்செங்கட்சோழ னால்
கட்டப்பட்ட மூக்கீச்சரத்துள் விளங்கும் இறைவன் செய்யும் மெய்மை இதுவாகும்.
பாடல்
எண் : 2
வெண்தலைஓர்
கலனாப் பலிதேர்ந்து, விரிசடைக்
கொண்டல்ஆரும்
புனல்சேர்த்து உமையாளொடும் கூட்டமா
விண்டவர்தம்
மதில்எய்தபின் வேனில் வேள்வெந்துஎழக்
கண்டவர்
மூக்கீச்சரத்துஎம் அடிகள் செய் கன்மமே.
பொழிப்புரை :வெண்தலையை உண்கலனாகக்
கையில் ஏந்திப் பலிதேர்தல் , விரிந்தசடையில்
கங்கையைத் தாங்குதல் , உமையம்மை யோடு
கூடியிருத்தல் , பகைவர்தம்
முப்புரங்களை எய்து அழித்தல் , மன்மதனை
நெற்றிவிழியால் வெந்தழியச் செய்தல் ஆகியன மூக்கீச் சரத்தில் விளங்கும் எம் அடிகள்
செய்த செயல்களாகும் .
பாடல்
எண் : 3
மருவலார்தம்
மதில்எய்ததுவும், மால் மதலையை
உருவுஇல்
ஆர எரியூட்டியதும், உலகு உண்டதால்
செருவில்ஆரும்
புலிசெங்கயல்ஆனை யினான்செய்த
பொருஇல்
மூக்கீச்சரத்துஎம் அடிகள் செயும்பூசலே.
பொழிப்புரை :போர்க்கருவியாகிய
வில், புலி, கயல் ஆகிய மூவிலச்சினைகளுக்கும் உரிய
சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுக் குரியவனாய்
விளங்கிய கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட ஒப் பற்ற மூக்கீச்சரத்தில் உறையும் எம்
அடிகள் செய்த போர்களில் மும்மதில்களை எய்தது, மால்மகனாகிய காமனை எரித்தது ஆகியன
உலகறிந்தனவாம் .
பாடல்
எண் : 4
அன்னம்
அன்ன நடைச்சாய லாளோடு அழகுஎய்தவே
மின்னைஅன்ன
சடைக்கங்கை யாள்மேவிய காரணம்,
தென்னன்கோழி
எழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன்மூக்கீச்
சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்மாயமே.
பொழிப்புரை :தென்நாட்டின் உறையூர்
வஞ்சி ஆகிய சோழ, சேர மண்டலங்களுக்கும்
உரியவனாய்ப் புகழ்மிக்க செங்கோலினனாய் விளங்கிய கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய
மூக்கீச்சரத்துக் கோயிலில் விளங்கும் அடிகள் , அன்னம் போன்ற நடையினை உடைய உமை
யம்மையாரோடு அழகுற விளங்கி , மின்னல் போன்ற
சடையில் கங்கையைக் கொண்டுள்ள காரணம் யாதோ ?
பாடல்
எண் : 5
விடம்முன்ஆர்
அழல்வாயது ஓர் பாம்புஅரை வீக்கியே
நடம்முன்ஆரவ்
அழல்ஆடுவர் பேயொடு நள்இருள்,
வடமன்நீடு
புகழ்ப்பூழி யன்,தென்ன வன்,கோழிமன்
அடல்மன்மூக்கீச்
சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்அச்சமே.
பொழிப்புரை :வடதிசையில்
புகழ்மிக்கு விளங்கும் பாண்டிய னாகவும் உறையூருக்குரிய சோழனாகவும் விளங்கிய வலிமை
பொருந்திய கோச்செங்கட்சோழமன்னன் கட்டிய மூக்கீச்சரத்துறையும் அடிகள் அச்சம் தரும்
முறையில் , அழல் போன்ற வாயில்
நஞ்சுடைய பாம்பை அரையில் கட்டியவர் . நள்ளிருளில் பேயோடு , ஆரழலில் நடனம் ஆடுபவர் .
பாடல்
எண் : 6
வெந்தநீறு
மெய்யில் பூசுவர், ஆடுவர் வீங்குஇருள்,
வந்துஎன்ஆரவ்
வளைகொள்வதும் இங்குஒரு மாயமாம்,
அந்தண்மா
மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய
எந்தைமூக்கீச்
சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்ஏதமே.
பொழிப்புரை :அகத்துறைப்பாடல் :
பகைவரின் மானத்தை அழிக்கும் பெருவீரனும் நேரியன் செம்பியன் என்ற பெயர்களை உடைய
வனுமான கோச்செங்கட்சோழன் கட்டிய மூக்கீச்சரத்தில் விளங்கும் அடிகள் செய்த ஏதமான
செயல் திருநீற்றை மேனியில் பூசிய சுந்தரத் திருமேனியராய் , ஆடல் வல்லவராய் , மிக்க இருளில் வந்து என் அரிய வளையல்களை
மாயமானமுறையில் கவர்ந்து சென்ற தாகும் .
பாடல்
எண் : 7
அரையில்ஆரும்
கலைஇல்ல வன்,ஆணொடு பெண்ணுமாய்
உரையில்ஆரவ்
அழல்ஆடு வர்,ஒன்றுஅலர் காண்மினோ,
விரவலார்தம்
மதில்மூன்று உடன்வெவ்அழல் ஆக்கினான்
அரையன்மூக்கீச்
சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்அச்சமே.
பொழிப்புரை :இடையில் பொருந்தும்
உடை இல்லாதவன் . ஆணும் , பெண்ணுமாய்
விளங்குபவன் . அழலில் நின்று ஆடுபவன் . ஒன்றாயின்றிப் பலபலவேடம் கொள்பவன் .
பகைவரின் முப்புரங்களை அழல்எழச் செய்து அழித்தவன் . கோச்செங்கணான் கட்டிய
மூக்கீச்சரக் கோயிலில் விளங்கும் அப்பெருமான் செய்யும் அச்சமான செயல்கள் இவையாகும்
.
பாடல்
எண் : 8
ஈர்க்குநீர்ச்செம்
சடைக்குஏற் றதும், கூற்றை உதைத்ததும்,
கூர்க்கும்நல் மூவிலைவேல்வலன் ஏந்திய கொள்கையும்,
ஆர்க்கும்வாயான்
அரக்கன் உரத்தை நெரித்த,
அடல்
மூர்க்கன்மூக்கீச்
சரத்துஅடிகள் செய்யாநின்ற மொய்ம்புஅதே.
பொழிப்புரை :மூக்கீச்சரத்து
அடிகள் செய்த வலிய செயல்கள் ஈர்க்கும் தன்மையை உடைய கங்கையைச் சடைமிசை ஏற்றது , கூரிய முத்தலைச்சூலத்தை வெற்றிக்கு
அடையாளமாகப் பிடித்துள்ளது , ஆரவாரிக்கும்
வாயினனும் வலியமூர்க்கனும் , அரக்கனும் ஆகிய
இராவணன் உடலை நெரித்தது முதலியனவாகும் .
பாடல்
எண் : 9
நீர்உளாரும்
மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
சீர்உள்ஆருங்
கழல்தேட மெய்த்தீத் திரள்ஆயினான்,
சீரினால்அங்கு
ஒளிர்தென்ன வன்,செம்பி யன்,வில்லவன்
சேருமூக்கீச்
சரத்துஅடிகள் செய்கின்றது ஓர்செம்மையே.
பொழிப்புரை :சிறப்புமிக்க
தென்னவன் , செம்பியன் , வில்லவன் ஆகிய மூவேந்தரும் வந்து
வழிபடும் மூக்கீச்சரத்தில் , உறையும் பெருமான்
நீருள் தோன்றிய தாமரையில் விளங்கும் நான்முகனும் , நெடியமாலும் புகழிற் பொருந்திய
திருவடிகளைத் தேட முற்பட்ட போது தீத்திரளாய் நின்றவன் .
பாடல்
எண் : 10
வெண்புலால்மார்பு
இடுதுகிலினர், வெற்றுஅரை உழல்பவர்,
உண்பினாலே
உரைப்பார் மொழி ஊனமது ஆக்கினான்
ஒண்புலால்வேல்
மிகவல்லவன் ஓங்குஎழில் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீச்
சரத்துஅடிகள் செய்கின்றதுஓர் பச்சையே.
பொழிப்புரை :வெண்மையான புலால்
நாற்றம் வீசும் ஆடையை மார்பிற் கொண்டவரும் , வெற்றுடம்போடு திரிபவரும் ஆகிய
புத்தர்களும் சமணரும் உண்ணும் பொருட்டு உரைக்கும் மொழிகளைக் குறையுடைய தாக்கினான்
. புலால் மணக்கும் வேல் வென்றி உடையவன் . சோழமன்னன் எடுப்பித்த மூக்கீச்சரத்து அப்
பெருமான் செய்யும் புதுமையான செயல் இதுவாகும் .
பாடல்
எண் : 11
மல்லைஆர்மும்
முடிமன்னர் மூக்கீச்சரத்து அடிகளைச்
செல்வராக
நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ்
பவர்காழி யுள்ஞான சம்பந்தன
சொல்லவல்லார்
அவர்வானுலகு ஆளவும் வல்லரே.
பொழிப்புரை :மற்போரில் வல்லவராய
முடிமன்னர் மூவரானும் தொழப் பெறும் மூக்கீச்சரத்து அடிகளை நல்லவர் வாழும் காழியுள்
மேவிய ஞானசம்பந்தன் செல்வராக நினையும்படிப் பாடிய இச் செந்தமிழைச் சொல்லவல்லவர்
வானுலகையும் ஆளவல்லவர் ஆவர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment