திருக் கற்குடி




 திருக் கற்குடி
(உய்யக்கொண்டான் மலை,
உய்யக்கொண்டான் திருமலை)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
             
     திருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.

இறைவர்         : உஜ்ஜீவநாதசுவாமி, உச்சிநாதர், முக்தீசர்,                                                                  கற்பகநாதர்.

இறைவியார்      : அஞ்சனாக்ஷி (மைவிழியம்மை),பாலாம்பிகை.

தல மரம்          : வில்வம்.

தீர்த்தம்           : பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவிஎண்கோண தீர்த்தம்,   
                             நாற்கோண தீர்த்தம் என்பன.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - வடந்திகழ் மென்முலை.
                                               2. அப்பர்   -  மூத்தவனை வானவர்க்கு.
                                              3. சுந்தரர்  -  விடையா ருங்கொடியாய்.

       பொன்னொளி ஓடை மற்றும் குடமுருட்டி வெளியில் உள்ளன. தஞ்சையில் ஓடும் குடமுருட்டி இது அல்ல. மற்ற மூன்று தீர்த்தங்கள் திருக்கோயிலின் உள் உள்ளன. நாற்கோண தீர்த்தம் என்னும்கிணற்று நீர்தான் அபிடேகம் முதலியவைகளுக்குக் கொண்டு வரப்படுகின்றது.
    
         தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் கற்குடி என்றும், தற்போது உய்யக்கொண்டான் மலை என்றும் வழங்கும் திருத்தலம் 50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது.

     குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாழில் வழியே உள்ளே நுழைந்தால் இடதுபுறம் ஞானவாவி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்திற்கு எதிரே ஒரு முகப்பு வாயிலுடன் குன்றின் மேலே ஏற படிகள் தொடங்குகின்றன.
    
     பாறைகளில் நன்கு அமைந்துள்ள சுமார் 65 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம். படிகள் செல்லும்போது இடதுபுறம் விநாயகர் உள்ளார். குன்றின் மீது ஒரு 3 நிலை கோபுரம், 5 பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.

     குன்றின் மீது சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவருடன் கூடிய ஆலயம் அழகுற அமைந்திருக்கிறது. கொடிமரம் முன்பு மார்க்கண்டனைக் காப்பதற்காக, எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது. படிகளேறி உட்சென்றால் முதலில் அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்து போய் உள்ளது. எனினும் அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால் புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரு அம்பாளுக்கும் நித்திய பூசை நடைபெற்று வருகின்றது. அம்பிகை சந்நிதிக்கு அருகில் சண்முகர் தனி சந்நிதி அழகானது.

         உள் நுழைந்ததும் நேரே தட்சிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். வலமாக வரும்போது நால்வர், அம்பாளுடன் காட்சி தரும் விநாயகர் சந்நிதி, மறுபுறம் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளன. கஜலட்சுமி, ஜ்யேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனிபகவான் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியுடன் துர்க்கையும், பிரம்மாவும், அர்த்தநாரீசுவரரும் உள்ளனர். மூலவர் உஜ்ஜீவனேசுவரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது. இறைவன், இறைவி சந்நிதி தவிர பைரவர், மஹாலக்ஷ்மி, சக்திகணபதி, சூரியன், சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. கோயிலின் உட்புறச் சுவர்களில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோயிலுக்கு பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான். இத்தலம் நந்திவர்ம மங்கலம் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திவர்ம பல்லவனுக்கு இத்தலத்திலுள்ள ஜேஷ்டாதேவியே குலதெய்வம். இந்த ஜேஷ்டாதேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். இராவணனுடைய சகோதரர்களில் ஒருவனான கரன் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றான்.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

 
இத்தலம் பற்றிய புராணச் செய்தி:

          மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும் படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அவர் முன் தோன்றி "உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற, எல்லாத் தீய குணங்களும் நிறைந்த, வாய் போசாத, காது கேட்காத, முடமான, நூறு வயதுள்ள மகன் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா" என்று கேட்ட போது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். காரணம், தீய குணங்கள் நிறைந்த ஒரு மகனைப் பெற்றால், நற்கதி கிடைக்காது. "எழுமை எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்கப் பண்புடை மக்கள் பெறின்" என்னும் திருவள்ளுவ நாயனார் வாக்கின்படிக்கு, பண்புடை மகன் தான் வேண்டும் என்று வேண்டினார். அவ்வாறே இறைவர் அருள் செய்தார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும் போது மிருகண்டு முனிவர் அவனுடைய ஆயுள் விபரத்தைக் கூறி இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவத்தலம் வந்து சேர்ந்தான் என்று சொல்லப்படுகிறது.   இத்தலத்தில் தான் இறைவன் உஜ்ஜீவனேசுவரர் மார்க்கண்டேயனுக்குக் காட்சி கொடுத்து அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக வாழ வரம் கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. 

     ஆனால், கந்தபுராணம் மார்க்கண்டேயப் படலம் சொல்வதில் இருந்து இக் கதை மாறுபட்டதாகவே உள்ளது. 
        
         இத்தலத்தில் வசிப்போர் நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வங்களையும் பெறுவர். வழிபடுவோர்க்கு எம பயமில்லை என்று தலபுராணம் கூறுகிறது.

         தேவார முதலிகள் எனப் போற்றப் பெறும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமையுடைய திருத்தலங்களில் இத்திருத்தலமும் ஒன்று.

          இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது, (தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு) சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேக வாய்க்கால் என்றும் உள்ளது.

          கொடிமரத்தின் முன்பு, மார்க்கண்டேயனைக் காப்பதற்கு - எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டுநீங்கி வந்து நின்ற, சுவாமியின் - பாதம் உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கூழும் பல் நல் குடியும் ஓங்கி நலம் பெருகும் மேன்மை திருக்கற்குடியில் சந்தான கற்பகமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 341
நீடும் பராய்த்துறை நெற்றித் தனிக்கண்ணர் கோயில்நண்ணி,
கூடும் கருத்தொடு கும்பிட்டு, கோதுஇல் தமிழ்ச் சொல்மாலை
பாடும் கவுணியர், கண்பனி மாரி பரந்து இழிய,
சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார்.

         பொழிப்புரை : சிறப்புமிக்க திருப்பராய்த்துறை என்ற பதியில் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருக்கோயிலை அடைந்து, ஒருமையுணர்வுடன் வணங்கி, குற்றம் இல்லாத தமிழ் மாலையைப் பாடுகின்ற கவுணியக் குலத்தலைவரான பிள்ளையார், கண்களினின்றும் நீர் மழை பெருக, கைகளைத் தலை மீது கூப்பித் தொழுது நின்றார்.

         திருப்பராய்த்துறையில் அருளியது, `நீறு சேர்வதொர்' (தி.1 ப.135) எனத் தொடங்கும் மேகராகக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 342
தொழுது புறம்புஅணைந்து, அங்குநின்று ஏகிச் சுரர்பணிவுற்று
எழுதிரு ஆலந்துறை, திருச்செந்துறையே முதலா
வழுஇல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து,அணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக்கற் குடிமலை சேரவந்தார்.

         பொழிப்புரை : வணங்கி வெளிப்போந்து, அத்திருப்பதியினின் றும் நீங்கித் தேவர்கள் வந்து வணங்கி எழுகின்ற திருவாலந்துறை திருச்செந்துறை முதலான குற்றம் அற்ற பல கோயில்களையும் வணங்கி, மகிழ்வுடன் அணைபவரான சம்பந்தர், செழுமை பொருந்திய மலர்ச்சோலைகளையுடைய `திருக்கற்குடிமலை'யைச் சேரச் சென்றார்.


பெ.பு. பாடல் எண் : 343
கற்குடி மாமலை மேல்எழுந்த
         கனகக் கொழுந்தினை, கால்வளையப்
பொன்திரள் மேருச் சிலைவளைத்த
         போர்விடை ஆளியைப் போற்றிஇசைத்து,
நல்தமிழ் மாலை புனைந்து அருளி,
         ஞானசம் பந்தர் புலங்கள் ஐந்தும்
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து,
         திருச்சிராப்பள்ளிச் சிலம்புஅணைந்தார்.

         பொழிப்புரை : திருக்கற்குடி மாமலையின் மீது வீற்றிருக்கும் பொற்கொழுந்து போன்றவரை, பொன்மேரு மலையை வளைத்த ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டவரைப் போற்றி, நல்ல தமிழ் மாலையைச் சூட்டி, ஞானசம்பந்தர், பொறிவாயில் ஐந்து அவித்த புனிதரின் `திருமூக்கீச்சரத்தினைப்' பணிந்து சென்று, `திருச்சிராப்பள்ளி' மலையை அடைந்தார்.

         திருக்கற்குடியில் அருளியது, `வடந்திகழ் மென்முலை' (தி.1 ப.43) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

         திருமூக்கீச்சரத்தில் அருளிய பதிகம் `சாந்தம் வெண்ணீறென' (தி.2 ப.120) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருமூக்கீச்சரம் இதுபொழுது உறையூர் என வழங்கப் பெறுவதாம்.


1.043   திருக்கற்குடி                      பண் - தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வடம்திகழ் மென்முலை யாளைப்
         பாகம் அதாக மதித்து,
தடம்திரை சேர்புனல் மாதைத்
         தாழ்சடை வைத்த சதுரர்,
இடம்திகழ் முப்புரி நூலர்,
         துன்பமொடு இன்பம் அதுஎல்லாம்
கடந்தவர் காதலில் வாழும்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :திருக்கற்குடி மாமலையை விரும்பி அதன்கண் வாழும் இறைவர், முத்துவடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத் துள்ள சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்பதுன்பங்களைக் கடந்தவர்.


பாடல் எண் : 2
அங்கமொர் ஆறுஉடை வேள்வி
         ஆன அருமறை நான்கும்
பங்கம்இல் பாடலோடு ஆடல்
         பாணி பயின்ற படிறர்
சங்கமது ஆர்குற மாதர்
         தங்கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றும்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :சங்கு வளையல்கள் அணிந்த குறப் பெண்களின் கைகளில் விளங்கும் பிள்ளைகள் இரவு நேரத்தில் தாவிப்பெரிய மதியைக் கைகளால் பற்றும் திருக்கற்குடி மாமலை இறைவர் வேள்விகட்குரிய விதிகளை விளக்கி ஆறு அங்கங்களுடன் கூடிய, அரிய வேதங்கள் நான்காகிய குற்றமற்ற பாடல், ஆடல், தாளச் சதிகள் ஆகியவற்றைப் பழகியவர்.


பாடல் எண் : 3
நீர்அக லந்தரு சென்னி
         நீடிய மத்தமும் வைத்து,
தாரகை யின்ஒளி சூழ்ந்த
         தண்மதி சூடிய சைவர்,
போர்அக லந்தரு வேடர்
         புனத்திடை இட்ட விறகில்
கார்அகி லின்புகை விம்மும்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :போர் செய்தற்கு ஏற்ற அகலமான மார்பினைக் கொண்டுள்ள வேடர்கள் காடுகளிலிருந்து வெட்டிக் கொணர்ந்து எரிக்கும் விறகுகளில் கரிய அகிலின் புகைமணம் வீசும் திருக்கற்குடிமாமலை இறைவர் பரந்து விரிந்து வந்த கங்கை நீரை உடைய முடி மீது நீண்டு மலர்ந்த ஊமத்தை மலரை அணிந்து விண்மீன்களின் ஒளி சூழ்ந்து விளங்கும் குளிர்ந்த பிறை மதியைச்சூடிய சைவராவர். அம்மலையில் மரமானவை அகிலன்றிப் பிறிதில்லை என்பதாம்.


பாடல் எண் : 4
ஒருங்குஅளி நீஇறைவா என்று
         உம்பர்கள் ஓலம் இடக்கண்டு
இருங்களம் ஆர விடத்தை
         இன்அமுது உண்ணிய ஈசர்
மருங்குஅளி யார்பிடி வாயில்
         வாழ்வெதி ரின்முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்கும்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :மதம் கொண்ட கரிய களிறு அருகில் அன்பு காட்டி வரும் பெண்யானையின் வாயில், பசுமையோடு முளைத்து வரும் மூங்கில் முளைகளை வாரிக்கொடுத்து ஊட்டும் திருக்கற்குடிமாமலை இறைவர், தேவர்கள் பெருமானே, அனைவரையும் ஒருங்கு காத்தளிப்பாயாக என ஓலமிடுவதைக் கேட்டுப் பாற்கடலிடை எழுந்த நஞ்சைத் தமது மிடறு கருமைக்கு இடமாகுமாறு இனிய அமுதமாகக் கருதி உண்டு காத்த ஈசராவார்.


பாடல் எண் : 5
போர்மலி திண்சிலை கொண்டு
         பூதக ணம்புடை சூழப்
பார்மலி வேடுஉரு வாகிப்
         பண்டுஒரு வர்க்குஅருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த
         இன்ஒளி மாமணி எங்கும்
கார்மலி வேடர் குவிக்கும்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :அழகிய பன்றிகள் நிலத்தைக் கிளைத்தலால் வெளிப்பட்ட இனிய ஒளியோடு கூடிய சிறந்த மணிகளைக் கரிய நிறமுடைய வேடர்கள் பல இடங்களிலும் குவித்துள்ள திருக்கற்குடிமாமலை இறைவர், போர் செய்யத்தக்க வலிய வில்லைக் கையில் கொண்டு, பூதகணங்கள் புடைசூழ்ந்து வர மண்ணுலகில் தாமொரு வேடர் உருத்தாங்கி, முற்காலத்தில் அருச்சுனருக்கு அருள் செய்தவராவார்.


பாடல் எண் : 6
உலந்தவர் என்புஅது அணிந்தே,
         ஊர்இடு பிச்சையர் ஆகி,
விலங்கல்வில் வெங்கன லாலே
         மூஎயில் வேவ முனிந்தார்,
நலந்தரு சிந்தையர் ஆகி
         நாமலி மாலையி னாலே
கலந்தவர் காதலில் வாழும்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :நன்மை அமைந்த மனமுடையவராய் நாவினால் புகழும் சொல்மாலைகளாகிய தோத்திரங்களினாலே இறைவன் திருவருளில் கலந்த மெய்யடியார்கள் அன்போடு வாழும் திருக்கற்குடிமாமலை இறைவர், இறந்தவர்களின் எலும்பை அணிந்து, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்கும் பிட்சாடனராய் மேருமலையாகிய வில்லிடைத் தோன்றிய கொடிய கனலால் முப்புரங்களும் வெந்தழியுமாறு முனிந்தவர்.


பாடல் எண் : 7
மான்இடம் ஆர்தரு கையர்,
         மாமழு ஆரும் வலத்தர்,
ஊன்இடை ஆர்தலை ஓட்டில்
         உண்கலன் ஆக உகந்தார்,
தேன்இடை ஆர்தரு சந்தின்
         திண்சிறையால் தினை வித்திக்
கான்இடை வேடர் விளைக்கும்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :தேனடைகள் பொருந்திய சந்தன மரங்களுக்கிடையே வலிய கரைகளைக் கட்டி, தினைகளை விதைத்துக் கானகத்தில் வேடர்கள் தினைப்பயிர் விளைக்கும் திருக்கற்குடிமாமலை இறைவர் மானை இடக் கையிலும், மழுவை வலக்கையிலும் தரித்தவர். ஊன் பொருந்திய தலையோட்டை உண்கலனாக உகந்தவர்.


பாடல் எண் : 8
வாள்அமர் வீரம் நினைந்த
         இராவணன் மாமலை யின்கீழ்த்
தோள்அமர் வன்தலை குன்றத்
         தொல்விரல் ஊன்று துணைவர்,
தாள்அமர் வேய்தலை பற்றித்
         தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளம்அது ஆர்முகில் கீறும்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :அடிமரத்தோடு கூடிய மூங்கிலினது தழையைப்பற்றி வளைத்து உண்ட களிறு, அதனை வேகமாக விடுதலால் அம்மூங்கில், விசையோடு சென்று, கரிய நிறம் பொருந்திய மேகங்களைக் கீறும், திருக்கற்குடி மாமலை இறைவர், வாட்போரில் வல்ல தனது பெருவீரத்தை நினைந்த இராவணனைப் பெருமை பொருந்திய கயிலைமலையின்கீழ் அவன் தோள்களும், வலிய தலைகளும் நெரியுமாறு தமது பழம்புகழ் வாய்ந்த கால் விரலால் ஊன்றிய துணைவராவார்.


பாடல் எண் : 9
தண்டுஅமர் தாமரை யானும்,
         தாவிஇம் மண்ணை அளந்து
கொண்டவ னும்அறிவு ஒண்ணாக்
         கொள்கையர், வெள்விடை ஊர்வர்,
வண்டுஇசை ஆயின பாட
         நீடிய வார்பொழில் நீழல்
கண்டுஅமர் மாமயில் ஆடும்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :வண்டுகள் இசை பாட, நீண்ட பொழிலின் நீழலைக் கண்டு மகிழும் சிறந்த மயில்கள் ஆடும் திருக்கற்குடிமாமலை இறைவர் குளிர்ந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகனாலும் உயர்ந்த இவ்வுலகை அளந்த திருமாலாலும் அறிய ஒண்ணாத இயல்பினர். வெண்ணிறமான விடையை ஊர்ந்து வருபவர்.


பாடல் எண் : 10
மூத்துவர் ஆடையி னாரும்,
         மூசு கடுப்பொடி யாரும்
நாத்துவர் பொய்ம்மொழி யார்கள்,
         நயம்இல ராமதி வைத்தார்,
ஏத்துஉயர் பத்தர்கள் சித்தர்
         இறைஞ்ச, அவர்இடர் எல்லாம்
காத்தவர் காமரு சோலைக்
         கற்குடி மாமலை யாரே.

         பொழிப்புரை :காவியாடையணிந்த புத்தர்களும், கடுக்காய்ப் பொடியை நிரம்ப உண்ணும் சமணர்களும், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவராய் நேயமற்ற அறிவுடையவராய் இருப்போராவர். அவர்களை விடுத்துத் தம்மை ஏத்தி வாழ்த்தி உயரும் பக்தர்களும், சித்தர்களும் வணங்க அவர்கட்கு வரும் இடர்களை அகற்றிக்காத்தவர், அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடிமாமலை இறைவர்.


பாடல் எண் : 11
காமரு வார்பொழில் சூழும்
         கற்குடி மாமலை யாரை
நாமரு வண்புகழ்க் காழி
         நலந்திகழ் ஞானசம் பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை
         பத்துஇவை பாடவல் லார்கள்
பூமலி வானவ ரோடும்
         பொன்னுல கில்பொலி வாரே.

         பொழிப்புரை :அழகிய நீண்ட பொழில்களால் சூழப்பட்ட திருக்கற்குடிமாமலை இறைவரை, நாவிற் பொருந்திய வண்புகழால் போற்றப்பெறும் சீகாழிப் பதியில் தோன்றிய நன்மையமைந்த ஞானசம்பந்தன் பாடிய செந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள். பொலிவுடன் கூடிய தேவர்களோடும் பொன்னுலகின்கண் பொலிவோராவர்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 302
சிலந்திக்கு அருளும் கழல்வணங்கி,
         செஞ்சொல் மாலை பலபாடி,
இலங்கு சடையார் எறும்பியூர்
         மலையும் இறைஞ்சிப் பாடியபின்,
மலர்ந்த சோதி திருச்சிராப்
         பள்ளி மலையும், கற்குடியும்,
நலங்கொள் செல்வத் திருப்பராய்த்
         துறையும் தொழுவான் நண்ணினார்.

         பொழிப்புரை : நாவரசர் திருவானைக்காவில் சிலந்திக்கு அருளிய இறைவரின் திருவடிகளை வணங்கி, பலசெஞ்சொல் மாலைகளைப் பாடி, விளங்கும் சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவெறும்பியூர் மலையையும் வணங்கித் திருப்பதிகம் பாடினார். பின்பு விரிந்த பேரொளியையுடைய திருச்சிராப்பள்ளி மலையையும், திருக்கற்குடி மலையையும், நன்மையுடைய திருப்பராய்த்துறையையும் வணங்கும் பொருட்டுச் செல்லலானார்.

         குறிப்புரை :
1.    திருவானைக்காவில் அருளிய பதிகங்கள்:
(அ) `கோனைக்காவி` (தி.5 ப.31) - திருக்குறுந்தொகை.
(ஆ) `எத்தாயர்` (தி.6 ப.62) - திருத்தாண்டகம்.
(இ) `முன்னானை` (தி.6 ப.63) – திருத்தாண்டகம்.

2.    திருவெறும்பியூர்:
(அ) `விரும்பியூறு` (தி.5 ப.74) - திருக்குறுந்தொகை.
(ஆ) `பன்னிய செந்தமிழ்` (தி.6 ப.91) - திருத் தாண்டகம்.

3.    திருச்சிராப்பள்ளி: `மட்டுவார்` (தி.5 ப.85) - திருக்குறுந்தொகை.

4.    திருக்கற்குடி: `மூத்தவனை` (தி.6 ப.60) - திருத்தாண்டகம்.

5.    திருப்பராய்த்துறை: `கரப்பர்` (தி.5 ப.30) - திருக்குறுந்தொகை.



6. 060    திருக்கற்குடி             திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மூத்தவனை வானவர்க்கு, மூவா மேனி
         முதலவனை, திருஅரையில் மூக்கப் பாம்புஒன்று
ஆர்த்தவனை, அக்குஅரவம் ஆர மாக
         அணிந்தவனை, பணிந்துஅடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை, இறுவரையில் தேனை, ஏனோர்க்கு
         இன்அமுதம் அளித்தவனை, இடரை எல்லாம்
காத்தவனை, கற்குடியில் விழுமி யானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :தேவர்களுக்கு எல்லாம் மூத்தவனாய், மூப்படையாத திருமேனியை உடைய முதல்வனாய், இடுப்பில் கொடிய பாம்பைச் சுற்றியவனாய், எலும்புகளையும், பாம்புகளையும் மாலையாக அணிந்தவனாய், அடியவர்களால் பணிந்து அன்போடு தோத்திரிக்கப்படுபவனாய், பெரிய மலையில் உள்ள தேன் போன்றவனாய், தேவர்களுக்கு இனிய அமுதம் வழங்கியவனாய், துயரங்களில் இருந்து எல்லோரையும் காத்தவனாய், கற்பகம் போன்றவனாய்க் கற்குடியில் மேம்பட்டவனாய் உள்ள பெருமானை அடியேன் கண்ணாரக் கண்டேன்.


பாடல் எண் : 2
செய்யானை, வெளியானை, கரியான் தன்னை,
         திசைமுகனை, திசைஎட்டும் செறிந்தான் தன்னை,
ஐயானை, நொய்யானை, சீரி யானை,
         அணியானை, சேயானை, ஆன்அஞ்சு ஆடும்
மெய்யானை, பொய் யாதும் இல்லான் தன்னை,
         விடையானை, சடையானை, வெறித்த மான்கொள்
கையானை, கற்குடியில் விழுமி யானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :செம்மை, வெண்மை, கருமை என்ற நிறங்களை உடையவனாய், பிரமனாய், பெருந்திசையும் பரவியவனாய், அழகியவனாய், நன்மையனாய், புகழுடையவனாய், அண்மையில் உள்ளவனாய்த் தீயவர்களுக்குத் தொலைவில் இருப்பவனாய், பஞ்ச கவ்வியத்தில் நீராடும் திருமேனியனாய், பொய்யேதும் இல்லாதவனாய், காளை வாகனனாய், சடைமுடியுடையவனாய், மருண்ட மானைக் கையில் ஏந்தியவனாய், கற்பகமாய்க் கற்குடியில் உறையும் சிறப்புடையவனை நான் கண்ணாரக் கண்டேன்.

  
பாடல் எண் : 3
மண்அதனில் ஐந்தை,மா நீரில் நான்கை,
         வயங்கு எரியில் மூன்றை, மாருதத்து இரண்டை,
விண்அதனில் ஒன்றை, விரிகதிரை,
         தண்மதியை, தாரகைகள் தம்மின் மிக்க
எண்அதனில் எழுத்தை, ஏழிசையை, காமன்
         எழில்அழிய எரிஉமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனை, கற்குடியில் விழுமி யானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :மண்ணில் ஐந்து, நீரில் நான்கு, தீயில் மூன்று, காற்றில் இரண்டு, விண்ணில் ஒன்று என்ற பண்புகளுக்குக் காரணனாய், சூரியனாய், சந்திரனாய், விண்மீன்களாய், அவைகளிலும் எண்ணிறந்தனவாய் உள்ள பொருள்கள் மேல் நிகழும் சொற்களாய், ஏழிசையாய், மன்மதனுடைய அழகிய உடல் அழியுமாறு தீயை வெளிப்படுத்திய அதற்குமுன், திறக்கப்படாத நெற்றிக்கண்ணனாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பாடல் எண் : 4
நல்தவனை, புற்றுஅரவ நாணி னானை,
         நாணாது நகுதலைஊண் நயந்தான் தன்னை,
முற்றவனை, மூவாத மேனி யானை,
         முந்நீரின் நஞ்சம்உகந்து உண்டான் தன்னை,
பற்றவனை, பற்றார்தம் பதிகள் செற்ற
         படையானை, அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனை, கற்குடியில் விழுமி யானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :மேம்பட்ட தவத்தினனாய்ப் பாம்பை வில் நாணாகக் கொண்டவனாய் வெட்கப்படாமல் மண்டையோட்டில் இடப்படும் பிச்சையை விரும்பியவனாய், நிறைவுடையவனாய், மூப்படையாத உடம்பினனாய், கடல் நஞ்சை விரும்பி உண்டவனாய், எப்பொருட்கும் பற்றுக்கோடாய் உள்ளவனாய், பகைவருடைய மும்மதில்களையும் அழித்த படையை உடையவனாய், தன்னை அடைந்த அடியவருடைய பாவத்தைப் போக்கக் கற்றவனாய், கற்பகமாய் கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பாடல் எண் : 5
சங்கைதனைத் தவிர்த்துஆண்ட தலைவன் தன்னை,
         சங்கரனை, தழல்உறுதாள் மழுவாள் தாங்கும்
அங்கையனை, அங்கம்அணி ஆகத் தானை,
         ஆகத்துஓர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை, மதியொடுமா சுணமும் தம்மின்
         மருவவிரி சடைமுடிமேல் வைத்த வான்நீர்க்
கங்கையனை, கற்குடியில் விழுமியானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :ஐயத்தைப் போக்கி அடிமை கொண்ட தலைவனாய், நன்மை செய்பவனாய், கைப்பிடியை உடைய நெருப்பைப் போன்ற கொடிய மழுப்படையைத் தாங்கும் கையனாய், எலும்பை அணிந்த மார்பினனாய், பார்வதி பாகனாய், பிறையும் பாம்பும் நட்புடன் பழகும் தன் சடைமுடிமேல் ஆகாய கங்கையை வைத்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பாடல் எண் : 6
பெண்ணவனை, ஆணவனை, பேடு ஆனானை,
         பிறப்புஇலியை, இறப்புஇலியைப், பேரா வாணி
விண்ணவனை, விண்ணவர்க்கு மேல் ஆனானை,
         வேதியனை, வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனை, பண்ணில்வரு பயன் ஆனானை,
         பாரவனை, பாரில்வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண்ணவனை, கற்குடியில் விழுமி யானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :பெண்ணாய், ஆணாய், அலியாய்ப் பிறப்பு இறப்பு அற்றவனாய், ஓசை நீங்காத விண்ணாய், விண்ணவர்க்கு மேம்பட்டவனாய், வேதியனாய், வேத கீதம் பாடும் பண்ணாய்ப் பண்ணில் வரும் பயனாய் அமைபவனாய், நில உலகமாய், அவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் பற்றுக்கோடாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பாடல் எண் : 7
பண்டானை, பரந்தானை, குவிந்தான் தன்னை,
         பாரானை, விண்ணாய், இவ் உலகம் எல்லாம்
உண்டானை, உமிழ்ந்தானை, உடையான் தன்னை,
         ஒருவரும்தன் பெருமைதனை அறிய ஒண்ணா
விண்டானை, விண்டார்தம் புரங்கள் மூன்றும்
         வெவ்வழலில் வெந்துபொடி ஆகி வீழக்
கண்டானை, கற்குடியில் விழுமி யானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :பண்டையனாய், உலகத்தோற்றத்தில் பரந்து நிற்பவனாய், உலக ஒழுக்கத்தில் குவிந்து இருப்பவனாய், இவ்வுலகாய், தேவருலகாய், இவ்வுலகமெல்லாம் உண்டவனாய்ப் பின் வெளிப்படுத்தியவனாய், அவற்றிற்கு உரிமையாளனாய், ஒருவரும் தன் பெருமையை அறிய முடியாதபடி சேயனாய், பகைவர் முப்புரமும் தீயில் வெந்து பொடியாகி விழச் செய்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பாடல் எண் : 8
வானவனை, வானவர்க்கு மேல் ஆனானை,
         வணங்கும்அடி யார்மனத்துஉள் மருவிப் புக்க
தேன்அவனை, தேவர்தொழு கழலான் தன்னை,
         செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனை, கொல்லை விடை ஏற்றி னானை,
         குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனை, கற்குடியில் விழுமியானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :வானவனாய், தேவர்களுக்கு மேம்பட்டவனாய், தன்னை வணங்கும் அடியவர் மனத்துள் விரும்பிப்புகுந்த தேன் போன்றவனாய், தேவர்கள் தொழும் திருவடிகளை உடையவனாய், பலவாகி நின்ற தன் செயல்கள் யாவினும் வெற்றி காணும் தலைவனாய், முல்லை நிலத்தெய்வமாம் திருமாலாகிய காளையை உடையவனாய், குழலும் முழவும் ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்தாடவல்ல, கற்பகம் போன்ற கற்குடியில் விழுமி யானைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பாடல் எண் : 9
கொலையானை உரிபோர்த்த கொள்கை யானை,
         கோள்அரியைக் கூர்அம்பா வரைமேல் கோத்த
சிலையானை, செம்மைதரு பொருளான் தன்னை,
         திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானை, தத்துவங்கள் ஆனான் தன்னை,
         தையல்ஓர் பங்கினனை, தன்கை ஏந்து
கலையானை, கற்குடியில் விழுமி யானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :தன்னால் கொல்லப்பட்ட யானையின் தோலைப் போர்த்த செயலினனாய், மலையாகிய வில்லில் திருமாலைக் கூரிய அம்பாகக் கோத்தவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், திரிபுர அசுரருள் சுதர்மன், சுசீலன், சுமாலி என்ற மூவருக்கு நலன் செய்த மேம்பட்டவனாய், மெய்ப்பொருள்கள் ஆகியவனாய், பார்வதி பாகனாய், கையில் மானை ஏந்தியவனாய், கற்பகமாய், கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பாடல் எண் : 10
பொழிலானை, பொழிலாரும் புன்கூ ரானை,
         புறம்பயனை, அறம்புரிந்த புகலூ ரானை,
எழிலானை, இடைமருதின் இடங்கொண் டானை,
         ஈங்கோய்நீங் காதுஉறையும் இறைவன் தன்னை,
அழல்ஆடு மேனியனை, அன்று சென்றுஅக்
         குன்றுஎடுத்த அரக்கன்தோள் நெரிய ஊன்றும்
கழலானை, கற்குடியில் விழுமி யானை,
         கற்பகத்தை, கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :உலகமாக உள்ளவனாய், சோலைகள் நிறைந்த புன்கூர், புறம்பயம், அறத்தை விரும்பிச் செய்கின்ற புகலூர், இடை மருது, ஈங்கோய் இவற்றில் அழகாக இடங்கொண்டு நீங்காது தங்கும் தலைவனாய், தீயில் கூத்தாடும் திருமேனியை உடையவனாய், ஒரு காலத்தில் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு ஊன்றிய திருவடியை உடையவனாய்க் கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         தம்பிரான்தோழர் திருவெஞ்சமாக்கூடல் பணிந்து, நெடுந்தூரம் கடந்து கற்குடியில் விழுமியாரைத் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 92-93)

பெரிய புராணப் பாடல் எண் : 92
ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்,
         அருவரைச் சுரங்களும், பிறவும்,
பாயுநீர் நதியும் பலபல கடந்து,
         பரமர்தம் பதிபல பணிந்து,
மேயவண் தமிழால் விருப்பொடும் பரவி,
         வெஞ்சமாக் கூடலும் பணிந்து,
சேயிடை கழியப் போந்துவந்து அடைந்தார்
         தென்திசைக் கற்குடி மலையில்.

         பொழிப்புரை : அவ்விடத்தினின்றும் நீங்கிப் பெருமானாரின் அருளைப் பெற்றுச் சென்றிடும் நம்பிகள், அரிய மலைச் சுரங்களையும், பிற நிலப்பகுதிகளையும், நீருடைய ஆறுகளையும் கடந்து, இடைப்பட்ட பெருமானுடைய பதிகள் பலவும் பணிந்து, பொருந்திய வளம் மிக்க தமிழால் விருப்புடன் போற்றித் திருவெஞ்சமாக் கூடலையும் வணங்கி, நெடுந்தொலைவு கடந்து, தென்திசையில் உள்ள திருக்கற்குடி மலைக்கு வந்தார்.

         நதிகள் பல கடந்து என்றது, அமராவதி, நன்காஞ்சி, சிற்றாறு, குழகனாறு முதலாயினவாகலாம் என்றும், பதிகள் பல என்றது மூலனூர், தென்னிலை, கருவூர் முதலியனவாகலாம் என்றும் கருதுவர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). திருவெஞ்சமாக்கூடலில் அருளிய பதிகம், `எறிக்கும்' (தி.7 ப.42) எனத்தொடங்கும் கொல்லிக்கௌவாணப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 93
வீடு தரும்இக் கற்குடியில்
         விழுமியாரைப் பணிந்து, இறைஞ்சி,
நீடு விருப்பில் திருப்பதிகம்
         நிறைந்த சிந்தை யுடன்பாடி,
பாடும் விருப்பில் தொண்டருடன்
         பதிகள் பலவும் அணைந்துஇறைஞ்சி,
தேடும் இருவர் காண்பரியார்
         திருஆறைமேல் தளிசென்றார்.

         பொழிப்புரை : வீடுபேற்றை வழங்கிடும் இக்கற்குடிமலையில், நினைத்தற்கரிய மிகு இனிமையுடைய பெருமானைப் பணிந்து, போற்றி, மீதூர்ந்த விருப்பில், நிறைந்த சிந்தையுடன் திருப்பதிகம் பாடியருளி, மேலும் பெருமானாரைப் பாடும் விருப்பில், அடியார்களுடன் பல பதிகளும் சென்று வணங்கி, தேடிநின்ற அயன், திருமால் ஆகிய இருவருக்கும் காண்டற்கரிய கடவுளின் திருஆறைமேற்றளி என்னும் திருப்பதிக்குச் சென்றார்.

         திருக்கற்குடியில் அருளிய பதிகம் `விடையார்' எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும் (தி.7 ப.27).


7. 027    திருக்கற்குடி                  பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விடைஆ ரும்கொடியாய், வெறி
         ஆர்மலர்க் கொன்றையினாய்,
படையார் வெண்மழுவா, பரம்
         ஆய பரம்பரனே,
கடிஆர் பூம்பொழில்சூழ் திருக்
         கற்குடி மன்னிநின்ற
அடிகேள், எம்பெருமான், அடி
         யேனையும் அஞ்சல்என்னே.

         பொழிப்புரை : இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே , படைக் கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே , மேலார்க்கும் மேலானவனே , மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே , எங்கள் கடவுளே , அடியேனையும், `அஞ்சாதி` எனச் சொல்லி உய்யக் கொண்டருள் .


பாடல் எண் : 2
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்கநின்ற
இறைவா, எம்பெருமான், எனக்கு இன்இமுது ஆயவனே,
கறைஆர் சோலைகள்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
அறவா, அங்கணனே, அடி யேனையும் அஞ்சல்என்னே.

         பொழிப்புரை : அந்தணரும் , அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே , எம்பெருமானே . எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே , இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற் குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, அழகிய கண்களை யுடையவனே, அடியேனையும், `அஞ்சாதி` எனச் சொல்லி உய்யக்கொண்டருள்.


பாடல் எண் : 3
சிலையால் முப்புரங்கள் பொடி ஆகச் சிதைத்தவனே,
மலைமேல் மாமருந்தே, மட மாதுஇடம் கொண்டவனே,
கலைசேர் கையினனே, திருக் கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய், அடி யேனையும் அஞ்சல்என்னே.

         பொழிப்புரை : வில்லால் , திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே , மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே , இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே , மான் பொருந்திய கையை உடையவனே , திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் .


பாடல் எண் : 4
செய்ஆர் மேனியனே, திரு நீல மிடற்றினனே,
மைஆர் கண்ணிபங்கா, மத யானை உரித்தவனே,
கைஆர் சூலத்தினாய், திருக் கற்குடி மன்னிநின்ற
ஐயா, எம்பெருமான், அடி யேனையும் அஞ்சல்என்னே.

         பொழிப்புரை : செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே , அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே , மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே , மதம் பொருந்திய யானையை உரித்தவனே , கையில் பொருந்திய சூலத்தை உடையவனே , திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, எங்கள் கடவுளே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக்கொண்டருள் .


பாடல் எண் : 5
சந்துஆர் வெண்குழையாய், சரி கோவண ஆடையனே,
பந்து ஆரும்விரலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே,
கந்துஆர் சோலைகள்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
எந்தாய், எம்பெருமான், அடி யேனையும் ஏன்றுகொள்ளே.

         பொழிப்புரை : அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந் தவனே , சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே , பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே , நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , எங்கள் கடவுளே , அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள் .


பாடல் எண் : 6
அரைஆர் கீளொடுகோ வண மும்அர வும்அசைத்து,
விரைஆர் கொன்றையுடன் விளங் கும்பிறை மேல்உடையாய்,
கரைஆ ரும்வயல்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
அரையா, எம்பெருமான், அடி யேனையும் அஞ்சல்என்னே.

         பொழிப்புரை : அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு , ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே , வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே , எங்கள் இறைவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் .


பாடல் எண் : 7
பாரார் விண்ணவரும் பர விப்பணிந்து ஏத்தநின்ற
சீர்ஆர் மேனியனே, திகழ் நீல மிடற்றினனே,
கார்ஆர் பூம்பொழில்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே, அடி யேனையும் அஞ்சல்என்னே.

         பொழிப்புரை : மண்ணுலகத்தவரும் , விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும் , படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற , அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே , விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே , மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக்கொண்டருள் .


பாடல் எண் : 8
நிலனே, நீர் வளி தீ நெடு வானகம் ஆகிநின்ற
புலனே, புண்டரிகத்து அயன் மாலவன் போற்றி செய்யும்
கனலே, கற்பகமே, திருக் கற்குடி மன்னி நின்ற
அனல் சேர் கையினனே, அடி யேனையும் அஞ்சல்என்னே.

         பொழிப்புரை : நிலமே , நீரே , தீயே , காற்றே, நீண்டவானமே என்னும் ஐந்துமாகி நிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே , தாமரை மலரில் உள்ள பிரமன் , மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே , கற்பகத் தருப்போல்பவனே , திருக் கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , தீ யேந்திய கையை உடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் .


பாடல் எண் : 9
வரும்கா லன்உயிரை மடி யத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்தனக்காய்ப் பிரி வித்த பெருந்தகையே,
கரும்பு ஆரும்வயல்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற
விரும்பா, எம்பெருமான், அடி யேனையும் வேண்டுதியே.

         பொழிப்புரை : பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி, அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி , அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகை யாளனே , கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே , எங்கள் இறைவனே , அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள் .


பாடல் எண் : 10
அலைஆர் தண்புனல்சூழ்ந்து அழகு ஆகி விழவுஅமரும்
கலைஆர் மாதவர்சேர் திருக் கற்குடிக் கற்பகத்தைச்
சிலைஆர் வாள்நுதலாள் நல்ல சிங்கடி அப்பன்உரை
விலைஆர் மாலைவல்லார் வியன் மூவுலகு ஆள்பவரே.

         பொழிப்புரை : அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற , கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கின்ற கற்பகம் போல்பவனை , விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல , ` சிங்கடி ` என்பாளுக்குத் தந்தையாகிய நம்பியாரூரன் பாடிய , விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள் , அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர் .

                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

10. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி

  "பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும்      கொடுப்பதென்ன பொருளோ? என்று நற்கமல முகம்மலர்ந்தே உபசாரம்      மிக்கஇன்சொல் நடத்தல் நன்றே; ...