திருப் பராய்த்துறை
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
இத்திருத்தலம் திருச்சியில் இருந்து கரூர்
செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மீ. தொலைவில்
உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து
வசதிகள் இருக்கின்றன. கோயிலின் வாயிலில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இறைவர்
: தாருகவனேசுவரர், பராய்த்துறைநாதர்.
இறைவியார்
: ஏமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள்
தல
மரம் : பராய் மரம்
தீர்த்தம் : காவிரி
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் -நீறுசேர்வதொர் மேனியர்.
2. அப்பர் - கரப்பர்
கால மடைந்தவர்.
காவிரியின் தென்கரையில் உள்ள 127 பாடல் பெற்ற திருத்தலங்களில் திருப்பராய்த்துறை
தாருகாவனேசுவரர் ஆலயம் மிகவும் தொன்மையானதாகும்.
இவ்விடத்தில் காவிரி மிகவும் அகலமாக ஓடுவதால்
அகண்ட காவிரி என்று அழைக்கப்படுகிறது.
பராய் மரங்கள் நிறைந்த தலமாக இவ்வூர்
திகழ்வதால் பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தலவிருட்சம் பராய் மரமே
ஆகும்.
மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள இத்தல
விருட்சம் புற்றுநோயையும் மற்றும் எளிதில் குணப்படுத்தமுடியாத சிலவகை தோல்
நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. பராய் மரத்தின் இலையானது சீதபேதி
மற்றும் ரத்த பேதியை குணமாக்கும். பராய் மரத்துப் பால், கால் வெடிப்புகளைச் சரியாக்கும்.
இத்தகைய நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்தும் மக்கள் இத்தல விருட்சத்திற்கு
நீரூற்றி, தீபம் ஏற்றி, தூபம் காட்டி, வலம் வந்து வணங்கினால் இந்நோய்
குணமாகும் அல்லது கட்டுப்படும் எனத் தலவரலாறு தெரிவிக்கிறது. வடமாநிலங்கள் மற்றும்
பர்மாவில், தேயிலைக்கு மாற்றாக
பராய் இலையைப் பயன்படுத்துகின்றனர். அந்தத் தேயிலை, ஆண்மையை அதிகரிக்கும் என்கிறது
ஆயுர்வேதம். பராய் வேரைப் பாம்புக்கடி முறிவு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
மூக்கிலிருந்து ரத்தம் வடிதல், மூலம், பேதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த பராய்
மரத்து விதைகள் மருந்தாகின்றன.
இத்திருத்தலத்தில்
தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள் தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள்
செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும் அதனால் இறைவனை துதிக்க வேண்டிய அவசியம்
இல்லை என்றும் கருதி நடந்து கொண்டனர். அவர்களின் மமதையை அடக்க இறைவன் சிவபெருமான்
பிச்சாடனர் வேடம் பூண்டு தாருகாவனத்திற்கு வந்து முனிபத்தினிகளை மயக்கினார்.
முனிவர்கள் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்திலிருந்து தோன்றிய
புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக அணிந்து
கொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கி தனது இடக்கரத்தில்
ஏந்திக் கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ சிவபெருமான் அவற்றைத் தனது
அணிகலன்களாக்கி கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல
முடியவில்லை என்று தெரிந்து கொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று வந்திருப்பது
பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்து கொண்டு மமதை அடங்கி இறைவனிடம் தஞ்சம்
அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சி
அளித்தார். கருவறை அர்த்த மண்டபத்தில் பிச்சாடனர் வேடம் பூண்டு வந்த சிவபெருமானின்
உற்சவத் திருமேனி உள்ளது. பிரகாரத்திலும் பிச்சாடனர் உருவச்சிலை இருக்கிறது.
இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் இரு
திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார்.
உற்சவரும் இதே அமைப்பில் உள்ளார். திருப்பகழில் ஒரு பாடல் உள்ளது.
இத்தலத்து இறைவன் சுயம்பு
லிங்கமாக தாருகாவனேசுவரர், பராய்த்துறை நாதர்
என்ற திருநாமங்களுடன் கிழக்கு நோக்கியும், இறைவி பசும்பொன் மயிலாம்பிகை, ஏமவர்ணாம்பிகை என்ற திருநாமங்களுடன்
தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.
ஆலயத்தின் முன் உள்ள மண்டப வாயிலில் மேலே
சுதையால் ஆன ரிஷபாரூடர் சிற்பம் உள்ளது. வாயில் வழியாக உள்ளே நுழைத்தவுடன்
இடதுபுறம் குளம் உள்ளது. வலதுபுறம் உள்ள கல் மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்)
விவேகானந்தர் தொடக்கபள்ளி நடைபெறுகின்றது. நேரே இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன்
உள்ளது. முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். இராஜகோபுர வழி உள் நுழைந்தால் நேரே
செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதுவும் பலிபீடமும் நந்தியும் சேர்த்து ஒரு
மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும்
உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர்.
அடுத்துள்ள கோபுரம் ஐந்து
நிலைகளையுடையது. உள்ளே நுழைந்ததும் நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி
தெரிகின்றது. உள்சுற்றில் வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், 63 மூவரும் உள்ளனர். அடுத்து சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
நவக்கிரகங்களுள் சனீஸ்வரனுக்கு மட்டும் காக்கை வாகனமுள்ளது. பைரவரும் உள்ளார்.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவர் இடத்தில்
அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசுவரர்
சந்நிதி உள்ளது. சிங்கங்கள் தாங்கி நிற்கின்ற அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் -
பரந்த கல்லால மர வேலைப்பாடுடன் உள்ளன.
நடராசர் சந்நிதியும் இங்குள்ளது.
துவாரபாலகர்களைத் தரிசித்து உட்சென்று மூவலரைத் தரிசிக்கலாம். மூலவர் அழகான
திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் மண்டபத்தில் உள்ள முன்தூணில்
ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில்
காளியின் சிற்பமும் உள்ளன.
ஒவ்வோர் ஆண்டும்
ஐப்பசி மாதம் முதல்நாள் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித நீராடுவதைமுதல்
முழுக்கு எனப் பெரியோர் போற்றுவர். அன்றைய தினம் இறைவன் ரிஷப வாகனத்தில்
அம்பிகையோடு எழுந்தருளி காவிரிக் கரையில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுவார்.
(ஐப்பசி கடைசி நாளன்று காவிரியில் மயிலாடுதுறை திருத்தலத்தில் ஸ்நானம் செய்வதைக்
"கடை முழுக்கு" என்று போற்றுகின்றனர்). பராய்த்துறைக்கு வந்து
தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "மல்லலொடு வாழ் உம்பர்
ஆய் துறை வான் மன்னவரும், மன்னவரும் சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே"
என்று போற்றி உள்ளார்.
காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 340
பல்நெடும்
குன்றும், படர்நெடும் கானும், பலபதியும்,
அந்நிலைத்
தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்துஇறைஞ்சி,
மன்னு
புகலியில் வைதிக வாய்மை மறையவனார்
பொன்னியல்
வேணிப் புனிதர் பராய்த்துறையுள் புகுந்தார்.
பொழிப்புரை : பல பெரிய
குன்றுகளிலும் பரந்த பெரிய காடுகளிலும் பல பதிகளிலும் அங்கங்கும் இறைவர் நிலையாய்
வீற்றிருக்கும் பதிகளிலுள்ள கோயில்களை எல்லாம் விருப்புடன் சென்று வணங்கி, நிலைபெற்ற சீகாழியில் தோன்றிய
மறையுண்மையை நிலை நாட்டும் மறையவரான பிள்ளையார், பொன் போன்ற சடையையுடைய தூயவரான
சிவபெருமான் வீற்றிருக்கும் `திருப்பராய்த்துறை\' என்ற பதியுள் புகுந்தார்.
`பன்னெடுங் குன்றும் படர் நெடுங்கானும்
(பெருங்கானும் என்றும் பாடம்) பலபதியும்' எனக்
குறிப்பன திருவாட்போக்கிக்கும் திருப்பராய்த்துறைக்கும் இடைப்பட்ட இடங்களாகும்.
அவை, இவை எனத் தெரிந்தில.
பெ.
பு. பாடல் எண் : 341
நீடும்
பராய்த்துறை நெற்றித் தனிக்கண்ணர்
கோயில்நண்ணி,
கூடும்
கருத்தொடு கும்பிட்டு, கோதுஇல் தமிழ்ச்
சொல்மாலை
பாடும்
கவுணியர், கண் பனி மாரி பரந்து இழிய,
சூடும்
கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது
நின்றார்.
பொழிப்புரை : சிறப்புமிக்க
திருப்பராய்த்துறை என்ற பதியில் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய இறைவரின்
திருக்கோயிலை அடைந்து, ஒருமையுணர்வுடன்
வணங்கி, குற்றம் இல்லாத தமிழ்
மாலையைப் பாடுகின்ற கவுணியக் குலத்தலைவரான பிள்ளையார், கண்களினின்றும் நீர் மழை பெருக, கைகளைத் தலை மீது கூப்பித் தொழுது
நின்றார்.
திருப்பராய்த்துறையில்
அருளியது, `நீறு சேர்வதொர்' (தி.1 ப.135) எனத் தொடங்கும் மேகராகக்குறிஞ்சிப்
பண்ணிலமைந்த பதிகமாகும்.
1.135 திருப்பராய்த்துறை பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நீறு
சேர்வதொர் மேனியர் நேரிழை
கூறு
சேர்வதொர் கோலமாய்ப்
பாறு
சேர்தலைக் கையர் பராய்த்துறை
ஆறுசேர்சடை
அண்ணலே.
பொழிப்புரை :திருப்பராய்த்துறையில், கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும்
இறைவர், திருநீறு அணிந்த
திருமேனியை உடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட
கோலத்தினர். பருந்துகள் தொடரத்தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது
தலையோட்டைக் கையில் கொண்டவர்.
பாடல்
எண் : 2
கந்த
மாமலர்க் கொன்றை கமழ்சடை
வந்த
பூம்புனல் வைத்தவர்
பைந்தண்
மாதவி சூழ்ந்த பராய்த்துறை
அந்தம்
இல்ல அடிகளே.
பொழிப்புரை :பசுமையான குளிர்ந்த
குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய
இறைவர், மணங்கமழும் சிறந்த
மலர்களும், கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல்
பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.
பாடல்
எண் : 3
வேதர்
வேதம்எல்லாம் முறையால் விரித்து
ஓதநின்ற
ஒருவனார்
பாதி
பெண்உரு ஆவர் பராய்த்துறை
ஆதி
ஆய அடிகளே.
பொழிப்புரை :திருப்பராய்த்துறையில்
எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய் எழுந்தருளியுள்ள இறைவர், வேதங்களை அருளிச்செய்தவர். எல்லா
வேதங்களையும் முறையாக விரித்துப் பொருள் விளக்கம் அருளிய ஒப்பற்றவர். தம்
திருமேனியில் பாதிப்பெண்ணுருவாக விளங்குபவர்.
பாடல்
எண் : 4
தோலும்
தம்அரை ஆடைசுடர்விடு
நூலும்
தாம்அணி மார்பினர்
பாலும்
நெய் பயின்று ஆடுபராய்த்துறை
ஆலநீழல்
அடிகளே.
பொழிப்புரை :திருப்பராய்த்துறையில்
ஆலநீழலில் எழுந்தருளிப் பால், நெய் முதலியவற்றை
விரும்பி ஆடும் இறைவர், புலித்தோலைத் தம்
இடையிலே ஆடையாக உடுத்தவர். ஒளி பொருந்திய பூணூல் அணிந்த மார்பினை உடையவர்.
பாடல்
எண் : 5
விரவி
நீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவின்
நின்றுஎரி ஆடுவர்
பரவினார்
அவர் வேதம் பராய்த்துறை
அரவம்
ஆர்த்த அடிகளே.
பொழிப்புரை :திருப்பராய்த்துறையில்
பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர், திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப்
பூசியவர். நள்ளிரவில் சுடுகாட்டுள் நின்று எரி ஆடுபவர். வேதங்களால் பரவப்
பெற்றவர்.
பாடல்
எண் : 6
மறையும்
ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள்
கண்டம் உடையவர்
பறையும்
சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய
நின்ற அடிகளே.
பொழிப்புரை :பறை, சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள்
நிகழும் திருப்பராய்த்துறையில் எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர், வேதங்களை ஓதுபவர். மான்கன்றைக்
கையின்கண் உடையவர், விடக்கறை கொண்ட
கண்டத்தையுடையவர்.
பாடல்
எண் : 7
விடையும்
ஏறுவர் வெண்பொடிப் பூசுவர்
சடையில்
கங்கை தரித்தவர்
படைகொள்
வெண்மழு வாளர் பராய்த்துறை
அடைய
நின்ற அடிகளே.
பொழிப்புரை :திருப்பராய்த்துறையிற்
பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை ஊர்ந்து
வருபவர். வெண்மையான திருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர்.
வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர்.
பாடல்
எண் : 8
தருக்கின்
மிக்க தசக்கிரிவன் தனை
நெருக்கினார்
விரல் ஒன்றினால்
பருக்கினார்
அவர் போலும் பராய்த்துறை
அருக்கன்
தன்னை அடிகளே.
பொழிப்புரை :திருப்பராய்த்துறையில்
எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத்
தலைகளை உடைய இராவணனைத் தம் கால் விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில்
கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.
பாடல்
எண் : 9
நாற்ற
மாமல ரானொடு மாலும்ஆய்த்
தோற்றமும்
அறி யாதவர்
பாற்றினார்
வினை ஆன பராய்த்துறை
ஆற்றல்
மிக்க அடிகளே.
பொழிப்புரை :திருப்பராய்த்துறையில்
ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள், மணம்
பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன், திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப்பெறாத
தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர்.
பாடல்
எண் : 10
திருஇலிச்
சில தேர்அமண் அதர்கள்
உருவிலா
உரை கொள்ளேலும்
பருவிலால்
எயில் எய்து பராய்த்துறை
மருவினான்
தனை வாழ்த்துமே.
பொழிப்புரை :புண்ணியமில்லாத
சிலராகிய புத்தர்களும், சமணர்களாகிய, கீழ்மக்களும், கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர்.
பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத்
திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக.
பாடல்
எண் : 11
செல்வம்
மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்
மேல்சிதை யாதன
செல்வன்
ஞானசம் பந்தன செந்தமிழ்
செல்வம்
ஆம் இவை செப்பவே.
பொழிப்புரை :பொருட் செல்வங்களால்
நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர்கள் வாழும் திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய, வீடுபேறாகிய செல்வத்தையுடைய, இறைவன்மீது, அருட்செல்வனாக விளங்கும் ஞானசம்பந்தன்
அருளிய, அழிவற்ற
இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால்,
ஓதின
அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 302
சிலந்திக்கு
அருளும் கழல்வணங்கி,
செஞ்சொல் மாலை பலபாடி,
இலங்கு
சடையார் எறும்பியூர்
மலையும் இறைஞ்சிப்
பாடியபின்,
மலர்ந்த
சோதி திருச்சிராப்
பள்ளி மலையும், கற்குடியும்,
நலங்கொள்
செல்வத் திருப்பராய்த்
துறையும் தொழுவான்
நண்ணினார்.
பொழிப்புரை : நாவரசர்
திருவானைக்காவில் சிலந்திக்கு அருளிய இறைவரின் திருவடிகளை வணங்கி, பலசெஞ்சொல் மாலைகளைப் பாடி, விளங்கும் சடையையுடைய சிவபெருமான்
எழுந்தருளியிருக்கும் திருவெறும்பியூர் மலையையும் வணங்கித் திருப்பதிகம் பாடினார்.
பின்பு விரிந்த பேரொளியையுடைய திருச்சிராப்பள்ளி மலையையும், திருக்கற்குடி மலையையும், நன்மையுடைய திருப்பராய்த்துறையையும்
வணங்கும் பொருட்டுச் செல்லலானார்.
குறிப்புரை :
1. திருவானைக்காவில் அருளிய
பதிகங்கள்:
(அ) `கோனைக்காவி` (தி.5 ப.31) - திருக்குறுந்தொகை.
(ஆ) `எத்தாயர்` (தி.6 ப.62) - திருத்தாண்டகம்.
(இ) `முன்னானை` (தி.6 ப.63) – திருத்தாண்டகம்.
2. திருவெறும்பியூர்:
(அ) `விரும்பியூறு` (தி.5 ப.74) - திருக்குறுந்தொகை.
(ஆ) `பன்னிய செந்தமிழ்` (தி.6 ப.91) - திருத் தாண்டகம்.
3. திருச்சிராப்பள்ளி: `மட்டுவார்` (தி.5 ப.85) - திருக்குறுந்தொகை.
4. திருக்கற்குடி: `மூத்தவனை` (தி.6 ப.60) - திருத்தாண்டகம்.
5. திருப்பராய்த்துறை: `கரப்பர்` (தி.5 ப.30) - திருக்குறுந்தொகை.
5. 030 திருப்பராய்த்துறை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கரப்பர்
காலம் அடைந்தவர் தம்வினை,
சுருக்கு
மாறுவல் லார்கங்கை செஞ்சடை,
பரப்பு
நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப
ராய்த்துறை மேவிய செல்வரே.
பொழிப்புரை : நீர் பரந்துவருகின்ற
காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பராய்த்துறையில் விரும்பி எழுந்தருளியிருக்கும்
அருட் செல்வர் , தம்மடியடைந்த
அன்பர்கட்குப் பக்குவகாலம் வருந்துணையும் மறைந்துநின்று அருள்வர் : பின் அக்காலம்
வாய்த்தவழி , அவர்வினைகளைச்
சுருக்கிக் கெடுக்குமாற்றில் வல்லவர் ; செஞ்சடையிற்
கங்கையை உடையார் , ( காலத்தில்
வந்தடைந்தவர் வினைகளை மறையும்படிச் செய்பவர் ; விரிந்த கங்கையைத் தம் செஞ்சடையில்
சுருக்குமாற்றிலும் வல்லவர் என்றும் இணைக்கலாம் .)
பாடல்
எண் : 2
மூடி
னார்களி யானையின் ஈர்உரி,
பாடி
னார்மறை நான்கினோடு ஆறுஅங்கம்,
சேட
னார்தென்ப ராய்த்துறைச் செல்வரைத்
தேடிக்
கொண்டுஅடி யேன்சென்று காண்பனே.
பொழிப்புரை : தென்பராய்த்துறையுறையும்
அருட்செல்வர் , செருக்குடைய யானையின்
பச்சைத் தோலினால் போர்த்தித் தம் திருமேனியை மூடியவர் ; வேதங்கள் நான்கினோடு , அங்கங்கள் ஆறினையும் பாடியவர் ; மிக்க பெருமையை உடையவர் ; அப் பெருமானைத் தேடிக்கொண்டு சென்று
அடியேன் காண்பேன் .
பாடல்
எண் : 3
பட்ட
நெற்றியர், பால்மதிக் கீற்றினர்,
நட்டம்
ஆடுவர் நள்இருள் ஏமமும்,
சிட்ட
னார்,தென்ப ராய்த்துறைச்
செல்வனார்,
இட்ட
மாய் இருப்பாரை அறிவரே.
பொழிப்புரை : தென்பராய்த்துறை
உறையும் அருட்செல்வர் பட்டமணிந்த நெற்றியினை உடையவர் ; பாலனைய நிலவு சொரியும் மதிக்கீற்றினை
உடையவர் ; நள்ளிருளில் உலகிற்கு
இன்பம் செய்யும் பொருட்டு நடனம் ஆடுபவர் ; உயர்வுடையவர் ; தம்மிடம் விருப்பமாயிருக்கும்
அடியார்களைத் தாம் நன்கு அறியும் இயல்பினர் ஆவர் .
பாடல்
எண் : 4
முன்பு
எலாம்சில மோழைமை பேசுவர்,
என்பு
எலாம்பல பூண்டுஅங்கு உழிதர்வர்,
தென்ப
ராய்த்துறை மேவிய செல்வனார்,
அன்ப
ராய் இருப் பாரை அறிவரே.
பொழிப்புரை : தென்பராய்த்துறை
உறையும் அருட்செல்வர் , அறியாமையொடு கூடிய
சில சொற்களைப் பலர் முன்னிலையிலும் பேசுவார் . எலும்புகள் பலவற்றைப் பூண்டு
திரிவார் . தம்மீது அன்பராய் இருப்பாரை நன்கு அறியும் இயல்பினர் .
பாடல்
எண் : 5
போது
தாதொடு கொண்டு புனைந்து,உடன்
தாது
அவிழ்சடைச் சங்கரன், பாதத்துள்
வாதை
தீர்க்கஎன்று ஏத்திப் பராய்த்துறைச்
சோதி
யானைத் தொழுது எழுந்து உய்ம்மினே.
பொழிப்புரை : உலகில் உள்ளவர்களே !
தென்பராய்த்துறையில் உறைகின்ற ஒளி வடிவான பெருமானை மகரந்தத் தொடும் கூடிய
போதுகளைக்கொண்டு புனைந்து தாதவிழும் சடையுடைய அச்சங்கரன் திருவடிகளில் துயரங்களைத்
தீர்த்தருள்க என்று பரவித் தொழு தெழுந்து உய்வீர்களாக .
பாடல்
எண் : 6
நல்ல
நான்மறை ஓதிய நம்பனை,
பல்இல்
வெணதலை யில்பலி கொள்வனை,
தில்லை
யான்,தென் பராய்த்துறைச்
செல்வனை,
வல்லை
யாய்வணங் கித்தொழு வாய்மையே.
பொழிப்புரை : நெஞ்சே !
தென்பராய்த்துறையில் உறைகின்ற அருட்செல்வரும் , நல்லனவாகிய நான்கு மறைகளை ஓதிய நம்பரும்
, பல இல்லங்களிலும்
வெள்ளியதலையிற் பலிகொள்ளும் இயல்பினரும் , தில்லைத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய
பெருமானை விரைந்து வணங்கி மெய்ம்மையாகத் தொழுவாயாக !
பாடல்
எண் : 7
நெருப்பினால்
குவித்தால் ஒக்கும் நீள்சடை,
பருப்ப
தம்மத யானை உரித்தவன்,
திருப்ப
ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்பர்
ஆவி இழிபுனல் போன்றதே.
பொழிப்புரை : நெருப்பினைக்
குவித்துவைத்தாலொத்த நீண்ட சடை உடையவரும், மலையினையொத்த மதயானையினை உரித்துப்
போர்த்தவரும் ஆகிய திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவர்
திருமார்பிற் புரள்கின்ற முந்நூல்,
மலையினை
அரித்துக் கொண்டு இழிகின்ற அருவிப்புனலைப் போன்றுள்ளது .
பாடல்
எண் : 8
எட்ட
விட்ட இடுமணல் எக்கர்மேல்
பட்ட
நுண்துளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன்
சேவடி சென்றுஅடை கிற்றிரேல்,
விட்டு
நம்வினை உள்ளன வீடுமே.
பொழிப்புரை : வானை எட்டுமாறு இட்ட
மணலிடு குன்றின் மேல் நுண்ணிய நீர்த்துளிகள் பாய்கின்ற பராய்த்துறையில் உறைகின்ற
உயர்ந்த இறைவன் சேவடிகளிற் சென்று அடையும் வல்லமை உடையீராயின் , நம்வினைகளாய் உள்ளவை நம்மைவிட்டு
நீங்கிக் கெடும் .
பாடல்
எண் : 9
நெருப்பு
அராய்நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை,
மருப்பு
அராய்வளைந் தால் ஒக்கும் வாண்மதி,
திருப்ப
ராய்த்துறை மேவிய செல்வனார்,
விருப்ப
ராய் இருப் பாரை யறிவரே.
பொழிப்புரை : நெருப்பு அராவி
நிமிர்ந்ததனையொத்த நீண்ட சடையையும் , தந்தத்தை
அராவி வளைத்ததுபோன்ற பிறைமதியையும் உடையராய்த் திருப்பராய்த்துறையில்
விரும்பியெழுந்தருளி இருக்கும் அருட்செல்வர் தம்மிடம் விருப்பமாக உள்ளவர்களை நன்கு
அறியும் இயல்பினர் ஆவர் .
பாடல்
எண் : 10
தொண்டு
பாடியும், தூமலர் தூவியும்,
இண்டை
கட்டி இணைஅடி ஏத்தியும்,
பண்ட
ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு
கொண்டுஅடி யேன் உய்ந்து போவனே.
பொழிப்புரை : திருப்பராய்த்துறைத்
தலத்து எழுந்தருளியிருப்பவரும் ,
பாண்டரங்கக்
கூத்துடையவரும் ஆகிய இறைவர்க் குற்ற தொண்டுகளைப்பற்றிப் பாடியும் , அப்பெருமான் இணையடிகளில் இண்டைமாலை
சாத்தியும் , தூமலர்கள் தூவியும் , கண்டும் , உள்ளத்திற் கொண்டும் அடியேன் உய்ந்து
போவன் .
பாடல்
எண் : 11
அரக்கன்
ஆற்றல் அழித்த அழகனை,
பரக்கு
நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை
மேவிய ஈசனை, ஏத்துமின்,
பொருக்க
நும்வினை போய்அறும் காண்மினே.
பொழிப்புரை : இராவணனது ஆற்றலை
அழித்த அழகனும் , நீர் பரக்கின்ற
பொன்னி மன்னுகின்ற பராய்த்துறையில் இருக்கை பொருந்திய ஈசனுமாகிய பெருமானை
ஏத்துவீர்களாக ! நும்வினைகள் விரைந்து போய்த் தொலையும் ; காண்பீர்களாக .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment