திருக் கடம்பந்துறை




திருக் கடம்பந்துறை
(கடம்பர் கோயில், குழித்தலை - குளித்தலை)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     இத்திருத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

     குளித்தலை இரயில் நிலையம் திருச்சி - கரூர் - ஈரோடு வழித்தடத்தில் இருக்கிறது.


இறைவர்               : கடம்பவனேசுவரர், கடம்பவனநாதர்.

இறைவியார்           : பாலகுஜாம்பாள், முற்றிலாமுலையாள்.

தல மரம்                : கடம்பு.

தீர்த்தம்                : காவிரி.

தேவாரப் பாடல்கள்    : அப்பர் - முற்றி லாமுலை யாளிவ

         கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோயில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோயில் இது ஒன்று தான்.

     வடக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 5 நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைநால் ஒரு நீண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

     வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலாமுலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அடுத்த வாயிலைக் கடந்து சென்றால் இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் கடம்பவன நாதர் லிங்கத் திருவுருவுக்குப் பின்னால் சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம் இதுவாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

     உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நலக்கிரகங்கள், ஜேஷ்டாதேவி, நால்வர், 63 மூவருடைய மூல, உற்சவத் திருமேனிகள், விஸ்வநாதர், கஜலட்சுமி ஆகிய சந்நிதிகள் உள்ளன. இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன. ஒரு நடராஜ மூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை. தலவிருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் காவிரி நதி. கண்ணுவ முனிவரும், தேவர்களும் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். கண்ணுவ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். பிரம்மா, மகாவிஷ்ணு, முருகர், ச்பதகன்னியர்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

     தூம்ரலோசனன் என்ற அசுரன் தரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோத, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் அசுரம் ஒளிந்து கொள்ள, அங்கு வந்த சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன் தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாளின் கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். அசுரனை அழித்தால் தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் அன்று கருதிய சப்தகன்னியர், அசுரனை அழித்து தங்களைக் காக்கும்படி இறைவனிடர் முறையிட்டனர். சிவபெருமானும் அசுரனை அழித்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம்.

         இத்தலம் அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு முருகப்பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் ஒரு திருமுகத்துடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார்.

         குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவத்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது.

     திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள்.

     திருகடம்பந்துறை தலத்தில் உள்ள கடம்பவனநாதரை காலை தரிசனம் செய்து வழிபடுவது பலனுடையது என்று கருதப்படுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கோள் போக்கி நில்லுங்கள் தம்ப நெறி போல் என, பூவை சொல்லும் கடம்பந்துறை நிறைவே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும்,
மாலை 4-30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 303
மற்றுஅப் பதிகள் முதலான
         மருங்குஉள் ளனவும் கைதொழுது,
பொற்புஉற்று அமைந்த திருப்பணிகள்
         செய்து பதிகம் கொடுபோற்றி,
உற்ற அருளால் காவிரியை
         ஏறி, ஒன்னார் புரம்எரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீ
         லியினைச் சென்று சேர்கின்றார்.

         பொழிப்புரை : திருப்பராய்த்துறையை வணங்கியவராய், மேலும் அத்திருப்பதியின் அருகிலுள்ள பிறபதிகளையும் வணங்கி, அழகமைந்த கைத்தொண்டுகளையும் ஆற்றி, திருப்பதிகம் பாடிப் போற்றித், திருவருளால் காவிரியாற்றைக் கடந்து, முப்புரங்களும் அழியுமாறு எரித்த இறைவர் வீற்றிருக்கும் திருப்பைஞ்ஞீலியைச் சென்று சேர்கின்ற நாவரசர்.

         அருகிலுள்ள பிறபதிகள்:

1.    திருக்கடம்பந்துறை: `முற்றிலா` (தி.5 ப.18) –                                                                                        திருக்குறுந்தொகை.

2.    திருவாட்போக்கி: `காலபாசம்` (தி.5 ப.86) - திருக்குறுந்தொகை.


5. 018   திருக்கடம்பந்துறை      திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
முற்று இலாமுலையாள் இவள் ஆகிலும்,
அற்றம் தீர்க்கும் அறிவுஇலள் ஆகிலும்,
கற்றைச் செஞ்சடையான்,கடம் பந்துறைப்
பெற்றம் ஊர்திஎன் றாள்எங்கள் பேதையே.

         பொழிப்புரை : எங்கள் பேதையாகிய இவள் முற்றாத இளமுலை உடையாள் ஆயினும், அற்றந் தீர்க்கும் அறிவில்லாதவள் ஆயினும், கற்றைச் செஞ்சடையானாகிய கடம்பந்துறைப் பெருமான் இவர்ந்து வரும் ஊர்தி இடபம் என்று கூறுகின்றாள். ( செவிலி கூற்று )


பாடல் எண் : 2
தனகு இருந்ததொர் தன்மையர் ஆகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ,
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும்பு ஆள்வரே.

         பொழிப்புரை : நீங்கள் உள்ளக்களிப்பு மிக்கு உடையீராயினும். நுமது இழிவு நீங்குதற்கு முதல்வனைத் தொழுமின்கள்; கனகப் பொன்சடையான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நினையும் வல்லமை பெற்றவர் விசும்பு ஆள்வர் ஆதலால்.


பாடல் எண் : 3
ஆரி யம்தமி ழோடுஇசை ஆனவன்,
கூரி யகுணத் தார்குறி நின்றவன்,
காரி கைஉடை யான்கடம் பந்துறைச்
சீர்இயல் பத்தர் சென்றுஅடை மின்களே.

         பொழிப்புரை : பெருமை மிக்க நல்லியல்புகள் பொருந்திய அன்பர்களே ! ஆரியமும் , தமிழும் , இசையும் ஆனவனும் மிக்க குணத்தார் குறியாக நின்றவனும் ஒருபாற் பார்வதிதேவியாரை உடையவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறை சென்றடைவீர்களாக .


பாடல் எண் : 4
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை,
வண்ண நன்மல ரான்பல தேவரும்
கண்ண னும்அறி யான்,கடம் பந்துறை
நண்ண, நம்வினை ஆயின நாசமே.

         பொழிப்புரை : பண்ணின் இன்மொழி கேட்கும் விருப்புடைய பரமனும் , நான்முகனும் , தேவர்களும் , திருமாலும் , அறியப்படாதவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நண்ணினால் , நம்வினைகளாயவை நாசமாம் .


பாடல் எண் : 5
மறைகொண் டம்மனத் தானை, மனத்துளே
நிறைகொண்டு அந்நெஞ்சின் உள்ளுற வைம்மினோ,
கறைகண் டன்உறை யுங்கடம் பந்துறை
சிறைகொண்ட  வினை தீரத் தொழுமினே.

         பொழிப்புரை : உபதேசப் பொருளைக் கொண்ட மனத்தே விளங்கித் தோன்றும் முதல்வனை ஒரு நெறிப்பட்ட நெஞ்சின் உள்ளூற வைப்பீர்களாக ; திருநீலகண்டன் உறையும் கடம்பந்துறையை நுமது அறிவைக் கட்டுப்படுத்தும் இருவினை தீரத் தொழுவீர்களாக .


பாடல் எண் : 6
நங்கை பாகம்வைத் தந்நறும் சோதியைப்
பங்கம் இன்றிப் பணிந்துஎழு மின்களோ,
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்கம் ஓதி, அரன்உறை கின்றதே.

         பொழிப்புரை : கங்கையைச் செஞ்சடையில் வைத்த பெருமானும் ஆறங்கங்களை ஓதியோரும் ஆகிய இறைவர் உறைகின்றது கடம்பந் துறையாதலால் நங்கையை ஒருபாகம் வைத்த அந்த ஒளியுருவை அவ்விடத்துக் கேடின்றிப் பணிந்தெழுவீர்களாக .


பாடல் எண் : 7
அரிய நான்மறை ஆறுஅங்க மாய்ஐந்து
புரியன், தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்,
கரிய கண்டத்தி னான்,கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமை உடைய நெஞ்சமே ! அரிய நான் மறைகளாய் உள்ளவனும் , அன்னமயகோசம் முதலிய ஐங்கோசங்களாகப் பேசப்பட்டவனும் , தேவர்கள் வேண்ட நஞ்சுண்டவனும் , அதனாற்கறுத்த கண்டத்தினானுமாகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி நினைப்பாயாக .


பாடல் எண் : 8
பூமென் கோதை உமைஒரு பாகனை,
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தால்,
காமன் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாமம் ஏத்தநம் தீவினை நாசமே.

         பொழிப்புரை : பூவணிந்த மென்கோதை உடையவளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனை வேள்விகள் செய்தும் , உள்ளத்தால் உணர்வீர்களாக ! மன்மதனைச் சினந்த பெருமான் உறையும் கடம்பந்துறையில் அத்திருநாமம் ஏத்த நம் தீவினைகள் நாசமாம் .


பாடல் எண் : 9
பார் அணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்அறி யாததோர்
கார ணன்,கடம் பந்துறை மேவிய
ஆர ணங்குஒரு பால்இடை மைந்தனே.

         பொழிப்புரை : திருமாலும் பிரமனும் உலகில் விரும்பி வணங்கிப் பணிசெய்ய அறியாது தேடி இளைத்தற்குக் காரணனாக இருந்தவன் கடம்பந்துறை மேவியவனும் , ஆரணங்கை ஒருபால் உடையவனுமாகிய புலன்களைந்தும் வென்ற பெரு வீரனாகிய இறைவனே .


பாடல் எண் : 10
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெட,
பால்ஆன் ஐந்துஉடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுஉகந் தான்கடம் பந்துறை
மேலால் நாம்செய்த வல்வினை வீடுமே.

         பொழிப்புரை : பாலோடு கூடிய ஆனைந்தும் ஆடும் பரமனும் , அரக்கனைக் காலால் ஊன்றி உகந்த பெருமானும் ஆகிய இறைவனைக் கடம்பந்துறையிற் சென்று வழிபட்டால் , நாம் செய்த மேலைவல் வினைகள் கெடும் . ஆதலால் , துன்பங்கெடும் படியாக நூல் அறிவால் நன்றாக நினைத்து வழிபடுவீர்களாக . ( நூல் அறிவு - சிவாகம உணர்வு .)

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

11. ஏறும்பு எண்ணாயிரம்

  "குறும்பெண்ணா துயர்ந்தநல்லோர் ஆயிரஞ்சொன்      னாலும்அதைக் குறிக்கொ ளாமல் வெறும்பெண்ணா சையிற்சுழல்வேன் மெய்ஞ்ஞானம்      பொருந்தியுனை வ...