அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வார்குழலை
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
பொதுமாதர்
நட்பு அற அருள்
தானன
தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன ...... தந்ததான
வார்குழ
லைச்சொரு கிக்கரு விற்குழை
காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு
வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள ......
துண்டக்ரீவ
வார்கமு
கிற்புய நற்கழை பொற்குவ
டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை
மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர
...... ரம்பைமாதர்
காருறும்
வித்திடை யிற்கத லித்தொடை
சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு
கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை ...... ஒண்குலாவக்
கார்குயி
லைக்குர லைக்கொடு நற்றெரு
மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்
காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் ......
சந்தமாமோ
சூரர்ப
தைக்கர வுட்கிநெ ளித்துய
ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு
சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல ......
சங்கமாகச்
சூழ்கிரி
யைக்கைத டித்தும லைத்திகை
யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி
சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் ......செங்கைவேலா
ஏரணி
நற்குழ லைக்கக னச்சசி
மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத
வேடமு தச்சொரு பத்தகு றத்திம ......
ணங்கொள்வோனே
ஏரக
வெற்பெனு மற்புத மிக்கசு
வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
வார்
குழலைச் சொருகிக் கருவில் குழை
காதொடு இணைத்து அசைய, கதிர் பல்கொடு
வாய்இதழ் பொற்க, மலர்க் குமிழ் ஒத்து
உள ...துண்ட க்ரீவ
வார்
கமுகில் புய நல்கழை, பொன்குவடு
ஆடு இளநிர், சுரர் பொன்குடம் ஒத்து இணை
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர
...... ரம்பைமாதர்
கார்உறும்
வித்து இடையில் கதலித் தொடை
சேர் அல்குல் நல் பிரசத் தடம் உட்கொடு
கால்மறைய, துவள, செறி பொற்கலை ...... ஒண்குலாவக்
கார்
குயிலைக் குரலைக்கொடு நல்தெரு
மீதில் நெளித்து, நகைத்து நடிப்பவர்,
காமன் உகப்ப அமளிச் சுழல் குத்திரர் ......
சந்தம்ஆமோ!
சூரர்
பதைக்க, அரவு உட்கி நெளித்து,உயர்
ஆழி இரைப்ப, நிணக் குடலைக் கழு
சூழ, நரிக் கெருடக் கொடி பற்பல ......
சங்கமாகச்
சூழ்,
கிரியைக் கை தடித்து மலைத்திகை
யானை உழற்றி நடுக்கி மதப்பொறி
சோர நகைத்து, அயிலைக்கொடு விட்டு அருள் ......செங்கைவேலா!
ஏர்அணி
நல் குழலைக் ககனச் சசி
மோகினியைப் புணர் சித்த! ஒரு அற்புத
வேட அமுதச் சொருபத்த! குறத்தி ......மணம் கொள்வோனே
ஏரக
வெற்பு எனும் அற்புத மிக்க,
சுவாமி மலைப்பதி நிற்கும் இலட்சண
ராஜத லட்சண லசட்சுமி பெற்று அருள் ......
தம்பிரானே.
பதவுரை
சூரர் பதைக்க ---- சூராதி அவுணர்கள்
பதைக்கவும்,
அரவு உட்கி நெளித்து --- ஆதிசேடன் அஞ்சி
நெளியவும்,
உயர் ஆழி நிரைப்ப --- பெரிய கடல் ஒலிக்கவும்,
நிண குடலை கழு சூழ --- மாமிசக் குடலைக்
கழுகுகள் சூழவும்,
நரி கெருட கொடி பல் பல சங்கம் ஆக --- நரிகள்
கருடன் காக்கை இவைகள் பல பல கூட்டமாய் நெருங்க,
சூழ் கிரியை கை தடித்து --- வஞ்சனை சூழ்ந்த
கிரவுஞ்ச மலையின் வலிமையை அழித்து,
மலை --- எட்டுத் திசைகளிலுள்ள மலைகளையும்,
திகை யானை --- திசைகளில் காவல் புரியும் யானைகளையும்
உழற்றி நடுக்கி --- உழலும்படி நடுங்க வைத்து,
மத பொறி சோர நகைத்து --- அவைகளின் அகங்காரம்
நிறைந்த அறிவு சோரும்படி நகைத்து,
அயிலைக் கொடு விட்டு அருள் --- வேலைக்கொண்டு
செலுத்தியருளிய
செம்கை வேலா --- சிவந்த கரத்தையுடைய வேலவரே!
ஏர் அணி நல் குழலை --- அழகுள்ள நல்ல
கூந்தலையுடையவளும்,
ககன சசி மோகினியை புணர் சித்த ---
விண்ணுலகத்து இந்திராணி வளர்த்த பேரழகியுமாகிய தேவயானையைக் கலந்த சித்தமூர்த்தியே!
ஒரு அற்புத --- ஒப்பற்ற அற்புதமான,
வேட அமுத சொருபத்த --- வேடர் குலத்து உதித்த அமுதவடிவான,
குறத்தி மணம் கொள்வோனே --- வள்ளியம்மையை மணம்
புரிந்தவரே!
ஏரக வெற்பு எனும் --- திருவேரகமலை என்று
கூறுகின்ற,
அற்புதம் மிக்க சுவாமிமலை பதி நிற்கும் ---
அதிசயம் மிகுந்த, சுவாமிலை என்ற
திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள,
இலட்சண ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே
--- அழகிய, இராஜத குணங்கள்
பொருந்திய உமையம்மை பெற்றருளிய தலைவரே!
வார் குழலை சொருகி --- நீண்ட கூந்தலைச்
சொருகி,
கரு வில் அசைய --- பெரிய ஒளி பொருந்திய, குழை காதோடு இணைத்து குழையணிந்துள்ள
காதுடன் (அக்கூந்தலைப்) பொருந்தி அசையும்படி விட்டும்,
கதிர் பல்கொடு --- ஒளிவிடும் பற்கள் கொண்டும்,
வாய் இதழ் பொற்க --- (பவழம் போன்ற) வாய் இதழ், அழகுசெய்ய,
மலர் குமிழ் ஒத்துள துண்ட --- குமிழ மலர் போன்றுள்ள
நாசியைக் கொண்டும்,
க்ரீவ வார் கமுகில் --- கழுத்தாகிய நீண்ட
கமுகு கொண்டும்,
புய நல் கழை --- புயங்களாகிய மூங்கிலைக் கொண்டும்,
பொன் வடு --- பொன்மலை போன்றும்,
ஆடு இளநீர் --- அசைகின்ற இளநீர் போன்றும்,
சுரர் பொன் குடம் ஒத்து இணை --- தேவர் அமுதம்
நிறைந்த அழகிய குடம் போன்றும், இணைந்துள்ள இரு
கொங்கைகள் கொண்டும்,
மார்பு அழகில் பொறி --- மார்பில் அழகிய தேமல்,
முத்து ஒளிர் --- முத்துமாலைகள் கொண்டு
விளங்கும்,
சித்திர ரம்பை மாதர் --- அழகிய ரம்பை போன்ற
விலைமாதர்கள்,
கார் உறும் வித்து இடையில் --- மேகத்தில்
காணப்படும் மின்னல்போன்ற இடையும்,
கதலி தொடை --- வாழைப் போன்ற தொடையும்,
சேர் அல்குல் பிரசத்தடம் --- தொடையுடன்
சேர்ந்துள்ள அல்குலாகியத் தேன் பொதிந்துள்ள இடமும்,
உள் கொடு கால் மறைய --- உட்கொண்டு கால் வரை
மறையும்படி
துவள செறி பொன்மலை ஒண்குலாவ --- தொங்கி
நெருங்கும் அழகியப் புடைவை நன்கு விளங்க,
கார் குயிலை குரலைகொடு --- கரிய குயிலின் குரல்
போன்ற குரலைக்கொண்டு பேசி,
நல் தெரு மீதில் நெளித்து --- அழகியத் தெருவில் உடலை நெளித்து நின்று,
நகைத்து நடிப்பவர் --- புன்னகைப் புரிந்து
நடனம் புரிபவர்கள்,
காமன் உகப்ப --- மன்மதன் மகிழுமாறு
அமளி சுழல் குத்திரர் --- படுக்கையில்
புரளும் வஞ்சகர்கள்,
சந்தம் ஆமோ --- நட்பு ஆகுமோ? (ஆகாது).
பொழிப்புரை
சூராதி அவுணர்கள் பதைக்கவும், ஆதிசேடன் அஞ்சி நெளியவும், பெரிய சமுத்திரம் ஒலிக்கவும், மாமிசக் குடலைக் கழுகுகள் சூழவும், நரி, கருடன், காக்கை முதலியன பலப் பல கூட்டமாய்
நெருங்கவும், வஞ்சனை மேற்கொண்ட
கிரவுஞ்ச மலையின் வலிமையை அழித்து,
எண்திசையிலுள்ள
மலைகளையும், யானைகளையும் நடுங்க
வைத்து, அவைகளின் அகங்காரம்
மிக்க அறிவு குலையும்படி நகைத்து,
வேலை
விடுத்தருளியவரே!
அழகிய சிறந்த கூந்தலையுடையவரும், விண்ணுலகிலுள்ள இந்திராணி வளர்த்த
பேரழகியுமாகிய தேவயானையைக் கலந்த சித்த மூர்த்தியே!
ஒப்பற்ற அற்புதமான அமுத வடிவாய்
விளங்கும் வள்ளிப் பிராட்டியை மணந்தவரே!
திருவேரக மலை என்னும் அற்புதம் மிகுந்த
சுவாமிமலையின் கண் நின்றருளும் அழகரே!
ராஜத லட்சணம் பொருந்திய உமாதேவியார்
பெற்ற தலைவரே!
நீண்ட கூந்தலைச் செருகி, அக்கூந்தலைப் பெரிய ஒளியுடைய குழை
தரித்துள்ள காதுடன் அசையுமாறு விட்டும், ஒளி
விடும் பற்கள், பவழம் போன்ற இதழ்
அழகு செய்ய, குமிழ மலர் போன்ற
மூக்கு, நீண்ட கமுகு போன்ற
கழுத்து, நல்ல மூங்கில் போன்ற
தோள், பொன்மலை இளநீர்
தேவரமுதம் கொண்ட குடம் போல் உள்ள தனம், தேமல் உள்ள மார்பு, முத்துமாலை இவைகளுடன் விளங்கும் ரம்பை போன்ற
விலைமகளிர், மேகத்தில் தோன்றும்
மின்னல் போன்ற இடையும், வாழைப் போன்ற
தொடையும், அல்குலாகியத் தேன்
பொதிந்த இடமும் உள்ளிருக்க கால்வரை மறையுமாறு பொங்கி நெருங்கும் அழகியப் புடவை
நன்கு விளங்க, கரிய குயில்போல் பேசி, தெருவில் உடம்பை நெளித்து நின்று
நகைத்து நடிக்கும் அம் மாதர், மன்மதனும் மகிழுமாறு
படுக்கையில் புரளும் வஞ்சகர்கள்;
அவர்களின்
நட்பு ஆகுமோ? (ஆகாது.)
விரிவுரை
இத்திருப்புகழில்
முதல் நான்கு அடிகளிலும் பொது மாதர்களின் அவயவங்களைப் பற்றிக் கூறியுள்ளார். ஐந்து
ஆறாவது அடிகளில் சூரபன்மனைப் போர்க்களத்தில் வென்றதைக் கூறியுள்ளார்.
காருறும்
வித்து
---
கார், உறும், வித்து என்று பதப்பிரிவு செய்க.
கார்-மேகம், உறும்- போன்ற, வித்து-மின்னல்.
சூரர்பதைக்
கரவுட்கி
---
சூரர்
பதைக்க, அரவு, உட்கி என்று பதப்பிரிவு செய்க.
சூரர்
பதைக்க-சூராதி யவுணர்கள் பதைக்க,
அரவு-ஆதிசேடன், உட்கி- அஞ்சி நெளிய.
ஏரணி
நற்குழலை
---
அழகு
நிறைந்த நல்ல அளகபாரத்தை உடையவள். பெண்களுக்குக் கூந்தலின் அழகு நிறைந்தது.
சசி
மோகினி
---
சசி-இந்திராணி, மோகினி-இந்திராணி வளர்த்த தேவயானை.
அமுதச்
சொருபத்து
---
வள்ளிப்பிராட்டி
அமுத வடிவானவர்.
ஏரக
வெற்பெனும் அற்புதமிக்க சுவாமிலை ---
திருவேரகம்
என்ற தலமே சுவாமிமலை என்று அறிக.
கருத்துரை
வேலாயுதரே!
சுவாமிமலை அண்ணலே! பொது மாதரின் நட்பு அற அருளுவீர்.
No comments:
Post a Comment