சுவாமி மலை - 0235. வார்குழல் விரித்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வார்குழல் விரித்து (சுவாமிமலை)


சுவாமிநாதா! 
பொதுமாதர் உறவு அற அருள்


தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
     தானன தனத்தத் தாத்த ...... தனதான


வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து
     வாவென நகைத்துத் தோட்டு ...... குழையாட

வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி
     வாசனை முலைக்கச் சாட்டி ...... யழகாகச்

சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி
     தீதெய நடித்துப் பாட்டு ...... குயில்போலச்

சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி
     சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ...... ருறவாமோ

சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி
     சூர்கிரி கொளுத்திக் கூற்று ...... ரிடும்வேலா

தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த
     தோலுடை யெனப்பர்க் கேற்றி ...... திரிவோனே

ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று
     மேரெழி னிறத்துக் கூர்த்த ...... மகவோனே

ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற
     ஏரக பொருப்பிற் பூத்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வார்குழல் விரித்துத் தூக்கி, வேல்விழி சுழற்றிப் பார்த்து,
     வா என நகைத்து, தோட்டு ...... குழை ஆட,

வாசகம் உரைத்து, சூத்ர பாவை என் உறுப்பைக் காட்டி,
     வாசனை முலைக் கச்சு ஆட்டி, ...... அழகாகச்

சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து, நூல்இடை நெளித்துக் காட்டி,
     தீதெய நடித்து, பாட்டு ...... குயில்போல,

சேர்உற அழைத்துப் பார்த்து, சார்வுஉற மருத்த் இட்டு ஆட்டி,
     சீர்பொருள் பறிப் பொய்க் கூத்தர் ...... உறவு ஆமோ?

சூரர்கள் பதைக்கத் தேர்க்கள் ஆனைகள் அழித்துத் தாக்கி,
     சூர் கிரி கொளுத்தி, கூற்று ...... உர்இடும்வேலா!

தூமொழி நகைத்து, கூற்றை மாளிட உதைத்து, கோத்த
     தோல்உடை என் அப்பர்க்கு ஏற்றி ...... திரிவோனே!

ஏர்அணி சடைச்சி, பால் சொல் ஆரணி சிறக்கப் போற்றும்,
     ஏர் எழில் நிறத்துக் கூர்த்த ...... மகவோனே!

ஏடு அணி குழைச்சி, தூர்த்த ஆடகி, குறத்திக்கு ஏற்ற
     ஏரக பொருப்பில் பூத்த ...... பெருமாளே.

பதவுரை

      சூரர்கள் பதைக்க --- சூராதியசுரர்கள் பதைக்கவும்,

     தேர்கள் ஆனைகள் அழித்து தாக்கி --- தேர் யானை முதலிய சேனைகளை அழித்துப் போர் புரிந்தும்,

     சூர் கிரி கொளுத்தி --- துன்பத்தைச் செய்த கிரவுஞ்ச மலையை எரிசெய்தும்,

     கூற்று ஊர் இடும் வேலா ---  பகைவர்களை இயமனுடைய ஊருக்கு அனுப்பிய வேலாயுதரே!

      தூமொழி நகைத்து --- பரிசுத்தமான சொல்லுடன் புன்னகை புரிந்து,

     கூற்றை மாளிட உதைத்து --- இயமனை மாளும்படி உதைத்து,

     கோத்த தோல் உடை என் அப்பர்க்கு --- உரித்த தோலை உடையாகவுடைய என் தந்தையாம் சிவபெருமானுக்கு

     ஏற்றி திரிவோனே --- உபதேசித்து உலாவுகின்றவரே!

      ஏர் அணி சடைச்சி --- அழகிய சடையை உடையவள்,

     பால் சொல் ஆரணி --- பால் போன்ற இனிய சொற்களையுடைய வேதநாயகி

     சிறக்க போற்றும் --- சிறக்குமாறு வளர்த்த,

     ஏர் எழில் நிறுத்துக் கூர்த்த மகவோனே --- மிக்க அழகிய நிறம் விளங்குகின்ற குழந்தையே!

      ஏடு அணி குழைச்சி --- பனை ஓலையைக் குழையாக உடையவளும்,

     தூர்த்த ஆடகி --- மறைப்பட்ட பொன் போன்றவளும் ஆகிய

     குறத்திக்கு ஏற்ற --- வள்ளி பிராட்டிக்கு ஏற்ற கணவராகி,

     ஏரக பொருப்பில் பூத்த --- திரு ஏரகம் என்னும் திருமலையில் விளங்குகின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      வார் குழல் விரித்து தூக்கி --- நீண்ட கூந்தலை விரித்துத் தூக்கி முடித்தும்,

     வேல் விழி சுழற்றிப் பார்த்து --- வேல் போன்ற கண்களைச் சுழற்றிப் பார்த்து,

     வா என நகைத்து --- வா என்று அழைத்துச் சிரித்தும்,

     தோட்டு குழை ஆட --- தோடும் குழைகளும் ஆடும்படி,

     வாசகம் உரைத்து --- பேச்சுக்கள் பேசியும்,

     சூத்ர பாவை என் --- சூத்திர பொம்மை எனும்படி,

     உறுப்பைக் காட்டி --- அங்கங்களைக் காட்டியும்,

     வாசனை முலைகச்சு ஆட்டி --- வாசனையுடன் கூடிய தனத்தின் மீதுள்ள இரவிக்கையை அசைத்தும்,

     அழகு ஆக சீர்கலை நெகிழ்ந்து போர்த்து --- அழகாக சிறந்த உடையைத் தளர்த்தி இழுத்து போர்த்தும்,

     நூல் இடை நெளிந்து காட்டி --- நூல் போன்ற இடையை நெளியச் செய்து காட்டியும்,

     தீ தெய நடித்து --- ‘தீதெய‘ என்ற ஒலியுடன் நடனம் புரிந்தும்,

     பாட்டு குயில் போல --- குயில் போலப் பாடியும்,

     சேர் உற அழைத்துப் பார்த்து ---  சேரும்படி அழைத்துப் பார்த்தும்,

     சார்வு உற மருத்து இட்டு ஆட்டி --- தம்மையே சாரும்படி மருந்திட்டு ஆட்டியும்

     சீர் பொருள் பறி --- சிறந்த பொருள்களைக் கவர்கின்ற,

     பொய் கூத்தர் உறவு ஆமோ --- பொய் நடிப்புடைய வேசையர் உறவு ஆகுமோ?


பொழிப்புரை

         சூராதி அவுணர்கள் பதைக்கவும், தேர்கள் யானைகள் முதலிய சேனைகளை அழித்துப் போரிட்டும், துன்பம் செய்த கிரவுஞ்ச மலையைக் கொளுத்திப் பகைவர்களை இயமன் ஊருக்கு அனுப்பிய வேலாயுதரே!

         தூய மொழி கூறிப் புன்சிரிப்புச் செய்து, கூற்றுவனை உதைத்து, உரித்த தோலை உடுத்த என் அப்பராகிய சிவமூர்த்திக்கு உபதேசம் புரிந்து சிரிப்பவரே!

         அழகிய சடையை உடையவளும், பால் போன்ற சொற்களையுடைய வேதநாயகியும் ஆகிய பார்வதியம்மை சிறப்பாக வளர்த்த, மிக்க அழகுடைய நிறம் பூண்ட குழந்தையே!

         பனை ஓலையைக் குழையாக அணிந்தவரும், மறைந்துள்ள பொன் போன்றவரும் ஆகிய வள்ளியம்மைக்கு வாய்த்த கணவரே!

         திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         நீண்ட கூந்தலை விரித்துத் தூக்கி முடித்தும், வேல் போன்ற கண்களைச் சுழற்றிப் பார்த்தும், வா என அழைத்துச் சிரித்தும், தோடும் குழையும் ஆடுமாறு பேசியும், எந்திரப் பாவை யென்னும்படி தம் அங்கங்களைக் காட்டியும், வாசனையுள்ள முலைக் கச்சினை ஆட்டியும், அழகாக சிறந்த ஆடையைத் தளர்த்திப் போர்த்தியும், நூல் போன்ற இடையை நெளித்துக் காட்டியும் `தீ தெய‘ என்ற ஒலியுடன் நடித்தும், குயில் போலப் பாடியும், சேரும்படி அழைத்துப் பார்த்தும், தம்மையே அடையும்படி மருந்து வைத்து ஆட்டிப் படைத்தும், சிறந்த பொருளைக் கவர்கின்ற பொய் நடிப்புடைய பொது மாதரது உறவு ஆகுமோ? (ஆகாது).

விரிவுரை

மருத்திட்டு ---

மருந்திடுதல். பொதுமகளிர், ஆடவர் தம் வசமாகும்படி மருந்திட்டு மயக்குவர்.
   
சூரர்கள் ---

சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் முதலிய அசுரர்கள்.

தேர்க்கள் ---

தேர்கள்; சந்தத்தைக் கருதி ககர மெய்யடுத்தது.

சூர் கிரி கொளுத்தி ---

சூர்-அச்சம்

தேவர்க்கு அச்சத்தைச் செய்த தாரகனுக்குத் துணையாய் நின்ற அசுரன் கிரவுஞ்சப் பறவை போன்ற வடிவுடைய மலையாக நின்றான்.

கூற்றுரிடும் வேலா ---

கூற்று ஊர் இடும் வேலா என பிரிக்க.

அசுரர்களை நமனுலகம் அனுப்பிய வேலையுடையவர் முருகர்.

துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடும் அயில்வேலா”
                                                                      ---  (எந்தத்திகை) திருப்புகழ்

தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்த ---

மார்க்கண்டேயரைப் பற்ற வந்த மறலியைப் பார்த்து, “என் அடியான் உயிரைப் பற்றாதே” என்று கூறிச் சிறுநகை புரிந்து சேவடிக் கொழுந்தால் உதைத் தருளினார் சிவபெருமான்.

தோலுடை யெனப்பர்க் கேற்றி ---

தோல் உடை என் அப்பர்க்கு.

ஏர் எழில் நிறத்துக் கூர்த்த மகவோனே ---

மிக்க அழகும் சிவந்த (பவள) நிறமும் படைத்த இளம் குழவியாய் விளங்குபவர் குமரக் கடவுள்.

தூர்த்த ஆடகி ---

ஆடகம்-பொன்.

திருமாலின் திருப்புதல்வியாகிய சுந்தரவல்லி; மான் வயிற்றில் பிறந்து, வேடர்பால் மறைபட்டு வளர்ந்தாள். மறைபட்ட தங்கம்போல் கிடந்தாள்.

கருத்துரை

திருவேரகத்துத் தேவரே! பொது மாதர் உறவு கூடாது.



No comments:

Post a Comment

12. தினையவளவு பனை அளவாகும்.

  "துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்      பெரிதாகும் தோற்றம் போலச் செப்பிட்ட தினையளவு செய்த நன்றி      பனையளவாய்ச் சிறந்து தோன்றும்! கொப்...