சுவாமி மலை - 0236. விடமும் வடிவேலும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விடமும் வடிவேலும் (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
பொதுமாதர் கலவியில் நையாமல்,
உனது திருவடியில் நைந்து உருக அருள்.

தனதனன தான தனதன தந்தன
     தனதனன தான தனதன தந்தன
     தனதனன தான தனதன தந்தன ...... தனதான


விடமும்வடி வேலு மதனச ரங்களும்
     வடுவுநிக ரான மகரநெ டுங்குழை
     விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு ...... கதுதோயும்

ம்ருகமதப டீர பரிமள குங்கும
     மணியுமிள நீரும் வடகுல குன்றமும்
     வெருவுவன பார புளகத னங்களும் ...... வெகுகாம

நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட
     மலர்சொருகு கேச பரமுமி லங்கிய
     நளினமலர் சோதி மதிமுக விம்பமும் ...... அனநேராம்

நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு
     முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ
     னகையுமுள மாதர் கலவியி னைந்துரு ...... கிடலாமோ

வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
     ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
     வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட ...... லவையேழும்
  
மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்
     வகையிரவி போலு மணியும லங்க்ருத
     மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு ...... பதுதோளும்

அடைவலமு மாள விடுசர அம்புடை
     தசரதகு மார ரகுகுல புங்கவன்
     அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய ...... மயிலேறி

அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
     லுலகைவல மாக நொடியினில் வந்துயர்
     அழகியசு வாமி மலையில மர்ந்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


விடமும், வடிவேலும், மதன சரங்களும்,
     வடுவு நிகரான மகர நெடுங்குழை
     விரவி, உடன் மீளும் விழிகளும், மென்புழுகு ....அதுதோயும்

ம்ருகமத படீர பரிமள குங்கும
     மணியும், இள நீரும், வட குல குன்றமும்
     வெருவுவன பார புளக தனங்களும், ...... வெகுகாம

நடனபத நூபுரமும், முகில் கெஞ்சிட
     மலர் சொருகு கேச பரமும், இலங்கிய
     நளினமலர் சோதி மதிமுக விம்பமும், ...... அன நேர்ஆம்

நடையும், நளிர் மாதர் நிலவு தொழும் தனு
     முழுதும் அபிராம அரி வய கிண்கிண்என்
      நகையும் உள மாதர் கலவியின் நைந்து உரு.....கிடல்ஆமோ?

வடிவுடைய மானும், இகல் கரனும், திகழ்
     எழுவகை மராமரமும், நிகர் ஒன்றும்இல்
     வலிய திறல் வாலி உரமும், நெடுங்கடல் .... அவைஏழும்

மற நிருதர் சேனை முழுதும் இலங்கைமன்
     வகை இரவி போலும் மணியும், அலங்க்ருத
     மணிமவுலி ஆன ஒருபதும், விஞ்சு இரு- ...... பதுதோளும்

அடை வலமும் மாள விடு, சர அம்புஉடை
     தசரத குமார, ரகுகுல புங்கவன்,
     அருள்புனை முராரி மருக! விளங்கிய ...... மயில்ஏறி

அடையலர்கள் மாள, ஒரு நிமிடந்தனில்
     உலகை வலமாக நொடியினில் வந்து, உயர்
     அழகிய சுவாமி மலையில் அமர்ந்துஅருள் ...... பெருமாளே.


பதவுரை

      வடிவு உடைய மானும் --- அழகுடைய (மாரீச) மானும்,

     இகல் கரனும், மாறுபட்ட கரன் என்ற அரக்கனும்,

     எழு வகை மராமரமும் --- ஏழு மராமரங்களும்,

     நிகர் ஒன்றும் இல் --- சமானம் ஒன்றுமில்லாத,

     வலிய திறல் வாலி உரமும் --- வலிமையான ஆற்றல் படைத்த வாலியின் மார்பும்,

     நெடும் கடல் அவை ஏழும் --- நீண்ட ஏழு கடல்களும்,

     மற நிருதர் சேனை முழுதும் --- வீரம் பொருந்திய அரக்கர்களின் சேனையனைத்தும்,

     இலங்கை மன் வகை இரவி போலும் அணியும் --- இலங்கையரசனாகிய இராவணனுடைய, சிறந்த சூரியன் போன்ற ஒளியுடைய, அணியப்பட்ட

     அலங்க்ருத மணி மவுலியான ஒருபதும் ---  அலங்காரமான இரத்தின மகுடங்கள் பொருந்திய பத்துத் தலைகளும்,

     விஞ்சு இருபது தோளும் ---  மிகுதியாகவுள்ள இருபது தோள்களும்,

     அடை வலமும் மாள --- அடைந்துள்ள வலிமையும் மாண்டு ஒடுங்க,

     விடுசர அம்பு உடை --- விடுத்த அசைவுள்ள கணைகளையுடைய,

     தசரத குமார --- தயரதருடைய மைந்தரும்,

     ரகு குல புங்கவன் --- இரகுவின் குலத்தில் தோன்றிய தூயவரும்,

     அருள் புனை --- அருள் பாலிப்பவரும்,

     முர அரி மருக --- முரன் என்ற அரக்கனைக் கொன்றவருமாகிய திருமாலின் திருமருகரே!

      விளங்கிய மயில் ஏறி --- விளக்கம் பொருந்திய மயிலின் மீது ஆரோகணித்து,

     ஒரு நிமிடந்தனில் அடையலர்கள் மாள, --- ஒரு நிமிஷ நேரத்தில் பகைவர்கள் அழியச்செய்து,

     நொடியில் உலகை வலம் ஆக வந்து --- நொடிப்பொழுதில், உலகை வலம் புரிந்து,

     உயர் அழகிய சுவாமிமலையில் அமர்ந்து அருள் பெருமாளே --- அழகினால் சிறந்த சுவாமிமலையின்கண் எழுந்தருளியுள்ள,  பெருமை மிகுந்தவரே!

      விடமும் --- நஞ்சும்,

     வடிவேலும் --- கூரிய வேலும்,

     மதன சரங்களும் --- மன்மதனுடைய கணைகளும்,

     வடுவு நிகர் ஆன --- மாவடுவை ஒத்ததும்,

     மகர நெடும் குழை விரவி உடன் மீளும் விழிகளும் --- மகரமீன் போன்ற குழைகளுடன் கலந்து மீள்கின்ற கண்களும்,

     மென் புழுகு அது தோயும் --- மென்மையான புனுகுச் சட்டம் கலந்த,

     ம்ருகமதம் --- கஸ்தூரி

     படீர --- சந்தனம்,

     பரிமள குங்குமம் --- மணம் நிறைந்த குங்குமப்பூ,

     இவைகள் அணியும் இளநீரும் --- இவைகளை அணிந்துள்ள இளநீரும்,

     வடகுல குன்றமும் --- சிறந்த வடமேரு மலையும்,

     வெருவுவன பார புளகித தனங்களும் ---    அச்சந் தரத் தக்கனவாய் பாரமும் பூரிப்பும் உள்ள தனங்களும்,

     வெகுகாம நடன பத நூபுரமும் --- மிகுந்த ஆசையை உண்டாக்கும், நடனஞ் செய்கின்ற பாதங்களில் அணிந்துள்ள சிலம்பும்,

     முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் --- மேகம் கெஞ்சும்படி மலர்களைச் சொருகியுள்ள கூந்தற்பாரமும்,

     இலங்கிய நளின மலர் சோதி மதிமுக விம்பமும் --- விளங்குகின்ற தாமரை மலர் போன்று ஒளிவீசும் சந்திரனையொத்த முக ஒளியும்,

     அன நேராம் நடையும் --- அன்னத்துக்கு நிகரான நடையும்,

     தளிர் மாதம் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம --- குளிர்ந்த அழகியச் சந்திரனைத் தொழுகின்ற உடம்பு முழுவதும் அழகும்,

     அரி வய கிண்கிண் என் நகையும் --- கிளியை வயப்படுத்தும், கிண்கிண் என்று இனிது ஒலிக்கும் சிரிப்பும் உடைய,

     மாதர் கலவியில் நைந்து உருகிடல் ஆகுமோ --- பெண்களின் சேர்க்கையில் நொந்து உருகுதல் நன்றாகுமோ?

பொழிப்புரை

         அழகுடைய மானும், மாறுபட்ட கரனும், திகழ் எழுவகை மராமரமும், சமானமில்லாத வலிமையுள்ள வாலியின் மார்பும், நீண்ட ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரசேனைகள் முழுதும், இலங்கை வேந்தனான இராவணனுடைய சிறந்த சூரியன்போல் ஒளி செய்யுமாறு அணிந்துள்ள, அலங்கரிக்கப்பட்ட இரத்தின மணியமைந்த பத்து முடிகளும், இருபது தோள்களும் சேர்ந்துள்ள வலிமையும், மாளுமாறு கணைவிடுத்த தசரத ராஜ குமாரரும், இரவிகுலத் தோன்றலும், அருள்பூண்டவரும், முராரியுமாகிய திருமாலின் திருமருகரே!

         விளங்குகின்ற மயிலின் மீது ஏறி ஒரு நிமிஷத்தில் பகைவர்கள் மாளுமாறுச் செய்து, ஒரு கணத்தில் உலகத்தை வலமாக வந்து, சிறந்த அழகிய சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         நஞ்சும் கூர்மையுள்ள வேலும், மன்மதனுடைய கணைகளும், மாவடுவும் நிகராகும்படி மகரக் குழைகள் வரைச் சென்று மீள்கின்ற கண்களும், மென்மையான புனுகு கஸ்தூரி சந்தனம் வாசனைமிக்க குங்குமப்பூ இவைகளை அணிந்து, இளநீரும் வடமேருகிரியும் அஞ்சுமாறு பாரமும் புளகிதமும் உடைய தனங்களும், மிக்க ஆசையை விளைவிக்கின்ற நடனஞ் செய்கின்ற பாதத்தில் அணிந்துள்ள சிலம்பும், மேகங்கெஞ்சும்படி மலர் செருகியுள்ள கூந்தலும், இலகிய தாமரை மலர் போன்ற ஒளியும், சந்திரனைப் போன்ற குளிர்ச்சியும் உடைய முகமும், அன்ன நடையும், குளிர்ந்த அழகிய சந்திரனைத் தொழும் உடம்பு முழுவதும், அழகியக் கிளியை வயப்படுத்துகின்ற ஒலியையுடையச் சிரிப்பும் உடைய மாதர்களின் சேர்க்கையில் நொந்து அடியேன் உருகலாமோ? ஆகாது.

விரிவுரை

மாதர் நிலவு தொழுந் தனு ---

மாதர்-அழகு. நல்ல நாயகனைத் தருமாறு அழகிய சந்திரனைப் பெண்கள் வணங்குவார்கள்.


வடிவுடைய மானும் ---

மாரீசன் அழகிய பொன் மானாக வந்து சீதையை விரும்புமாறுச் செய்தான்.

“... ... ... ... ... ... ... நிருத மாரீசனார்
   மாயமானாயினான் மாயமானாயினான்”

என்கின்றார் கம்பர்.

கரன் ---

கரன் என்பவன் இராவணனுடைய சிற்றன்னையின் மகன். அரனாரிடம் வரம்பெற்ற உரம் பெற்றவன் கரன். இவனை வனவாசத்தின்போது இராமர் கொன்றார்.

எழுவகை மராமரமும் ---

பாதலம் வரை வேர் பாய்ந்து, மீதலம் வரை ஓங்கியுயர்ந்து, ஏழு கோணங்களில் நின்ற வயிரம் பெற்ற மரங்கள். இந்த ஆச்சா மரங்களை ஒரே பாணத்தால் பிளந்து அழித்தார்.

நிகர் ஒன்றுமில் வலிய திறன் வாலி ---

சமான மில்லாத பேராற்றல் படைத்தவன் வாலி. கடல் கடைந்த அவ்வலிய வாலியின் உடல் கடைந்தது ராமருடைய கணை.

கடல் அவை ஏழும் ---

தென் கடற்கரையில் இராமர் தர்ப்ப சயனத்தில் படுத்துக் கடலில் அணைக் கட்டிக் கடக்கும் பொருட்டு வருணனை வழி வேண்டினார். ஏழுநாள் இவ்வாறு வருணனை வேண்டியும் அவன் வராமையால் சினந்து அக்கினிக் கணையை விடுத்து கடலை நடுங்க வைத்தார்.

முராரி ---

முர அரி-முராரி. முரன் என்ற அரக்கன் நரகாசுரனுடைய அமைச்சனும் சேனைத் தலைவனுமாக இருந்தவன். அவனைக் கொன்றதால் திருமால் முராரி என்ற நாமத்தைப் பெற்றார்.

கருத்துரை

திருமால் மருகரே! திருவேரக முருகரே! மாதர் ஆசை அற அருளுவீர்.


No comments:

Post a Comment

12. தினையவளவு பனை அளவாகும்.

  "துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்      பெரிதாகும் தோற்றம் போலச் செப்பிட்ட தினையளவு செய்த நன்றி      பனையளவாய்ச் சிறந்து தோன்றும்! கொப்...