அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விரித்த பைங்குழல்
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
பொது மாதர்
உறவு நீங்க அருள்
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
விரித்த
பைங்குழ லொளிர்மல ரளிதன
தனத்த னந்தன தனதன வெனவொலி
விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு ......
மலைபாய
மிகுத்த
வண்சிலை நுதல்மிசை திலதமொ
டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி
வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் ......
வரிபோதத்
தரித்த
தந்திரி மறிபுய மிசைபல
பணிக்கி லங்கிய பரிமள குவடிணை
தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை ...... படுசேலை
தரித்து
சுந்தர மெனஅடர் பரிபுர
பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ ......தொழியாதோ
உரித்த
வெங்கய மறியொடு புலிகலை
தரித்த சங்கரர் மதிநதி சடையினர்
ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர ......
முருகோனே
உவட்டி
வந்திடு மவுணரொ டெழுகடல்
குவட்டை யும்போடி படசத முடிவுற
வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற ......
விடும்வேலா
வரித்த
ரந்துள வணிதிரு மருவிய
வுரத்த பங்கயர் மரகத மழகிய
வணத்த ரம்பர முறவிடு கணையினர் ......
மருகோனே
வனத்தில்
வந்தொரு பழையவ னெனவொரு
குறத்தி மென்புன மருவிய கிளிதனை
மயக்கி மந்திர குருமலை தனிலமர் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
விரித்த
பைங்குழல் ஒளிர் மலர் அளி தன
தனத்த னந்தன தனதன என ஒலி
விரிப்ப, வண்கயல் விழிஉறை குழையொடும் .....அலைபாய,
மிகுத்த
வண்சிலை நுதல்மிசை, திலதமொடு
அசைத்த பொன்குழை அழகு எழ, முக ஒளி
வெயில் பரந்திட, நகைஇதழ் முருகு அலர் ......
வரிபோத,
தரித்த
தந்திரி மறி புய மிசை, பல
பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை,
தனக் கொழுந்துகள் ததைபட, கொடிஇடை ......
படுசேலை
தரித்து,
சுந்தரம் என அடர் பரிபுர
பதச் சிலம்பொடு நடம்இடு கணிகையர்,
சழக்கர், விஞ்சையர், மயல்களின் முழுகுவது
....ஒழியாதோ?
உரித்த
வெங்கயம், மறியொடு, புலி, கலை
தரித்த சங்கரர், மதிநதி சடையினர்,
ஒருத்தி பங்கினர், அவர் பணி குருபர! ......
முருகோனே!
உவட்டி
வந்திடும் அவுணரொடு எழுகடல்
குவட்டையும் பொடி பட, சதம் முடிவுற
உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற ......
விடும்வேலா!
வரித்தரம்,
துளவு அணி திரு மருவிய,
உரத்த பங்கயர், மரகதம் அழகிய
வணத்தர், அம்பரம் உறவிடு கணையினர் ......
மருகோனே!
வனத்தில்
வந்து, ஒரு பழையவன் என,ஒரு
குறத்தி, மென்புனம் மருவிய கிளிதனை
மயக்கி, மந்திர குருமலை தனில்அமர் ......
பெருமாளே.
பதவுரை
உரித்த வெம் கயம் --- உரித்த கொடிய யானை,
மறியொடு --- மானுடன்,
புலி கலை தரித்த சங்கரர் --- புலி
என்பனவற்றின் தோலை உடுத்து சுகத்தைச் செய்பவரும்,
மதி நதி சடையினர் --- திங்களையும்
கங்கையையும் முடித்த சடைமுடியை உடையவரும்,
ஒருத்தி பங்கினர் --- உமாதேவியை ஒரு
பக்கத்தில் கொண்டவரும் ஆகிய
அவர் பணி குருபர --- சிவபெருமான், வணங்குகின்ற குருமூர்த்தியே!
முருகோனே --- முருகக் கடவுளே!
உவட்டி வந்திடும் அவுணரோடு --- வெறுப்புடன்
போருக்கு வந்த அசுரர்களும்,
ஏழு கடல் --- ஏழு சமுத்திரங்களும்,
குவட்டையும்
--- கிரவுஞ்ச மலையும்,
பொடிபட --- தூளாகுமாறும்,
சதம்
முடிவு உற உழைத்த இந்திரர் --- நூறு அசுவமேத யாகங்கள் முடியுமாறு உழைத்த இந்திரர்களும்,
பிரமனும் மகிழ்வுற விடும்வேலா --- பிரமதேவனும், மகிழ்ச்சியுறுமாறும், செலுத்திய வேலாயுதரே!
வரிதரம் துளவு அணி --- வண்டுகளின்
வரிசையுள்ள துளப மாலை அணிந்தவரும்,
திரு மருவிய உரத்த பங்கயர் --- இலக்குமி
பொருந்திய, திருமார்பில் தாமரை
மலரை அணிந்தவரும்,
மரகதம் அழகிய வணத்தர் --- மரகதத்தின் அழகிய
நிறம் உடையவரும்,
அம்பரம் உறவிடு கணையினர் மருகோனே --- கடலின்மீது விடுத்த கணையை உடையவருமாகிய
திருமாலின் திருமருகரே!
வனத்தில் வந்து --- வள்ளிமலைக்
கானகத்தில் வந்து,
ஒரு பழையவன் என --- ஒரு கிழவனைப் போல் வடிவு
கொண்டு,
ஒரு குறத்தி --- ஒப்பற்ற குறமகளும்,
மென்புனம் மருவிய கிளிதனை மயக்கி --- மென்மையான
தினைப்புனத்திலிருந்து கிளி போன்றவளுமாகிய வள்ளியை மயக்கி,
மந்திர குருமலை தனில் அமர் பெருமாளே ---
மந்திர உபதேசத்தலமாகிய சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிகுந்தவரே!
விரித்த பை குழல் --- விரித்த பசுமையான
கூந்தலில்,
ஒளி மலர் அளி --- விளங்குகின்ற மலர்களில்
வண்டுகள்,
தன தனந்தன தனதன என ஒலி விரிப்ப --- தன தனந்தன
தனதன என்ற ஒலியை விரித்து எழுப்ப,
வண் கயல் விழி உறை குழையோடும் அலைபாய ---
வளமையான மீன்போன்ற கண்கள் பொருந்தியுள்ள குழைகளோடு பாய்ந்து அலைச்சலுறவும்,
மிகுத்த வண் சிலை நுதல்மிசை திலதமொடு --- மேம்பட்டு
வளமையுடைய வில்லைப் போன்ற நெற்றியில் உள்ள பொட்டும்,
அசைத்த பொன் குழை அழகு எழ --- அசைந்து
ஆடுகின்ற பொன் தோடும் அழகு வீச,
முக ஒளி வெயில் பரந்திட --- முகத்தின் ஒளியான
சோதி பரந்து விளங்கவும்,
நகை இதழ் முருகு அலர் வரி போத --- மலர்ந்த
இதழுடைய மலரையொத்த வாயினின்றும் இசைப் பாட்டுகள் எழவும்,
தரித்த தந்திரி மறி புயமிசை --- ஏந்திய
தந்திகளுடன் கூடிய வீணை சார்ந்துள்ள புயங்களின் மீது,
பல பணிக்கு இலங்கிய --- பல வகையான
ஆபரணங்களுடன் விளங்கும்,
பரிமள குவடு இணை --- மணமுள்ள மலைக்கு
நிகரான கொங்கைகளின்மீது வாசனைப்பொடிகள் நெருங்கி அமையவும்,
கொடி இடை படு சேலை தரித்து --- கொடி போன்ற
மெல்லிய இடுப்பில் படுகின்ற புடவையை உடுத்தும்,
சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்பொடு
நடம்இடு --- அழகியது என்று கூறுமாறு, நெருங்கிய பாதச் சிலம்புகளுடன் நடனம்
புரிகின்ற பொது மாதராகிய,
சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவது
ஒழியாதோ - வஞ்சகர்கள் மாய வித்தைக்காரர்களின் மோக மயக்கங்களின் முழுகும் தன்மை
அடியேனை விட்டு விலகாதோ?
பொழிப்புரை
கொடிய யானை, மான், புலி இவைகளின் தோலை உடுத்தவரும், சுகத்தைச் செய்பவரும்,திங்களையும் கங்கையையும் புனைந்த
சடைமுடி யுடையவரும், ஒப்பற்ற உமையம்மையை
ஒரு பாகத்தில் வைத்தவரும் ஆகிய சிவபெருமான் பணிகின்ற குருபரனே!
முருகவேளே!
வெறுப்புற்றுப் போருக்கு வந்த அசுரரும், ஏழு கடல்களும், கிரவுஞ்ச மலையும் தூளாகுமாறும், நூறு அசுவமேதயாகஞ் செய்த இந்திரர்களும், பிரமதேவனும், மகிழுமாறும் வேலை விடுத்தவரே!
வரிசையாக வண்டுகள் உறையும் துளவ மாலை
தரித்தவரும், இலக்குமி வாழும்
மார்பில் தாமரை மலர்மாலை தரித்தவரும், அழகிய
மரகத நிறத்தினரும், கடல்மீது கணை
விடுத்தவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!
கிழவடிவுடன் வனத்தில் வந்து, தினைப் புனத்தில் இருந்த கிளி போன்ற
வள்ளி பிராட்டியை அன்புறச் செய்து,
மந்திரத்
தலமாம் திருவேரகத்தில் எழுந்தருளி யுள்ள
பெருமிதம் உடையவரே!
செழுமையுடைய விரித்த கூந்தலில் உள்ள
மலர்களில் வண்டுகள் தன தனந்தன தனதன என்ற ஓசையுடன் ஒலிக்கவும், வளமையான மீன் போன்ற கண்கள் காதில் உள்ள
தோட்டுடன் மோதி யலையவும், மேம்பட்டுவிளங்கும்
வளமையான வில் போன்ற நெற்றியில் திலகமும், அசையும்
பொற்குழை அழகு வீசவும், முகத்தில் ஒளியான
வெயில் பரவவும், மலர்ந்த மலரின்
வாசனையுடைய வாக்கில் இசைப் பாட்டு ஒலிக்கவும், தந்திகளுடன் கூடிய வீணை சார்ந்துள்ள
புயத்தில் பல வகையான ஆபரணங்கள் விளங்கவும், நறுமணமுள்ள மலைபோன்ற தனங்களின் மீது
வாசனைப் பொடிகள் திகழவும், கொடி போன்ற இடையில்
உள்ள சீலை அழகுள்ளது என்று கூறும்படியும், பாதத்தில் நூபுரங்களும் சிலம்புகளும்
அசையும்படியும் நடனம் புரிகின்ற பொது மகளிர் வஞ்சனை யுடையவர். வித்தைகளில்
வல்லவர். ஆதலால் அவர்களின் மையலில் முழுகும் தன்மை என்னை விட்டு விலகாதோ?
விரிவுரை
இத்
திருப்புகழின் முற்பகுதி நான்கு அடிகளிலும் பொது மகளிரின் நிலைமையைக் கூறினார்.
உரித்த
வெங்கய மறியொடு புலி கலை தரித்த ---
தாருக
வனத்து முனிவர்கள் சிவபெருமானைப் பகைத்து, அவரைக் கொல்லும் பொருட்டு, அபிசார வேள்வி செய்து, புலி மான் யானை இவைகளை ஏவினார்கள்.
சிவமூர்த்தி அவைகளை உரித்து அத் தோலை உடுத்துக் கொண்டருளினார்.
சங்கரர் ---
சம்-சுகம்; கரம்-செய்வது; சுகத்தைச் செய்பவர் சங்கரர்.
மதி
நதி சடையினர்
---
கங்கையை
முடித்தது, பெருமானுடைய
பேராற்றலைக் குறிக்கும். திங்களை முடித்தது, பெருமானுடைய கருணையைக் குறிக்கும்.
சத
முடிவுற உழைத்த இந்திரர் ---
நூறு
அசுவமேத வேள்விகளை உழைத்து முடித்தவன் இந்திரன் ஆவான்; அதனால் மகபதி என்றும், சதக்ருது என்றும் இந்திரனுக்குப்
பெயர்கள் உண்டு. அண்டங்கள் தோறும் இந்திரர் வேறு ஆதலின் இந்திரர் என்று பன்மையில்
கூறினார்.
கருத்துரை
குருமலைக்
குமரா! மாதர் மயக்கமற அருள்வாய்.
No comments:
Post a Comment