அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விழியால் மருட்டி
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
பொதுமாதர்
வசமாகி அழியாமல்,
பொற்பாத கமலத்தைத் தந்து
அருள்
தனதான
தத்த தந்த தனதான தத்த தந்த
தனதான தத்த தந்த ...... தனதான
விழியால்ம
ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு
விரகான லத்த ழுந்த ...... நகையாடி
விலையாக
மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச
விளையாட லுக்கி சைந்து ...... சிலநாள்மேல்
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த
முழுமாயை யிற்பி ணங்கள் ...... வசமாகி
முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று
முதிராத நற்ப தங்கள் ...... தருவாயே
பொழிகார்மு
கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று
பொருதாளெ டுத்த தந்தை ...... மகிழ்வோனே
புருகூத
னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட
புனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பா
செழுவாரி
சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று
திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே
திரளாம
ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற
திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
விழியால்
மருட்டி நின்று, முலைதூசு அகற்றி, மண்டு
விரக அனலத்து அழுந்த ...... நகையாடி,
விலையாக
மிக்க செம்பொன் வரவே, பரப்பி வஞ்ச
விளையாடலுக்கு இசைந்து, ...... சிலநாள்மேல்
மொழியாத சொற்கள் வந்து, சிலுகு ஆகி விட்ட தொந்த
முழுமாயையில் பிணங்கள் ...... வசம் ஆகி,
முடியாது பொற் சதங்கை தரு கீத வெட்சி துன்று
முதிராத நல் பதங்கள் ...... தருவாயே!
பொழி
கார்முகிற்கு இணைந்த யமராஜன் உட்க, அன்று
பொருதாள் எடுத்த தந்தை ...... மகிழ்வோனே!
புருகூதன்
உள் குளிர்ந்த, கனகா புரி ப்ரசண்ட
புனித அம்ருகக் கரும்பு ...... புணர்மார்பா
செழு
வாரிசத்தில் ஒன்று முதுவேதன் வெட்க, அன்று
திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே!
திரளாம்
மணிக் குலங்கள் அருண உதயத்தை வென்ற
திரு ஏரகத்து அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன்
உட்க --- பொழிகின்ற கரிய மேகத்துக்கு ஒப்பான யமதருமராஜன் அஞ்சும்படி
அன்று பொரு தாள் எடுத்த --- அந்நாளில், போர்புரிய வல்ல திருவடியைத் தூக்கிய,
தந்தை மகிழ்வோனே --- தந்தையாகிய சிவபெருமான்
மகிழ்ச்சி கொள்ளும் இறைவனே!
புருகூதன் உள் குளிர்ந்த --- இந்திரனது
உள்ளம் குளிர்ந்த
கனகா புரி ப்ரசண்ட --- பொன்னுலகைக் காத்த, வல்லமை உடையவரே!
புனிதா --- தூய்மையானவரே!
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன்
வெட்க --- செழுமையான தாமரை மலரில்
வாழ்கின்ற கிழப் பிரமன் நாணுமாறு,
அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே ---
அந்நாளில் பிரணவத்தின் பேருண்மையைச் சொல்லியருளிய முருகப் பெருமானே!
திரள் ஆம் மணிக்குலங்கள் அருண உதயத்தை
வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே --- திரண்டுள்ள இரத்தினக் குவியல்கள், சூரிய உதய ஒளியை வென்று விளங்கும், திருவேரகம் என்ற திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ள, பெருமையின் மிகுந்தவரே!
விழியால் மருட்டி நின்று --- கண்ணினால்
ஆடவரை மயக்கி நின்றும்,
முலை தூசு அகற்றி --- தனங்களின் மீதுள்ள
ஆடையை அகற்றியும்,
மண்டு விரக அனலத்து அழுந்த நகையாடி ---
மூண்டு எழுகின்ற காம அக்கினியில் அழுந்துமாறு நகை செய்தும்,
விலையாக மிக்க செம்பொன் வரவே --- விலையாக
மிகுந்த செம்பொன் வருமாறு
பரப்பி --- கட்டில் மெத்தை இவைகளைப் பரப்பி
வைத்தும்,
வஞ்ச விளையாடலுக்கு இசைந்து --- வஞ்சகம்
நிறைந்த லீலைகளைப் புரிவதற்கு இணங்கியும்,
சிலநாள் மேல் --- சில நாட்கள் கழிந்த பின்னர்,
மொழியாத சொற்கள் வந்து --- சொல்லாத சொற்களைச்
சொன்னதாகச் சொல்லி எதிர்த்து வந்தும்,
சிலுகு ஆகி --- சண்டையிடுகின்ற,
தொந்த முழு மாயையின் பிணங்கள் வசம் ஆகி ---
பந்தத்தைத் தருகின்ற முழு மாயக்காரிகளாகிய பிணங்களாம் பொது மாதர்களின் வசத்தில்
அகப்பட்டு,
முடியாது --- அடியேன் அழியாமல்,
பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று --- பொன்னாலாகிய
கிண் கிணிகள் தருகின்ற கீதஒலியும்,
வெட்சி
மலரும் சேர்ந்துள்ள,
முதிராத நல்பதங்கள் தருவாயே --- இளமை
பொருந்திய தேவரீருடைய திருவடிகளைத் தந்தருளுவீர்.
பொழிப்புரை
மழை பொழிகின்ற கரிய மேகம் போன்ற இருண்ட
உருவத்தையுடைய இயமன் அஞ்சும்படி,
போர்
செய்ய வல்ல திருவடியைத் தூக்கிய சிவ பெருமான் மகிழ்கின்ற புதல்வரே!
தேவேந்திரனுடைய உள்ளங் குளிர்ந்த
பொன்னுலகைக் காத்தருளிய வல்லமை உடையவரே!
பரிசுத்தமானவரே!
மான் ஈன்ற கரும்பு போன்ற வள்ளிநாயகியைத்
தழுவுகின்றவரே! செழுமையுடைய தாமரை மலரில் வாழ்கின்ற கிழ வேதியனாகிய பிரமன்
நாணுமாறு அந்நாள் பிரணவப் பொருளை பொழிந்தருளிய முருகக் கடவுளே!
திரண்ட இரத்தினக் குவியல்கள் உதய சூரிய
ஒளியைப் போல் ஒளி செய்து விளங்கும் திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம்
உடையவரே!
கண்ணால் இளைஞரை மயக்கியும், தனங்களின் மீதுள்ள ஆடையை அகற்றியும், மூளுகின்ற ஆசையாகிய அக்கினியில்
அழுந்தச் செய்து புன்னகை புரிந்தும், விலையாக
மிகுந்த செம்பொன் வரும்படி மெத்தை முதலியவைகளைப் பரப்பி வைத்தும், வஞ்சக லீலைகளைச் செய்தும் சில
தினங்கட்குப் பின்னர், சொல்லாத சொற்களைச்
சொன்னதாகச் சொல்லி சண்டையிட்டும் தோதகம் புரிகின்ற முழு மாயக்காரி களான விலை
மகளிரது வசமாகி அடியேன் அழியாமல்,
பொற்சதங்கை
ஒலிக்கும் வெட்சி மலர் தரித்த இளம் பாதமலர்களைத் தந்தருள்வீர்.
விரிவுரை
விழியால்
மருட்டி
---
பொதுமாதர்கள்
தங்கள் கண்களாகிய வலையை வீசி இளைஞரை மயக்கி இடர் படுத்துவார்கள்.
விரகானலத்
தழுந்த
---
விரக
அனலத்து அழுந்த-காமமாகிய அக்கினியில் மூழ்க. காமம் நெருப்பினுங் கொடியது.
நெருப்பினால் துயருற்றோற் நீருள் குளித்துப் பிழைக்கலாம். நீருள் குளிப்பினும் காமஞ்
சுடும். குன்றேறி ஒளிப்பினுங் காமஞ்சுடும்.
பொழி
கார்முகிற்கு இணைந்த யமராஜன் ---
மழை
பொழிகின்ற இருண்ட மேகம்போல் இயமன் கரிய உருவுடன் காண்பார்க்கு அச்சத்தைக்
கொடுத்துக் கொண்டு வருவான்.
பொரு
தாள்
---
சிவபெருமான்
இடப்பாதத்தால் இயமனை உதைத்தருளினார். அப்பாதம் போர் செய்ய வல்லது. அத்திருவடி
இராவணனை அடர்த்தது; முயலகனை மிதித்தது; சந்திரனைத் தேய்த்தது.
ம்ருகக்
கரும்பு ---
மிருகம்-மான், மான் போன்ற-கரும்பு போன்ற இனிய குணம்
படைத்தவர் வள்ளியம்மையார்.
கருத்துரை
திருவேரகத்துறையும்
தேவா! திருவடி தந்தருள்வாய்.
No comments:
Post a Comment