திருக் கயிலை - 0239. திருநிலம் மருவி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

திருநிலம் மருவி (கயிலைமலை)

திருக் கயிலை நாதா!
சிவத்தோடு இரண்டறக் கலக்கும் பெருவாழ்வை அருள்.


தனதன தனனத் தான தனதன தனனத் தான
     தனதன தனனத் தான ...... தனதான

திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
     சிவவழி யுடனுற் றேக ...... பரமீதே

சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
     திரிபுர மெரியத் தீயி ...... னகைமேவி

இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
     யிருள்கதி ரிலிபொற் பூமி ...... தவசூடே

இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
     ரிளையவ னெனவித் தார ...... மருள்வாயே

பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
     பழமறை பணியச் சூல ...... மழுமானும்

பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
     பரியினை மலர்விட் டாடி ...... அடியார்கள்

அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
     மருள்செயு முமையிற் பாக ...... ரருள்பாலா

அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
     டடியவர் கயிலைக் கான ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


திருநிலம் மருவி, காலின் இருவழி அடைபட்டு ஓடி,
     சிவ வழியுடன் உற்று, ஏக ...... பரம் மீதே,

சிவசுடர் அதனை, பாவை மணம்என மருவி, கோல
     திரிபுரம் எரியத் தீயின் ...... நகைமேவி,

இருவினை பொரிய, கோல திருவருள் உருவத்து ஏகி,
     இருள்கதிர் இலி, பொன் பூமி ...... தவசு ஊடே,

இருவரும் உருகி, காயம் நிலை என மருவி, தேவர்
     இளையவன் என, வித்தாரம் ...... அருள்வாயே.

பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள் பட,முத் தேவர்,
     பழமறை பணிய, சூலம் ...... மழு மானும்

பரிவொடு சுழல, சேடன் முடிநெறு நெறு என, கோவு
     பரியினை மலர் விட்டு ஆடி, ...... அடியார்கள்

அரஹர உருகி, சேசெ என, திரு நடனக் கோலம்
     அருள்செயும் உமையில் பாகர் ...... அருள்பாலா!

அலர்அணி குழல்பொற் பாவை, திருமகள் அமளிப் போரொடு,
     அடியவர் கயிலைக்கு ஆன ...... பெருமாளே.

 
பதவுரை

      பரிபுர கழல் --- திருவடியில் உள்ள சிலம்பின் ஓசையும் வீரக்கழலின் ஒலியும்,

     எட்டு ஆசை செவிடுகள் பட -- எட்டுத் திசைகளும் செவிடு படவும்,

     முத்தேவர் -- பிரமன், திருமால், உருத்திரன் என்ற மூன்று மூர்த்திகளும்,

     பழ மறை பணியா --- பழமையான வேதங்களும் பணிந்து போற்றவும்,

     சூல மழு மானும் பரிவொடு சுழல --- சூலமும் மழுவும் மானும் அன்புடன் சுழலவும்,

     சேடன் முடி நெறு நெறு என --- ஆதிசேடனுடைய பணாமகுடங்கள் நெறு நெறு என்று முறியவும்,

     கோவு பரி இனை மலர் விட்டு ஆடி --- பசுவாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருத்தலை விடுத்து நடனஞ் செய்து,

     அடியார்கள் --- அடியவர்கள்,

     அரகர உருகி சேசெய என --- அர அர என்று கூறியும் உள்ளம் உருகியும் ஜெய ஜெய என்று போற்றி செய்ய,

     திருநடன கோலம் அருள் செய்யும் --- திருநடனக் காட்சியை அருளிச் செய்து,

     உமையின் பாகர் அருள் பாலா --- பார்வதி பாகராம் பரமசிவன் அருளிய திருக்குமாரரே!

      அலர் அணி குழல் பொன் பாவை --- மலரை முடிந்த கூந்தலையுடைய அழகிய பாவையும்,

     திருமகள்  --- திருவின் (இலக்குமியின்) மகளுமாகிய வள்ளிநாயகியின்,

     அமளி போரொடு --- படுக்கையின் போருக்கும்,

     அடியவர் --- அடியவரிடத்தும்,

     கயிலைக்கு ஆன --- கயிலை மலையிடத்தும் விருப்பங் காட்டும்,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      திரு நிலம் மருவி --- ஒளி வீசும் மேலைப் பெரு வெளியிடத்தை அடைந்து,

     காலின் இரு வழி அடைபட்டு ஓடி --- பிராணவாயு செல்லும்படியான இடைகலை பிங்கலை என்ற வழிகள் அடைபடும்படி ஓட்டி,

      சிவ வழியுடன் உற்று --- சிவநெறியில் நிலைத்து நின்று,

     ஏக பரம் மீதே --- தனித்து நிற்கும் அம் மேலிடத்தே,

     சிவசுடர் அதனை --- சிவ சோதியை,

     பாவை மணம் என மருவி --- பாவைக் கலியாணம் போல கூடி,

     கோல திரிபுரம் எரிய தீயின் நகை மேவி = அழகிய ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் எரியுமாறு தீயைக் கக்கும்படி புன்னகை புரிந்து,

     இருவினை பொரிய --- நல்வினை தீவினை என்ற இருவினைகளும் பொரிந்து சாம்பராகுமாறு,

     கோல திருவருள் உருவத்து ஏகி --- அழகிய உமது திருவருளாம் வடிவில் ஈடுபட்டு,

     இருள் கதிர் இலி பொன் பூமி தவசு ஊடே --- இருளும் ஒளியும் இல்லாத அழகிய இடமாகிய தவத்தின் நெறியில்,

     இருவரும் உருகி --- தேவரீரும் அடியேனும் குழைந்து ஒன்றுபட்டு,

     காயம் நிலை என மருவி --- அவ்வாறு ஒன்றுபட்ட அருளுருவம் நிலையாகப் பொருந்தி,

     தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே --- தேவர்கள் அடியேனை இவன் இளையோன் என்று வியந்து கூறுமாறு விசித்திரமான பெரும் பேற்றினை அருள்வீராக.

பொழிப்புரை

         திருவடியில் விளங்கும் சிலம்பும் வீரக்கழலும், எட்டுத் திசைகளும் செவிடுபடுமாறு ஒலி செய்யவும், அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளும் பழமையான வேதங்களும் பணிந்து போற்றவும், சூலமும் மழுவும் மானும் அன்போடு சுழலவும், ஆதிசேடனுடைய பணாமகுடங்கள் நெறு நெறு என்று முறியுமாறும், பசுவாகிய வாகனத்தை விடுத்து நடனம் புரிந்து அடியார்கள் அரஹர செய செய என்று கூறி ஒலிக்கவும், திருநடனக் கோலத்தை அருள் செய்த உமையொருபாகராம் சிவபிரானுடைய புதல்வரே!

         மலர் முடித்த அழகிய பாவைபோன்ற இலக்குமியி்ன் மகளாகிய வள்ளி பிராட்டியின் படுக்கையின் இன்ப ஆடலிலும் அடியாரிடத்தும் திருக்கயிலாய மலையிலும் அன்பு கொண்ட பெருமிதம் உடையவரே!

         ஒளி நிலத்தை யடைந்து இடா பிங்கலா எனற இரு நாடிகளின் வழியே செல்லும் பிராணவாயுவை மாற்றி சிவநெறியில் நின்று, தனிமையான மேலிடத்தில் நின்று, சிவ சோதியை பாவை மணம்போல் அடைந்து, மும்மலங்கள் எரியுமாறு நெருப்பெழ நகைபுரிந்து, நல்வினை, தீவினைகளை எரித்துச் சாம்பராக்கி, அழகிய உமது திருவருளாம் உருவில் ஒன்றுபட்டு இருளும் ஒளியும் இல்லாத அழகிய இடத்தில் தவநெறியில் சென்று, தேவரீரும் அடியேனும் குழைந்து ஒன்றாகி, அத்தூய வடிவு நிலைத்து நிற்க அத்துவிதமுற்று, தேவர்கள் இவன் இளையோன் என்று புகழுமாறு விசித்திரமான தெய்வீகத்தை அருள்புரிவீர்.


விரிவுரை

திருநில மருவி :-

திரு-ஒளி. ஞான ஒளி வீசுகின்ற மேருவெளியில் ஏறி நிற்றல்.

சுடர் பட்டி மண்டபமொ டாடி”   --- (கட்டிமுண்ட) திருப்புகழ்,

காலின் இருவழி அடைபட்டு ஓடி ---

கால்--பிராணவாயு. பிராணவாயு இடை, பிங்கலை என்ற இரு நாடிகள் வழியே சென்று மீளுகின்றது. அங்ஙனம் செல்ல விடாமல் அந்த இரு வழிகளை அடைத்து விட்டால், அவ்வாயு இரு நாடிகட்கும் இடையேயுள்ள வெண்மையாகவும், தாமரை நூல்போல் மென்மையாகவும் உள்ள சுழுமுனை நாடி வழி சென்று மேலைப் பெருவெளியை அடையும்.

சிவ வழியுடன் உற்று ---

சிவயோக நெறியை அடைந்து மூச்சைப் பிடித்துத் துருத்தி போல் கும்பித்து நிறுத்திச் செய்வது அடயோகம்.

திருவருள் தியானத்தினால் பிராணன் தானே அடங்கச் செய்வது சிவயோகம்.

அனித்தம் ஆன ஊன்நாளும் இருப்பதாகவே நாசி
        அடைத்து வாயு ஒடாத      வகைசாதித்து,
     அவத்திலே குவால்மூலி புசித்து வாடும், ஆயாச
        அசட்டுயோகி ஆகாமல்,        மலமாயை
செனித்த காரிய உபாதி ஒழித்த, ஞான ஆசார
        சிரத்தை ஆகி, யான்வேறு என்    உடல்வேறு
     செகத்து யாவும் வேறாக நிகழ்ச்சியா மனோதீத
        சிவச் சொரூப மாயோகி        என ஆள்வாய்.        --- திருப்புகழ்

ஏகபர மீதே ---

ஏகம்-தனி; பரம்-மேல், கருவி கரணங்கள் யாவுங் கழன்று, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அப்பாலைக் கப்பாலாயுள்ள ஏகாந்தமான மேலிடத்தே ஆன்மா நிற்றல்.

தன்னம் தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே"                 --- கந்தர்அநுபூதி

ஏகாந்தமான பெரு வெளியானது”             --- திருஅருட்பா

ஏகாந்த சுகந்தரு பாசாங்குச சுந்தரி”         --- தேவேந்திர சங்க வகுப்பு

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின் மேல்
அளியில் விளைந்தது ஓர் ஆநந்தத் தேனை, அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறும் தனியை,
தெளிய விளம்பியவா! முகம் ஆறு உடைத் தேசிகனே!       ---  கந்தர் அலங்காரம்.

சிவசுடரதனை:-

ஏகாந்தப் பெருவெளியில் தானே தனித்து நின்று விளங்கும் சுயஞ்சோதியைக் காணுதல்

தழைந்த சிவசுடர் தனை என மனதினில்
அழுந்த வுரை செய வருமுக நகையொபளி
தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேளே”
                                                                                       --- (குரம்பை) திருப்புகழ்.

பாவை மணம் என மருவி ---

சிறுமியர்கள் சிறு பிராயத்தில் பொம்மைக் கல்யாணம் புரிந்து மகிழ்வர். அதுபோல் இறைவனை அடைகின்ற முழுப் பக்குவம் இல்லையெனினும், பாவைக்குத் திருமணம் செய்து அச்சிறுமியர் மகிழ்வது போல் சிறியேன் இறைவனுடன் ஒன்றி இன்புறுவேன்.


திரிபுரம் எரியத் தீயின் நகைமேவி ---

திரிபுரம் என்பது மும்மலத்தைக் குறிக்கும்.

அப்புஅணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம்ஆவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார்அறிவாரே.                --- திருமந்திரம்

ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் வெந்து பொடியாகுமாறு ஞானமாகிய தீப்பொறி சிந்தச் சிரித்தல்.

இருவினை பொரிய ---

     பிறவிக்குக் காரணம் வினை. வினை நல்வினை, தீவினை எனப்படும். உணவு விளைகின்ற இடம் வயல். வயல், நன்செய், புன்செய் என்ற இரு பிரிவினையால் தான் பிறவித் தொடர் விடாது சூழ்ந்து வருகின்றது.

விதிகணும் உடம்பை விடா வினையேன்
 கதிகாண மலர்க்ழல் என்று அருள்வாய்”      ---  கந்தர்அநுபூதி

நல்வினை-பொன்விலங்கு தீவினை-இரும்பு விலங்கு. இரண்டும் விலங்கு தானே. ஆதலால் ஞானத் தீயினால் இந்த இரு வினைகளும் எரிந்து, பொரிந்து, கரிந்து சாம்பராகுமாறு செய்துவிட்டால் பிறப்பு நீங்கிவிடும.

தாவரும் இருவினைச் செற்றுத் தள்ளரும்
மூவகைப் பகை அரண் கடந்து முத்தியில்
போவது புரிபவர்”                          --- கம்பர்.

இருவினைமு மலமமுற இறவியொடு பிறவியற
         ஏகபோகமாய் நீயுநானுமாய்
   இறுகும் வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
         ஏகநாயகா”                  --- (அறுகுநுனி) திருப்புகழ்.

கோல திருவருள் உருவத்து ஏகி ---

இறைவனுக்கு நம் போல் என்பு, தோல், நரம்பு, இவைகளால் ஆன உடம்பு அல்ல. ஆன்மாக்களுக்கு அருளும் பொருட்டு திருவருளே திருமேனியாகக் கொள்கின்றான. அத்தகைய அழகிய திருவருளுருவில் ஒன்று பட்டு நிற்றல். அப்புடன் உப்பு ஒன்றாதல் போல.

இருள் கதிரிலி பொற்பூமி தவசூடே ---

ஆறாதாரத்திற்கு மேல் உள்ள சகஸ்ராரத்தில் சூரியனும் சந்திரனும் இன்றி, இருளும் பிறவற்றால் வரும் ஒளியும் இன்றி சுயம்பிரகாசமாய் விளங்கும்,

ஞானங்கொள் பொறிகள் கூடி வான்இந்து கதிர்இலாத
                நாடு அண்டி”                --- திருப்புகழ்.

இருவரும் உருகி ---

ஆன்மாவும் பரமான்மாவும் குழைந்து ஒன்றுடன் ஒன்று பிரிவறக் குழைந்து ஒன்றாகி நிற்கும் நிலை. இறைவனை நினைக்கின்ற போது உள்ளம் உருகும் உணர்வு உருகும். இதற்கு மேற்பட்ட நிலை என்பு உருகும்.

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே.       ---  திருமந்திரம்.

இதற்கு மேற்பட்ட நிலையை உயிர் உருகுவது. உயிருக்குயிராய் இறைவன் விளங்குகின்றான். தங்கத்தின் மீது இரத்தின மணி இருக்கின்றது. தங்கம் உருகியவுடன் அதில் இருந்த மணி அத் தங்கத்தில் பதிந்து விடுகின்றது. அது போல உயிர் உருகியவுடன் உயிருக்கு உயிராயிருந்த சிவம் உயிருடன் ஒன்றி விடுகின்றது.

சீவன்எனச் சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பரே       --- திருமந்திரம்.

காய நிலையென மருவி ---

அவ்வாறு ஒன்றிய அத்திருவருள் நிலை என்றும் அழியாது ஒன்று போல் இருக்கும்.

தேவர் இளையவன் என ---

என்றும் இளையோனாம் முருகனுடன் ஒன்றி யான். இளமையுடன் இருப்பதைக் கண்ட தேவர்கள், “இவன் என்றும் இளையோனாய்” என்று புகழ்வார்கள்.

வித்தாரம் அருள்வாயே ---

விசித்திரமான பேரின்பப் பெருவாழ்வு. அருணகிரிநாதர் இத் திருப்புகழில் இணையற்ற சிவாத்துவிதச் செம்பொருளை வேண்டுகின்றார்.

பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள் பட ---

நடராஜப் பெருமான் திருநடனம் புரிகின்றபோது, அப்பெருமானுடைய திருவடியில் விளங்கும் சிலம்பும் வீரக் கழலும் கிண் என்று ஒலிக்கின்றபோது, எண் திசைகளும் செவிடு படுகின்றன. ஆசை-திசை.

முத்தேவர் பழமறை பணிய ---

இறைவனுடைய நடன தரிசனத்தைக் கண்டு மூவர்களும், முதுமறைகளும், புகழ்ந்து போற்றுகின்றன.

சூல மழு மானும் பரிவொடு சுழல ---

இறைவன் சுழன்று ஆடுவதனால் அவருடைய திருக்கரங்களில் உள்ள சூலமும், மழுவும், மானும் அசைந்து சுழன்று ஆடுகின்றன.

சேடன் முடி நெறு நெறன ---

இறைவன் நடனஞ் செய்யும்போது, அதனைத் தாங்கும் ஆற்றல் பெறாத ஆதிசேடனுடைய பணாமகுடங்கள் முறிவு பெறுகின்றன.

கோவு பரியினை மலர்விட்டாடி ---

கோ-பசு. இறைவன் பசுவையும் வாகனமாகக் கொள்கின்றார்.

பசுவேறும் எங்கள் பரமன்’            --- திருஞானசம்பந்தர்.

அடியோர்கள் அரஹர வுருகிச் சேசெயென ---

சிவபெருமான் திருநடனம் செய்வதைகத் தரிசித்த அமரர்கள் ஆனந்த மேலிட்டு ஹர ஹர என்றும் ஜெய ஜெய என்றும் ஒலித்து இறைஞ்சி இன்புறுவர்.

கருத்துரை

திருக்கயிலை மேவுந் திருமுருகா! சிவாத்துவிதப் பெருவாழ்வைத் தந்தருள்வாய்.

                 

No comments:

Post a Comment

11. ஏறும்பு எண்ணாயிரம்

  "குறும்பெண்ணா துயர்ந்தநல்லோர் ஆயிரஞ்சொன்      னாலும்அதைக் குறிக்கொ ளாமல் வெறும்பெண்ணா சையிற்சுழல்வேன் மெய்ஞ்ஞானம்      பொருந்தியுனை வ...