திரு நாகேச்சரம்
(திருநாகேஸ்வரம்)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில்
காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6
கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரம் திருத்தலம் இருக்கிறது.
கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து
வசதிகள் இருக்கின்றன.
திருநாகேச்சரத்தில் இருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் ஒப்பிலியப்பன் கோயில்
என்கிற திவ்யதேசம் உள்ளது.
இறைவர்
: நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர்.
இறைவியார்
: கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையம்மை.
தல
விநாயகர் : சண்பக விநாயகர்.
தல
மரம் : சண்பகம்.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. பொன்னேர் தருமே னியனே,
2. தழைகொள்சந்தும்
மகிலும்.
2. அப்பர்
- 1. கச்சைசேர் அரவர் போலும்,
2. நல்லர் நல்லதோர்,
3. தாயவனை வானோர்க்கும்.
3. சுந்தரர் - 1. பிறையணி வாணு தலாள்.
பாடல் பெற்ற காவிரி
தென்கரைத் தலங்களில் ஒன்றான திருநாகேச்சரம் நவக்கிரகத் தலங்களில் ராகு
பகவானுக்குரிய தலம் என்ற பெருமை உடையதாகும்.
பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து
இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி
என்றழைக்கப்படுகின்றார். இத்தலமும் திருநாகேச்சரம் என்று அழைக்கப்படுகின்றது.
சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும்
நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன்
மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு மனித
தலை, நாக உடலுடன் தான்
காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். இவருக்குகந்த
நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற
பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும்
போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த
மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி
மாதம் 16ஆம் நாள் ராகு
பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு
பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப்
படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும்
பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது.
ராகு கேது தோஷம் இத்தலத்தில் வழிபட்டால்
நீங்கும். திருமணம் தாமதமாதல், இல்லறத்தில்
நிம்மதியினமை, ஜாதகத்தில் பித்திர
தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க இராகு தசை, இராகு புக்திகளில் இராகு பகவானுக்க்
பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.
ராகுவின் பிறப்பு வரலாறும்
கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப்
பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்
கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து
திருமாலிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த திருமால்
கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான்.
ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு
வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு
நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
ஒரு காலத்தில்
இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் இலிங்க
வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்பு பெயர்
ஏறபட்டது.
ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன்
கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று
பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே
வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது
பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம்
நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம்
தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர்
கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன.
சேக்கிழார்,அவரது தம்பி
பாலறாவாயர், அவர் தாயார்
அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.
அம்பாளுக்கு
இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள்
நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி
அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து கெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க
பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.
இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு
இறைவியாக "கிரி குசாம்பிகை" சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை
தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம்
செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரி குசாம்பிகைக்கு
இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற
கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத்
தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.
கிரிகுசாம்பிகை இங்கு
கோயில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர். இந்த முனிவர் சிவனை மட்டுமே
வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் வணங்கிச்
செல்லும் பிருங்கி முனிவர் மேல் கோபம் கொண்ட சக்தி அர்த்தநாரீஸவரர் ஆக இறைவனின்
இடது பாகத்தைப் பெற்றாள். அப்போதும் ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர்
வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். அதைக் கண்டு வெகுண்ட
அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின்
சதையையும், இரத்தத்தையும்
எடுத்துக் கொண்டாள். எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும்
வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை. தன் பக்தனின்
வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று
சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பினபு அன்னையை
திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார். சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக
அலைமகளும், கலைமகளும் அவளுக்கு
துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். தேவியான பார்வதி பூலோகத்தில்
செண்பகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக்
கோலத்தையே திருநாகேஸவரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.
பெரிய புராண ஆசிரியர்
சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக
கி.பி. 12ஆம் நூற்றாண்டில்
இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும
நிர்மாணித்துள்ளார். தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில்
உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார்.
இவருக்குத் திருவடி ஞானம் கிடைத்ததும் இத்தலத்திலே தான் என்பது இன்னுமொரு
சிறப்பாகும். ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன
இத்தலத்து
முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்திருத்தலத்தில்
முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில்
தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது.
கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோயிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.
இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு
தீர்த்தங்கள் இருந்தாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய
புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில்
நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது
இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன்
சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு
மீண்டும் இணைந்தார். நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். பாண்டவர்கள்
தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில்
நீராடி நாகேசுவரரை வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கினான். இந்திரன் சாபம்
நீங்கப் பெற்றான். சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசிப்
பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும்.
பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பிரதி ஞாயிறுதோறும் மாலை ராகு கால
நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது. ராகுவைப்
போலக் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப்போல் கெடுப்பாரும்
இல்லை என்பது பழமொழி.
காலையில் குடந்தைக்
கீழ்கோட்டத்து இறைவனையும்,
நண்பகலில்
திருநாகேஸ்வரம் இறைவனையும்,
மாலையில்
திருப்பாம்பரம் இறைவனையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "சீல் ஓங்கும் யோகீச்சுரர்
நின்று உவந்து வணங்கு திரு நாகீச்சரம் ஓங்கு நம் கனிவே" என்று போற்றி உள்ளார்.
காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 411
திருநாகேச்
சரத்துஅமர்ந்த செங்கனகத் தனிக்குன்றை,
கருநாகத்து
உரிபுனைந்த கண்ணுதலை, சென்றுஇறைஞ்சி,
அருஞானச்
செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து,
பெருஞான
சம்பந்தர் பெருகுஆர்வத்து இன்புஉற்றார்.
பொழிப்புரை : திருநாகேச்சரத்தில்
வீற்றிருக்கும் செம்பொன்மலை போன்ற கரிய யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட பெருமானை
வணங்கி, அரிய ஞானம் விளங்கும்
செந்தமிழின் இனிய திருப்பதிகத்தைப் பாடி அருள் செய்து, பெருகும் அன்பினால் இன்பம்
ஆர்ந்திருந்தார்.
இப்பதியில் இதுபொழுது
அருளிய பதிகம் `தழை கொள்' (தி.2 ப.119) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணில்
அமைந்த பதிகமாகும்.
பெ.
பு. பாடல் எண் : 412
மாநாகம்
அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி
நாள்நாளும்
பரவுவார் பிணிதீர்க்கும் நலம்போற்றிப்
பால்நாறும்
மணிவாயர் பரமர்திரு இடைமருதில்
பூநாறும்
புனற்பொன்னித் தடங்கரைபோய்ப் புகுகின்றார்.
பொழிப்புரை : ஆதிசேடன் வழிபட்ட
தாமரை போன்ற திருவடிகளை வணங்கி,
நாளும்
வணங்குபவர்களின் பிணிகளைப் போக்கும் நன்மையினைப் போற்றி, ஞானப்பாலமுதின் மணம் கமழும்
திருவாயினையுடைய பிள்ளையார், மலர்கள் மலர்ந்து
மணம் வீசும் காவிரியின் வடகரை வழியாகச் சென்று, இறைவரின் `திருவிடைமருதூரில்' புகுகின்றவர்,
திருநாகேச்சரத்தில்
பாடிய பதிகம் `பொன்னேர் தரு' (தி.2 ப.24) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த
பதிகமாகும். `வல்வினை மாய்ந்தறும்' இன்புறும் என்பனவாகிய குறிப்புகள்
அமைந்திருத்தலின், `நாள் நாளும் பரவுவார்
பிணி தீர்க்கும் நலம் போற்றி' என்றார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகங்கள்
2.119 திருநாகேச்சுரம் பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தழைகொள்சந்
தும்அகிலும் மயிற்பீலி யும்சாதியின்
பழமும்உந்திப்
புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவுஇல்வானோர்
தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்து
அழகர்பாதம்
தொழுதுஏத்த வல்லார்க்கு அழகுஆகுமே.
பொழிப்புரை :தழைகளோடு கூடிய சந்தன
மரங்கள் , அகில் மரங்கள் , மயிற்பீலி , நல்லபழங்கள் ஆகியவற்றைப்புனலில் உந்தி
வந்து பாயும் பழமையான காவிரியின் தென்கரையில் வானோர் விலகாது தொழ அருள் நல்கும்
சிறப்புமிக்க நாகேச்சுரத்தில் விளங்கும் அழகர் பாதங்களைத் தொழுது போற்றவல்லார்க்கு
அழகு நலம் வாய்க்கும் .
பாடல்
எண் : 2
பெண்ணொர்பாகம்
அடையச் சடையில் புனல்பேணிய
வண்ணமான
பெருமான் மருவும் இடம், மண்உளார்
நண்ணிநாளும்
தொழுதுஏத்தி நன்குஎய்து நாகேச்சரம்
கண்ணினால்
காணவல்லார் அவர்கண் உடையார்களே.
பொழிப்புரை :ஒருபாகத்தே உமையையும்
, சடையில் நீர் வடிவான
கங்கையையும் கொண்ட அழகிய பெருமான் அமரும் இடம் ஆகிய , மண்ணுலகத்தோர் நாள்தோறும் வந்து வணங்கி
நன்மைகள் பெறும் நாகேச்சரத்தைக் கண்ணால் காண்பவரே கண்ணுடையராவர் .
பாடல்
எண் : 3
குறவர்கொல்லைப்
புனங்கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர்
பறவையாலப்
பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவம்நாறும்
பொழில்சூழ்ந்து அழகாய நாகேச்சரத்து
இறைவர்பாதம் தொழுதுஏத்த வல்லார்க்குஇடர்
இல்லையே.
பொழிப்புரை :குறவர் வாழும் குறிஞ்சிப்புனம்
, முல்லைநிலம்
ஆகியவற்றைக் கொள்ளைகொண்டு மணிகள் குலாவும் நீரைப் பரவச் செய்யும் காவிரித்
தென்கரையில் தேன்மணம் கமழும் பொழில் சூழ்ந்து அழகியதாய் விளங்கும் நாகேச்சுரத்து
இறைவர் பாதங்களைத் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்இல்லை .
பாடல்
எண் : 4
கூசநோக்காது
முன் சொன்ன பொய்கொடு வினை குற்றமும்
நாசம்
ஆக்கும் மனத்தார்கள் வந்துஆடு நாகேச்சரம்
தேசம்
ஆக்கும் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
நேசம்
ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.
பொழிப்புரை :ஆராயாது பிறர் மனம்
கூசுமாறு சொல்லும் பொய் , கொடிய வினைகளால் வந்த
குற்றங்கள் ஆகியவற்றைச் செய்யாத நன்மனம் உடைய அடியவர்கள் வந்து மகிழும்
நாகேச்சுரத்தை ஒளி விளங்கும் கோயிலாகக் கொண்ட செல்வன் திருவடிகளில் அன்புடையவர்
அறநெறிப் பாலராவர் .
பாடல்
எண் : 5
வம்புநாறும்
மலரும், மலைப் பண்டமும்
கொண்டுநீர்
பைம்பொன்வாரிக்
கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும்
அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
உம்பர்வானோர்
தொழச் சென்றுஉடனாவதும்உண்மையே.
பொழிப்புரை :மணம் கமழும்
மலர்களையும் , மலைப் பொருள் களையும்
வாரிக் கொண்டு , பைம் பொன் கொழித்து
வரும் நீரை யுடைய பழங்காவிரித் தென்கரையில் நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச் சரத்தை
நண்ணுபவர் உம்பர் வானவர் தொழச் சிவபிரானோடு ஒன்றாவர் .
பாடல்
எண் : 6
காளமேகந்
நிறக்கால னோடுஅந்தகன் கருடனும்
நீளமாய்நின்று
எய்தகாமனும் பட்டன நினைவுறின்,
நாளுநாதன்
அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
கோளுநாளும்
தீயவேனும் நன்குஆம் குறிக்கொண்மினே.
பொழிப்புரை :கரிய நிறமுடைய காலன், அந்தகன், கருடன், விலகி நின்று கணை எய்த காமன் ஆகியோரை
இறைவன் செற்றதை நினைந்து நாள்தோறும் சிவபிரான் உறையும் நாகேச்சுரத்தை நண்ணி
வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீயவேனும் நல்லன ஆகும் . அதனை மனத்தில்
கொள்மின் .
பாடல்
எண் : 7
வேய்உதிர்முத்
தொடுமத்த யானை மருப்பும்விராய்ப்
பாய்புனல்வந்து
அலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறும்திங்
களும்கூடி வந்துஆடு நாகேச்சரம்
மேயவன்தன்
அடிபோற்றி என்பார் வினைவீடுமே.
பொழிப்புரை :மூங்கில் முத்துக்கள்
, யானைமருப்பு
ஆகியவற்றுடன் வந்து வளம் செயும் காவிரியாற்றின் தென்கரையில் , நாயிறு , திங்கள் இரண்டும் வந்து வழிபடும்
நாகேச்சுரத்தில் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் போற்றி என வணங்குவார் வினைகள்
கெடும் .
பாடல்
எண் : 8
இலங்கைவேந்தன்
சிரம்பத்து இரட்டிஎழில் தோள்களும்
மலங்கிவீழம்
மலையால் அடர்த்தான் இடம்மல்கிய
நலங்கொள்சிந்தை
யவர்நாள்தொறும் நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை
உடையார் இடர்ஆயின மாயுமே.
பொழிப்புரை :இலங்கை வேந்தனாகிய
இராவணனின் பத்துத் தலைகள் இருபது தோள்கள் ஆகியன சிதையுமாறு மலையினால் அடர்த்த
இறைவன் இடம் ஆகிய நன்மை கெழுமிய மனமுடையோர் நாள்தோறும் நண்ணி வழிபடும்
நாகேச்சுரத்தை வலம் வந்து வழிபடும் சிந்தை உடையவர்களின் இடர்கள் கெடும் .
பாடல்
எண் : 9
கரியமாலும்
அயனும் அடியும்முடி காண்புஒணா
எரியதுஆகிந்
நிமிர்ந்தான் அமரும்இடம்,
ஈண்டுகா
விரியின்நீர்வந்து
அலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
பிரிவுஇலாதவ்
அடியார்கள் வானில் பிரியார்களே.
பொழிப்புரை :கருநிறமுடைய
திருமாலும், பிரமனும் அடிமுடி காண
இயலாதவாறு எரியுருவாக நிமிர்ந்த இறைவன் அமரும் இடம் ஆகிய , பெருகிவரும் காவிரி நீர் வந்தலைக்கும்
தென் கரையில் அமைந்த நாகேச்சுரத்தைப் பிரிவிலாத அடியவர் சிவலோகத்தைப் பிரியார் .
பாடல்
எண் : 10
தட்டுஇடுக்கி
உறிதூக்கிய கையினர், சாக்கியர்
கட்டுஉரைக்கும்
மொழிகொள்ளலும், வெள்ளில் அம்காட்டிடை
நட்டுஇருள்கண்
நடம்ஆடிய நாதன் நாகேச்சுரம்
மட்டுஇருக்கும்
மலர்இட்டு அடிவீழ்வது வாய்மையே.
பொழிப்புரை :தட்டைக் கக்கத்தில்
இடுக்கி உறிதூக்கிய கையின ராய்த்திரியும் சமணர் , சாக்கியர் , புனைந்து சொல்லும் மொழிகளைக் கொள்ளாது , இடுகாட்டில் நள்ளிருளில் நடனமாடும்
நாகேச்சுரத்து இறைவனைத் தேன் நிறைந்த மலர்களைத் தூவி அடி வீழ்ந்து வணங்கு வது
உண்மைப் பயனைத்தரும் .
பாடல்
எண் : 11
கந்தநாறும்
புனல்காவிரித் தென்கரைக் கண்ணுதல்
நந்திசேருந்
திருநாகேச் சரத்தின் மேல்,ஞானசம்
பந்தன்,நாவில் பனுவல்
இவைபத்தும் வல்லார்கள்போய்
எந்தைஈசன்
இருக்கும் உலகுஎய்த வல்லார்களே.
பொழிப்புரை :மணம் கமழும் நீரை
உடைய காவிரித் தென் கரையில் , கண்ணுதற் கடவுளாகிய
நந்தி எழுந்தருளிய திருநாகேச் சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் நாவினால் போற்றிய
இப்பனுவல் பத்தையும் வல்லவர் மறுமையில் எந்தையீசன் இருக்கும் சிவலோகம் எய்துவர் .
திருச்சிற்றம்பலம்
2.024 திருநாகேச்சுரம் பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பொன்நேர்
தருமே னியனே, புரியும்
மின்நேர்
சடையாய், விரைகா விரியின்
நன்னீர்
வயல்நா கேச்சுர நகரின்
மன்னே, எனவல் வினைமாய்ந்து
அறுமே.
பொழிப்புரை :பொன்னையொத்த மேனியனே, வளைத்துக் கட்டப்பட்ட மின்னல் போன்ற
சடையினை உடையவனே, மணத்துடன் வரும்
காவிரி நதியின் நல்ல நீரால் வளம் பெறும் வயல்களை உடைய நாகேச்சுரத் திருக்கோயிலில்
விளங்கும் மன்னவனே என்று ஏத்த, வலிய வினைகள் அழிந்து
கெடும்.
பாடல்
எண் : 2
சிறவார்
புரமூன்று எரியச் சிலையில்
உறஆர்
கணைஉய்த் தவனே, உயரும்
நறவார்
பொழில்நா கேச்சுர நகருள்
அறவா, எனவல் வினை ஆசுஅறுமே.
பொழிப்புரை :சிறவாதவராகிய
அசுரர்களின் முப்புரங்கள் எரியுமாறு வில்லிற் பொருந்திய நீண்ட கணையைச்
செலுத்தியவனே, உயர்ந்த தேன்
பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சுரக் கோயிலில் விளங்கும் அறவடிவினனே!
என்று கூறி ஏத்த, வலிய
வினைக்குற்றங்கள் அழிந்து கெடும்.
பாடல்
எண் : 3
கல்லால்
நிழல்மே யவனே, கரும்பின்
வில்லான்
எழில்வே வவிழித் தவனே,
நல்லார்
தொழுநா கேச்சுர நகரில்
செல்வா, எனவல் வினைதேய்ந்து
அறுமே.
பொழிப்புரை :கல்லால மரநிழலில்
எழுந்தருளியவனே, கரும்பு வில்லை
ஏந்திய மன்மதனின் அழகிய உடல் வேகுமாறு விழித்தவனே, நல்லவர்களால் வணங்கப்பெறும்
நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் செல்வனே என்று கூறி ஏத்த வலிய வினைகள்
தேய்ந்து கெடும்.
பாடல்
எண் : 4
நகுவான்
மதியோடு அரவும் புனலும்
தகுவார்
சடையின் முடியாய், தளவம்
நகுவார்
பொழில்நா கேச்சுர நகருள்
பகவா, எனவல் வினைபற்று
அறுமே.
பொழிப்புரை :விளங்குகின்ற
வானத்தில் ஊரும் திங்கள், பாம்பு, கங்கை ஆகியன பொருந்திய தக்க நீண்ட சடையை
உடையவனே, முல்லை மலர்கள்
விளங்கும் நீண்ட பொழில்கள் சூழ்ந்த நாகேச்சுரத் திருக்கோயிலில் விளங்கும் பெருமானே
என்று கூறி ஏத்த வலிய வினைகளின் தொடக்கு அறும்.
பாடல்
எண் : 5
கலைமான்
மறியும் கனலும் மழுவும்
நிலையா
கியகை யினனே, நிகழும்
நலமா
கியநா கேச்சுர நகருள்
தலைவா, எனவல் வினை தான்
அறுமே.
பொழிப்புரை :மான்கன்று, அழல், மழு ஆகியன நிலையாக விளங்கும் கைகளை
உடையவனே, நன்மை விளையும்
தலமாகிய நாகேச்சுரக்கோயிலில் விளங்கும் தலைவனே! என்று கூறி ஏத்த வலிய வினைகள்
கெடும்.
பாடல்
எண் : 6
குரையார்
கழல்ஆய நடங் குலவி
வரையான்
மகள்கா ணமகிழ்ந் தவனே,
நரையார்
விடையே றுநாகேச் சுரத்துஎம்
அரைசே, எனநீங் கும்அருந்
துயரே.
பொழிப்புரை :மலைமகளாகிய
பார்வதிதேவி கண்டு மகிழ, கால்களில் ஒலிக்கின்ற
வீரக்கழல்கள் ஆட நடனம் ஆடி மகிழ்பவனே, வெண்ணிறமான
விடையின்மீது ஏறி நாகேச்சுரத்துள் விளங்கும் அரசனே! என்று கூறி ஏத்த, நீங்குதற்கு அரியவாய் வரும் துன்பங்கள்
கெடும்.
பாடல்
எண் : 7
முடைஆர்
தருவெண் தலைகொண்டு உலகில்
கடைஆர்
பலி கொண்டு உழல்கா ரணனே,
நடைஆர்
தருநா கேச்சுர நகருள்
சடையா, என வல்வினை
தான்அறுமே.
பொழிப்புரை :முடை நாற்றம்
பொருந்திய வெள்ளிய தலையோட்டை ஏந்தி உலகில் பலர் வீட்டு வாயில்களிலும் பலி கொண்டு
உழலும் உலகக்காரணனே, நாகேச்சுரக் கோயிலுள்
எழுந்தருளிய சடையனே! என்று கூறி ஏத்த, வலிய
வினைகள் கெடும்.
பாடல்
எண் : 8
ஓயா
தஅரக் கன் நொடிந்து அலற
நீஆர்
அருள்செய் துநிகழ்ந் தவனே,
வாயா
ரவழுத் துவர்நா கேச்சுரத்
தாயே, எனவல் வினைதான்
அறுமே.
பொழிப்புரை :தன் வலிமையால்
இடைவிடாது போர்புரியும் இராவணன் மனம் உடைந்து அலற நீ அவனுக்கு அரிய அருளைச் செய்து
மனம் இளகுதலாகிய உன் நடை முறையைக் காட்டியவன், என்று உன்னைப் பலரும் வாயாரவாழ்த்துவர்.
நாகேச்சுரத்தில்
எழுந்தருளிய இறைவனே! என உன்னை நினைந்து போற்றுவார் வலிய வினைகள் கெடும்.
பாடல்
எண் : 9
நெடியா
னொடுநான் முகன்நே டல்உறச்
சுடுமால்
எரியாய் நிமிர்சோ தியனே,
நடுமா
வயல்நா கேச்சுர நகரே
இடமா
உறைவாய் எனஇன்பு உறுமே.
பொழிப்புரை :திருமாலும், பிரமனும் அடிமுடி தேடலை மேற் கொள்ளச்
சுடுகின்ற பெரிய தீப்பிழம்பாய் எழுந்து நின்ற ஒளி வடிவினனே, நாற்று நடத்தக்க பெரிய வயல்களைக்
கொண்டுள்ள நாகேச்சுரத்துக் கோயிலை உனக்குரிய கோயிலாகக் கொண்டு உறைபவனே என்று போற்ற
அவன் இன்புறுவான்.
பாடல்
எண் : 10
மலம்பா
வியகை யொடுமண் டையதுஉண்
கலம்பா
வியர்,கட் டுரைவிட்டு
உலகில்
நலம்பா
வியநா கேச்சுர நகருள்
சிலம்பா, எனத்தீ வினைதேய்ந்து
அறுமே.
பொழிப்புரை :அழுக்கேறிய கையினராய்
உணவுகொள்ள மண்டை முதலான உண்கலங்களைப் பயன்படுத்தும் சமண, புத்தர்களின் பொய்மொழிகளை விடுத்து, உலகின்கண் நன்மைகள் வளர
நாகேச்சுரக்கோயிலுள் எழுந்தருளிய கயிலை மலையானே! எனப் போற்றுவார் தீவினைகள்
தேய்ந்து கெடும்.
பாடல்
எண் : 11
கலம்ஆர்
கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலம்ஆர்
தருசெந் தமிழின் விரகன்
நலம்ஆர்
தருநா கேச்சுரத்து அரனைச்
சொலமா
லைகள்சொல் ல,நிலா வினையே.
பொழிப்புரை :மரக்கலங்கள் பல
நிறைந்த கடல் சூழ்ந்த தலங்களில் சிறந்த காழிப்பதிக்குத் தலைவனும் செந்தமிழ்
விரகனும் ஆகிய ஞானசம்பந்தன் நன்மைகள் நிறைந்த நாகேச்சுரத்து அரனைப் போற்றிச் சொன்ன
பாமாலைகளாகிய இப்பதிகத்தை இசையுடன் ஓத வினைகள் நில்லா.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 192
எறிபுனல்பொன்
மணிசிதறும் திரைநீர்ப் பொன்னி
இடைமருதைச்
சென்றுஎய்தி, அன்பி னோடு
மறிவிரவு
கரத்தாரை வணங்கி, வைகி,
வண்தமிழ்ப்பா மாலைபல
மகிழச் சாத்தி,
பொறிஅரவம்
புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்
போற்றி,அருந் தமிழ்மாலை
புனைந்து போந்து,
செறிவிரைநன்
மலர்ச்சோலைப் பழையாறு எய்தி,
திருச்சத்தி
முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.
பொழிப்புரை : பின், அலை எறியும் நீரால் பொன்னையும் மணிகளையும்
கொழிக்கும் அலைகளையுடைய காவிரிக் கரையில் உள்ள திருவிடைமருதூரைச் சென்றடைந்து, மான் கன்றைக் கையில் உடைய இறைவரை அன்பு
மிக வணங்கி, அங்கே தங்கி, இசையாலும், பொருண்மையாலும் வளமை மிக்க தமிழ்ப்பதிக
மாலை பலவற்றையும் மகிழ்ந்து பாடிப் போற்றி, புள்ளிகளையுடைய பாம்புகளை அணிந்த
இறைவரைத் திருநாகேச்சுரத்தில் வணங்கி, அரிய
தமிழ் மாலை பாடிச் சென்று, மணம் நிரம்பிய நல்ல
மலர்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த பழையாறை எனும் திருப்பதியை அடைந்து, பின் திருச்சத்திமுற்றத்தை அடைந்தார்.
இப்பாடலில்
திருச்சத்திமுற்றத்தை அடைதற்கு முன் குறிக்கப் பெற்ற திருப்பதிகள் மூன்றாம்.
இவற்றில் அருளிய திருப்பதிகங்கள்:
1. திருவிடைமருதூர்:
(அ). `காடுடை` (தி.4 ப.35)- திருநேரிசை.
(ஆ). `பாசம் ஒன்று இலராய்` (தி.5 ப.14) - திருக்குறுந்தொகை. (இ). `பறையின் ஓசையும்` (தி.5 ப.15) - திருக்குறுந்தொகை.
(ஈ). `சூலப்படை உடையார்` (தி.6 ப.16)- திருத்தாண்டகம்.
(உ). `ஆறுசடைக்கணிவர்` (தி.6 ப.17) – திருத்தாண்டகம்.
2. திருநாகேச்சரம்:
(அ). `கச்சைசேர்` (தி.4 ப.66)- திருநேரிசை.
(ஆ). `நல்லர்`(தி.5 ப.52) - திருக்குறுந்தொகை.
(இ). `தாயவனை`(தி.6 ப.66) - திருத்தாண்டகம்.
3. திருப்பழையாறை:
இத்திருப்பதிக்கு நாவரசர் இருமுறை எழுந்தருளுகின்றார்.(தி.12 திருநாவுக்கரசர் புராணம், 215) இதுபொழுது பதிகம்
அருளப் பெறவில்லை.
திருநாவுக்கரசர்
திருப்பதிகங்கள்
4. 066 திருநாகேச்சரம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கச்சைசேர்
அரவர் போலும், கறைஅணி மிடறர் போலும்,
பிச்சைகொண்டு
உண்பர் போலும், பேர்அரு ளாளர் போலும்,
இச்சையால்
மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு
இனியர் போலும், நாகஈச் சரவ னாரே.
பொழிப்புரை : திருநாகேச்சுரத்துப்
பெருமான், பாம்புக் கச்சை உடையவராய், நீலகண்டராய், பிச்சை எடுத்து உண்பவராய், பேரருளாளராய், விருப்போடு பூக்களைத் தூவி இரவும்
பகலும் தம்மை விரும்பி வழிபடுபவர்களுக்கு இனியராய் உள்ளார்.
பாடல்
எண் : 2
வேடுஉறு
வேடர் ஆகி விசயனோடு எய்தார்
போலும்,
காடுஉறு
பதியர் போலும், கடிபுனல் கங்கை நங்கை
சேடுஎறி
சடையர் போலும், தீவினை தீர்க்க வல்ல
நாடுஅறி
புகழர் போலும், நாகஈச் சரவ னாரே.
பொழிப்புரை : திருநாகேச்சுரத்துப்
பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில்
அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க
வல்லவராய், அதனால் உலகறிந்த
புகழை உடையவராய் உள்ளார்.
பாடல்
எண் : 3
கல்துணை
வில்லது ஆகக் கடிஅரண் செற்றார்
போலும்,
பொன்துணைப்
பாதர் போலும், புலிஅதள் உடையர்
போலும்,
சொல்துணை
மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு
எல்லாம்
நல்துணை
ஆவர் போலும், நாகஈச் சரவ னாரே.
பொழிப்புரை : திருநாகேச்சுரத்துப்
பெருமான் மலையையே தமக்குத் துணையான வில்லாகக் கொண்டு காவல் அமைந்த முப்புரங்களை
அம்பு எய்து அழித்தவராய், பொன்னுக்கு ஒப்பான
திருவடிகளை உடையவராய், புலித்தோல் ஆடையராய், வேதத்துக்குச் சமமான பாமாலைகளைக் கொண்டு
தொழுது வழிபடுபவர்க் கெல்லாம் மேம்பட்ட துணைவராவார்.
பாடல்
எண் : 4
கொம்புஅனாள்
பாகர் போலும், கொடிஉடை விடையர்
போலும்,
செம்பொன்ஆர்
உருவர் போலும், திகழ்திரு நீற்றர்
போலும்,
எம்பிரான்
எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கு
அன்பர் போலும், நாகஈச் சரவ னாரே.
பொழிப்புரை : பார்வதி பாகராய், காளை எழுதிய கொடியினராய், செம்பொன்போன்ற நிறத்தினராய், விளங்கும் திருநீற்றினராய், எம் பெருமானே! எம்மை அடிமை கொள்ளும்
இறைவனே! என்று தம்மை விரும்பும் அடியார்களுக்கு அன்பராய் உள்ளார்.
பாடல்
எண் : 5
கடகரி
உரியர் போலும், கனல்மழு வாளர் போலும்,
படஅரவு
அரையர் போலும், பாரிடம் பலவுங்
கூடிக்
குடம்உடை
முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும்
நடம் நவில்
அடிகள் போலும், நாகஈச் சரவ னாரே.
பொழிப்புரை : யானைத் தோலைப்
போர்த்தவராய், கனல் வீசும்
மழுப்படையை ஏந்தியவராய், படம் எடுக்கும்
பாம்பினை இடையில் கட்டியவராய், பூதங்கள் பலவும்
கூடிக் குடமுழாவை ஒலிப்பப் பேய்கள் பாட நாடோறும் கூத்து நிகழ்த்தும் தலைவராய்
உள்ளார் திருநாகேச்சுரப் பெருமான் .
பாடல்
எண் : 6
பிறைஉறு
சடையர் போலும், பெண்ஒரு பாகர் போலும்,
மறைஉறு
மொழியர் போலும், நான்மறை யவன் தனோடும்
முறைமுறை
அமரர் கூடி முடிகளால் வணங்க
நின்ற
நறவுஅமர்
கழலர் போலும், நாகஈச் சரவ னாரே.
பொழிப்புரை : திருநாகேச்சுரப்
பெருமான் பிறைதங்கும் சடையினராய்ப் பார்வதிபாகராய், வேதங்களை ஓதுபவராய், திருமாலோடும் பிரமனோடும் தேவர்கள்
முறையாகக் கூடித் தம் தலைகளால் வணங்கும் தேனைப்போல விரும்பத்தக்க திருவடிகளை
உடையவராய் உள்ளார்.
பாடல்
எண் : 7
வஞ்சகர்க்கு
அரியர் போலும், மருவினோர்க்கு எளியர்
போலும்,
குஞ்சரத்து
உரியர் போலும், கூற்றினைக் குமைப்பர்
போலும்,
விஞ்சையர்
இரிய அன்று வேலைவாய் வந்து
எழுந்த
நஞ்சுஅணி
மிடற்றர் போலும், நாகஈச் சரவ னாரே.
பொழிப்புரை : திருநாகேச்சுரத்துப்
பெருமான் வஞ்சகர்களுக்கு அரியராய்,
தம்மை
விரும்பிய அடியவர்களுக்கு எளியராய்,
யானைத்தோலைப்
போர்த்தவராய், கூற்றுவனை
ஒறுத்தவராய், தேவர்கள் அஞ்சி
ஓடுமாறு கடலில் தோன்றிப் பரவிய விடம் அணி கண்டராய் உள்ளார்.
பாடல்
எண் : 8
போகம்ஆர்
மோடி கொங்கை புணர்தரு புனிதர்
போலும்,
வேகம்ஆர்
விடையர் போலும், வெண்பொடி ஆடு மேனிப்
பாகம்
மால்உடையர் போலும், பருப்பத வில்லர்
போலும்,
நாகம்நாண்
உடையர் போலும், நாகஈச்ச சரவ னாரே.
பொழிப்புரை : திருநாகேச்சுரத்துப்
பெருமான் இன்பம் நிறைந்த காளியின் கொங்கைகளைத் தழுவும் புனிதராய், விரைந்து செல்லும் காளையை உடையவராய், வெண்ணீறணிந்த திருமேனியின் ஒருபாகமாகத்
திருமாலை உடையவராய், மேருமலையாகிய
வில்லையும், பாம்பாகிய நாணையும்
உடையவராய் உள்ளார்.
பாடல்
எண் : 9
கொக்கரை
தாளம் வீணை பாணிசெய் குழகர்
போலும்,
அக்குஅரை
அணிவர் போலும், ஐந்தலை அரவர் போலும்,
வக்கரை
அமர்வர் போலும், மாதரை மையல் செய்யும்
நக்குஅரை
உருவர் போலும், நாகஈச் சரவ னாரே.
பொழிப்புரை : திருநாகேச்சுரத்துப்
பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக்
கூத்து நிகழ்த்தும் இளையராய், சங்கு மணியை இடையில்
அணிபவராய், ஐந்து தலைகளை உடைய
பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத்
திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை
மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.
பாடல்
எண் : 10
வின்மையால்
புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார்
போலும்,
தன்மையால்
அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர்
போலும்,
வன்மையால்
மலை எடுத்தான் வலியினைத் தொலைவித்து
ஆங்கே
நன்மையால்
அளிப்பர் போலும், நாகஈச் சரவ னாரே.
பொழிப்புரை : திருநாகேச்சுரத்துப்
பெருமான் தம் வில்லாற்றலால் மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவராய், தம் பண்பினாலே தேவர்களுடைய
தலைவர்களுக்கும் தலைவராய், தன் உடல் வலிமையாலே
கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனது வலிமையைப் போக்கி அவ்விடத்திலேயே
அவனுக்கு நன்மை ஏற்படும் வகையில் அருள் செய்தவராவார்.
திருச்சிற்றம்பலம்
5. 052 திருநாகேச்சரம் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நல்லர், நல்லதுஓர்
நாகம்கொண்டு ஆட்டுவர்,
வல்லர், வல்வினை தீர்க்கும்
மருந்துகள்,
பல்இல்
ஓடுகை ஏந்திப் பலிதிரி
செல்வர்
போல்திரு நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
, நல்லவர் ; நல்லதோர் நாகத்தைக் கையிற்கொண்டு
ஆட்டுவர் ; வல்வினைகளைத்
தீர்க்கும் மருந்துகள் அளிக்க வல்லவர் ; பல்லில்லாத
ஓடு கையேந்திப் பலி திரிகின்ற அருட்செல்வர் ஆவர் .
பாடல்
எண் : 2
நாவ
லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி
வந்து வணங்கி வினையொடு
பாவம்
ஆயின பற்றுஅறு வித்திடும்
தேவர்
போல்திரு நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
நாவலம் பெருந்தீவாகிய ( ஜம்புத்வீபம் ) காட்டிலுள்ளவர் . அனைவரும் மேவிவந்து
வணங்கி , வினையொடு
பாவமாயினவற்றைப் பற்றறுவித்திடும் தேவர் ஆவர் .
பாடல்
எண் : 3
ஓதம்
ஆர்கட லின்விடம் உண்டவர்,
ஆதி
யார்அய னோடுஅம ரர்க்குஎலாம்,
மாதொர்
கூறர், மழுவலன் ஏந்திய
நாதர்
போல்திரு நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
அலைகள் பொருந்திய கடலின் விடம் உண்டவர் ; அயன்
தேவர்களாதியாகிய உலகங்களுக்கெல்லாம் ஆதியாயவர் ; உமையொரு பாகர் ; மழுவினை வலக்கையில் ஏந்திய நாதர் ஆவர் .
பாடல்
எண் : 4
சந்தி
ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து
சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த
லைஅர வின்பணி கொண்டுஅருள்
மைந்தர்
போல்மணி நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
சந்திரனோடு சூரியனும் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின் ஐந்துதலை உடைய அரவின்
பணியையும் கொண்டருளும் மைந்தர் ( பெருவீரர் ) ஆவர்.
பாடல்
எண் : 5
பண்டொர்
நாள்இகழ் வான்பழித் தக்கனார்
கொண்ட
வேள்விக் குமண்டை அதுகெடத்
தண்ட
மா,விதா தாவின் தலைகொண்ட
செண்டர்
போல்,திரு நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
, முன்னோர் நாளில்
குற்றங்களை உடைய தக்கன் இகழ்வதற்காகக் கொண்ட வேள்வியினைக் கெடும்படியாகச்
செய்தவரும் , தண்டனையாகப் பிரம
தேவனின் தலையைக்கொண்ட செண்டு உடையவரும் ஆவர் .
பாடல்
எண் : 6
வம்பு
பூங்குழல் மாது மறுக,ஓர்
கம்ப
யானை உரித்த கரத்தினர்,
செம்பொன்
ஆர்இத ழிம்மலர்ச் செஞ்சடை
நம்பர்
போல்திரு நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
புதிய பூக்களையணிந்த குழல் உடைய உமாதேவியார் மனம் சுழல , ஒப்பற்றதாய் நினைப்பாரை
நடுங்கச்செய்யும் இயல்பினதாய யானையை உரித்த திருக்கையினர் ; செம்பொன்னைப் போன்ற கொன்றை
மலர்களையணிந்த செஞ் சடையை உடைய நம்பர் ஆவர் .
பாடல்
எண் : 7
மானை
ஏந்திய கையினர், மைஅறு
ஞானச்
சோதியர், ஆதியர், நாமந்தான்
ஆன
அஞ்செழுத்து ஓதவந்து அண்ணிக்கும்
தேனர்
போல்திரு நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
மானை ஏந்திய கையை உடையவர் ; குற்றமற்ற
அறிவொளியாயவர் ; உலகிற்கெல்லாம்
ஆதியாயவர் ; தம் திருநாமமாகிய
அஞ்செழுத்தை ஓதினால் வந்து அண்ணிக்கின்ற தேனும் ஆவர் .
பாடல்
எண் : 8
கழல்கொள்
காலினர், காலனைக் காய்ந்தவர்,
தழல்கொள்
மேனியர், சாந்தவெண் ணீறணி
அழகர், ஆல்நிழல் கீழ்அறம்
ஓதிய
குழகர்
போல்குளிர் நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
கழல்கொண்ட சேவடியினர் ; காலனைக்
காய்ந்தருளியவர் ; தழல் வண்ணம் கொண்ட
செம்மேனியர் ; வெண்ணீற்றுப்பொடியணிந்த
அழகர் ; கல்லால நிழற் கீழ்
இருந்து அறம் ஓதிய குழகர் ஆவர் .
பாடல்
எண் : 9
வட்ட
மாமதில் மூன்றுடன் வல்அரண்
சுட்ட
செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர்
குட்ட
வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர்
போல்திரு நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
வட்டமாக வளைந்த மதில் மூன்றுடன் கூடிய வல்லரண்களைச் சுட்டசெய்கையர் ; ஆயினும் தம்மை உள்ளத்தே சூழ்ந்தவர்களின்
திரண்ட வல்வினைத் துன்பங்களைத் தீர்த்துக் குளிரும்படிச்செய்யும் உயர்ந்தோர் ஆவர்
.
பாடல்
எண் : 10
தூர்த்தன்
தோள்முடி தாளும் தொலையவே
சேர்த்தி
னார்திருப் பாதத்து ஒருவிரல்
ஆர்த்து
வந்துஉல கத்தவர் ஆடிடும்
தீர்த்தர்
போல்திரு நாகேச் சரவரே.
பொழிப்புரை : திருநாகேச்சரத்திறைவர்
மிக்க கொடியவனாகிய இராவணனது தோள்களும் , முடிகளும்
, தாள்களும் தொலையுமாறு
திருப்பாதத்து ஒரு விரலைச் சேர்த்தியவர் ; உலகிலுள்ளோரெலாம் ஆர்த்துவந்து
நீராடிடும் தீர்த்த வடிவினர் ஆவர் .
திருச்சிற்றம்பலம்
6. 066 திருநாகேச்சரம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தாயவனை, வானோர்க்கும் ஏனோ
ருக்கும்
தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம்
ஆயவனை, சேயவனை, அணியான் தன்னை,
அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணா
மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள்
மந்திரனை, தந்திரனை, வளரா நின்ற
தீயவனை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :தேவர்களுக்கும்
மற்றவர்களுக்கும் தாய் போல்பவனாய் ,
எல்லாருக்கும்
தலைவனாய் , மலைகளில் உறைபவனாய் , எல்லா உலகங்களும் ஆகியவனாய் , அடியார் அல்லாதாருக்குத்
தீப்போன்றவனாய்ச் சேய்மையிலுள்ளவனாய் , அடியார்களுக்கு
நிழல் போன்றவனாய் அண்மையில் உள்ளவனாய் , பிறரால்
அறியப்படாத வியத்தகு பண்பு செயல்களை உடையவனாய் , வேதம் ஓதுபவனாய் , வேதியர்கள் தியானிக்கும் மந்திரவடிவாய்
உள்ளவனாய் , ஆகமமாக இருப்பவனாய் , வேள்வித்தீயாய் இருப்பவனாய் , திருநாகேச்சரத்தில் உள்ள பெருமானை
அடைந்து வழிபடாதவர்கள் நல்ல வழியில் செல்லாதவராவர் .
பாடல்
எண் : 2
உரித்தானை
மதவேழம் தன்னை, மின்ஆர்
ஒளிமுடிஎம் பெருமானை, உமைஓர் பாகம்
தரித்தானை, தரியலர்தம் புரம்எய்
தானை,
தன்அடைந்தார்
தம்வினைநோய் பாவம் எல்லாம்
அரித்தானை, ஆல்அதன்கீழ் இருந்து
நால்வர்க்கு
அறம்,பொருள், வீடு, இன்பம், ஆறுஅங்கம், வேதம்
தெரித்தானை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :மத யானைத் தோலை
உரித்தவனாய், மின்னல் போல ஒளி
வீசும் சடை முடி உடையவனாய், பார்வதி பாகனாய் , பகைவர் மும்மதில்களை எரித்தவனாய், அடியார்களுடைய வினைப் பயனாம்
நோய்களையும் பாவங்களையும் போக்கியவனாய், கல்லால
மரத்தின் அடியில் அமர்ந்து முனிவர் நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள்களையும் அவற்றை
உணரும் கருவிகளாகிய நான்கு வேதம் ஆறு அங்கங்கள் ஆகியவற்றையும் உபதேசித்தவனாய்த்
திருநாகேச்சரத்தில் உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே .
பாடல்
எண் : 3
கார்ஆனை
உரிபோர்த்த கடவுள் தன்னை,
காதலித்து நினையாத
கயவர் நெஞ்சில்
வாரானை, மதிப்பவர்தம் மனத்து
உளானை,
மற்றுஒருவர்
தன்ஒப்பார் ஒப்பு இலாத
ஏரானை, இமையவர்தம் பெருமான்
தன்னை,
இயல்பாகி உலகுஎலாம்
நிறைந்து மிக்க
சீரானை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :யானைத்தோல் போர்த்த
கடவுளாய் , தன்னை விரும்பி
நினையாத கீழ் மக்கள் உள்ளத்துக்கண் வாராதானாய் , தன்னை மதிப்பவர் மனத்து இருப்பவனாய் , தன்னிகர் இல்லாத அழகனாய் , தேவர்கள் தலைவனாய் , இயல்பாகவே உலகமெல்லாம் நிறைந்து
விளங்கும் பொருள்சேர் புகழ் உடையவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே .
பாடல்
எண் : 4
தலையானை, எவ்வுலகும் தான்
ஆனானை,
தன்உருவம் யாவர்க்கும்
அறிய ஒண்ணா
நிலையானை, நேசர்க்கு நேசன்
தன்னை,
நீள்வான முகடுஅதனைத்
தாங்கி நின்ற
மலையானை, வரிஅரவு நாணாக்
கோத்து
வல்அசுரர்
புரமூன்றும் மடிய எய்த
சிலையானை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :தலைவனாய் , எல்லா உலகும் தானே ஆனவனாய் , தன் உருவத்தைப் பிறர் அறியமுடியாத
நிலையினனாய் , அடியார்க்கு அன்பனாய்
, நீண்ட வானத்து
உச்சியைத் தடுத்து ஓங்கிய மலைகளானவனாய் , கோடுகளை
உடைய பாம்பினை நாணாகக் கட்டி , கொடிய அசுரருடைய
மும்மதில்களையும் அழியுமாறு அம்பு எய்த வில்லை ஏந்தியவனாய்த் திருநாகேச்சரத்து
உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே .
பாடல்
எண் : 5
மெய்யானைத்
தன்பக்கல் விரும்பு வார்க்கு,
விரும்பாத அரும்பாவி
யவர்கட்கு என்றும்
பொய்யானை, புறங்காட்டில் ஆட
லானை,
பொன்பொலிந்த சடையானை, பொடிகொள் பூதிப்
பையானை, பைஅரவம் அசைத்தான்
தன்னை,
பரந்தானை, பவளமால் வரைபோல்
மேனிச்
செய்யானை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :தன்பக்கல்
விருப்பமுடைய அடியவர்களுக்கு உண்மையானவனாய் , தன்னை விரும்பாத கொடிய பாவிகளுக்குப்
பொய்யானவனாய், சுடுகாட்டில்
கூத்தாடுபவனாய், பொன் போல ஒளிவீசும்
சடையினனாய் , திருநீறு நிறைந்த
பையை உடையவனாய் , பாம்பினை அணிந்தவனாய்
, எங்கும்
பரவியிருப்பவனாய் , பவள மலைபோலச் சிவந்த
திருமேனியை உடையவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்
கண் சேராதாரே .
பாடல்
எண் : 6
துறந்தானை
அறம்புரியாத் துரிசர் தம்மை,
தோத்திரங்கள்
பலசொல்லி வானோர் ஏத்த
நிறைந்தானை, நீர்நிலந்தீ
வெளிகாற்று ஆகி
நிற்பனவும்
நடப்பனவும் ஆயி னானை,
மறந்தானைத்
தன்நினையா வஞ்சர் தம்மை,
அஞ்செழுத்தும்
வாய்நவில வல்லோர்க்கு என்றும்
சிறந்தானை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :அறத்தை விரும்பாத
குற்றமுடையவர்களைக் கைவிட்டவனாய் ,
தேவர்கள்
பலவாகத் துதித்துப்புகழுமாறு , எல்லா முதன்மைகளாலும்
நிறைந்தவனாய் , ஐம்பூதமும் , அவற்றின் காரியமாகிய சராசரமும்
ஆகியவனாய் , தன்னைத் தியானிக்காத
வஞ்சர்களை மறந்து திருவைந்தெழுத்தை ஓதுபவர்களுக்கு எக்காலத்திலும் சிறந்து
உதவுபவனாய் , திருநாகேச்சரத்து
உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .
பாடல்
எண் : 7
மறையானை, மால்விடைஒன்று ஊர்தி
யானை,
மால்கடல்நஞ்சு
உண்டானை, வானோர் தங்கள்
இறையானை, என்பிறவித்
துயர்தீர்ப் பானை,
இன்அமுதை, மன்னியசீர் ஏகம்
பத்தில்
உறைவானை, ஒருவரும்ஈங்கு அறியா
வண்ணம்
என்உள்ளத்து உள்ளே
ஒளித்து வைத்த
சிறையானை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :வேதப் பொருளாய்
உள்ளவனாய் , பெரிய காளை வாகனனாய், பெரிய கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாய், தேவர்கள் தலைவனாய், என் பிறவித்துயரைப் போக்குபவனாய், நிலைபெற்ற சிறப்பினை உடைய ஏகம்பத்தில்
இனிய அமுதமாக உறைபவனாய், மற்றவருக்குப்
புலப்படாத வகையில் அடியேன் உள்ளத்தினுள்ளே சிறை செய்து வைக்கப்பட்டவனாய், திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச்
சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.
பாடல்
எண் : 8
எய்தானைப்
புரமூன்றும் இமைக்கும் போதில்,
இருவிசும்பில்
வரும்புனலைத் திருவார் சென்னிப்
பெய்தானை, பிறப்புஇலியை, அறத்தில் நில்லாப்
பிரமன்தன்
சிரம்ஒன்றைக் கரம்ஒன் றினால்
கொய்தானை, கூத்துஆட வல்லான்
தன்னை,
குறியிலாக் கொடியேனை
அடியே னாகச்
செய்தானை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :இமைகொட்டும்
நேரத்தில் மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனாய் , வானிலிருந்து இறங்கிய கங்கை வெள்ளத்தை
அழகிய தலையில் ஏற்றவனாய் , பிறப்பில்லாதவனாய் , அறவழியில் நில்லாத பிரமனுடைய தலை
ஒன்றனைத் தன் கை ஒன்றினால் நீக்கியவனாய் , கூத்து நிகழ்த்துதலில் வல்லவனாய் , குறிக்கோள் ஏதும் இல்லாத கொடியவனான
என்னை அடியவனாகச் செய்தானாய் உள்ள திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார்
நன்னெறிக் கண் சேராதாரே .
பாடல்
எண் : 9
அளியானை, அண்ணிக்கும் ஆன்பால்
தன்னை,
வான்பயிரை, அப்பயிரின் வாட்டம்
தீர்க்கும்
துளியானை, அயன்மாலும் தேடிக்
காணாச்
சுடரானை, துரிசுஅறத் தொண்டு
பட்டார்க்கு
எளியானை, யாவர்க்கும் அரியான்
தன்னை,
இன்கரும்பின் தன்உள்ளால்
இருந்த தேறல்
தெளியானை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :கருணை உடையவனாய் , இனிக்கும் பசுப்பால் போல்பவனாய் , உலகில் வளரும் பயிர்களாய் , அப்பயிர்களின் வாட்டம் தீர்க்கும்
மழையாய் உள்ளவனாய் , பிரமனும் , திருமாலும் தேடியும் காண முடியாத
தீப்பிழம்பாய் , குற்றம் தீரத்தொண்டு
செய்யும் அடியவருக்கு எளியவனாய் ,
மற்றயாவருக்கும்
அரியவனாய் , இனிய
கருப்பஞ்சாற்றின் தெளிவு போன்றவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச்
சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .
பாடல்
எண் : 10
சீர்த்தானை, உலகுஎழும் சிறந்து
போற்றச்
சிறந்தானை, நிறைந்துஓங்கு
செல்வன் தன்னை,
பார்த்தானை
மதனவேள் பொடியாய் வீழ,
பனிமதியஞ் சடையானை, புநிதன் தன்னை,
ஆர்த்துஓடி
மலைஎடுத்த அரக்கன் அஞ்ச
அருவிரலால்
அடர்த்தானை, அடைந்தோர் பாவம்
தீர்த்தானை, திருநாகேச் சரத்து
உளானைச்
சேராதார்
நன்னெறிக்கண் சேரா தாரே.
பொழிப்புரை :உலகங்கள் ஏழும்
பரவிப் போற்றும்படியான புகழுடையவனாய் , ஏனையோரினும் சிறந்தவனாய் , நிறைந்து உயரும் செல்வத்தனாய் , மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்
கண்ணால் பார்த்தவனாய், பிறை சூடிய
சடையினனாய், தூயோனாய் , ஆரவாரித்து ஓடிவந்து கயிலைமலையைப்
பெயர்த்த இராவணன் அஞ்சுமாறு , அவனைக் கால் விரல்
ஒன்றினால் நசுக்கியவனாய் , தன்னைச் சரணாக
அடைந்தவர்களின் பாவங்களைப் போக்குபவனாய் , உள்ள திருநாகேச்சரத்து உறையும்
பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே .
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
சுவாமிகள், திருவிடைமருதூர்ப் பெருமானைத் தொழுது, தொண்டர்களுடன் திருநாகேச்சரத்தை அடைந்து, பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.
(தி. 12 ஏயர்கோன். புரா. 5-66)
பெரிய
புராணப் பாடல் எண் : 65
மன்னும்
மருதின் அமர்ந்தவரை வணங்கி, மதுரச் சொல்மலர்கள்
பன்னிப்
புனைந்து, பணிந்து ஏத்தி, பரவிப் போந்து, தொண்டருடன்
அந்நல்
பதியில் இருந்து அகல்வார், அரனார் திருநா
கேச்சுரத்தை
முன்னிப்
புக்கு, வலங்கொண்டு, முதல்வர் திருத்தாள்
வணங்கினார்.
பொழிப்புரை : நிலைபெற்ற மருதமர
நிழலில் அமர்ந்தருளும் பெருமானாரை வணங்கி, இனிமை மிக்க சொல்மலர்களைக் கொண்டு
புனைந்த திருப்பதிகம் பாடிப் போற்றி வணங்கி, அப்பால் அடியார்கள் உடன்
அந்நற்பதியினின்றும் நீங்கிச் செல்வார், பெருமானாருடைய
திருநாகேச்சுரம் என்னும் திருப்பதியை நினைந்து, அங்குச் சென்று, கோயிலை வலங்கொண்டு பெருமானாரின்
திருவடிகளை வணங்கினார்.
பெ.
பு. பாடல் எண் : 66
பெருகும்
பதிகம் "பிறைஅணிவாள் நுதலாள்" பாடிப்
பெயர்ந்து,நிறை
திருவின்
மலியும் சிவபுரத்துத் தேவர் பெருமான்
கழல்வணங்கி,
உருகுஞ்
சிந்தை உடன் போந்தே, உமை ஓர் பாகர்
தாம்மகிழ்ந்து
மருவும்
பதிகள் பிறபணிந்து, கலய நல்லூர்
மருங்குஅணைந் தார்
பொழிப்புரை : வணங்கி அருள்பெருகும், `பிறையணி வாள் நுதலாள்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப்
பாடிப்போற்றி, அங்கிருந்து நீங்கிக்
குறைவற்ற செல்வமாய சிவம் நிறைந்து விளங்கும் சிவபுரம் என்னும் திருப்பதியில்
இருந்தருளும் தேவர் தலைவனாய சிவபெருமானின் திருவடிகளையும் வணங்கி, உருகிய சிந்தையுடன் வந்து, உமையொரு கூறராய பெருமான் மகிழ்ந்து
உறையும் பதிகள் பிறவும் பணிந்து,
திருக்கலயநல்லூர்
என்னும் திருப்பதியின் அருகாக வந்தருளினர்.
`பிறையணி வாள் நுதலாள்' எனத் தொடங்கும் பதிகம் பஞ்சமப்
பண்ணிலமைந்ததாகும் (தி.7 ப.99). சிவபுரத்தில் அருளிய பதிகம் கிடைத்
திலது. சிவபுரத்திற்கும் கலயநல்லூருக்கும் இடைப்பட்ட பதிகள் எவையெனத் தெரிந்தில.
சுந்தரர்
திருப்பதிகம்
7. 099 திருநாகேச்சரம் பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பிறைஅணி
வாள்நுதலாள் உமை யாள்அவள் பேழ்கணிக்க,
நிறையணி
நெஞ்சுஅனுங்க, நீல மால்விடம் உண்டதுஎன்னே,
குறைஅணி
குல்லைமுல்லை அளைந் துகுளிர் மாதவிமேல்
சிறைஅணி
வண்டுகள்சேர் திரு நாகேச் சரத்தானே.
பொழிப்புரை : சிறகுகளையுடைய அழகிய
வண்டுகள், இன்றி யமையாத, அழகிய துளசியிலும், முல்லை மலர்களிலும் மகரந்தத்தை அளைந்து, பின்பு குருக்கத்திக் கொடியின்மேல் சேர்கின்ற
திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ பிறைபோலும், அழகிய, ஒளிபொருந்திய நெற்றியை உடையவளாகிய
உமையவள் மருளவும், திட்பம் பொருந்திய
மனம் கலங்கவும், நீல நிறத்தை உடைய, பெரிய நஞ்சினை உண்டதற்குக் காரணம் யாது?
பாடல்
எண் : 2
அருந்தவ
மாமுனிவர்க்கு அருள் ஆகியொர் ஆல்அதன்கீழ்
இருந்துஅற
மேபுரிதற்கு இயல்பு ஆகியது என்னைகொலாம்,
குருந்துஅய
லேகுரவம் அர வின்எயிறு ஏற்றுஅரும்பச்
செருந்திசெம்
பொன்மலரும் திரு நாகேச் சரத்தானே.
பொழிப்புரை : குருந்த மரத்தின்
பக்கத்தில் குராமரம், பாம்பினது பல்லைத்
தாங்கினாற்போல அரும்புகளைத் தோற்றுவிக்க, செருந்தி
மரம், செம்பொன்போலும்
மலரைக் கொண்டு விளங்கும் திருநாகேச் சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, அரிய தவத்தையுடைய சிறந்த முனிவர்கள்மேல்
கருணை கூர்ந்து, ஓர் ஆலமரத்தின் கீழ்
இருந்து அறத்தைச் சொல்ல இசைந்ததற்குக் காரணம் யாது?
பாடல்
எண் : 3
பாலனது
ஆர்உயிர்மேல் பரி யாது பகைத்துஎழுந்த
காலனை
வீடுவித்துக் கருத்து ஆக்கியது என்னைகொலாம்,
கோல
மலர்க்குவளைக் கழு நீர்வயல் சூழ்கிடங்கில்
சேலொடு
வாளைகள்பாய் திரு நாகேச் சரத்தானே.
பொழிப்புரை : அழகிய குவளை
மலர்களையும், செங்கழுநீர்
மலர்களையும் உடைய வயல்களைச் சூழ்ந்துள்ள வாய்க்கால்களில், சேல் மீன்களும், வாளை மீன்களும் துள்ளுகின்ற
திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, சிறுவன் ஒருவன்மேல் இரக்கங் கொள்ளாது
பகைத்து, அவனது அரிய உயிரைக்
கவர வந்த இயமனை அழிவித்து, அச்சிறுவனுக்கு அருளை
வழங்கியதற்குக் காரணம் யாது?
பாடல்
எண் : 4
குன்ற
மலைக்குமரி கொடி ஏர்இடை யாள்வெருவ
வென்றி
மதகரியின் உரி போர்த்ததும் என்னைகொலாம்
முன்றில்
இளங்கமுகின் முது பாளை மதுஅளைந்து
தென்றல்
புகுந்துலவும் திரு நாகேச் சரத்தானே.
பொழிப்புரை : இல்லங்களின்
முன்னுள்ள இளைய கமுகமரத்தின் பெரிய பாளைகளில் கட்டப்பட்ட தேன் கூடுகளில் உள்ள தேனை, தென்றற் காற்றுத் துழாவி, தெருக்களில் வந்து உலவுகின்ற திருநாகேச்
சரத்தில் எழுந்தருளியிருப்பவனே,
நீ, பல குன்றுகளையுடைய இமய மலையின் மகளாகிய, கொடிபோலும் இடையையுடைய உமை அஞ்சும்படி, வெற்றியையும், மதத்தையும் உடைய யானையின் தோலை உரித்ததே
யன்றி, அதனைப் போர்வையாகப்
போர்த்துக் கொண்டதற்குக் காரணம் யாது?
பாடல்
எண் : 5
அரைவிரி
கோவணத்தோடு அரவு ஆர்த்துஒரு
நான்மறைநூல்
உரைபெரு
கவ்வுரைத்து அன்று உகந்துஅருள்
செய்தது என்னே
வரைதரு
மாமணியும் வரைச் சந்துஅகி
லோடும் உந்தித்
திரைபொரு
தண்பழனத் திரு நாகேச்
சரத்தானே.
பொழிப்புரை : மலைகள் தந்த சிறந்த
மாணிக்கங்களையும், அவற்றில் உள்ள
சந்தனக்கட்டை, அகிற்கட்டை
என்பவைகளுடன் தள்ளிக்கொண்டு வந்து,
அலைகள்
மோதுகின்ற, குளிர்ந்த வயல்களை
யுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, நீ, அரையின்கண், அகன்ற கோவணத்தோடு பாம்பைக்
கட்டிக்கொண்டு, ஒப்பற்ற நான்கு
வேதங்களின் பொருளை, அன்று விரிவாகச்
சொல்லி, அதனைக் கேட்டோரை
விரும்பி, அவருக்கு அருள்
செய்தற்குக் காரணம் யாது?
பாடல்
எண் : 6
தங்கிய
மாதவத்தின் தழல் வேள்வியின் நின்றுஎழுந்த
சிங்கமும்
நீள்புலியும் செழு மால்கரி யோடுஅலறப்
பொங்கிய
போர்புரிந்து பிளந்து ஈர்உரி போர்த்ததுஎன்னே
செங்கயல்
பாய்கழனித் திரு நாகேச் சரத்தானே.
பொழிப்புரை : செவ்விய கயல்மீன்கள்
துள்ளுகின்ற வயல்களை யுடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நிலைபெற்ற பெரிய தவத்தினால், வேள்வித்தீயினின்றும் தோன்றிய சிங்கமும், நீண்ட புலியும், பருத்த பெரிய யானையோடே கதறி அழியும்படி
மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின்றும்
உரித்த தோலைப் போர்த்த தற்குக் காரணம் யாது?
பாடல்
எண் : 7
நின்றஇம்
மாதவத்தை ஒழிப் பான்சென்று அணைந்துமிகப்
பொங்கிய
பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல்என்னே,
பங்கய
மாமலர்மேல் மது வுண்டுவண் தேன்முரலச்
செங்கயல்
பாய்வயல்சூழ் திரு நாகேச் சரத்தானே.
பொழிப்புரை : இப்பாடல், ஏடெழுதினோராற் பிழைபட்டதும் மிகையாகப்
பிரதிகளில் சேர்ந்தது போலும்! இதனை,
ஒன்பதாந்
திருப்பாடல் கொண்டு உணர்க.)
பாடல்
எண் : 8
வரிஅரவு
நாணதாக மா மேரு வில்லதாக
அரியன
முப்புரங்கள் அவை ஆரழல் ஊட்டல்என்னே
விரிதரு
மல்லிகையும் மலர்ச் சண்பக மும்அளைந்து
திரிதரு
வண்டுபண்செய் திரு நாகேச் சரத்தானே.
பொழிப்புரை : சோலைகளில் திரிகின்ற
வண்டுகள், மலரும் நிலையில் உள்ள
மல்லிகை மலரிலும், சண்பக மலரிலும்
மகரந்தத்தை அளைந்து, இசையைப் பாடுகின்ற
திருநாகேச்சரத்தில் எழுந்தருளி யிருப்பவனே, நீ, கீற்றுப் பொருந்திய பாம்பே நாணியாகவும், மாமேரு மலையே வில்லாகவும் கொண்டு, அரியவான மூன்று ஊர்களை, அரிய தீ உண்ணும்படி செய்ததற்குக் காரணம்
யாது?
பாடல்
எண் : 9
அங்குஇயல்
யோகுதனை அழிப் பான்சென்று அணைந்துமிகப்
பொங்கிய
பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல்என்னே,
பங்கய
மாமலர்மேல் மது உண்டுபண் வண்டுஅறையச்
செங்கயல்
நின்றுஉகளும் திரு நாகேச் சரத்தானே.
பொழிப்புரை : குளங்களில், தாமரை மலர்களின் மேல் வண்டுகள் தேனை உண்டு
இசையைப்பாட, செவ்விய கயல்மீன்கள், நிலைபெற்று நின்று துள்ளுகின்ற
திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, கயிலையின்கண் செய்த யோகத்தைக்
கெடுத்தற்குச் சென்று சேர்ந்து,
பெரிதும்
சினங்கொண்ட, மலர்க்கணையை உடைய
மன்மதன் சாம்பராகும்படி ஒரு கண்ணைத் திறந்ததற்குக் காரணம் யாது?
பாடல்
எண் : 10
குண்டரைக்
கூறைஇன்றித் திரி யும்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக்
கண்டதன்மை விரவு ஆக்கியது என்னைகொலோ
தொண்டுஇரைத்
துவணங்கித் தொழில் பூண்டுஅடி யார்பரவும்
தெண்திரைத்
தண்வயல்சூழ் திரு நாகேச் சரத்தானே.
பொழிப்புரை : அடியார்கள், அடிமைத்தொழில் பூண்டு, ஆர வாரித்து வணங்கித் துதிக்கின்ற, தெளிந்த அலைகளையுடைய, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த
திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப் பவனே, மூர்க்கரும், மனவலியுடையவரும் ஆகிய, உடையின்றித் திரியும் சமணரும், புத்தரும் என்னும் பேய்போல்வாரை, அவர் கண்டதே கண்ட தன்மையைப் பொருந்தச்
செய்ததற்குக் காரணம் யாது?
பாடல்
எண் : 11
கொங்குஅணை
வண்டுஅரற்றக் குயி லும்மயி லும்பயிலும்
தெங்கமழ்
பூம்பொழில்சூழ் திரு நாகேச் சரத்தானை
வங்க
மலிகடல்சூழ் வயல் நாவல ஊரன்சொன்ன
பங்கம்இல்
பாடல்வல்லார் அவர் தம்வினை பற்றுஅறுமே.
பொழிப்புரை : மகரந்தத்தை அடைந்த
வண்டுகள் ஒலிக்க, குயிலும், மயிலும் பாடுதலையும், ஆடுதலையும் செய்கின்ற, தேனினது மணங் கமழ்கின்ற பூஞ்சோலைகள்
சூழ்ந்த திருநாகேச்சரத்தில் எழுந் தருளியிருக்கின்ற இறைவனை, மரக்கலங்கள் நிறைந்த கடல்போலச்
சூழ்ந்துள்ள வயல்களையுடைய திருநாவலூரானாகிய நம்பியாரூரன் பாடிய, குறையில்லாத இப்பாடல்களைப் பாட
வல்லவர்களது வினை பற்றறக் கழியும்.
திருச்சிற்றம்பலம்
சிவ சிவ 💗
ReplyDelete