திரு முதுகுன்றம் - 0761. குடத் தாமரையாம்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குடத் தாமரையாம் (விருத்தாசலம்)

முருகா!
விலைமாதர் உறவை விட்டு உய்ய அருள்.

தனத்தானன தானன தானன
     தனத்தானன தானன தானன
     தனத்தானன தானன தானன ...... தனதான


குடத்தாமரை யாமென வேயிரு
     தனத்தார்மதி வாணுத லாரிருள்
     குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக்

குலக்கார்மயி லாமென வேகயல்
     விழித்தார்கர மேல்கொடு மாமுலை
     குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை

படித்தார்மயி லாமென வேநடை
     நெளித்தார்பல காமுகர் வார்கலை
     பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர்

படிக்கார்மின லாமென வேநகை
     புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
     பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ

அடைத்தார்கட லோர்வலி ராவண
     குலத்தோடரி யோர்சர னார்சின
     மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே

அறுத்தாரய னார்தலை யேபுர
     மெரித்தாரதி லேபுல னாருயி
     ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா

விடத்தாரசு ரார்பதி வேரற
     அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
     விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர

விழித்தாமரை போலழ காகுற
     மகட்கானவ ணாஎன தாயுறை
     விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குடத் தாமரையாம் எனவே இரு
     தனத்தார்,மதி வாள் நுதலார், ருள்
     குழல்காடு இன மாமுகில் போல், முதுகு ......அலைமோதக்

குலக் கார் மயில் ஆம் எனவே, கயல்
     விழித்தார், கரம் மேல்கொடு மாமுலை
     குடத்து, யாழ் கிளியாம் எனவே,குயில் ......குரல்ஓசை

படித்தார், மயிலாம் எனவே நடை,
     நெளித்தார் பல காமுகர் வார்கலை,
     பழிப்பார் அவர் ஆசையை மேல்கொடு, ....விலைமாதர்

படிக்கார் மினல் ஆம் எனவே நகை
     புரித்தார்,பலர் வாய் இதழ், சேர்பொருள்
     பறிப்பார், பழிகாரிகள், நாரிகள் ...... உறவு ஆமோ?

அடைத்தார் கடல் ஓர் வலி இராவண
     குலத்தோடு அரி ஓர் சரனார் சினம்
     அழித்தார், முகில் ஏய் நிற ராகவர் ...... மருகோனே!

அறுத்தார் அயனார் தலையே, புரம்
     எரித்தார், திலே புலன் ஆர்உயிர்
     அளித்தார் உடல் பாதியிலே உமை ...... அருள்பாலா!

விடத்தார் அசுரார் பதி வேர் அற
     அடித்தாய், கதிர் வேல்கொடு சேவகம்
     விளைத்தாய், குடி வாழ்அமரோர்சிறை, ...... மிடிதீர

விழித் தாமரை போல் அழகா! குற
     மகட்கு ஆன வணா, என தாய் உறை
     விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.


பதவுரை

      அடைத்தார் கடல் --- கடலில் அணை கட்டி அடைத்தவரும்,

     ஓர் வலி ராவண குலத்தொடு அரி ஓர் சரனார் --- ஒப்பற்ற வலிமை பொருந்திய இராவணனையும் அவனது குலத்தையும் அழித்த ஒப்பற்ற சரத்தினை உடையவரும்,

     சினம் அழித்தார் --- அசுரர்களின் சினத்தை அழித்தவரும்,

     முகில் ஏய் நிற ராகவர் மருகோனே --- மேக வண்ணரும் ஆகிய இராகவப் பெருமாளின் திருமருகரே!

     அறுத்தார் அயனார் தலையே --- பிரமதேவரின் தலையை அறுத்தவரும்,

     புரம் எரித்தார் --- முப்புரங்களை எரித்தவரும்,

     அதிலே புலன் ஆர் உயிர் அளித்தார் --- (எரிக்கப்பட்ட) முப்புரங்களில் அறிவு பொருந்தி இருந்த மூவரின் உயிரைக் காத்து அருள் புரிந்தவரும் ஆகிய சிவபெருமானுடைய,

     உடல் பாதியிலே உமை அருள்பாலா --- திருமேனியில் பாதியைக் கொண்ட உமாதேவியார் அருளிய குமாரக் கடவுளே!

      விடத்தார் அசுரார் பதி வேர்அற அடித்தாய் --- விடம் போலும் கொடிய குணம் படைத்த அசுரர்களின் இருப்பிடத்தை அடியோடு ஒழித்தவரே!

     கதிர்வேல் கொடு சேவகம் விளைத்தாய் --- ஒளி பொருந்திய வேலாயுதத்தைக் கொண்டு வீரத்தை விளைவித்தவரே!

     அமரோர் சிறை மிடி தீர --- தேவர்கள் சிறையில் இருந்து படும் துன்பம் தீரவும்,

     குடி வாழ --- அவர்கள் தங்கள் பொன்னுலகில் குடி புகுந்து வாழவும் அருள் புரிந்த,

     தாமரை போல் விழி அழகா --- தாமரை மலரைப் போலும் அழகிய திருக்கண்களை உடையவரே!

     குறமகட்கு ஆன வண்ணா --- குறமகளாகிய வள்ளிநாயகிக்கு அன்பானவரே!

     என தாய் உறை விருத்தாசலம் வாழ் மயில்வாகன --- எமது தாயாகிய பெரியநாயகி அம்மை எழுந்தருளி உள்ள விருத்தாசலம் என்னும் திருத்தலத்தில் வாழும் மயில்வாகனரே!

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

     குடத் தாமரையாம் எனவே இரு தனத்தார் --- குடம் என்றும், தாமரை மொட்டு என்றும் சொல்லத்தக்க இரு தனங்களை உடையவர்கள்,

     மதிவாள் நுதலார் --- பிறைச் சந்திரனைப் போல ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்கள்,

       இருள் குழல் காடு இன மாமுகில் போல் முதுகு அலைமோத --- காடு போல் அடர்ந்து, கருத்த கூந்தலானது முதுகில் அலை மோதுவது போலப் புரளும்படி,

       குலக் கார்மயிலாம் எனவே கயல் விழித்தார் --- கருமேகத்தினைக் கண்டு களிநடம் புரியும் சிறந்த மயில் போலும் சாயலையும், மீன் போலும் கண்களையும் உடையவர்கள்,

     கரம் மேல் கொடு மாமுலை குடத்து --- அவர்களின் தனம் போன்ற குடத்தை ஒரு கையிலே கொண்டவர்களாய்,

      யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை படித்தார் --- யாழைப் போலும், கிளியைப் போலும், குயிலைப் போலும் இனிய ஓசை பொருந்திய குரலை உடையவர்கள்,

     மயிலாம் எனவே நடை நெளித்தார் --- மயிலைப் போல நெளிந்த நடையினை உடையவர்கள்,

     பல காமுகர் வார்கலை பழிப்பார் --- பல காமுகர்களின் தெளிந்த அறிவினைப் பழித்தவர்கள்,

     அவர் ஆசையை மேல்கொடு விலைமாதர் --- அவர்கள் தங்கள் மேல் வைத்த ஆசையைக் கொண்டுள்ள விலைமாதர்கள்,

      படிக் கார் மின்னலாம் எனவே நகை புரித்தார் --- வானில் படிந்துள்ள கருமேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்று பற்கள் தெரியக் காட்டிச் சிறிப்பவர்கள்,

     பலர் வாய் இதழ்சேர் --- பலரின் வாயிதழ் ஊறலைப் பருகுபவர்கள்,

     பொருள் பறிப்பார் --- பொருளைப் பறிப்பவர்கள்,

     பழிகாரிகள் --- பழிக்கு உரிய செயல்களைப் புரிபவர்கள்,

     நாரிகள் உறவு ஆமோ --- (இப்படிப்பட்ட விலை)மாதர்கள் உறவு தகுமோ? தகாது.


பொழிப்புரை


         கடலில் அணை கட்டி அடைத்தவரும், ஒப்பற்ற வலிமை பொருந்திய இராவணனையும் அவனது குலத்தையும் அழித்த ஒப்பற்ற சரத்தினை உடையவரும், அசுரர்களின் சினத்தை அழித்தவரும், மேக வண்ணரும் ஆகிய இராகவப் பெருமாளின் திருமருகரே!

     பிரமதேவரின் தலையை அறுத்தவரும், முப்புரங்களை எரித்தவரும், எரிக்கப்பட்ட முப்புரங்களில் அறிவு பொருந்தி இருந்த மூவரின் உயிரைக் காத்து அருள் புரிந்தவரும் ஆகிய சிவபெருமானுடைய திருமேனியில் பாதியைக் கொண்ட உமாதேவியார் அருளிய குமாரக் கடவுளே!

         விடம் போலும் கொடிய குணம் படைத்த அசுரர்களின் இருப்பிடத்தை அடியோடு ஒழித்தவரே!

     ஒளி பொருந்திய வேலாயுதத்தைக் கொண்டு வீரத்தை விளைவித்தவரே!

     தேவர்கள் சிறையில் இருந்து படும் துன்பம் தீரவும், அவர்கள் தங்கள் பொன்னுலகில் குடி புகுந்து வாழவும் அருள் புரிந்த, தாமரை மலரைப் போலும் அழகிய திருக்கண்களை உடையவரே!

     குறமகளாகிய வள்ளிநாயகிக்கு அன்பானவரே!

     எமது தாயாகிய பெரியநாயகி அம்மை எழுந்தருளி உள்ள விருத்தாசலம் என்னும் திருத்தலத்தில் வாழும் மயில்வாகனரே!

     பெருமையில் மிக்கவரே!

     குடம் என்றும், தாமரை மொட்டு என்றும் சொல்லத்தக்க இரு தனங்களை உடையவர்கள், பிறைச் சந்திரனைப் போல ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்கள்,  காடு போல் அடர்ந்து, கருத்த கூந்தலானது முதுகில் அலை மோதுவது போலப் புரளும்படி கருமேகத்தினைக் கண்டு களிநடம் புரியும் சிறந்த மயில் போலும் சாயலையும், மீன் போலும் கண்களையும் உடையவர்கள், அவர்களின் தனம் போன்ற குடத்தை ஒரு கையிலே கொண்டவர்களாய், யாழைப் போலும், கிளியைப் போலும், குயிலைப் போலும் இனிய ஓசை பொருந்திய குரலை உடையவர்கள், மயிலைப் போல நெளிந்த நடையினை உடையவர்கள், பல காமுகர்களின் தெளிந்த அறிவினைப் பழித்து அவர்கள் தங்கள் மேல் வைத்த ஆசையைக் கொண்டுள்ள விலைமாதர்கள், வானில் படிந்துள்ள கருமேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்று பற்கள் தெரியக் காட்டிச் சிறிப்பவர்கள்,
பலரின் வாயிதழ் ஊறலைப் பருகுபவர்கள், பொருளைப் பறிப்பவர்கள், பழிக்கு உரிய செயல்களைப் புரிபவர்கள், ஆகிய இப்படிப்பட்ட விலைமாதர்கள் உறவு தகுமோ? தகாது.


விரிவுரை

பல திருப்புகழ்ப் பாடல்களிலும் அருளியவாறு, இத் திருப்புகழிலும் அடிகளார் விலைமாதர்களின் அங்கங்களை காம வயப்பட்ட ஆடவர் கண்டு மயங்கும் நிலையை அறிவித்து, மெய்யுணர்வு பெற வேண்டும் என்னும் உட்கருத்தை அறிவிக்கின்றார். மெய்யுணர்வு என்பது வடமொழியில் தத்துவஞானம் எனப்படும்.

தத்துவம் என்பதன் பொருள் உண்மை அல்லது மெய் ஆகும். ஞானம் என்பது அறிவு எனப்படும்.

பொருள் அல்லவற்றைப் பொருள் என உணருவது விபரீத ஞானம் என்கிறார் திருவள்ளுவ நாயனார். உண்மைப் பொருள் அல்லாத ஒரு பொருளை உண்மைப் பொருள் என உணர்வது, ஆன்மாவைப் பிறவித் துன்பத்தில் ஆழ்த்தும். சில மயக்க நூல்கள் இருவினைப் பயன்கள் இல்லை என்றும், மறுபிறப்பு இல்லை என்றும், கடவுள் இல்லை என்றும் கூறுகின்றன. அந்த மயக்க நூல்களை மெய் எனத் தெளிந்து, அவற்றில் கூறிய வழியில் ஒழுகுதல் விபரீத ஞானம் ஆகின்றது. மேலும் மரக்கட்டையை இருளில் கண்ட ஒருவன் அதனை மனிதன் என்று எண்ணி மயங்குவதும், சிப்பியை வெள்ளி என்று மயங்குவதும், ஒன்றை மற்றொன்றாகத் துணிவதும் மயக்க அறிவு ஆகும். ஒரு பொருளானது எந்த இயல்பில் காணப்பட்டாலும், அதனைக் கண்ட காட்சி அளவையில் மட்டுமே நின்றுவிடாது, பொருளின் உண்மையை அறிவதே மெய்யறிவு ஆகும். உலகத்தார் ஒவ்வொரு பொருளினையும் கற்பனையால் சொல்லுகின்ற, கற்பைனகளை எல்லாம் கழித்துப் பார்த்து, உண்மையை உணர வேண்டும்.

ஒரு பெண்ணைப் புலவர்கள் கூறுகின்ற போது, அப் பெண்ணுக்கு உரிய இலக்கணங்களை எல்லாம் மிகுத்துக் கூறுவர். அந்த அலங்காரங்களைப் பெண் என்று மதிக்காமல், பெண்ணிற்கு உரிய உருவத்தால் பெண் என்று மதிக்கவேண்டும்.

புற அழகு மிகுந்து இருந்தாலும், உள்ளத்தில் அழகு இல்லாதவர்களாகிய விலைமாதர்கள் அழகில் மயங்கி, மனம் தடுமாறி, அவரோடு உறவு பூண்பது கூடாது என்று அறவிக்கின்றார் அடிகளார்.

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டு அழகும்
மஞ்சள் அழகும் அழகு அல்ல, - நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

என்கிறது நாலடியார்.

வாரி விடப்பட்ட கூந்தல் அழகும், நன்கு உடுத்தப்பட்ட வண்ண உடை அழகும், முகத்தில் ஒப்பனைக்காகப் பூசப்படுகின்ற மஞ்சள் அழகும் ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகமாட்டா.  உள்ளத்தால் நல்லவர்களாய் வாழும், நடுநிலை தவறாத வழியில் செலுத்தும் கல்வி அழகே ஒருவருக்குச் சிறந்த அழகு ஆகும்.

 
இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடின் வனப்பும்,
நடைவனப்பும், நாணின் வனப்பும், - புடைசால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல, எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு.              

என்கிறது ஏலாதி என்னும் நூல்.

இடுப்பின் அழகும், தோள்களின் அழகும், செல்வத்தின் அழகும், நடையின் அழகும், நாணத்தின் அழகும், பக்கங்கள் தசை கொழுவிய கழுத்தின் அழகும், உண்மை அழகு ஆகா. இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மை அழகு ஆகும்.

புற அழகு ஒரு நாள் மாறும் தன்மை உடையது. உயிருக்கு அப்போதைக்கு நன்மை தருவது போல் தோன்றி, பின்னர் துன்பத்தையே தருவது. அக அழகு என்றும் மாறாது. உயிருக்கு என்றும் நலம் தருவது.

புற அழகில் ஆசை கொண்டு அறிவு மயங்கும். அந்த மயக்கத்தைக் கெடுத்து அருள் புரிய ஆறுமுகப் பரம் பொருளை வழிபடுதல் வேண்டும்.

உடம்பின் தன்மையை மணிமேகலை என்னும் காப்பியம் காட்டுவதைப் பின்வருமாறு காண்க.

தண் அறல் வண்ணம் திரிந்து வேறு ஆகி,
வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய்;

பிறைநுதல் வண்ணம் காணாயோ நீ,
நரைமையில் திரைதோல் தகையின்தறு ஆயது;

விறல்வில் புருவம் இவையுங் காணாய் ,         
இறவின் உணங்கல் போன்றுவேறு ஆயின;

கழுநீர்க் கண்காண், வழுநீர் சுமந்தன;
குமிழ்மூக்கு இவைகாண் உமிழ்சீ ஒழுக்குவ;

நிரைமுத்து அனைய நகையும் காணாய்,
சுரைவித்து ஏய்ப்பப் பிறழ்ந்து வேறு ஆயின;

இலவ இதழ்ச் செவ்வாய் காணாயோ நீ,
புலவுப் புண்போல் புலால் புறத்து இடுவது;

வள்ளைத் தாள்போல் வடிகாது இவைகாண்,
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன;

இறும்பூது சான்ற முலையும் காணாய்,            
வெறும் பை போல வீழ்ந்து வேறு ஆயின;

தாழ்ந்து ஒசி தெங்கின் மடல்போல் திரங்கி
வீழ்ந்தன இளவேய்த் தோளும் காணாய்;

நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையுங் காணாய் ;         

வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்;

ஆவக் கணைக்கால் காணாயோ நீ,
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ;

தளிர் அடி வண்ணம் காணோயோ, நீ,                       
முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்;

பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்துத்
தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் ......

குளிர்ந்த கரு மணல் போன்ற நிறம் திரிந்து வேறுபட்டு வெள்ளிய மணலைப் போல் நரைத்த கூந்தலைக் காண்பாய்,

வெண்மையுடன் திரைந்த தோலினால் அழகின்றி இருக்கும் பிறைபோன்ற நுதலின் இயல்பை நீ காணவில்லையோ,

வெற்றி பொருந்திய வில் படை போன்ற புருவங்களாகிய இவையும் இறால் மீனின் வற்றல் போல் வேறுபட்டன காண்பாய்,

கழு நீர் மலர் அனைய கண்கள் வழுவாகிய நீரைச் சுமந்தன காண்.

குமிழம் பூப்போலும் மூக்காகிய இவை உமிழுகின்ற சீயைச் சொரிவன காண்,

வரிசைப் படுத்திய முத்துக்களைப் போன்ற பற்களும், சுரை விதையைப் போலப் பிறழ்ந்து வேறுபட்டன காண்பாய்,

முருக்கமலர் போன்ற சிவந்த வாய், புலால் நாற்றம் பொருந்திய புண்ணைப்போல் தீ நாற்றத்தை வெளியிடுவதை நீ காணோயா,

வள்ளைத் தண்டுபோல் வடிந்த காதுகளாகிய இவைகள், உள்ளிருந்த ஊன் வாடிய வற்றலைப் போன்று இருப்பன பாராய்,

வியப்பு மிக்க கொங்கைகளும் உள்ளீடு இல்லாத பையைப் போல வீழ்ந்து வேறுபட்டன காண்பாய்,

இளைய மூங்கில் போன்ற தோள்களும், தாழ்ந்து வளைந்த தென்னை மடல்போல் திரைந்து வீழ்ந்தன காணாய்,

நரம்புடன் தோலும் நகத்தின் தொடர்ச்சியைக் கழன்று திரைந்த விரல்களாகிய இவற்றையும் காண்பாய்,

வாழைத் தண்டு போன்ற துடைகள் இரண்டும் தாழைத் தண்டுபோல் வற்றி இருத்தலைக் காண்பாய்,

அம்புப் புட்டிலைப் போன்ற கணைக்கால்கள் தம்மிடம் பொருந்திய நரம்பினையும் என்பினையும் வெளியே காட்டுவனவற்றை நீ காணவில்லையோ,

தளிர்போலும் அடிகளின் வண்ணம் முதிர்ந்த தென்னையில் உலர்ந்து உதிர்ந்த காயின் வற்றல் போன்றிருப்பதை நீ காணாயோ,

மலராலும் சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, ஆடையாலும் அணிகலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சத்தைத் தெரிந்து கொள்வாய்.

மேலும் இந்த உடம்பானது நாம் செய்த வினையின் காரணமாக வந்தது. மேலும் வினைகளைப் புரிவதற்கு விளை நிலமாக உள்ளது. புனையப்படுவன ஆகிய மணப் பொருள்கள் இல்லாமல் போனால், வெற்று உடம்பானது புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது. முதுமை அடைந்து சாகும் தன்மை உடையது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுக்களுக்குப் பற்றும் இடமாக விளங்குவது, குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது.  புற்றில் அடங்கியுள்ள போலச் சினம் முதலாகிய உட்பகைஞர்களுக்குத் தங்கும் இடமாக உள்ளது. அவலம், கவலை, துன்பம், கேடு முதலிவை நீங்காத உள்ளத்தைத் தன்னிடத்தில் உடையது. மக்கள் உடம்பின் தன்மை இது என்று உணர்ந்து, இந்த உடம்பை, கைப்பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது மணிமேகலை என்னும் காப்பியம்.
  
வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது,
புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,
மூத்து விளிவு உடையது, தீப்பிணி இருக்கை ,    
பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,
புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,
அவலக் கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது,
மக்கள் யாக்கை இது என உணர்ந்து         
மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்....

நாலடியாரும் இதனையே வலியுறுத்துகின்றது...

தோல்போர்வை மேலும் தொளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பு ஆனால், - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது, மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.                 

உள் இருக்கும் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையை உடையது இவ்வுடம்பு. என்றால், அந்த உடம்பைக் கொண்டு காமத்தால் மகிழாமல்,  அம்மேற் போர்வையாகிய ஆடையை, அழுக்கு மறைக்கும் திரையாகவும், மற்றொரு போர்வையாகிய தோல் போர்வையை, ஒரு பையின் திருப்பமாகவும், நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

கைப் பை ஒன்றிலே பொருள்களை வாங்கித் திணித்து வைக்கின்றோம். வைத்துள்ள பொருள்களால் பையின் உட்புறம் அழுக்கு அடைந்து இருக்கும். ஆனால் பையின் வெளிப்புறம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பையின் உட்புறம் மேற்புறமாகத் திருப்பிப் பார்த்தால் அதில் உள்ள அழுக்கு விளங்கும்.  அதுபோல, இந்த உடம்பிலே, பல அழுக்குகள் நிறைந்து உள்ளன. "சீ வார்ந்து, ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்" என்பார் மணிவாசகப் பெருமான். "புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதில் பொருந்தி நான் இருக்கின்ற புணர்ப்பும்" என்பார் வள்ளல் பெருமான்.

இந்த உடம்பின் தன்மையை பட்டினத்து அடிகள், "கோயில் திரு அகவல்" என்னும் பாடலில் விளக்குமாறு காண்க...

விழுப் பொருள் அறியா வழுக்கு உறு மனனும்,
ஆணவ மலத்து உதித்து அளைந்து, அதின் ஊடு
நிணவைப் புழு என நெளிந்திடு சிந்தையும்;
படிறும், பாவமும், பழிப்பு உறு நினைப்பும்,
தவறும், அழுக்காறும், இவறு பொய்ச்சாப்பும்,
கவடும், பொய்யும், சுவடும், பெரும் சினம்,
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும், பிணியும் இடுக்கிய ஆக்கையை;
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை;
எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்து,
கொழும் தசை மேய்ந்தும் ஒழுக்கும் விழும் குடிலை;
செம்பு எழு உதிரச் சிறுகுழுக் குரம்பையை;
மல உடல் குடத்தை, பல உடல் புட்டிலை;
தொலைவு இலாச் சோற்றுத் துன்பக் குழியை;
கொலை படைக்கலம் பல கிடக்கும் கூட்டை;
சலிப்பு உறு வினைப் பலசரக்குக் குப்பையை;
கோள்சரக்கு ஒழுகும் பீறல் கோணியை;
கோபத் தீ மூட்டும் கொல்லன் துருத்தியை;
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை;
புலராக் கவலை விளை மரப் பொதும்பை;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை;
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை;
மக்கள் வினையின் மயங்கும் திகிரியை;
கடுவெளி உருட்டிய சகடக் காலை;
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்கு
காமக் காற்று எடுத்து அலைப்ப,
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை;
இருவினை விலங்கொடும் இயங்கு புன்கலனை,
நடுவன் வந்து அழைத்திட நடுங்கிடும் யாக்கையை,
பிணம் எனப் படுத்து, யான் புறப்படும் பொழுது
அடிமலர்க் கமலத்துக்கு அபயம், நின் அடைக்கலம்....

எனவே, இந்த உடம்பின் மேல் வைக்குப் பற்றினை விட்டு, அதிலே உள்ளிட்டு இருக்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் சரக்குகளைத் தூக்கி எறிந்து விட்டு, இறைவன் குடியிருக்கும் கோயிலாக உள்ளத்தை மாற்ற வேண்டும்.

அப்பர் பெருமான் அருளியுள்ள, சரக்கு அறைத் திருவிருத்தத் திருப்பதிகத்தை ஓதி உணர்ந்து, இறைவன் திருவருளைப் பெற முயலுதல் வேண்டும். சரக்கு இறைத் திருவிருத்தப் பாடல் ஒன்று இதோ.....

விண்டார் புரம்மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம், மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும், தொழுது பாதம்
கண்டார்கள் கண்டு இருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்
தண் தார் இருக்கும் சரக்கு அறையோ என் தனிநெஞ்சமே.  --- அப்பர்.

அடைத்தார் கடல் ---

இராமபிரான் கடலில் அணை கட்டிய செய்தியைக் கூறுகின்றார் அடிகளார்.

பலவிதமான எண்ணங்களாகிய அலைகளை ஒழியாது வீசுகின்ற, சம்சாரம் ஆகிய நிலையாத சமுத்திரத்தில், உலகப் பற்று இன்மை ஆகிய வைராக்கியம் என்னும் உறுதியான கல்லால் அணையைக் கட்டி, காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் உட்பகைகளை அழித்த செய்தி இது ஆகும்.

ஆழியில் இராமபிரான் அணை கட்டிய வரலாறு

இராமபிரான் கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பி, வருணனை நினைத்து, கரத்தைத் தலையணையாக வைத்து, கிழக்கு முகமாகப் படுத்தார். அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ச் சயனத்திலிருந்த அவர் திருமேனி பூமியில் படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய் மூன்று நாட்கள் தவமிருந்தார். மூடனான கடல் அரசன் இராமபிரானுக்கு முன் வரவில்லை. இராமபிரானுக்குப் பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி! இன்று கடலை வற்றச் செய்கிறேன், மூடர்களிடத்தில் பொறுமை காட்டக் கூடாது. வில்லைக் கொண்டு வா; திவ்விய அஸ்திரங்களையும் எடுத்து வா. கடலை வற்றச்செய்து, வானரர்கள் காலால் நடந்து போகச் செய்கிறேன்” என்று சொல்லி உலகங்கள் நடுங்க, கோதண்டத்தை வளைத்து நாண் ஏற்றிப் பிரளய காலாக்கினிபோல் நின்றார். அப்போது கடல் கொந்தளித்தது. சூரியன் மறைந்தான். இருள் சூழ்ந்தது. எரி கொள்ளிகள் தோன்றின. மலைகள் நடுங்கின. மேகங்கள்  இல்லாமலேயே இடியும் மின்னலும் உண்டாயின. இராமர் பிரம்மாஸ்திரத்தை எடுத்து வில்லில் பூட்டினார். இலட்சுமணர் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று வில்லைப் பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டதென்று தேவர்கள் மருண்டனர். உயிர்கள் “இனி உய்வு இல்லை” என்று அசைவற்றுக் கிடந்தன.

உடனே மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல், கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன மாலையுடனும் குழப்பமடைந்த மனத்துடன் வருண பகவான் “ராம ராம” என்று துதித்துக் கொண்டு தோன்றி, கால காலரைப் போல் கடுங் கோபத்துடன் நிற்கும் ரகுவீரரிடம் வந்து பணிந்து, “ராகவரே! மன்னிப்பீர்; வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை கட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்” என்றான்.

இராமர் “நதிகளின் நாயகனே! எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது; இதை நான் எவ்விடத்தில் விடலாம் சொல்லுக” என்றார். “வடதிசையில் என்னைச் சேர்ந்த துரும குல்யம் என்ற ஒரு தலமுள்ளது. அங்கே அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை விட்டருள்வீர்” என்று சொல்ல, இராமர், உடனே அக்கணையை விடுத்தார். அக்கணை சென்று அந்த இடத்தைப் பிளக்க ரஸாதலத்திலிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்விடம் விரண கூபம் என்று பெயர் பெற்றது. அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என வழங்குகிறது. அவ்விடம் “எல்லா நன்மைகளுக்கும் உறைவிடமாயும் சகல வளங்களும் உடையதாயும் விளங்குக” என்று இரகுநாதர் வரம் கொடுத்தார்.

பிறகு வருணன் இராமரைப் பார்த்து “சாந்த மூர்த்தியே! இவன் நளன் என்ற வானர வீரன். விசுவகர்மாவினுடைய புதல்வன். தந்தைக்குச் சமானமானவன். தந்தையினிடம் வரம் பெற்றவன். இவ்வானரன் என்மேல் அணை கட்டட்டும். நான் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். சிறந்த பலம் பொருந்திய நளன் எழுந்து இராமரை வணங்கி, “சக்கரவர்த்தித் திருக்குமாரரே! வருணன் கூறியது உண்மையே! விசாலமான இந்தக் கடலில் நான் எனது தந்தையின் வல்லமையைக் கைப்பற்றியவனாய் அணை கட்டுகிறேன். வீரனுக்குத் தண்ட உபாயமே சிறந்தது. அயோக்கியர்களிடம் சாமம் தானம் என்பவற்றை உபயோகித்தால் தீமையே. இச் சமுத்திரராஜன் தண்டோபாயத்தினாலேயே பயந்து அணை கட்ட இடம் கொடுத்தான். வானரவீரர்கள் அணைகட்டுவதற்கு வேண்டியவற்றைக் கொண்டு வட்டும்” என்றான்.

இராமர் அவ்வாறே கட்டளையிட, வானர வீரர்கள் நாற்புறங்களிலும் பெருங் காட்டில் சென்று, ஆச்சா, அசுவகர்ணம், மருதம், பனை, வெண்பாலை, கர்ணீகாரம், மா, அசோகம் முதலிய தருக்களை வேரொடு பிடுங்கிக் கொண்டு வந்து குவித்தார்கள். மலைகளையும் கல்குன்றுகளையும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் கொணர்ந்தார்கள். சிலர் நூறுயோசனை தூரம் கயிறுகளைக் கட்டிப் பிடித்தார்கள். சிலர் அளவு கோலைத் தாங்கி நின்றார்கள். நளன் பெரிய அணையைக் கட்டலானான். பெரிய பாறைகளும் மலைகளும் அக்கடலில் வீழ்த்தப்பட்ட பொழுது பெருஞ் சத்தமுண்டாயிற்று. மனந்தளராத அவ்வானர வீரர்கள் முதல் நாள் 14 யோசனை தூரம் அணை கட்டினார்கள். பயங்கரமான சரீரமும் பலமும் பொருந்திய வானர வீரர்கள் இரண்டாம் நாள் விரைவாக 20 யோசனை தூரம் அணை கட்டினார்கள். மிகுந்த பரபரப்பும் தொழில் செய்வதில் ஊக்கமுமுள்ள அவ்வானர சிரேட்டர்கள் மூன்றாவது நாள் 21 யோசனை தூரம் கட்டினார்கள். நான்காவது நாள் 22 யோசனை தூரம் கட்டினார்கள். எல்லாத் தொழிலையும் விரைவில் முடிக்கவல்ல அவ்வானரங்கள் ஐந்தாவது நாள் 23 யோசனை தூரம் சுவேல மலை வரையும் அணை கட்டினார்கள். இவ்வாறு வெகுவிரைவில் 100 யோசனை தூரம் அணைகட்டி முடித்தார்கள். அவ்வற்புதத்தைப் பார்க்க விரும்பி ஆகாயத்தில் திரண்ட தேவர்களும் அதைக் கண்டு அதிசயித்தார்கள். மனத்தால் நினைக்க முடியாததும் மயிர்க்கூச்சல் உண்டாக்குவதுமாகிய அச்சேதுவைப் பார்த்து எல்லாப் பிராணிகளும் இறும்பூதுற்றன.

வேலை அடைக்க அரிக் குலத்தொடு
     வேணும் எனச்சொலும் அக் கணத்தினில்
     வேகமொடு அப்பு மலைக் குலத்தை ......நளன் கைமேலே
வீச அவற்றினை ஒப்பம் இட்டு, அணை
     மேவி அரக்கர் பதிக்குள் முற்பட,
     வீடணனுக்கு அருள் வைத்து, அவன் தமை-....யன்கள் மாளக்,

கால் அயில் அக் கணை தொட்ட அருட் கன
     மால், அமைதிக் கரையில் தரித்துத, உலகு
     ஆள அளித்த ப்ரபுத்வ அருட்கடல் ......தந்த காமன்
காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ!
     நானில வித்த தினைப் புனத்து ஒரு
     காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் ...... தம்பிரானே.   --- (ஓலைதரித்த) திருப்பகழ்.

அலைகடல் அடைத்தே, மகா கோர ராவணனை
     மணி முடி துணித்து, வியே ஆன ஜானகியை
     அடலுடன் அழைத்தே கொள் மாயோனை மாமன்எனும் .....மருகோனே!
                                                                             --- (தலைவலி) திருப்பகழ்.


ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார், சினம் அழித்தார் ---

ஒப்பற்ற வலிமை பொருந்திய இராவணனை அவனது குலத்தோடு மடியும்படியாக ஒப்பற்ற கணையைச் செலுத்தியவர் இராமபிரான்.

தடைஅற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
     தலைபத்து உடைய துட்டன் ...... உயிர்போகச்
சலசத்து மயில்உற்ற சிறைவிட்டு வரு,வெற்றி
     தரு சக்ரதரனுக்கு ...... மருகோனே!   --- எட்டிகுடி திருப்புகழ்.

முகில் ஏய் நிற ராகவர் மருகோனே ---

நீலமேக சியாமள வண்ணர் திருமால். இரகு குலத்தில் இராமபிரான் அவதரித்தார். அதனால் இராகவர் என்று திருப்பெயர் அவருக்கு உண்டாயிற்று.

அறுத்தார் அயனார் தலையே ---

பிரமதேவன் “நாம் உலகைப் படைக்கின்றோம்” என்று தருக்கு உற்றனன் அதனை உணர்ந்த சிவபெருமான் பிரமனை விளித்து, நடுத்தலையை நகத்தால் கிள்ளி எடுத்து “நீயே உலகினைப் படைப்பது உண்மையானால், உன் தலையைப் படைத்துக் கொள்” என்றனர். அப் பிரமன், இதுகாறும் தன் தலையைப் படைத்துக் கொள்ளும் திறன் இன்றி வாளா இருக்கின்றனன். சிவபெருமான் அருளாலேயே பிரமதேவன் படைப்புத் தொழிலைப் புரிந்து வருகின்றனன்.

படைப்பானும் காப்பானும் பார்க்கில் அருணேசன்
படைப்பான்அயன் என்னல் பாவம், - படைக்கில்அயன்
தன்தலையைச் சோணேசன் தான்அரிந்த போதினிலே
தன்தலையைப் பண்ணஅறியான் தான்.    --- அருணகிரியந்தாதி

நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீபற
உகிரால் அரிந்தது என்று உந்தீபற.           --- திருவாசகம்

சிவபெருமான் தமது கரத்தில் மழுவாயுதத்தை ஏந்தியிருந்தும், அம்மழுப் படையால் பிரமன் தலையை அறுக்காது, தமது பெருமையும் பிரமனது சிறுமையும் புலப்படுமாறு நகத்தாலேயே கீரையைக் கிள்ளுவதுபோல் கிள்ளி எடுத்தனர்.

புரம் எரித்தார், அதிலே புலனார் உயிர் அளித்தார் ---

கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.

திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து, திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதி குலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.

அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.

அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லிற் பணியரசாகிய நாணை ஏற்றினர். அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை இழிப்பின் அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கோர் ஆயுதமேனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும், இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்து வந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப் பெருமான்பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.

சிலையெடுத்து மாநாக நெருப்பு கோத்துத்
  திரிபுரங்கள் தீஇட்ட செல்வர் போலும்”      --- அப்பர்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
   உளைந்தன முப்புரம் உந்தீபற
   ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. --- மணிவாசகர்.

"தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முரிந்தது என்று உந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற”.         ---  மணிவாசகர்.

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற.        --- மணிவாசகர்.

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
     உருளை இருசுடர் வலவனும் அயன்என   மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை அடியிட
     நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற  ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
     சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ”
                                                                      --- (அருவமிடை) திருப்புகழ்.

மாநாக நாண் வலுப்புறத் துவக்கி ஒர்
     மாமேரு பூதரத் தனுப் பிடித்து, ரு
     மால் ஆய வாளியைத் தொடுத்து, ரக்கரில் ......ஒரு மூவர்
மாளாது, பாதகப் புர த்ரயத்தவர்
     தூளாகவே, முதல் சிரித்த வித்தகர்  வாழ்வே!     --- (ஆனாதஞான) திருப்புகழ்.

வெற்பால் மத்து ஆக்கிக் கடல் கடை,
     மைச்சாவிக் காக்கைக் கடவுளை
     விட்டு, ஆர் முக் கோட்டைக்கு ஒருகிரி ......இருகாலும்
வில் போலக் கோட்டி, பிறகு ஒரு
     சற்றே பல் காட்டித் தழல் எழு-
     வித்தார் தத்வ அர்த்தக் குருபரன் ....என ஓதும் பொற்பா!   --- (கற்பார்) திருப்புகழ்.

மலைமகள் இடத்து வைத்து, மதிபுனல் சடைக்குள் வைத்து,
     மழுஅனல் கரத்துள் வைத்து, ...... மருவார்கள்
மடிவுற நினைத்து, வெற்பை வரிசிலை இடக்கை வைத்து,
     மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே!    ---  (சலமலம்) திருப்புகழ்.

"கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என, வானோர்
எல்லாம் ஒரு தேராய், அயன் மறைபூட்டி நின்று உய்ப்ப,
வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல், வாசுகி நாண்,கல்
வில்லால் எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”.    ---  திருஞானசம்பந்தர்.

வரிஅரவே நாண்ஆக, மால்வரையே வில்லாக,
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்,
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவிஉறை கோயில் கைச்சினமே.   ---  திருஞானசம்பந்தர்.

குன்ற வார்சிலை நாண் அராஅரி
         வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
         சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.  ---  திருஞானசம்பந்தர்.

கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்
         கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்
பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்
         பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
         கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.  ---  அப்பர்.

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. ---  சுந்தரர்.

நிலைபெற்ற திரிபுரத் தலைவர் மூவரும் தீயால் வேவாது அருள் பெற்று உய்ந்தார்கள். ஒருவர் கயிலையில் குடமுழா வாசிப்பவராகவும், மற்ற இருவர் வாயில் காவலர்களாகவும் ஆனார்கள்.

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.   --- திருஞானசம்பந்தர்.

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்
     இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை,
     ஒருவன் நீ கரி காடு அரங்காக
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ
     மணிமுழா முழக்க அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்,
     செழும்பொழில் திருப்புன்கூர் உளானே.   --- சுந்தரர்.

உடல் பாதியிலே உமை அருள்பாலா ---

சிவபெருமான் மாதொரு கூறன். பெருமானுடைய இடப்பாகம் உமையவளுடையது. வில்லைத் தாங்கிய கை இடக்கை. அது உமையம்மையின் திருக்கரம். ஆதலால், மேருமலையை வில்லாக வளைத்தவர் பார்வதி தேவியார் என்பதால், புரம் எரித்த அருட்செயலை முன்வைத்து "உடல் பாதியிலே உமை" என்று இங்கு அருளினார்.

இதே கருத்தை சுவாமிகள்,  திருவானைக்காத் திருப்புகழிலும் வைத்துப் பாடி உள்ளார்.

அப்பர் பெருமானும் இதே கருத்தில் பாடி உள்ளார். வில்லை வளைத்த திருக்கரம் உமையம்மையாருடையதே என்கிறார்..

கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்துஎம் கண்ணுதலே
வில் தாங்கிய கரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே
நல் தாள் நெடும்சிலை நாண்வலித்த கரம் நின்கரமே
செற்றார் புரம்செற்ற சேவகம் என்னைகொல் செப்புமினே.

இதன் பொழிப்புரை : கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும், நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை, வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே. நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ள கையே. இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள்.

கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ,
     மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி,
     கழல்அணி மலைமகள், காஞ்சி மாநகர் ....உறைபேதை,
களிமயில், சிவனுடன் வாழ்ந்த மோகினி,
     கடல் உடை உலகினை ஈன்ற தாய், மை,
     கரிவனம் உறை அகிலாண்ட நாயகி ......அருள்பாலா!    --- (பரிமளம் மிக) திருப்புகழ்.

பொருஇல்மலை அரையன்அருள் பச்சைச் சித்ரமயில்,
     புரம் எரிய இரணியதனுக் கைப் பற்றி இயல்
     புதிய முடுக அரியதவம் உற்றுக் கச்சியினில் ......உறமேவும்
புகழ்வனிதை தருபுதல்வ, பத்துக் கொத்துமுடி
     புயம் இருபது அறவும் எய்த சக்ரக் கைக்கடவுள்,
     பொறியரவின் மிசைதுயிலும் சுத்தப் பச்சைமுகில்.....மருகோனே.
                                                                     --- (கருகியறிவு) திருப்புகழ்.

பொன் மேருமலையை வில்லாகப் பிடித்த அம்பிகை இடப்பாகம் பெறும்பொருட்டு திருவருணையில் தவம் செய்து சிவபெருமானுடன் இரண்டறக் கலந்தனர். அத் தன்மையை அடியேனுக்குத் தரவேண்டும் என்கின்றனர். அதாவது சிவத்தோடு கலந்துறையும் அத்துவித வாழ்வு ஆகும்.

இமயவல்லி இடப்பாகம் பெற்றது

உமையம்மையார் சந்திர சூரியர் சிவபெருமானுடைய திருக்கண்களே என்பதை உலகறியச் செய்யும் பொருட்டு, எம்பெருமானது திருக்கண்களைப் புதைத்தனர். அதனால் உலகங்கள் எல்லாம் இருண்டு விட்டன. உயிர்கள் அனைத்தும் தடுமாறித் துன்புற்றன. அக்காலை சிவபெருமான் நெற்றிக் கண்களைத் திறந்து ஒளியை உண்டாக்கினர். அது கண்ட அம்பிகை முக்கட்பெருமானைத் தொழுது, "எம்பெருமானே! உலகமெல்லாம் இருண்டு மருண்டு துன்புறத் தங்கள் திருக்கண்களைப் புதைத்த பாவம் தீர மண்ணுலகில் சென்று தவம் புரியக் கருதுகின்றேன். அதற்குத் தக்க இடம் அருளிச் செய்வீர்" என்றனர்.

கண்ணுதற்கடவுள், "தேவீ ! உன்னை வினை வந்து அணுகாது. எனினும், உலகம் உய்யத் தவம் புரியக் கருதினை. மண்ணுலகில் மிகவும் சிறந்த தலம் காஞ்சியே ஆகும். ஆங்கு சென்று தவம் செய்தி" என்று அருளிச் செய்தனர். 

அம்மையார் பாங்கிகளும், அடியார்களும், விநாயகரும், முருகரும் சூழ, கச்சியம்பதி போந்து, வேதமே மாமரமாகி நிற்க, அதன் கீழ் மணலால் இலிங்கம் உண்டாக்கி வழிபாடு செய்தனர்.  அம்மையின் அன்பை உலகறியச் செய்ய இறைவன் கம்பை நதியில் பெருவெள்ளம் வரச்செய்தனர்.  அதுகண்ட அம்மை தன்னைக் காத்துக் கொள்ளும் கருத்து இன்றி, சிவலிங்கத் திருமேனிக்குப் பழுது நேராவண்ணம் முலைத் தழும்பும், வளைச் சுவடும் உண்டாக சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டனர்.  இறைவன் அம்மையின் இணையற்ற அன்பின் பெருக்கை நோக்கி உருகி, விடை மீது காட்சி தந்தனர். உமாதேவி இறைவன் திருவடி மீது வீழ்ந்து, "இடப்புறம் தந்து என்னைக் கலந்து அருளும்" என்றனர். பெருமான், "உமையே! இங்கு தவம் புரிந்ததனால் கண் புதைத்த வினை கழிந்தது. இடப்பாகம் வேண்டுதியேல், நினைக்க முத்தியளிக்கும் திருத்தலமாகிய திருவருணைக்குச் சென்று தவம் செய்வாய். ஆங்கு அதனை அருள்வோம்" என்று அருள் புரிந்தனர்.

ஆரணன் திருமால் தேட அடிமுடி ஒளித்து ஞானப்
பூரண ஒளியாய் மேல்கீழ் உலகெலாம் பொருந்தி நிற்போம்
தாரணி யவர்க்கும் மற்றைச் சயிலமாய் இருப்போம் அங்கே
வாரணி முலையாய் பாகம் தருகுவோம் வருதி என்றார்.

அருளே வடிவாகிய அம்பிகை தனது பரிவாரங்கள் யாவும் சூழ, இரண்டு காவதம் சென்று ஒரு வெள்ளிடையில் சேர்ந்தனர்.  அங்கே முருகக் கடவுள் வாழைப்பந்தர் இட்டனர். அது கண்ட தாய்,

அன்னையும் குகனை நோக்கி அரம்பையால் பந்தர் செய்து
பன்னிரு கரமும் சால வருந்தினை எனப் பாராட்டி
இன்னுமோர் கருமம் சந்தி முடிப்பதற்கு இனிய நன்னீர்
கைந்நிறை வேலை ஏவி அழைத்திடு கணத்தில் என்றாள்.

அக்காலை ஆறுமுகப் பெருமான், தம் திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தை ஏவி, மேற்பால் உள்ள மலையைப் பிளந்து, அதனின்றும் ஒரு நதியைத் தருவித்தனர். சேய் தருவித்த காரணத்தால், அந்த நதி சேயாறு எனப்படுவதாயிற்று.

வாழைப்பந்தல் என்ற திருத்தலமும் இன்று கண்கூடாக விளங்குகின்றது. அம்மை அந் நதியில் சந்தியாவந்தனம் செய்து, திருவண்ணாமலையை அடைந்தனர். அங்கு தவம் புரியும் முனிவர்களுடன் கௌதமர் அம்மையின் வரவைத் தரிந்து அளவற்ற மகிழ்ச்சி உற்று, எதிர் ஓடி மண்மிசை வீழ்ந்து கண்ணருவியுடன் துதித்து, வாய் குழறி, மெய் பதைத்து நின்றனர்.  அம்மை அன்புருவாய கோதமனாதியர்க்கு அருள் புரிந்து, ஆங்கு ஒரு தவச்சாலை நியமித்து தவம் புரிவாராயினார்.

கொந்தளகம் சடைபிடித்து விரித்து, பொன்தோள்
         குழைகழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி,
உந்துமர வுரிநிகர் பட்டாடை நீக்கி,
         உரித்தமர வுரிசாத்தி, உத்தூ ளத்தால்
விந்தைதிரு நீறணிந்து, கனற்குள் காய்ந்து,
         விளங்கும் ஊசியின் ஒருகால் விரலை ஊன்றி,
அந்திபகல் இறைபதத்தின் மனத்தை ஊன்றி,
         அரியபெரும் தவம்புரிந்தாள் அகிலம் ஈன்றாள்.

ஆங்கு மிகப்பெரும் தவ வலிமை உடைய மகிடாசுரன் தன் சேனைகளுடன் வந்து அம்மை தவத்திற்கு இடையூறு செய்ய, அம்மை துர்க்கையினால் மகிடாசுரனைக் கொல்வித்து அருளினர். இங்ஙனம் பரமேசுவரி நெடிது காலம் மாதவம் புரிந்து, கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று நீராடி, அண்ணாமலை அண்ணலைத் தொழுது துதித்து நின்றனர்.  அதுசமயம், மலைமேல் ஒரு ஞானசோதி பல்லாயிரம் கோடி சூரியர் உதயம்போல் எழுந்து உலகமெல்லாம் உய்யத் தோன்றியது. அம்மை அதுகண்டு, மெய் சிலிர்த்து, உள்ளம் குளிர்ந்து வணங்கினர். "பெண்ணே! இம்மலையை வலமாக வருக" என்று சிவமூர்த்தி அசரீரியாகக் கூறியருளினர்.  அதுகேட்ட அம்மை ஞானதீபமுடன் விளங்கும் அண்ணாமலையைத் தமது பரிவாரங்களுடன் வேதங்கள் முழங்க வலம் வருவாராயினார்.

"அம்மே! உமது திருவடி சிவந்தன" என்று கங்காதேவி கை கூப்பி வணங்க, உமாதேவியார், அக்கினி, தெற்கு, நிருதி என்ற திசைகளில் அண்ணாமலையைத் தொழுது மேல்திசையை அடைந்தனர். அங்கு சிவபெருமான் விடைமீது காட்சி தந்து மறைந்தனர். பின்னர், அம்மை வாயு மூலையில் உள்ள அணி அண்ணாமலையைப் பணிந்து குபேர திசை, ஈசான திசைகளிலும் தொழுது, கீழ்த்திசை எய்தினார். தேவர் பூமழை பொழிய, மறைகள் முழங்க, ஆலமுண்ட நீலகண்டப் பெருமான் விடையின்மீது தோன்றி அம்மைக்குத் தன்னுருவில் பாதியைத் தந்து கலந்து அருளினார்.

"வெற்பு அளித்த தற்பரைக்கு, இடப் புறத்தை உற்று அளித்த
 வித்தகத்தர்" என்று திருத்தணிகைத் திருப்பகழில் இந்த வரலாற்றை வைத்துப் பாடியுள்ளார் அடிகளார்.

அடுத்த செஞ்சடை ஒருபுறம், ஒருபுறம் அளகம்
தொடுத்த கொன்றை ஓர்புறம், ஒருபுறம் நறுந்தொடையல்,
வடித்த சூலம்ஓர் புறம், ஒருபுறம் மலர்க்குவளை,
திடத்தில்ஆர் கழல் ஒருபுறம், ஒருபுறம் சிலம்பு.


அமரோர் சிறை மிடி தீர, குடி வாழ, விடத்தார் அசுரார் பதி வேர்அற அடித்தாய், கதிர்வேல் கொடு சேவகம் விளைத்தாய் ---

சேவகம் - வீரம்.

தேவர்களைச் சிறையில் வைத்துப் பல்லாண்டு காலமாகச் சூரபதுமன் துன்புறுத்தி வந்தான். அவர்களது துன்பம் தீர்ந்து, தங்களது பொன்னுலகில் மீண்டும் குடிபுகுந்து வாழும் பொருட்டு, கொடிய அரக்கர்களாகிய சூரபதுமனாதியரே, வேலாயுதத்தால் வதைத்தார் முருகப் பெருமான்.

என தாய் உறை விருத்தாசலம் வாழ் மயில்வாகன, பெருமாளே ---

அருணகிரிதார்க்கும், உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாகிய ஆகிய உமாதேவியார் பெரியநாயகி என்னும் திருநாமத்தோடு விருத்தாசலம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். நடு நாட்டுத் திருத்தலம்.

தேவாரப் பாடல்களில் திருமுதுகுன்றம், தற்போது விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் திருக்கோயில் உள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் இருந்து விருத்தாசலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

அழகுத் தமிழில் "திருமுதுகுன்றம்" என்பது, வடமொழியில் "விருத்தாசலம்" என்று ஆனது. தற்போது, விருத்தாசலம் என்றே வழங்கப்படுகின்றது.

இறைவர் : பழமலைநாதர், விருத்தகிரீசுவரர்
இறைவியார் : பெரியநாயகி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை
தல மரம் : வன்னி
தீர்த்தம்  : மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்.

மூவர் முதலிகள் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிச் செய்யப்பெற்ற திருத்தலம்.

முதல் திருச்சுற்றில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. பாதாள விநாயகர் என்று அழைக்கப்படும் இவரை வணங்கினால் எல்லாக் குறைகளும் நீங்கி நல்ல வாழ்வு அமையும் என்பதால் அடியவர்கள் இவரை வணங்குகின்றனர்.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்

என்று விருத்தாசலம் தலபுராணம் இவ் விநாயகரைப் பாடும்.

இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் திருச்சுற்றின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

நான்காம் திருச்சுற்றில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது.

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த இலிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வடமேற்கு பகுதியில் தனி சந்நிதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

இத்திருத்தலத்தின் மரமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோயிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.

சுந்தரர் திருமுதுகுன்றத்தினை அடைந்து இறைவரைப் பாடினார்.  முதுகுன்றப் பெருமான் தமது தோழருக்கு 12000 பொற்காசுகள் கொடுத்தார். நம்பியாரூரர் சிவபெருமானை வணங்கி, "இப்பொன் முழுதும் திருவாரூருக்கு வருதல் வேண்டும். அதனால் திருவாரூரிலே உள்ளோர்க்கு ஒரு வியப்புத் தோன்றுதல் வேண்டும்" என்று வேண்டினார். பொன் திரளை மணிமுத்தாற்றிலே இட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்ளுமாறு இறைவன் அருள் வாக்குச் செய்தார். அது கேட்ட நம்பியாரூரர் அன்று எனை ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று சொல்லி, மச்சம் வெட்டி எடுத்துக் கொண்டு, பொன்னை எல்லாம் மணிமுத்தாற்றிலே இட்டார்.

இந்தத் திருத்தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற, இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி, அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.

  "தூசினால் அம்மைவீசத் தொடையின்மேல் கிடத்தித் துஞ்சும்
 மாசிலா உயிர்கட்கு எல்லாம் அஞ்செழுத்து இயல்பு கூறி
 ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால், அந்த
 காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
                                                                    ---  (கந்தபுராணம் - வழிநடைப்படலம்)

ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரமன் படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடம் "புண்ணிய மடு" எனப்படுவதாகும். இந்த புண்ணிய மடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால், அவை கூழாங்கற்களாக மாறிவிடும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விசுவநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும், பிணிகள் யாவும் அகன்று சித்தி அடைவர் என்பது நம்பிக்கை.

குருநமசிவாயர் என்னும் மகான் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற போது வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசி மிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை துதித்து

     நன்றி புனையும் பெரிய நாயகி எனும் கிழத்தி,
     என்றும் சிவனார் இடக் கிழத்தி, - நின்ற
     நிலைக் கிழத்தி, மேனி முழுநிலக் கிழத்தி,
     மலைக் கிழத்தி, சோறு கொண்டு வா”

என்று பாடினார். பெரிய நாயகி, முதியவடிவில் எதிரே தோன்றி "என்னைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்? கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர முடியும்" என்று கேட்க, குருநமசிவாயர்,

     முத்தி நதி சூழும் முதுகுன்று உறைவாளே!
     பத்தர் பணியும் பதத்தாளே! - அத்தன்
     இடத்தாளே! முற்றா இளமுலை மேல் ஆர-
     வடத்தாளே! சோறு கொண்டு வா”

என்று பாடினார். அம்மையும் மகிழ்ந்து இள நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இவ்வாலயத்தில் இளமை நாயகிக்குத் (பாலாம்பிகை) தனிக்கோயில் உள்ளது.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேவு அகமாம் மன்றம் அமர்ந்த வளம் போல் திகழ்ந்த முதுகுன்றம் அமர்ந்த அருட்கொள்கையே" என்று போற்றி உள்ளார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் உறவை விட்டு உய்ய அருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...